Thursday, November 29, 2012

அரசியலான தூக்குத் தண்டனை


மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது   அரசியலில் அதிர் வலைகளை  எழுப்பியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் பாகிஸ்தானிலே உள்ள குழுவினராலேயே நடத்தப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டிய போதெல்லாம் பாகிஸ்தான் அதனை மறுதலித்து தனது கண்டனத்தை தெரிவித்தது.

மும்பையில் நடைபெற்ற தாக்குதல் இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகையே அதிர்ச்சியடைய வைத்ததுதாக்குதலை நடத்தியவர்கள் தாக்குதல் நடைபெற்ற இடங்களை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். மூன்று நாள் போராட்டத்தின் பின்பே  பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த தாஜ் ஹோட்டல்  மீட்கப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் கசாப்பைத் தவிர மற்றையவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 கசாப்பின் வாக்கு மூலத்தின் பிரகாரம் மும்பைத் தாக்குதல் திட்டம் பாகிஸ்தானில் தான் தீட்டப்பட்டது என்றும் பாகிஸ்தானிலிருந்து தாக்குதல் வழி நடத்தப்பட்டது என்றும் உறுதி செய்யப்பட்டதுஇதனை  பாகிஸ்தான் முதலில் மறுத்தது மும்பைத் தாக்குதலில் உயிரோடு பிடிக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து கசாப் மேன் முறையீடு செய்தார். மேன் முறையீட்டு மனுவும் கசாப்புக்கு கை கொடுக்கவில்லை. ஜனாதிபதியிடம்  கருணை மனு சமர்ப்பித்தார்ஜனாதிபதியும் கைவிட்டு விட்டார்.

கசாப்புக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டதும் இவ்வளவு விரைவாக மிக இரகசியமாக கசாப் தூக்கில் இடப்படுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. கசாப்புக்கான தூக்குத் தண்டனை நாள் குறிக்கப்பட்டால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இதற்கெதிரான பேராட்டங்கள் நடைபெறும் என்பதனால் கசாப்பின் இறுதி நாள் மிக இரகசியமாக வைக்கப்பட்டது. புனே ஏர்வாடா சிறையில் யாரையோ தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அங்குள்ளவர்கள் அறிந்தனர். தூக்கு மேடை சரி பார்க்கப்பட்டதன் மூலம் அங்குள்ளவர்கள் இதனை அறிந்தனர்.

கசாப்பைத் தூக்கிலிட்ட பின்னரே அதனை உலகுக்கு அறிவித்தது இந்தியா. கசாப்பின் உடலை வாங்குவதற்கு பாகிஸ்தான் மறுத்து விட்டது. கசாப்பின் உடலை தம்மிடம் அல்லது கசாப்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கும்படியும் இல்லையேல் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் தலிபான்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் அடிக்கடி தாக்குதல் நடத்தும் தலிபான் இயக்கம் இப்போது இந்தியாவையும் குறி வைத்துள்ளது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இன்னொருவர் அப்சல் குரு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலின் சூத்திரதாரி அப்சல் குருவை எப்போது தூக்கிலிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு  இந்திய அரசு இதுவரை பதிலேதும் கூறவில்லை. ஆனால் கசாப்பை அவசரமாகவும் இரகசியமாகவும் தூக்கிலிட்டது இந்தியா. இந்திய நாடாளுமன்ற நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கசாப் தூக்கிலிடப்பட்டதாகவும் சில விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்த இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்மும்பைத் தாக்குதலில் பலியான வெளிநாட்டவர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகளை  உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பிரமுகர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக தமிழ் தேசிய ஆர்வலர்கள்  போராடி வருகின்றனர்அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  துடிக்கின்றனர். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விட்டு தமது கடமை முடிந்ததென்று  இருக்கின்றனர்.

பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சப்ரஜித் சிங்கின் நிலை என்னாகுமோ என்று அவரது உறவினர்கள் பரிதவிக்கின்றனர். இந்தியபாகிஸ்தான் எல்லையில் சப்ரஜித் சிங்கை பாகிஸ்தான் படையினர் கைது செய்தனர். உளவு பார்க்க வந்ததாக குற்றம் சாட்டி நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட சப்ரஜித் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

சப்ரஜித்  சிங் சமர்ப்பித்த கருணை மனு நிலுவையில் உள்ளது. அவரது உயிரைக் காப்பாற்ற பாகிஸ்தானில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் முயற்சி செய்கின்றனர்கசாப்பைத் தூக்கிலிட்டதற்குப் பதிலடியாக சப்ரஜித் சிங்கை பாகிஸ்தான் தூக்கிலிடுமோ என்ற அச்சம் அவரது  உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக வாக்களித்த இந்தியா அதே நாளில் கசாப்பைத் தூக்கிலிட்டது உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மெட்ரோநியூஸ் 30 /11/12



No comments: