Sunday, March 11, 2012

வெற்றிக்களிப்பில் ஜெயலலிதாதோல்விப் பயத்தில் எதிர்க்கட்சிகள்

தமிழக அரசின் செல்வாக்குக்குச் சவால்விடும் சங்கரன் கோவில் இடைத் தேர்தல் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. 21 ஆம் திகதி இடைத் தேர்தல் முடிவு வெளியாகும். சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது விஜயகாந்துடனும் இடதுசாரிகளுடனும் கைகோர்த்து பிரமாண்டமான வெற்றியைப் பெற்று முதல்வர் அரியாசனத்தில் வீற்றிருக்கும் ஜெயலலிதா விஜயகாந்தையும் இடதுசாரிகளையும் கைவிட்டுத் தனது செல்வாக்கை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளõர்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் ஜெயலலிதா கருணாநிதி, விஜயகாந்த், வைகோ ஆகியோருக்கு இடையேயான போட்டியாக இருக்குமே தவிர அவர்களின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களின் போட்டியாக இருக்காது. சட்ட சபைத் தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்றதை விட அதிகப்படியான வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்கு முக்கியமானவர்கள் விஜயகாந்தும் இடதுசாரிகளும் என்பது வெளிப்படை. ஆனால் இதனை ஜெயலலிதா நிராகரித்துள்ளõர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அலையே தன்னை முதல்வராக்கியதாக கருதுகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான ஊழல் அலையும் ஜெயலலிதாவின் வெற்றிக்குப் பிரதான காரணம். இடதுசாரிகளும் விஜயகாந்தும் இல்லையென்றால் இவ்வளவு பிரமாண்டமான வெற்றியை ஜெயலலிதா பெற்றிருக்க முடியாது.
ஜெயலலிதாவின் சவாலை ஏற்று சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ள விஜயகாந்த் தனது செல்வாக்கை ஜெயலலிதாவுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தல்களில் ஜெயலலிதாவுக்குச் சவாலாக இருந்தார் விஜயகாந்த். ஆயினும் சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. ஜெயலலிதாவின் சவாலுக்குப் பதிலளிப்பதற்காகவே தனது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலமான கோட்டைகளில் சங்கரன்கோவில் தொகுதியும் ஒன்று. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அன்றைய தேர்தலின் போதும் சங்கரன்கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆகையினால் சங்கரன் கோவில் தொகுதியில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் உள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் செல்வாக்கைச் செல்லாக் காசாக்கப் போவதாக கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ள விஜயகாந்தால் வெற்றி பெற முடியாத அதேவேளை ஜெயலலிதாவின் செல்வாக்கைச் சிதறடிக்கவும் முடியாது.
சங்கரன்கோவில் எனது மண். இங்கு போட்டியிட்டு மூக்குடைய வேண்டாம் என்ற கோஷத்துடன் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் வைகோ. வைகோவை முன்பொரு தடவை குப்புற விழுத்திய தொகுதி சங்கரன் கோவில் என்பதை மறந்துவிட்டு பிரதான கட்சிகளுக்கு சவால் விட்டு சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் வைகோ. இடைத் தேர்தல் அறிவிப்பு முன்பே தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த வைகோவுக்கு வெற்றி மிகத் தூரத்திலேயே உள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தனது இருப்பை வெளிப்படுத்த நினைக்கும் வைகோவின் எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடிய சூழ்நிலை இல்லை.

திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்ததனால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்க்கவே திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பியது. வைகோவும் விஜயகாந்த்தும் தமது பலத்தை வெளிக்காட்டுவதற்கு சங்கரன்கோவில் இடைத் தேர்தலை காரணமாக்கியதால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை நிரூபிப்பதற்காகவே சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார் கருணாநிதி.
தமிழக அமைச்சர் பட்டாளம் சங்கரன்கோவில் தொகுதியில் முகாமிட்டு பிரசாரத்தை நடத்துகிறது. அரச அதிகõரம் அத்து மீறல் தாராளமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தேர்தல் நடைபெற முன்பே வெற்றி நமதே என்ற எண்ணத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தொண்டர்கள் பிரசாரம் செய்கின்றனர். சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வெற்றியை ஜெயலலிதாவின் கையில் ஒப்படைப்போம் என்று கங்கணம் பூண்டுள்ளனர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்.
தமக்கிடையேயான பிரச்சினைகளையும் தலைமைத்துவப் போட்டிகளையும் புறத்தே ஓரம் கட்டி வைத்துவிட்டு சங்கரன் கோவில் இடைத் தேர்தல் வெற்றியை கருணாநிதியின் காலடியில் சமர்ப்பிப்பதற்காக ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்டாலின் அழகிரி ஆகியோருக்கிடையோன பிரச்சினை பெரிதாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறையும் அறிகுறி தெரியவில்லை. இவர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கெண்டு வருவதற்கு கருணாநிதி முயற்சி செய்யவில்லை. இவர்களின் பிரச்சினையால் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாகப் பிரிந்துள்ளது.
ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் அழகிரிக்கு ஆதரவாகவும் ஒரு சில தலைவர்கள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இன்னும் சிலர் இவர்கள் இருவர் பக்கமும் சாராது கருணாநிதியின் பின்னால் உள்ளனர். ஸ்டாலினுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் வெளிப்படையாக போர்க் கொடி தூக்கியுள்ளார். சங்கரன் கோயில் இடைத் தேர்தலின் பின்னர் ஸ்டாலின் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கிடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கலாம்.
ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், வைகோ ஆகியோர் தமது பலத்தை வெளிக்காட்டுவதற்காகச் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கிழந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஜெயலலிதா கருணாநிதி ஆகியோரின் உதவி இன்றி வைகோ விஜயகாந்த் ராமதாஸ் ஆகியோரே தமிழகத் தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் வீம்புக்காகத் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது பாரதீய ஜனதா கட்சி.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு11/03/12


No comments: