Thursday, May 21, 2020

ஆறு கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவார்கள் - உலக வங்கி தகவல்



கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவால் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அதுபோல் வளர்ந்து வரும் நாடுகளும், ஏழ்மையான நாடுகளும் கடும் பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளன.    இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக உலக அளவில் சுமார் ஆறு கோடி மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கி தலைவர் டேவிட் மால்போஸ் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் வளர்ந்த பொருளாதாரங்கள் மூடப்படுவதால் ஆறு கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் வறுமையில் சிக்கி விடுவார்கள். சமீபத்திய காலங்களில் வறுமையை ஒழிப்பதில் நாம் செய்துள்ள முன்னேற்றத்தின் பெரும்பாலான பகுதி அகற்றப்படும். உலக வங்கி குழு விரிவான நடவடிக்கைகளை எடுத்து 100 நாடுகளுக்கு அவசர உதவி ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தை மற்ற நன்கொடையாளர்கள் முன் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள். உலகளாவிய நெருக்கடியை சமாளிக்கும் ஒரு பகுதியாக 100 வளரும் நாடுகளுக்கு 160 பில்லியன் டாலர் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி அனைத்தும் 15 மாதங்களில் வழங்கப்படும்.


இந்த 100 நாடுகளில் உலக அளவில் 90 சதவீத மக்கள் உள்ளனர். இவர்களில் 39 நாடுகள் ஆப்பிரிக்காவின் துணை சகாரா பகுதியை சேர்ந்தவை. மொத்த திட்டங்களில் 3-ல் ஒரு பகுதி ஆப்கானிஸ் தான் சாட், ஐதி, நைதர் போன்ற பலவீனமான மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும். வளர்ச்சி பாதையில் திரும்புவதற்கும் சுகாதார அவசர நிலைகளை கையாள்வதற்கு விரைவான அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டும். அதேநேரத்தில் வேலைகளுக்கு உதவ பணம் மற்றும் பிற உதவிகள் தனியார்துறை பராமரிக்கப்பட வேண்டும். சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றை திறம்பட சமாளிக்கும் வகையில் நாடுகளுக்கு ஏற்ப இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டம் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும். உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவும்.

 

No comments: