Sunday, April 3, 2016

விஜயகாந்தின் வரவால் மக்கள் நலக் கூட்டணிக்குள் குழப்பம்

 
தமிழக தேர்தல் களத்தில் நிலவிய அரசியல் குழப்பத்துக்கு விஜயகாந்த் முற்றுப்புள்ளி  வைத்துள்ளார்.  ஆனால், அவரை அன்புடன் வரவேற்ற மக்கள் நலக்   கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி, மக்கள் நலக் கூட்டணி  ஆகியன விஜயகாந்தின் வரவுக்காக செங்கம்பளம் விரித்துக் காத்திருந்தன. எல்லாக் கட்சிகளுக்கும் தண்ணி காட்டிவிட்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக விஜயகாந்த்  அறிவித்தார். அவரின் முடிவு சரியா தவறா என்ற விவாதம் ஆரம்பமாக முன்பு தனித்துப் போட்டியிடும் முடிவைக் கைவிட்டு மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். விஜயகாந்தின் திடீர் முடிவால் மக்கள் நலக் கூட்டணி பலமானது. திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதீய ஜனதாக் கட்சியும் நொந்து போயின. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் விஜயகாந்த்  இணையக் கூடாது என்ற ஜெயலலிதாவின் விருப்பம் நிறைவேறியது.

மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தது அக் கூட்டணிக்குக் கிடைத்த முதலாவது வெற்றியாகும். இந்த வெற்றிக் களிப்புடன் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லலாம் என நினைத்திருந்த தலைவர்களுக்கு பிரேமலதாவின் பேச்சு கடிவாளம் போட்டுள்ளது. விஜயகாந்தை முன்னிறுத்தி விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணி என்று  பிரேமலதா பிரசாரம் செய்கிறார். இந்தப் பிரசாரத்தால்  மக்கள் நலக் கூட்டணி  என்பது விஜயகாந்தின்  கூட்டணி என்ற மாயத்தோற்றம் பெற்றுள்ளது. விஜயகாந்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் பேசிய வைகோ  உணர்ச்சி வசப்பட்டு விஜயகாந்த் அணி என்று கூறிவிட்டார்.  விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அதனை தனது பிரசாரத்தில் முன்னிறுத்துகிறார்.

மக்கள் நலக் கூட்டணி , தேமு.தி.க  அணி என்று மூத்த தலைவர் நல்லகண்ணு   தெரிவித்தார். மாக்ஸ்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன், திருமாவளவன் ஆகியோரும்  மக்கள் நலக் கூட்டணி , தேமு.தி.க  அணி என்று  அழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கிடையில்  சிக்கி வைகோ தடுமாறுகிறார்.  விஜயகாந்த் அணி என்று அழைப்பதை மக்கள் நலக்  கூட்டணித் தலைவர்கள் விரும்பவில்லை.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டியக்கம் காலப்போக்கில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் எதிரான இயக்கமாகியது. மக்களின் உரிமைகளுக்க்கான கூட்டியக்கம் அரசியல் கட்சியாகப் பரிணமித்தது.பல சவால்களுக்கும் கேலிகளுக்கும் மத்தியில் வளர்ந்தது. மிகுந்த பிரயாசையுடன் வளர்த்த  கூட்டணியை நேற்று வந்த விஜயகாந்த் ஆக்கிரமிப்பதை தலைவர்கள் விரும்பவில்லை.

விஜயகாந்த் அணி என்று ஒன்று இல்லை.தே.மு.தி.கவுடன்தான் கூட்டணி என நல்லகண்ணு தெரிவித்தார் என பத்திரிகையாளர்கள் பிரேமலதாவிடம் கேட்ட போது  அதை நீங்கள் அவரிடம் தான்  கேட்க வேண்டும்.  விஜயகாந்த் அணி என்றால் தான் மக்களுக்குப் புரியும் என பிரேமலதா கூறினார்.பிரேமலதாவின் நக்கலான  பதில், மூத்த தலைவரான நல்லகண்ணுவை அவமானப்படுத்துவது போல் உள்ளது.  மக்கள் நலக் கூட்டணியை மக்களுக்குத் தெரியாது விஜயகாந்த் என்றால் தான் மக்களுக்குப் புரியும் என்று கூட்டணித்  தலைவர்கள் அனைவரையும் அவர் அவமானப்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் டூப் நடிகரின் சாகசத்துக்கு விஜயகாந்த் கைதட்டல் வாங்கிய போது அரசியல்மேடையில் பிரசாரப் பீரங்கியாக கர்ச்சித்து கைதட்டல் வாங்கியவர் வைகோ. தலித் மக்களின் தானைத் தளபதியாக வலம் வருபவர் திருமாவளவன். நல்லகண்ணு ஜி.ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலே அரசியல் களம் புகுந்தவர்கள். வைகோ ,திருமாவளவன், நல்லகண்ணு, ஜி,ராமகிருஷ்ணன்  ஆகியோரை தமிழக மக்க்ளுக்குத் தெரியாது. விஜயகாந்த் என்றால்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று  பிரேமலதா தெரிவித்து அரசியலில் தனது சிறு பிள்ளைத் தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

  தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜயகாந்தின் தலைமையில் போட்டியிடுபவர்கள்  கூட்டணிக்கு வரலாம் என பிரேமலதா அறிவித்தபோது எந்த ஒரு அரசியல் தலைவரும் அவரின்  பின்னே செல்லவில்லை.ஒரு வாரம்  பொறுத்திருந்த விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஒப்பந்தம் கைச்சாத்தானபின்  பத்திரிகையாளர்களிடம் சகல விபரங்களையும் வைகோ தெரிவித்தார்.  விஜயகாந்த்  வாயைத் திறக்கவில்லை.  பத்திரிக்கையாளர்களின்  எடக்கு முடக்கான கேள்விகளுக்கு விஜயகாந்த் அமைதியாகப் பதிலளிக்கமாட்டார் என்பதால் சமார்த்தியமாக விஜயகாந்த் ஓரம் கட்டப்பட்டார். வேட்பாளர்களைத் தாக்குவது,தள்ளுவது, நாக்கைத் துருத்திக்கொண்டு அடிப்பதற்காக கையை ஓங்குவது போன்றவற்றால்  பிரபலமான விஜயகாந்தின் நடவடிக்கையை மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்றனர்.   பத்திரிகையாளர் மாநாட்டின் போது கோபித்துக்கொண்டு வெளியேறுவது.   பத்திரிகையாளர்களை “த்தூ “ எனத் தூற்றுவது என்பன விஜயகாந்தின் விஷேட  குணாம்சங்கள் .மக்கள் நலக் கூட்டணித்  தலைவர்கள் விஜயகாந்தை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

பத்திரிகையாளர்களிடம்  சண்டித்தனம் செய்யும் விஜயகாந்துக்கு பத்திரிகைகள் ஆதரவு தர வேண்டும் என பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். பத்திரிகையாளர்களை துச்சமாக நினைத்து அவமானப்படுத்திய விஜயகாந்துக்கு பத்திரிகைகள் ஆதரவு தர வேண்டும் என அவரது மனைவி பிரேமலதா உருக்கமாக வேண்டுகோள்  விடுத்துள்ளார்.பத்திரிகைகளின் பலம் எண்ண என்பதை காலம் தாழ்ந்து vjayakanth விஜயகாந்த் தரப்பு உணர்ந்துள்ளது.
வைகோ,நல்லகண்ணு, திருமாவளவன் ஆகியோரில் ஒருவரை முதல்வராக  அறிவிக்க வேண்டும் என அவர்களின் ஆதரவளர்கள் கருத்துத் தெரிவித்தனர். தேர்தல் முடிந்த பின்னர்  முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிப்போம் என அப்போது வைகோ தெரிவித்தார். கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் முதலமைச்சர் கதிரையில் அமர்த்திய வைகோ முதலமைச்சராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மூத்த தலைவரான நல்லகண்ணு முதலமைச்சராக வேண்டும் என இடதுசாரிகள் விரும்பினார்கள். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக  வேண்டும் அதற்கு திருமாவளவன் பொருத்தமானவர் என தலித் மக்கள் விரும்பினார்கள். இதனை வைகோவும்  அங்கீகரித்தார்.

விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்ததும் ஒரே இரவில் மக்கள் நலக் கூட்டணியின் கொள்கை   மாறிவிட்டது. மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்  விஜயகாந்த் முதலமைச்சர். அவருடைய மனைவி பிரேமலதா துணை முதல்வர். மைத்துனர் சுதீசுக்கு மிக முக்கிய அமைச்சுப்பதவி கிடைக்கும்.   விஜயகாந்தின் குடும்பத்துக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட பின்னர்தான் மற்றவர்களுக்கு அமைச்சுப்பதவிகள் பகிர்ந்தளிக்கப்படும்.  துணை முதல்வர் பதவி சுழற்சி முறையில் ஒவ்வொரு வருடமும்  மற்றைய கட்சிகளுக்கு வழங்கப்படும். வைகோ, நல்லகண்ணு, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர்   விஜயகாந்துக்கு அடுத்த படியாக துணை முதல்வர் பதவியில் அமர்வதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.விஜயகாந்த் முதலமைச்சர் என்றால் முதலில் கூட்டணிக்  கட்சிக்கு விட்டுக் கொடுத்து விட்டு பிரேமலதா கடைசியாக துணை முதல்வராகலாம். இது  பற்றிய சலசலப்பு விரைவில் வெளியாகும்.

விஜயகாந்த அணி, முதல்வர் வேட்பாளர், துணை முதல்வர் பிரேமலதாவின் அகங்கரப் பேச்சு போன்றவற்றால் மக்கள் நலக் கூட்டணி குழம்பியுள்ளது. தேர்தல் அறிக்கையும், தேர்தல் பிரசாரமும் தான்  மக்கள் நலக் கூட்டணியை கைதூக்கிவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி

03/4/16

No comments: