Sunday, February 12, 2012

சந்திக்கு வந்த வாரிசு யுத்தம் தனித்து நிற்கும் விஜயகாந்த்

தலைவருக்குப் பின் ஸ்டாலின் என்பது தி.மு.க. வின் எழுதாக சட்டம் அழகிரியின் வரவு ஸ்டாலினுக்குப் போட்டியானது. கனிமொழியின் பிரவேசம் வாரிசுப் போட்டியை அதிகரித்தது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர விரும்பிய விஜயகாந்த்தை நடுத்தெருவில் கைவிட்டு விட்டார் ஜெயலலிதா
.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட பொதுக் குழு அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சையுடன் முடிவடைந்தது. கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தில் எழுதாத சட்டமாக இருந்தது. அழகிரியின் அரசியல் பிரவேசம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தென் மாவட்டத்தில் வளர்த்த அதேவேளை ஸ்டாலினுக்குப் போட்டியாகவும் அவர் வளர்ந்தார். ஸ்டாலினா அழகிரியா என்ற சர்ச்சை நீண்டு கொண்டிருக்கையில் கனிமொழியை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி. கனிமொழியின் அரசியல் பிரவேசம் வாரிசு போட்டியை அதிகரித்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக் குழுவுக்கான நாள் குறிக்கப்பட்டது முதல் அடுத்து நடைபெறப் போவது பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளியாகின. ஸ்டாலினுக்கு உப தலைவர் பதவி அழகிரிக்கு கட்சியின் முக்கிய பதவி, கனிமொழியை முன்னிலைப்படுத்த வேண்டும் போன்ற யூகங்கள் பத்திரிகை சஞ்சிகை என்பவற்றின் பக்கங்களை நிறைத்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கருத்துக் கணிப்பை தமிழகத்தின் பிரபல வார சஞ்சிகை நடத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்றே அதிகமானோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரி இல்லை என்பது இக் கருத்துக் கணிப்பின் மூலம் வெளிப்படையாகத் தெரிய வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் வைகோதான் என்ற வினோதமான முடிவையும் சிலர் தெரிவித்திருந்தனர். அமைதியாக நடந்த பொதுக் குழுக்கூட்டத்தை திசை திருப்பினார் வீரபாண்டி ஆறுமுகம். தலைவர் இருக்கும் போதே அடுத்த தலைவர் யார் என்ற பேச்சு வேண்டாம் என்று வீரண்பாண்டி ஆறுமுகம் முழங்க தளபதிதான் அடுத்த தலைவர் என்று சிலர் குரல் கொடுத்தனர். பொதுக் குழுவில் ஏற்பட்ட இக் கலகலப்பை கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் எதிர்பார்க்கவில்லை. கழகத் தேர்தல்கள் ஏகமனதாகவே நடந்துள்ளன. இனியும் அப்படித்தான் நடக்க வேண்டும். அடுத்த தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் என்று கருணாநிதி சவால் விட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் புகைந்திருந்த வாரிசுச் சண்டை பொதுக் குழுவில் எதிரொலித்தால் ஸ்டாலினிடம் தலைமைப் பதவியைக் கொடுத்தால் அழகிரி சன்னதமாடுவார் என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். அதனால் தான் அடுத்த தேர்தலில் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்து ஸ்டாலினின் ஆதரவாளர்களின்வாயை அடைத்துவிட்டார். ஸ்டாலினா? அழகிரியா? என்ற சர்ச்சை தற்காலிகமாக அமைதியடைந்துள்ளது. இது எப்போது பூகம்பமாக வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறாது என்பதையும் கருணாநி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்புகள் எவற்றையும் காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ராசாவும் கனிமொழியும் சிக்கியுள்ள போது மௌனமாக இருக்கிறது என்று பலரும் குற்றம் சாட்டினார்கள்.
மத்திய அரசைக் கைப்பற்ற பாரதீய ஜனதாக் கட்சி துடிக்கிறது. பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி பீடம் ஏறினால் தமிழகத்தில் ஜெயலலிதாவின் மதிப்புக் கூடி விடும். தவிர அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்று சோ கூறியதையும் கருணாநிதி ஞாபகப்படுத்தினார். காங்கிரஸ் எப்படித்தான் அடித்தாலும் அதைத் தாங்க வேண்டும் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் கருணாநிதி. ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவி கொடுக்க வேண்டும். காங்கிரஸுடனான உறவை முறிக்க வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. இரண்டு விருப்பங்களும் நிறைவேறாது என்பதைக் கருணாநிதி அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.
ஸ்டாலினுக்கு உரிய பதவியைக் கொடுக்க வேண்டிய தருணங்களை தவறவிட்ட கருணாநிதி வாரிசுச் சண்டையால் கழகம் உடைவதை விரும்பவில்லை. ஸ்டாலின் தலைவராவதை அழகிரி விரும்பவில்லை. அழகிரி தலைவராவதை கழகத்தில் உள்ள தொண்டர்கள் சிலர் விரும்பவில்லை.

சங்கரன் கோவில் இடைத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே சங்கரன் கோவில் தொகுதியில் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு வருமாறு விஜயகாந்துக்கு சவால் விடுத்தார். தமிழக அரசின் 24 அமைச்சர்கள் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பிரசாரத்துக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தல்களின் போது விஜயகாந்தின் அரசியல் கட்சி பல இடங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விஜயகாந்த் சவாலாக விளங்கினார். இன்று அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுமாறு ஜெயலலிதா விஜயகாந்துக்குச் சவால் விடுத்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பன சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் விஜயகாந்தும் தனித்தும் களம் இறங்கினார். இது அவருக்கும் பலத்த அடியாகவே இருக்கும். விஜயகாந்த் தனித்துத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை ஜெயலலிதா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்த் விரும்பி இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி சேரக் கூடாது என்று முடிவு செய்த ஜெயலலிதா இப்பொழுதே விஜயகாந்த்தைத் தனிமைப்படுத்தியுள்ளார். காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறிச் செல்வதை கருணாநிதி வெளிப்படையாகக் கூறிவிட்டதால் காங்கிரஸில் விஜயகாந்த் கூட்டணி சேர்வதற்கான கதவு மூடப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களும் தொண்டர்களும் விஜயகாந்துடன் இணைந்த காலம் போய் விஜயகாந்தின் ஆதரவாளர்களும் முக்கியஸ்தர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரும் நிøலமை தோன்றியுள்ளது. சிறுவயது முதலே விஜயகாந்தின் உற்ற நண்பனாக விளங்கிய ராவுத்தர் இப்ராஹிம் அண்ணா திராவிர முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். விஜயகாந்தை நடிகனாக்க வேண்டும் என்பதற்காகச் சென்னையில் உள்ள பல சினிமா நிறுவனங்களுக்குச் சென்று வாய்ப்பு கேட்டவர் ராவுத்தர் இப்ராஹிம். விஜயகாந்துக்காகப் பெருந்தொøகப் பணத்தைச் செலவிட்டு படம் தயாரித்தவர்.

விஜயகாந்தின் கட்சியில் இருந்து அவர் ஆயிரம் பேர் ஜெயலலிதாவின் முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளõர். ஜெயலலிதாவின் நடவடிக்கையினால் விஜயகாந்த் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளை எதிர்த்து விஜயகாந்தால் தனித்து நின்று ஜெயிக்க முடியாது. விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் மூவரும் ஜெயலலிதாவாலும் விஜயகாந்தாலும் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் இணைந்தால் தான் வெற்றி பெறலாம். இல்லையேல் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வெற்றியைப் பங்கு போட்டுக் கொள்வார்கள்.
வர்மா,
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு12/02/12


No comments: