Saturday, April 9, 2016

உற்சாகத்தில் ஜெயலலிதா வருத்தத்தில் விஜயகாந்த்


தமிழக சட்ட சபைத தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தொகுதிப்  பங்கீட்டை முடிப்பதற்கு திணறிக்கொண்டிருகையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா.. திராவிட முன்னேற்றக் கழக‌க் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌க் கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி,  பாரதீய ஜனதாக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தேர்தலில் போட்டியிடுவதால் ஐந்து  முனைப்போட்டி நடைபெற உள்ளது.   எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்திருப்பதனால் ஜெயலலிதா மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்  தொகுதிப்பங்கீட்டுப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் தீர்க்கமுடியாது  கூடிக்கலைந்து கொண்டிருக்கையில் வழமை போன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.

ஜெயலலிதா  வெளியிட்ட வேட்பாளர் பட்டியலால் எதிர்க்கட்சிகளைப் போன்றே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்த்த பலருக்கு ஜெயலலிதா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.  10 அமைச்சர்கள், 98 சட்டசபை உறுப்பினர்கள், 20  முன்னாள் சட்ட சபை உறுப்பினர்கள் , 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். 100  முன்னாள் சட்டசபை உறுப்பினர்களை ஜெயலலிதா கட்டம் கட்டி வெளியே வைத்துள்ளார்.தேர்தலில் போட்டியிடஜெயலலிதா சந்தர்ப்பம் தருவர் எனக் காத்திருந்தவர்கள்  ஏமாந்து போனார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ வேட்பாளர் பட்டியலில் 153 புதியவர்கள் இடம் பிடித்துள்ளனர். மேயர்,துணை மேயர், ஒன்றியச்செயலாளர், குழுத்தலைவர்,கவுன்சிலர் ஆகியோருக்கு அதிர்ஷடம் அடித்துள்ளது. 41 வழக்கறிஞர்கள், 6வைத்தியர்கள், 6 பொறியியலாளர்கள்,ஜெயலலிதா உட்பட 31 பெண்கள்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.   17அமைச்சர்களும்  31  சட்டசபை உறுப்பினர்களும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தில் பஞ்ச பாண்டவர் என்று அழைக்கப்பட்ட நால்வருக்கு சந்தர்ப்பம்  வழங்கிய ஜெயலலிதா முன்னர் அமைச்சரான பழனியப்பனை வேட்பாளர் பட்டியலில் இருந்து தூக்கிவிட்டர்  பன்னீர்ச்செல்வம்     பழைய தொகுதியில் போட்டியிடுகிறார். நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் தொகுதி மாற்றப்பட்டுள்ளனர்.

அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக‌ சட்டசபை உறுப்பினர்கள் மீது  பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வெற்றி பெற்ற பின்னர் அதிகமானோர்  தொகுதிப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. சென்னையை உலுக்கிய கடும் மழை வெள்ளத்தின் போது கூட  ஆளும் கட்சியின் செயற்பாடு திருப்திகரமாக இருக்கவில்லை. பழைய உறுப்பினர்கள் அதே தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற மாட்டார்கள் என்பதை சில ருத்துக் கணிப்புகள் துலாம்பரமாக வெளிப்படுத்தி உள்ளனர். அதனால்   செல்வாக்கு குறைத்தவர்கள் தொகுதி மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபைத்  தேர்தலில் 6கட்சிகளுக்கு  7 தொகுதிகளை  ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார். அந்த ஏழு பேரும்   அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட வேண்டும். கடந்த  தேர்தலின் போது விஜயகாந்தின் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அணிமாறி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ கூட்டனியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியன கடைசி நேரத்தில் ஜெயலலிதாவின் தலைமையை புறக்கணித்தன. சரத்குமார்  கூட்டணியை விட்டு வெளியேறி பின்னர் ஜெயலலிதாவிடம் சரணடைந்தார். அப்படி ஒரு நிலை அடுத்த தேர்தலின் பின்னர் ஏற்படக்கூடாது என்பதற்கான முன்னேற்பாடாக அனைவரும் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட கட்டளையிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் உருவாக்கப்பட்ட நடிகர் கருணாசின் கட்சி தமீம் அன்சாரி கட்சியினருக்கெல்லாம் தொகுதிகள் வழங்கிய ஜெயலலிதா   தமிழக வாழ்வுரிமை கட்சியை புறம் தள்ளியுள்ளார்.. அக்கட்சி தலைவர் வேல்முருகன்  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக வெளியான தகவல்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதவிர டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம் ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம் ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், பி.வி.கதிரவனின் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி ஆகியவற்றுக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை

ஜெயலலிதாவை பெரிதும் நம்பி இருந்த வாசனை அவர்  திரும்பியும் பார்க்கவில்லை. காங்கிரஸில் இருந்து  வெளியேறி புதிய சரித்திரம் படைக்கும் கனவில் இருந்த வாசன் தேடுவர் இன்றி தவிக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகமும் மக்கள் நலக் கூட்டணியும் வாசனுக்கு அழைப்பு விடுத்தன. ஜெயலலிதா கை கொடுப்பார் என நம்பி இருந்த  வாசன் இன்று  அரசியல் அனாதையாக இருக்கிறார். கடைசி நேரத்திலாவது  ஜெயலலிதாஅழைப்பர் என்ற நம்பிக்கை வாசனிடம் இருக்கிறது. விஜயகாந்தின் கட்சியுல் இருந்து வெளியேறி ஜெயலலிதாவின் ஆட்சியைப் பலபடுத்தியவர்கள்திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறார்கள். சுந்தர்ராஜன் ,பாண்டியராஜன், நடிகர் அருண் பாண்டியன் ,தமிழழகன், சாந்தி , சுரேஷ்குமார்,  அருண் சுப்பிரமணியன், -   மைக்கேல் ராயப்பன் ஆகியோர் கடைசி நேரத்தில்   கட்சியில் இருந்து வெளியேறி வியஜகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறித்தனர். .இவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் வேட்பாளர் பட்டியலில், பாண்டியராஜனை தவிர மீதமுள்ளவர்களுக்கு  ஜெயலலிதா அனுமதி வழங்கவில்லை


ஐந்து வருட ஆட்சியில் அடிக்கடி அமைச்சரவையை மாற்றியதுபோல தேர்தல்  வேட்பாளர்களையும் ஜெயலலிதா மாற்றியுள்ளார். தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம்  கிடைத்ததால் சந்தோசப் பட்டவர்கள் இப்போது கலங்கிப் போயுள்ளனர். வேட்பு மனு தாக்கல் தினத்துக்கு முன்னர் இன்னமும் எத்தனைபேர் மற்றப்படுவார்கள்  என்பது   தெரியாது அனைவரும் கலக்கத்தில் உள்ளனர் 
தமிழகத்தில் அனைத்துத்  தொகுதிகளில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதன் மூலம் காமராஜருக்கு பிறகு ஒரே சின்னத்தில் 234 தொகுதிகளையும் சந்திக்கப்போகும் கட்சி என்ற பெருமை ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சேர்ந்துள்ளது. சட்டசபை தேர்தலில் இதுவரை தமிழகத்தி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கட்சிகாமராஜர் தலைமையிலான காங்கிரஸ் மட்டும் தான். அதன்பிறகு இப்போது உதிரிக் கட்சிகளை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   தனது சின்னமான இரட்டை இலையில் போட்டியிட செய்து தேர்தலை சந்திக்கிறது. இதன் மூலம் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளது   கட்சி மிகவும் பலமாக உள்ளதாக ஜெயலலிதா கருதுவதே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது

 கடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தைரியம் தற்போது கூடுதலாகியுள்ளது. ஜெயலலிதாவின் துணிச்சலை அதிகரிக்கும் வகையில் தற்போ தமிழகத்தில் ஐந்து முனை போட்டிஏற்பட்டுள்ளது. அதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  எதிரான வாக்குகள்  சிதறி சாதகமான சூழல் ஏற்படும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.

1957ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. 206 தொகுதிகளில் 151 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் 45 சதவீத வாக்குகளைப்  பெற்றிருந்தது. 1962ல் நடந்த தேர்தலிலும் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 46 சதவீத வாக்குகளுடன்  136 இடங்களில் வெற்றி பெற்றது

  அதன்பின் நடந்த எல்லா சட்டசபை தேர்தல்களிலும் ஏதாவது ஒன்று அல்லது பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டன. எனவேதான் தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் செய்யாத சாதனையாக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் முடிவில் ஜெயலலிதா இறங்கியுள்ளதாக தெரிகிறது.  

மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்ததில் இருந்து அவருக்கு சோதனை  காலம்  ஆரம்பித்துவிட்டது.  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து விஜயகாந்த் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பிய விஜயகாந்தின் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விஜயகாந்தின் கட்சியைச்சேர்ந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார், கும்மிடிபூண்டி சேகர், மேட்டூர் பார்த்திபன் ஆகிய சட்டசபை உறுப்பினர்களும்   ஈரோடு வடக்கு-தெற்கு, திருவண்ணாமலை, வேலூர், சேலம் மேற்கு, திருப்பூர் மாவட்டச் செயலாளர்களும் விஜயகாந்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறைவு எனக் கருதும் இவர்கள்  தமது இருப்பைத் தக்க வைப்பதற்காக  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்கள். அவ்ர்களின் போர்க்  கொடியால் கட்சி பிளவுபடும் அபாயம் உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  விஜயகாந்த் இணைவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.  விஜயகாந்த் தமது பக்கம் வருவர் என பெரிதும் நம்பி இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் சித்து விளையாட்டு என  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விஜயகாந்தின் கட்சி உடையும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த்   மூழ்குவாரா மீள்வாரா என்பது தேர்தலின் பின்னர் தெரிந்துவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
10/04/16

No comments: