Monday, September 4, 2017

புவனேஸ்வரின் பந்து வீச்சில் வீழ்ந்தது இலங்கை



பிரேமதாசா ஸ்ரேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  இலங்கைக்கு எதிரான  ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெற்றால் வெற்றி பெற்ற இந்தியா தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றதால் கடைசிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இலங்கை வீரர்கள் களம் இறங்கினர்.

இலங்கை அணியின் தலைவர்  தரங்க இடம்பெற்றதால் குசல் மென்டிஸ் வெளியேற்றப்பட்டார். இந்திய அணியில்  தவான்,பண்டையா ஹர்த்திக் பண்டையா,அக்சர் படேல், ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டு ரஹானே,கேதர் யாதவ்,புவனேஸ்வர் குமார்,யுவேந்திர சாகல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
மழை காரணமாக அரை மணிநேரம் தாமதமாகப் போட்டி ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று   முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை  49.4  ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து  238  ஓட்டங்கள் எடுத்தது. 46.3   ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்த இந்தியா 239  ஓட்டங்கள் எடுத்து ஆறு விக்கெற்களால் வெற்றி பெற்றது.







ஆரம்பது துடுப்பாட்ட வீரரான டிக்வெலவும்  முனவீரவும் புவனேஸ்வர் குமாரின் வேகத்தால் வெளியேறினர்.தரங்கவும் திரிமானேயும் .இணைந்தனர். அதிரடிகாட்டிய தகரங்க 48  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நான்காவது இணைப்பாட்டமாக விளையாடிய மத்தியூஸ் திரிமானே ஜோடி சற்று நம்பிக்கையளித்தது. இவர்கள் இருவரும்  இணைந்து இந்தத் தொடரில் முதன் முதலாக சதத்தை எட்டிப்பிடித்தனர்.  இந்திய வீரர்களை மிரட்டி 122 ஓட்டங்கள் எடுத்த  இந்த ஜோடியை புவனேஸ்வர் குமார் பிரித்தார்.  67  ஓட்டங்கள் எடுத்த திரிமானே  ஆட்டமிழந்தார். 

இலங்கை அணி 38.5 ஓவர்களில் நான்கு விக்கெற்களை  இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தபோது திரிமானே ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் மத்தியூஸும் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் கடைசி ஏழு விக்கெற்கள் 53 ஓட்டங்களில் வீழ்ந்தது  இலங்கை  49.4  ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து  238  ஓட்டங்கள் எடுத்தது.  

 புவனேஸ்வர் குமார் 9.4 ஓவர்கள் பந்து வீசி 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெற்களை வீழ்த்தினார்  இதுவே அவரது சிறந்த பந்து வீச்சாகும்.பும்புரா இரண்டு விக்கெற்களையும் சாஹல் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றைக் கைப்பற்றினர்.
 




ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரஹானே 5  ஓட்டங்களிலும் ரோகித் சர்மா 16  ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.  மூன்றாவது இணைப்பாட்டத்தில் சேர்ந்த கோஹ்லி , மனிஷ் பாண்டே ஜோடி நிலைத்து நின்று விளையாடி ஓட்ட சராசரியை அதிகரித்தது.  இவர்கள் இருவரும் இணைந்து 99  ஓட்டங்கள் எடுத்தனர். பாண்டே 36  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நான்காவது இணைப்பாட்டத்தில் கோஹ்லியுடன் இணைந்தார்  கேதார் யாதவ். இவர்கள் இருவரும் இணைந்து 109 ஓட்டங்கள் எடுத்தனர். 63  ஓட்டங்களில்  கேதார் யாதவ் ஆட்டமிழந்தார். வெற்றி பெறுவதற்கு இரண்டு ஓட்டங்கள் இருந்தபோது களம் இறங்கிய டோனி ஒரு ஓட்டம் எடுத்தார். ஒரு ஓட்டம் எடுத்து கோஹ்லி வெற்றியை  உறுதி செய்தார்.  கோஹ்லி ஆட்டமிழக்காது 110 ஓட்டங்கள் எடுத்தார்.  இந்த ஆண்டு 18  போட்டிகளில் விளையாடிய கோஹ்லி 1000  ஓட்டங்கள் அடித்தார்.

ஆட்டநாயகன் விருதை புவனேஸ்வர் குமாரும் தொடர் நாயகன் விருதை  பும்புராவும் பெற்றுக்கொண்டனர்.. 30 ஆவது சதமடித்த கோஹ்லி , ரிக்கி பொண்டிங்கின் சாதனையை சமப்படுத்தி உள்ளார்.
 




Friday, September 1, 2017

ரோகித் கோஹ்லி சதம் இந்தியா வெற்றி



  கொழும்பு பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் இந்திய  - இலங்கை அணிககுக்கிடையே 31 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற நான்காவது  ஒரு நாள் கிரிக்கெற் போட்டியில் ரோகித் கோஹ்லி  ஆகியோரின் சதத்தால் இந்திய எளிதாக வெற்றி பெற்றது.
 இந்திய அணியில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டதால்    . கேதர் ஜாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், ஆகியோருடன் அறுமுக வீரராக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.. காயமடைந்த இலங்கை அணித்தளிவர் கபுகெதர விலகியதால் மலிங்க தலைமைப் பொறுப்ப  ஏற்றார். சண்டிமால், சமீரா ஆகியோர் நீக்கப்பட்டு இலங்கை அணியில்  ஹசரங்கா,வுடன்  முனவீரா, புஷ்குமாரா ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் கோஹ்லி துடுப்பட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில்  5 விக்கெற்களை  இழந்து  375   ஓட்டங்கள் எடுத்தது. 376  என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய  இலங்கை 42.4 ஓவர்களில்  சகல விக்கெற்களையும்  இழந்து 207  ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தது.

   ஆரம்பத்  துடுப்பட்ட வீரராகக் களம் இறங்கிய  தவான் நான்கு ஓட்டங்களில்  வேகப்பந்து வீச்சாளர் பெர்னாண்டோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் இந்தியாவுக்கு இலங்கை அதிர்ச்சியளித்தது.அதன் பின்னர் ஆட்டம் முடியும் வரை இந்தியாவின் கையே மேலோங்கியிருந்தது. ரோகித் கோஹ்லி   ஜோடியைப் பிரிக்கமுடியாது இலங்கை வீரர்கள்  திணறினர் கோஹ்லி  தனது 29  ஆவது சதத்தைப் பதிவு செய்தார் 131ஓட்டங்கள் எடுத்த  கோஹ்லி , மலிங்கவின்  பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மலிங்க  300  ஆவது  விக்கெற்கைப்பற்றி சாதனை செய்தார்.



இரண்டாவது இணைப்பாட்டமாக விளையாடிய ரோகித் ,கோஹ்லி ஜோடி  219  ஓட்டங்கள் அடித்து அதிக ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்தது. 2017   ஆம் ஆண்டு கோஹ்லி தவான் ஜோடி இரண்டாவது இணைப்பாட்டத்தில்197ஓட்டங்கள் அடித்தது. முன்னதாக 2009ஆம் ஆண்டு  கம்பீர் டோனி ஜோடி  இரண்டாவது இணைபாட்டத்தில் 188 ஓட்டங்கள்  அடித்தது.

 


ரோகித்துடன் பண்டையா இணைந்தார். ரோகித் சர்மா பவுண்டரி விளாசி தனது 13ஆவது  சதத்தை எட்டிப்பிடித்தார் இலங்கைக்கு  எதிராக ரோகித்தின் நான்காவது சதம் இதுவாகும்.இலங்கைக்கு எதிராக தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்த முதலாவது இந்திய வீரர் என்ற சாதனை செய்தார். மத்தியூஸின்   ஓவரில்  பண்டையா 19 ஓட்டங்களிலும், ரோகித் 104  ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  லோகேஷ் ராகுல் தனஞ்ஜயவின் சுழலில் சிக்கி ஏழு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தனஞ்ஜயவிடம் சிக்கினார். 49 ஓட்டங்களில் நான்கு விக்கெற்களை இந்தியா  இழந்தபோது மணிஸ் பண்டேயுடன்  டோனி ஆறாவது விக்கெற்றுக்காக இணைந்தார்.

டோனி பண்டே இணை இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தது. நிதானமாகவும் பொறுப்பாகவும் இவர்கள் இருவரும் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் முடிவில் 375 ஓட்டங்களைப் பெற உதவினர். பண்டே  50ஓட்டங்களையும் டோனி  49 ஓட்டங்களையும் அடித்தனர். ஆறாவது இணைப்பாட்டத்தில் இவர்களை இருவரும்  இணைந்து 101 ஓட்டங்கள் அடித்தனர். டோனி 48  ஓட்டங்களுடன் பந்தை எதிர்நோக்கினார். மறு முனையில் பண்டே 49  ஓட்டங்களுடன் இருந்தார். ஓவர் முடிவதற்கு இரண்டு பந்துகள் மீதமிருந்தன டோனி ஒரு ஓட்டம் அடித்து பண்டேக்கு வாய்ப்பளித்தார். டோனிக்கு இது   300 ஆவது ஒருநாள் போட்டி. 2008 ,2012  ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக தந்து 100 ஆவது 200  ஆவது போட்டிகளில் விளையாடினார்.
மத்தியூஸ் இரண்டு விக்கெற்களையும் மலிங்க ,பெனார்ண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினர்.


இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாகத்  தோல்வியடைந்த இலங்கை நான்காவது போட்டியில் 376 என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்தது.  திக்வெல,முனவீர,மென்டிஸ், திரிமானே ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மத்தியூஸ் 70 சிரிவர்தன 39  சில்வா 22 ஆகியோர்  ஓட்டங்கள் அடித்து ஆறுதலளித்தனர். ஆறாவது இணைப்பாட்டமாக விளையாடிய மத்தியூஸ் சிரிவர்தன ஜோடி  அதிகபட்சமாக 73 ஓட்டங்கள் அடித்தது. 42.4 ஓவர்களை சகல விக்கெற்களையும் இழந்த இலங்கை  207  ஓட்டங்கள் எடுத்தது.
 பும்பரா பண்டையா குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களையும் தாகூர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினர். கோஹ்லி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.  ஐந்தாவது  போட்டி 3 ஆம் திகதி நடைபெறும்.