Saturday, March 3, 2012

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில்இரண்டாவது இடத்திற்கு கடும்போட்டி

வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் இடைத்தேர்தலுக்கு தயாராக உள்ளார் ஜெயலலிதா.
இழந்த பெருமையை மீட்டெடுக்க வைகோவும் விஜயகாந்த்தும் களத்தில்
இறங்கியுள்ளனர்

சங்கரன் கோவில் இடைத்தேர்தலினால் தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்கள் அனைத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பண பலம் என்பனவற்றின் மூலமே திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதாக அன்றைய எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. திருமங்களம் தொகுதி இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி இருந்தன. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இடைத்தேர்தல்களை புறக்கணித்தது. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நிலைமை மாறியுள்ளது. இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் உள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியையும் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்துள்ளது.
வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் சங்கரன் கோவில் இடைத்தேர்தலை சந்திக்கிறது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கு கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, விஜயகாந்த் ஆகிய நான்கு தலைவர்களும் தமது பலத்தை நிரூபிக்கும் களமாக சங்கரன் கோவில் இடைத்தேர்தலைக் கருதுகிறார்கள். சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின்போது ஊழல் தலை விரித்தாடியது. அராஜகம் கோலோச்சியது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மின் வெட்டினால் தமிழகம் இருண்டு போயுள்ளது என்ற பிரசாரத்தை முக்கிய ஆயுதமாகப் பாவித்து ஜெயலலிதா முதல்வரானார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத தூண்களில் ஒன்றாக இருந்த இராவணன் மீது ஊழல், கொலை முயற்சி, பாலியல் வல்லுறவு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் மீது சுமத்தப்பட்ட நில அபகரிப்புக் குற்றச்சாட்டு சசிகலாவின் சகாக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மின் வெட்டு திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது இருந்ததை விட அதிகரித்துள்ளது. தேர்தல் கால வாக்குறுதி என்பனவற்றை ஜெயலலிதா இன்னமும் நிறைவேற்றவில்லை. சமச்சீர் கல்வித்திட்டம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், புதிய தலைமைச் செயலகம் ஆகியவற்றை மாற்ற தமிழக அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் செயற்பாடுகள் நீதிமன்றத்தாலும் பொதுமக்களாலும் விமர்சிக்கப்பட்டுள்ளன என்றாலும் வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் சங்கரன்கோவில் இடைத்தேர்தலைச் சந்திக்க உள்ளார் ஜெயலலிதா.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி பீடம் ஏறியதால் கடந்த ஒக்டோபரில் நடத்த திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் படுதோல்வி அடைந்தது. ஆகையினால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போடியிடாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய வைகோ இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும் என்ற சமரசத்துடன் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனது வேட்பாளருடன் களம் இறங்கியுள்ளார். ஜெயலலிதாவின் சவாலை ஏற்று விஜயகாந்த் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை அறிவித்துள்ளார். வைகோவையும் விஜயகாந்தையும் தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே திராவிட முன்னேற்றக் கழகம் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தமிழக சட்ட சபையில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையிலுள்ளார் கருணாநிதி. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தில் களமிறங்குகிறது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற போட்டியில் ஸ்டாலினும் அழகிரியும் முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கழகத்தின் எதிர்கால நலனுக்காக இருவரும் இணைந்து சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் பிரசாரம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளது.

வைகோவின் பலமிக்க கோட்டைகளில் சங்கரன் கோவில் தொகுதியும் ஒன்று. வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இத்தொகுதியிலே தான் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறுவதற்கு சங்கரன் கோவில் தொகுதியை ஒதுக்காததும் ஒரு காரணம். வைகோவுக்கு சங்கரன்கோவில் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உண்டு. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் ஆவலில் உள்ளார் வைகோ. ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் தமிழக சட்ட சபைத் தேர்தலைப் புறக்கணித்தார் வைகோ. தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போடியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று தனது கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபித்தார் வைகோ.
2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சி ஒன்றுடன் கூட்டணி சேர வேண்டிய நிலையுள்ளதால் தனது கட்சியின் செல்வாக்கை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார் வைகோ. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிக தொகுதிகளைப் பெறலாம் என்று கருதுகிறார் வைகோ. 1996ஆம் ஆண்டு மார்க்ஸ்சிஸ்ட், ஜனதாதளம் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. 2001ஆம் ஆண்டு சங்கரன் கோவிலில் தனித்துப் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 21 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இந்த முறையும் தனித்துப் போட்டியிடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளைப் பெற வேண்டும். குறைவான வாக்குகளைப் பெற்றால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
தமிழகத் தேர்தல்களின் போது கூட்டணி இன்றிப் போட்டியிட்டு ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்த விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்த பின்னர் தனது சுயத்தை இழந்துள்ளார். கூட்டணித் தலைவர்களை அவமானப்படுத்துவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் யாரும் இல்லை. விஜயகாந்த்தை அவமானப்படுத்தியது போன்று வேறு யாரையும் இவ்வளவு தூரம் அவமானப்படுத்தவில்லை. துணிவிருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு விஜயகாந்துக்கு அறை கூவல் விடுத்தார் ஜெயலலிதா. மிக நீண்ட தயக்கத்தின் பின்னர் தனது கட்சியின் வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த்.
ஜெயலலிதா விதித்த வலையில் வசமாக விழுந்துள்ளார் விஜயகாந்த். ஜெயலலிதாவின் ச‌வாலை புறந்தள்ளி தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியிருந்தால் ஜெயலலிதாவின் கோபதாபங்கள் விஜயகாந்த்தைச் சிதைத்திருக்கும். ஜெயலலிதாவுடன் இணைந்ததனால்தான் விஜயகாந்த்துக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்தது. விஜயகாந்தின் கட்சிக்கு தேர்தல் ஆணையகம் அங்கீகாரம் அளித்தது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற உச்சாணிக் கொப்பில் விஜயகாந்தை ஏற்றி வைத்த ஜெயலலிதா சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் மூலம் விஜயகாந்தைக் புறந்தள்ளியுள்ளார்.
2006ஆம் ஆண்டு தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது சங்கரன்கோவில் தொகுதியில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சி சுமார் ஐந்தாயிரம் வாக்குகளைப் பெற்றது. இப்போது நடைபெறும் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுத் தனது செல்வாக்கை நிலை நாட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் விஜயகாந்த். இடது சாரிகள் விஜயகாந்த்துக்கு துணையாக உள்ளனர் என்றாலும் இரண்டவாது இடம் மிகத் தொலைவிலேயே உள்ளது.
சங்கரன்கோவில் தொகுதியில் பார்வாட் பிளாக், புதிய தமிழகம் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கணிசமான வாக்கு உள்ளது. இந்த இரண்டு கட்சிகளையும் தம் பக்கம் இழுப்பதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. 2006ஆம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதியின் சமாஜவாதி சின்னத்தில் போட்டியிட்ட புதிய தமிழகம் சுமார் எட்டாயிரம் வாக்குகளைப் பெற்றது. அ@த அளவில் கார்த்திக் தலைமையிலான பார்வாட் பிளாக் கட்சி 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்று விஜயகாந்தின் கட்சியை விட இந்த இரண்டு கட்சிகளும் அதிக வாக்குகளை பெற்றதால் இவற்றின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய தமிழகத் தலைவர் டாக்டர் கிருஷ்ண"வாமி யும், கார்த்திக்கும், ஜெயலலிதாவுக்கும் மிக நெருக்கமாக இருந்தார்கள். இவர்கள் இருவரையும் கவனத்தில் எடுக்காது ஜெயலலிதா சங்கரன்கோவில் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். ஆகையினால் எதிர்க்கட்சிகள் இவர்கள் இருவருக்கும் வலை வீசி உள்ளனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு வைகோவும் இடதுசாரிகளும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி யடைந்தன. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பதனால் ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
வர்மா,

சூரன்,ஏ,ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு29/02/12

No comments: