Wednesday, February 15, 2012

என்று மறையும்


கிராய்ப்பிள்ளையார் கோயிலின் காலைப்பூசை முடிவடைந்த பின்னர் சில பக்தர்கள்
ஆலயத்தினுள் இருந்தனர். பலர் ஆலயத்துக்கு வெளியே உள்ள மரங்களின் கீழ்
இருந்தனர். அர்ச்சனை செய்ய விரும்பியவர்கள் ஐயரைச் சுழ்ந்து நின்றனர்.
அப்போது தூரத்திலே வித்தியாசமான சத்தம் கேட்டது. மரத்தின் கீழ்
இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்தவாறு வானத்தை அண்ணாந்து
நோக்கினர். அவர்களின் கண்களுக்கு எதுவுமே புலப்படவில்லை.
கோயிலின் தெற்குப் பக்க வெளி வீதியில் நின்றவர் பதைபதைப்புடன் மரத்தின்
கீழ் இருந்தவர்களைக் கைகாட்டி அழைத்தார். மரத்தின் கீழ் இருந்தவர்கள் ஓட்டமும்
நடையுமாக அவரை நோக்கிச் சென்றார்கள். மேற்குத் திசையில் பலாலிப்
பக்கத்தில் வானத்திலே சில புள்ளிகள் தெரிந்தன. வித்தியாசமான சத்தத்துக்கு
அந்த ஹெலிகள்தான் காரணம் என அவர்கள் அறிந்து கொண்டனர். ஏழு ஹெலிகள்
வரிசையாக அவர்களைத் தாண்டிச் சென்றன.
ஆனையிறவுக்குப் போறாங்கள் போலை என்று அங்கு நின்றவர்களில் ஒருவர் கூறினார்.
மற்றவர்கள் அதை ஆமோதித்தனர். ஹெலிகள் எங்கே போகின்றன என்று ஊகித்தவர்கள்
மீண்டும் மரத்தின் கீழ் அமர்ந்தனர். இரண்டு பேர் மட்டும் கிழக்கு நோக்கிச்
செல்லும் ஹெலிகளைப் பார்த்துக்கொண்டு நின்றனர். ஹெலிகளை பார்த்துக்கொண்டு
நின்றவர்கள் மீண்டும் பதை பதைப்புடன் கைகளைக் காட்டி மரத்தின் கீழ்
இருந்தவர்களை அழைத்தனர். மரத்தின் கீழ் இருந்தவர்கள் மீண்டும் ஓட்டமும்
நடையுமாக அவர்களை நோக்கிச் சென்றனர். அந்த ஏழு ஹெலிகளும் திடீரென தரை இறங்கின‌.
தில்லைஅம்பலத்திலை இறங்குறாங்கள். வறணியை சுத்தி வளைக்கப் போறாங்கள் போலை என
ஒருவர் கூறினார். அதற்கு மற்றவர்கள் ஆமாம் போட்டனர். அந்த ஏழு ஹெலிகளும்
மீண்டும் பலாலி நோக்கிச் சென்றன. சுமார் பதினைந்து நிமிடங்களின் பின்னர்
அந்த ஏழு ஹெலிகளும் மீண்டும் பலாலியிலிருந்து தில்லையம்பலம் நோக்கிச் சென்றன.
நடக்கப் போகும் விபரீதத்தை அறியாதவர்கள் கிராய்ப்பிள்ளையார்
கோயிலிலிருந்து தமது வீடு நோக்கிச் சென்றனர்.
வடமராட்சியின் வான்வெளியை ஹெலிகளும், ஏரோபிளேன்களும், சீப்பிளேன்களும்
ஆக்கிரமித்திருந்தன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவ ஊரடங்குச் சட்டம்
அமுல்படுத்தப்பட்டது. ஆலயங்களிலும் பொது இடங்களிலும் மக்கள் இருப்பது
பாதுகாப்பானது என வானொலியில் விசேட செய்தி அடிக்கடி ஒலிபரப்பாகியது.
உடுப்பிட்டியையும், வல்வெட்டித்துறையையும் கைப்பற்றிய இராணுவம் மேலும் முன்னேறிக்
கொண்டுடிருந்தது. பொம்பர் குண்டுகளும், ஹெலிகளின் பிப்ரிகலபர்களும்,
ஏரோக்களின் பீப்பாக் குண்டுகளும் வடமராட்சியை அதிரச் செய்தன.
இராணுவத்திடமிருந்து தப்புவதற்கு விரும்பியவர்கள் வதிரி, கரவெட்டி ஆகிய
கிராமங்களை நோக்கி நகர்ந்தனர்.
சிதம்பரத்தின் வீட்டிற்கு அயலிலுள்ளவர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர்.
வீட்டை விட்டுப் போவதில்லை என்பதில் சிதம்பரம் உறுதியாக இருந்தார்.
குமர் பெட்டையையும், இளந்தாரிப் பொடியனையும் வைச்சுக் கொண்டு தனிச்சிருக்கிறது
நல்லதல்ல என்று சிதம்பரத்தின் மனைவி பலமுறை கூறிவிட்டார். மனைவியின்
சொல்லுக்கு சிதம்பரம் மசியவில்லை.
சிதம்பரத்தின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெயர்ந்த மக்கள்
சாரிசாரியாக சென்றனர். வயதானவர்களை சைக்கிளில் இருத்தி சைக்கிளை உருட்டி
சென்றனர். சில வயதானவர்களை கதிரையில் இருத்தி கதிரையைப் பல்லக்கு போல்
து}க்கிச் சென்றனர். ஆடு, மாடு, கோழி என்பனவற்றை விட்டுச் செல்ல மனமில்லாத
சிலர் அவற்றையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். எஜமான்களின் பின்னே
நன்றியுள்ள நாய்களும் சென்றன. சிதம்பரத்தின் நாயான வீமன் தனது எல்லைக்குள்
வந்த நாய்களைக் கண்டதும் சிறிது தூரம் விரட்டிச் சென்று விட்டு மீண்டும் தனது
வீட்டுக்கு வந்தது.
""வீட்டிலை தனியா இருந்தவையை சுட்டுப்போட்டாங்களாம். கலட்டிப்பிள்ளையார்
கோயிலிலை இருந்த பொடியங்களை ஆமி பிடிச்சுப் போட்டுதாம்.'' சிதம்பரத்தின்
மகள் மல்லிகா தான் கேள்விப்பட்டவற்றைத் தகப்பனிடம் கூறினாள். முகத்தில்
எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாது மகள் கூறுவதைக் கேட்டார் சிதம்பரம்.
""நாங்களும் ஆமி அறிவிச்சகோயிலுக்குப்போவமப்பா. சனத்தோட சனமா இருந்தா
பயமிராது. அண்ணாவை நினைக்க பயமாக் கிடக்கப்பா'' என்று கூறினாள் மல்லிகா.
சிதம்பரத்தின் மகள் மல்லிகா ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறாள். அவளது அண்ணன்
கல்விப் பொதுத் தராதர உயர் வகுப்பு மாணவன். பெரிய மனுஷி போல் தகப்பனுக்கு
ஆலோசனை கூறினாள் மல்லிகா. மல்லிகாவின் பயத்தை உணர்ந்த சிதம்பரம்
வீட்டைவிட்டு வெளியேற ஒப்புக்கொண்டார்.
அந்தக்கோவில் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. வல்லிபுரக் கோவில்,
சன்னதி ,நல்லு}ர்க் கோயில்களின் தேர் ,தீர்த்தத்துக்கு கூடும் அதே
சனக்கூட்டத்தால் கோவில் திக்கு முக்காடியது. இப்படி ஒரு சனக்கூட்டத்தை அந்தக்
கோயில் கண்டதில்லை.அந்தக் கோயில் எல்லையில் சிதம்பரம் இப்போதுதான் காலடி
எடுத்து வைத்தார். சிதம்பரத்தின் கிராமத்தவர்கள் ஒரு மரத்தின் கீழ்
இருந்தார்கள். தம்முடன் வந்து இருக்கும் படி சிதம்பரத்தை அழைத்தார்கள்.
சிதம்பரமும், மனைவியும், பிள்ளைகளும் தமது கிராமத்தவர்களுடன் கலந்தனர்.
நீண்ட தூரம் நடந்த களைப்பு, பயம், பதற்றம், பசி என்பனவற்றினால்
சிதம்பரத்தின் மனைவி சோர்வடைந்தாள். தண்ணி கிடக்கே என சிதம்பரத்தின்
மனைவி கேட்டாள். அருகில் இருந்த ஒருவர் தண்ணீரைக் கொடுத்தார். தாகம் தீரக்
குடித்தாள் சிதம்பரத்தின் மனைவி. தண்ணீரின் தேவையை உணர்ந்த சிதம்பரம்
தண்ணீர் எங்கே எடுக்கலாம் என அருகில் இருந்தவரைக் கேட்டார். கிணறு இருக்கும்
திசையைக் காட்டினார் அவர். செம்பையும் , வாளியையும் எடுத்துக் கொண்டு
கிணற்றடியை நோக்கிச் சென்றார் சிதம்பரம். கிணற்றைச் சுற்றி நிறைய சனம்.
ஒருவர் தண்ணீரை வாளியால் ஊற்றினார். சுற்றி நின்றவர்கள் நீரைப் பெறுவதற்காக
முண்டியடித்தனர். அரைவாசிக்கும் மேற்பட்ட நீர் வெளியில் சிந்தியது.
""தள்ளி நில்லுங்கோ, தள்ளி நில்லுங்கோ. நெருக்குப்படாமல் நிண்டால் தண்ணி
எடுக்கலாம். ஆமிக்காரன் வெளிக்கிட்டது எளியதுகளுக்கு வாச்சுப் போச்சு'' என்று
நீரை ஊற்றியவர் கூறினார்.
சிதம்பரத்தின் நெஞ்சில் அந்த வார்த்தைகள் சுருக்கெனத் தைத்தன. தண்ணீர்
எடுக்காமல் திரும்பிச் சென்றார்.
""ஏனப்பா தண்ணி இல்லையே'' மகள் கேட்டாள்.
""தண்ணி நிறையக் கிடக்கு பிள்ளை அதைத் தாறவனுக்குத்தான் மனசு சரியில்லை.
இப்பிடி ஒரு அவமானம் வரக்கூடாது எண்டுதான் வீட்டிலை இருப்பம் எண்டனான். வாங்கோ
வீட்டை போவம்''
""உங்களுக்கென்ன விசரே. சனமெல்லாம் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு ஓடுது.
நீங்கள் வீட்டை போவம் எண்ணுறியள்'' சிதம்பரத்தின் மனைவி வெகுண்டெழுந்தாள்.
""சரி நீங்கள் நில்லுங்கோ நான் போறன்'' எனக் கூறிக்கொண்டே சயிக்கிளை
உருட்டத் தொடங்கினார் சிதம்பரம். சிதம்பரத்தின் மனைவியும், மகளும், மகனும்
அவரின் பின்னால் மௌனமாகச் சென்றனர்.
வடமராட்சியை இராணுவம் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது. பாடசாலைகளிலும்,
ஆலயங்களிலும் தங்கி இருந்தவர்கள் தமது வீட்டுக்குத் திரும்பினர். சிதம்பரத்தின்
அயல் வீட்டுக்காரரான சண்முகத்தின் குடும்பம் வீட்டுக்குத் திரும்பியது.
சிதம்பரத்தின் வீடு பூட்டியிருந்தது.
""என்னப்பா வீடு பூட்டிக் கிடக்கு. சிதம்பர மண்ணையவை எங்கை போச்சினமோ
தெரியாது?'' சண்முகத்தின் மனைவி கேட்டாள்.
""மச்சானுக்கு புத்தூரிலை ஆக்கள் இருக்கினம். அவை அங்கை போயிருப்பினம்.
பங்கரை மூடச் சொல்லி ஆமி அறிவிச்சிருக்கு. நான் மச்சான் வீட்டு பங்கரை
மூடிப்போட்டு வாறன்'' எனக் கூறிய சண்முகம் மண்வெட்டியுடன் சிதம்பரத்தின் வீட்டை
நோக்கிச் சென்றார். சிதம்பரத்தின் வீட்டு பங்கர் மிகவும் பாதுகாப்பானது.
ஷெல் வீச்சு, விமான கைக்குண்டு தாக்குதல் நடந்தால் அருகில் உள்ளவர்கள்
சிதம்பரத்தின் வீட்டு பங்கருக்குத்தான் செல்வார்கள். சிதம்பரத்தின் வீட்டைச்
சுற்றிப் பார்த்தார். சிதம்பரம் திருடர் வந்து போன அடையாளம் எதுவும் இல்லை.
பங்கரை மூடுவதற்கு முன் எட்டிப் பார்த்த சண்முகத்தின் மேனி சில்லிட்டது. சப்த
நாடிகளும் ஒடுங்கி என்ன செய்வதெனத் தெரியாதுஅதிர்ச்சியில் உறைந்தான்.
சண்முகத்தின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் சிதம்பரத்தின் வீட்டை நோக்கி
ஓடினார்கள். பங்கருக்குள் சதைக்குவியலாக சிதம்பரத்தின் குடும்பம் கிடந்தது.
சிதம்பரத்தின் வீட்டுக்குப் பின்னால் உள்ள வடலிக்குள் எழுந்த வீரனின்
குரைப்புச் சத்தம் உறவினர்களின் அழுகுரலை விஞ்சியது. சிதம்பரத்தின் செல்ல
நாயான வீரனின் வித்தியாசமான குரைப்புச் சத்தம் வந்த வடலியை நோக்கி
சென்றவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி மேலெங்கும் இரத்தக் காயங்களுடனும் அரைகுறை
ஆடைகளுடனும் மயங்கிய நிலையில் சிதம்பரத்தின் மகள் கிடந்தாள்.
சூரன். ஏ.ரவிவர்மா
ஜீவநதி
மார்கழி 2011

No comments: