Tuesday, July 2, 2019

தினகரனைக் கைவிட்டு வெளியேறும் தளபதிகள்.


அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்தையும், இரட்டை இலைச்சின்னத்தையும் கைப்பற்றப் போவதாகச் சபதம் எடுத்து புதிய கட்சியை ஆரம்பித்த தினகரனைக் கைவிட்டு அவரது தளபதிகள் வெளியேறுகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து ஜெயலலிதாவால் துரத்தப்பட்ட தினகரனை நம்பிப்போனவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அரசியலில் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் தினகரனைக் கைவிட வேள்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினகரனின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த செந்தில் பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மீண்டும் சட்ட சபை உறுப்பினரானார். அதிரடியாக கருத்துச் சொல்லும் தங்கதமிழ்ச்செல்வனும் காலம் பிந்தி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துள்ளார்.  பசை உள்ள முக்கியஸ்தரான இசக்கி சுப்பையா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர முடிவு செய்துள்ளார். தினகரனுடைய கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சசிரேகாவும் தாய்க் கழகமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்துள்ளார். தினகரனின் கட்சியினுடைய மாவட்டச்செயலாளர்களும் நிர்வாகிகளும் அங்கிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்திலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்கிறார்கள். இதனால் தினகரனின் கட்சியில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.

தினகரனுக்கும், தங்கதமிழ்ச்செல்வனுக்கும் இடையில் சுமுக நிலை இருக்கவில்லை. தினகரனின் செயற்பாடுகளால் தங்கதமிழ்ச்செல்வன் அதிருப்தியடைந்திருந்தார்.  பட்டென வெளிப்படையாகப் பேசும் தங்கதமிழ்ச்செல்வனின் அண்மைக்காலச் செயற்பாடுகள்அனைத்தும் தினகரனின்  நடவடிக்கைகளுக்கு மாற்றாக இருந்தன. தினகரனின் உதவியாளருடன் தங்கதமிழ்ச்செல்வன் பேசிய  ஒலிநாடா பகிரங்கப்படுத்தப்பட்டதால் தினகரனின் கட்சியில் இருந்து வெளியேற நிலை அவருக்கு ஏற்பட்டது. தினகரனின் மீது வெறுப்படைந்த தங்கதமிழ்ச்செல்வன், அவருடைய உதவியாளருடன் பேசியபோது கோபத்தின் உச்சிக்குச் சென்று மிக மோசமாகப் பேசினார். அந்த உரையாடலை  ஒலிப்பதிவு செய்தவர்கள் பகிரங்கப்படுத்தியதால் தினகரனின் மீது இருந்த நம்பகத்தன்மை இல்லாமல் போனது.

தாய்க்கழகமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்கதமிழ்ச்செல்வனுக்கு அழைப்பு விடுத்தது. தங்கதமிழ்ச்செல்வனை கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கு ஓ.பன்னீர்ச்செல்வம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். ஓ.பன்னீர்ச்செல்வம், தங்கதமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. தங்கதமிழ்ச்செல்வனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு ஓ.பன்னீர்ச்செல்வத்திடம் கொடுக்கப்பட்டது. பின்னர் ஓ.பன்னீர்ச்செல்வத்திடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பற்றிக்கப்பட்டு தங்கதமிழ்ச்செல்வனிடம் கொடுக்கப்பட்டது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் வெளியேறி தினகரனுடன் சேர்ந்ததால் ஓ.பன்னீர்ச்செல்வத்துடனான பகைமை  முற்றியது. தங்கதமிழ்ச்செல்வனைக் கட்சியில் இணைத்து ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு செக் வைக்க எடப்பாடி விரும்பினார். ஆனால், அது நடக்கவில்லை. தங்க தமிழ்ச்செல்வன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துவிட்டார்.

தேனியின் திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தர்களான ஐ.பெரியசாமி,கம்பம்கிருஸ்ணமூர்த்தி,கம்பம்செல்வேந்திரன்,மூக்கையா,லெட்சுமணன் போன்றவர்களின் கோஷ்டி மோதலால் திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தது. தங்கதமிழ்ச்செல்வனின் வருகையால் கோஷ்டி மோதலைக் கைவிட வேண்டிய நிலை உள்ளது. தங்கதமிழ்ச்செல்வனின் வருகையால் தென்மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பலமடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தினகரனுடன் சேர்ந்ததால் இழந்தவற்றை திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்ததால் பெற்று விடலாம் என தங்கதமிழ்ச்செல்வன் நம்புகிறார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து வெளியேறி  திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் கருணாநிதி. சுப்புலச்சுமி ஜெகதீசன்,ஈரோடு முத்துசாமி,கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன், ..வேலு ஆகியோர்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தூண்களாக உள்ளனர். கருணாநிதியைப் போன்றே ஸ்டாலினும் கட்சி மாறியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

கட்டட ஒப்பந்தம்மூலம் கோடிக்கணக்கான பணத்தைச் சேர்த்த இசக்கி சுப்பையா  மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தால் இழந்தவற்றைத் திரும்பப்பெற்று விடுவார். தினகரனுடன் சேர்ந்ததால் அவருக்கு தமிழக அரசாங்க ஒப்பந்தங்கள் கொடுக்கப்படவில்லை. கோடிக்கணக்கான பழைய ஒப்பந்தப் பணம் பாக்கியாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தால், பாக்கிப் பணமும்  புதிய  ஒப்பந்தங்களும் கிடைக்கும் என இசக்கி சுப்பையா நம்புகிறார்.

தினகரனுடன் இரகசியப் பேச்சுவார்த்தை செய்ய முடியாது என்பதை  கடந்தகால சம்பவங்கள்  வெளிப்படுத்துகின்றன.  முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் என்னுடன் ரகசியமாகப் பேசினார். பன்னீர்ச்செல்வம் என்னை இரகசியமாகச்சந்தித்தார் என அந்தரங்கங்களை அம்பலப்படுத்தியதால் தின்கரனுடம் இரகசியப்பேச்சுவார்த்தை நடத்து எவரும் செல்லமாட்டார்கள். தமிழகத்தின் மிகப்பெரும்தலைவராக உருவகப்படுத்தப்பட்ட தினகரனின் பிம்பம் தேர்தலுடன் காணாமல் போய்விட்டது. தினகரனுடன்   இருந்தால் தமது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் ஒவ்வொருவராக அவரை விட்டு வெளியேறுகிறார்கள். அரசியல் அரங்கில் தினகரன் தனித்து விடப்பட்டுள்ளார்.

No comments: