Monday, June 28, 2021

செக். குடியரசு, பெல்ஜியம் வெற்றி போத்துகல் குரோஷியா தோல்வி

யூரோ2020  கிண்ண போட்டியில் செக். குடியரசும், பெல்ஜியமும் காலிறுதியில்  விளையாட தகுதி  பெற்றன. ரொனால்டோவின்  போத்துகலும், குரோஷியாவும்  தோல்வியடைந்து  வெளியேறின.

புடாபெஸ்ட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை2020 கிண்ணதொடரின் இறுதி -16 அணிகளுக்கு இடையேயான  சுற்றில்   சற்றும் எதிர்பாராத செக்.குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து காலிறுதிக்குள் நுழைந்தது.

செக்.குடியரசின் 2 கோல்களுமே இடைவேளைக்குப் பிறகுதான் அடிக்கப்பட்டன. 68வது நிமிடத்தில் டொமாஸ் ஹோல்ஸ் தலையால் முட்டி முதல் கோலை அடிக்க, 80வது நிமிடத்தில் பாட்ரிக் ஷிக் 2வது கோலை அடித்தார்.

ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் நெதர்லாந்து தடுப்பு மாவீரர் என்று கருதப்படும் மத்தைஸ் டெலித் பந்தை வேண்டுமென்றே கையால் பிடித்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது நெதர்லாந்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது.

2014 உலகக் கிண்ணப் போட்டியில்  பங்கேற்ற பிறகு பெரிய உதைபந்தாட்டத்  தொடருக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து நாக் அவுட் சுற்றில் பரிதாபமாக வெளியேறியது.ஆட்டத்தில் முதல் வாய்ப்பு செக். குடியரசுக்குத்தான் கிடைத்தது, 23வது நிமிடத்தில் அதன் டொமாஸ் சூசெக் டைவ் அடித்து தலையால் முட்டிய பந்து வெளியே சென்றது. 34வது நிமிடத்தில் இதைவிடவும் நல்ல கோல் வாய்ப்பு மீண்டும் செக். அணிக்குக் கிடைத்தது. ஆனால் மத்தைஸ் டெலித் திகைப்பூட்டும் விதத்தில் தடுத்தார். லூகாஸ் மசோபஸ்ட் அருகிலிருந்து அடித்த கோல் ஷாட்டை டெலித் அபாரமாகத் தடுத்தார்.

இடைவேளைக்கு முன்னதாக நெதர்லாந்து ஏறக்குறைய கோல் அடித்திருக்கும், மெம்பிஸ் டீப்பே அடித்த ஷாட் பாட்ரிக் வான் ஆன் ஹோல்ட்டிடம் வர அவர் இலக்கை தவற விட்டார்.

இடைவேளைக்கு பிறகு மீண்டும் நெதர்லாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, இம்முறை டோன்யெல் மலேனின் முயற்சியை செக். கோல் கீப்பர் வாக்லிக் முறியடித்தார். அதன் பிறகுதான் செக். குடியரசின் கோல் முயற்சியைத் தடுக்கும் நோக்கத்துடன் மத்தைஸ் டெலித் பந்தை கையால் பிடிக்க சிவப்பு அட்டை  காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 2004க்குப் பிறகு நெதர்லாந்து வீரர் ஒருவர் சிவப்பு அட்டை  காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்பெயின், செவில்லில் நடைபெற்ற யூரோ2020  இறுதி-16 அணிகள் நாக் அவுட் சுற்றுப் போட்டியில்  ஐரோப்பிய சாம்பியனான போத்துகலை, பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.போர்ச்சுகல் கடும் ஏமாற்றமடைந்தது, காரணம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இது என்று கூறப்படுகிறது, மேலும் ரொனால்டோ 110 கோல்கள் அடித்து அதிக கோல்களுக்கான உலக சாதனையையும் நிகழ்த்த முடியாமல் போனது.

42வது நிமிடத்தில்  தோர்கன் ஹசார்டு அடித்த கோல்தான் பெல்ஜியத்தின் வெற்றி கோலாக அமைந்தது.முக்கியமான வீரர்களானகெவின் டி புருய்ன், ஈடன் ஹசார்டு ஆகியோர் காயமடைந்து வெளியேறினர்.

ஈடன் ஹசார்டு, கெவின் டி புருய்ன், ரொமிலு லுகாக்கு தான் பெல்ஜியத்தின் மும்மூர்த்திகள். ஆனால் இந்தப் போட்டியில் ஜென் வெர்ட்டோன்கன், ஆல்டர்வெய்ரல்ட், தாமஸ் வெர்மீலன் ஆகியோர் முன்னிலை பெற்றனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ படையை இவர்கள் கோல் அடிக்க முடியாமல் ஆட்கொண்டனர்.

No comments: