Sunday, October 16, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 7





கணவர் மீது சந்தேகப்பட்டு குடும்பத்தில் கலவரத்தை ஏற்படுத்துகிறாள் ஒரு பெண். மனைவியின் கொடுமைகளை தாங்க முடியாது வீட்டை விட்டு வெளியேறுகிறான் அவன். தன் மனைவியை இன்னொருவனுடன் பழகச் சொல்லி வற்புறுத்துகிறான் ஒருவன். கணவனின் இழி செயலுக்கு இணங்காது வீட்டை விட்டு வெளியேயறுகிறாள் அந்தப் பெண். மனைவி வீட்டை விட்டு வெளியேயறியதை அறிந்தவன் மனைவியைத் தேதடுகிறான். வெவ்யேவறு காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியேறிய ஆணும் பெண்ணும் சந்தித்து ஒன்றாக வாழ்கின்றனர். வித்தியாசமான கதை அமைப்புடன் வெளிவந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற படம்தான் புதுப்புது அர்த்தங்கள்.
தமிழ் சமூகத்தின் பண்பாடு கலாசாரம் எல்லாவற்றையும் மீறிய இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒருவரின் மனைவியும் ஒருத்தியின் கணவனும் வீட்டை விட்டு வெளியேயறி ஒன்றாகக் குடித்தனம் செய்யும் கதையை விரசம் இல்லாது மிகவும் துணிச்சலாகப் படமாக்கியிருந்தார். சமூகத்தில் நடைபெறும் சில அவலங்களை தனக்கே உரிய பாணியில் திரையில் வெளிபடுத்தினார் பாலசந்தர்.டேட்டிங் என்ற சமூகசீர்கேடு இப்போது நாகரீகம் என்ற பார்வையில் அரங்கேறுகிறது. இதுபற்றி யாரும் சிந்திக்காத காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மனக் கட்டுப்பாட்டுடன் ஒரே வீட்டில் வாழலாம் என்பதை வெளிப்படுத்திய படம் புதுப்புது அர்த்தங்கள்.
பிரபல பாடகர் ரகுமான். அவரது பாடல்களுக்கு பெண் ரசிகைகள் அடிமையானார்கள். அவர் பாடும் இடமெல்லாம் கூடும் ரசிகைகளினால் அரங்கம் அதிர்ந்தது.செல்வச் செருக்குமிக்க குடும்பத்தில் பிறந்த கீதா, ரகுமானின் மீது ஆசைப்படுகிறாள். கடை தொகுதிக்கு பொருட்கள் வாங்கச் சென்ற கீதா அங்கே தொலைக்காட்சியில் ரகுமான் பாடுவதை வெறித்துப் பார்த்தாள். கீதா பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியை மகள் விரும்புகிறாள் என நினைத்த தாய் ஜெயசித்ரா. என்ன வேண்டும் என கேட்கிறாள். பாடுபவர் வேண்டும் என்று கீதாசொல்கிறாள். வாங்கிட்டா போச்சு என்று தாய் ஜெயசித்ரா அலட்சியமாக கூறுகிறாள். பணத்தால் எதையும வாங்கலாம் என்று கணக்கும் போடும் குடும்பத்தில் மாப்பிள்ளையாகிறான் ரகுமான்.
ரசிகர்கள் கொடுக்கும் தொல்லைகளை அன்புடன் ஏற்றுக் கொள்கிறான் ரகுமான். ரசிகைகள் மீதும் கணவன் மீதும் சந்தேகப்படுகிறாள் கீதா. ரகுமான் பாடக்கூடாது என்று தடை விதிக்கிறாள் கீதா. கீதாவின் சித்திரவதைகளினால் துவண்டு போகிறார் ரகுமான். பிரபல பாடகர் ரகுமானின் குடும்ப விவகாரம் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாகி விவகாரத்து வரை செல்கிறது.
கணவனின் கொடூர இச்சைக்கு இணங்காத சித்திராவும் மனைவியின் சித்திரவதையினால் வெளியேறிய ரகுமானும் ஒரே வீட்டில் வசிப்பதனால் இருவருக்கும் முடிச்சுப் போடுகிறார்கள். சிக்கலான திரைக்கதையை மிகவும் தெளிவாக முடித்தார் இயக்குநர் பாலசந்தர். ரகுமானின் மனைவியும் சித்திராவின் கணவனும் திருந்துகின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு மீண்டும் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.
ரகுமான், கீதா, சித்தாரா, ஜெயசித்ரா, ஐனகராஜ், பூர்ணம் விஸ்வநாதன், செள‌கார் ஜானகி, சத்யன் ஆகியோர் நடித்தனர். விவேக் அறிமுகமான படம் இது. ரகுநாத ரெட்டியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு இளையராஜாவும் ஒரு காரணம். இப்படத்தின் பாடல்கள் இன்றும் மனதைவிட்டு அகலவில்லை. பாடல்களை மையமாகக் கொண்ட படங்களில் பாடல்களே மிகவும் முக்கியமானவை. அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து இசைவேள்வி நடத்தியுள்ளார் இசைஞானி இளையராஜா. கேளடி கண்மணி பாடகன் சங்கதி, கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே, குருவாயூரப்பா குருவாயூரப்பா, எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும், எடுத்த நான் விடவா என் பாட்டை ஆகிய பாடல்கள் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.
கதையையும் தன்னையையும் நம்பி தனது கவிதாலயா மூலம் புதுப்புது அர்த்தங்கள் என்னும் படத்தை வெளியிட்டார் பாலசந்தர். பிரபலம் இல்லாத நடிகர்கள் நடித்து வெளியாகிய வெற்றிப்படங்களில் புதுப்புது அர்த்தங்களும் ஒன்று.
மித்திரன்09/10/11

No comments: