Friday, March 27, 2026

முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்

 

  11 வெளிநாட்டு வீரர்கள் தங்களது முதல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர். இவர்களில் 9 பேர் கடந்த ஆண்டு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இருவர் 2025 மெகா ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டும் காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடந்த ஆண்டு ஐபிஎல் 2026 ஏலத்தில் ₹2 கோடி அடிப்படை விலைக்கு நியூசிலாந்து  வீரர் ஃபின் ஆலனை எடுத்தது. இவர் இதற்கு முன் பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல், ஸிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸாரபானி, முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்குப் பதிலாக கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார்.

2025 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ₹4.80 கோடிக்கு வாங்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபர், காயம் காரணமாக 2025 சீசனை இழந்தார். தற்போது அவர் ஐபிஎல் 2026 இல் அறிமுகமாகத் தயாராக உள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ், 2025 மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்ந்தார், ஆனால் காயத்தால் கடந்த சீசனில் பங்கேற்க முடியவில்லை, இவரும் இந்த ஆண்டு அறிமுகமாகிறார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி, அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் ட்வார்ஷுயிஸை ஐபிஎல் 2026 ஏலத்தில் ₹4.40 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இலங்கையின்  தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா, ₹75 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் பங்கேற்று, டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் இருந்து ₹4 கோடிக்கு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.

 அவுஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜாக் எட்வர்ட்ஸ், தனது அடிப்படை விலையை விட ஆறு மடங்கு அதிகமாக ₹3 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 2026 ஏலத்தில் வாங்கப்பட்டார். மற்றொரு அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கூப்பர் கானெல்லி, பஞ்சாப் கிங்ஸ் அணியால் ₹3 கோடிக்கு எடுக்கப்பட்டார்; இவர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு நீண்டகால மாற்றாக பார்க்கப்படுகிறார்.

இங்கிலாந்தின் ஜோர்டான் காக்ஸ், ₹75 லட்சம் அடிப்படை விலைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் சாக் ஃபௌல்க்ஸை ₹75 லட்சம் கொடுத்து வாங்கியைள்ளது. இந்த வீரர்கள் அனைவரும் 2026 ஐபிஎல் சீசனில் தங்கள் முதல் போட்டியில் களமிறங்க காத்திருக்கின்றனர்.

 

  

No comments: