Friday, January 31, 2020

இரண்டாவது சூபர் ஓவரிலும் இந்தியா வென்றது.



டெஸ்ட் கிறிக்கெற் வெற்றி தோல்வியின்றி முடைவது  சகஜம். ஒருநாள், ரி20 போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரே ஓட்டங்களை எடுத்து சமநிலையில் முடிவது அபூர்வமான சம்பவம். கிறிக்கெற் வரலாற்றில் ஒரே தொடரில் அடுத்தடுத்த போட்டிகள் சமநிலையாவதும், அதில் ஒரே அணி வெற்றி பெறுவதும் இதுவரை நடந்ததே இல்லை. அப்படி ஒரு புதிய வரலாற்றை எழுதி உள்ளது இந்திய அணி.  

ஒருநாள் போட்டிகள் சமநிலையில் முடிந்தால் இரு அணிகளும் வெற்றி - தோல்வி இன்றி போட்டியை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், ரி20 போட்டிகள் வந்த பின் அந்த நிலை மாறி உள்ளது. ரி டி20 போட்டிகள் மிக எளிதாக சமநிலையில் முடிகின்றன. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய ரி20 தொடரில் மூன்றாவது, நான்காவது போட்டி அடுத்தடுத்து சமநிலையாகி ஆகி வியப்பை ஏற்படுத்தி உள்ளன. நியூஸிலாந்து வெற்ரி பெற வேண்டிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றமை ஆச்சரியமான சம்பவம்


மூன்றாவது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி வசம் சென்ற போட்டியை முகமது ஷமியின் அசத்தலான கடைசி ஓவரால்  சமநிலை  செய்த இந்திய அணி, அடுத்து சூப்பர் ஓவரில் வென்றது. நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் குவித்த 17 ஓட்டங்கள் அடிக்க  கடைசி இரண்டு பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற வைத்தார் ரோஹித் சர்மா.

வெலிங்டன்  வெஸ்ட்பாக் மைதானத்தில் நடந்த  போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா எட்டு விக்கெற்களை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது.   இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அணி மாற்றம் அதன் படி, இந்திய அணியில் ரோஹித் சர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி அணியில் வாய்ப்பு பெற்றனர். நியுஸிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் தோள் பட்டையில் காயம் காரணமாக விளையாடவில்லை. செளதீ அணிக்குத் தலமை தாங்கினார்.


சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல்  ஆகிய இருவரும்  துவக்க வீரர்களாக களமிறங்கினர். சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆட முயற்சி செய்து ஒரு சிக்ஸ் அடித்து, பின் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்., விராட் கோலி 11 ஓட்டங்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 1 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.  சிறப்பாக விளையாடிய  ராகுல் 26 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

  முதல் மூன்று ரி20 களிலும் அசத்திய இந்திய வீரர்கள் ஏமாற்றினார்கள்.
12-வது ஓவரிலேயே பின்வரிசை வீரர் ஷர்துல் தாக்கூர் விளையாட வந்தது இந்திய அணி இன்று பேட்டிங் செய்த விதத்தை வெளிப்படுத்தியது. பாண்டே - தாக்குர் ஆகிய இருவரும் 17-வது ஓவர் வரை தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தார்கள். 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் எடுத்த ஷர்துல் தாக்கூர் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
 9-வது ஓவரின்போது ராகுல் ஆட்டமிழந்தபின் களமிறங்கிய மணிஷ் பாண்டே  இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். மற்ற வீரர்கள் செய்த தவறை தானும் செய்யாமல் பக்குவமாக விளையாடினார்.  .

19-வது ஓவர் முழுக்க விளையாடிய சைனி சில பந்துகளை வீணடித்தார்.   2 பவுண்டரிகளுடன் 10 ஓட்டங்களை எடுத்தார். கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் எடுத்ததால் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே, 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களும் சைனி 11 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். நியூஸிந்து தரப்பில். தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்துவீசியதால்  ஓட்டங்கள் எடுக்கத் தடுமாறினார்கள் நியூஸிலாந்து தொடக்க வீரர்கள். கப்தில்  4 ஓட்டங்களுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மன்ரோவும் சைஃபர்ட்டும் அற்புதமாக விளையாடி வேகமாக ஓட்டங்களைக்  குவித்தார்கள். 47 பந்துகளில் 64 ஓட்டங்கள் எடுத்த மன்ரோ, ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் ப்ரூஸ்  சஹால் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி வீரர்கள் மீண்டும் உற்சாகமாக விளையாடினார்கள். ஆனால் சைஃபர்ட் - டெய்லர் ஜோடியால் நியூஸிலாந்து அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. 19 ஓவர்கள் வரை இருவரையும் பிரிக்கமுடியவில்லை. இதனால் 4-வது ரி20 யை   வெல்லும் நிலையில் இருந்தது நியூஸிலாந்து அணி. 32 பந்துகளில் அரை சதமெடுத்தார் சைஃபர்ட்.
19-வது ஓவரை வீசிய சைனி  4 ஓட்டங் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற  7 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார்.

முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று  24 ஓட்டங்களில் வெளியேறினார் டெய்லர். அடுத்த பந்தில் மிட்செல்  பவுண்டரி அடித்ததால் நியூஸிலாந்து அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. 4 பந்துகளில் 3 ஓட்டங்கள். அடுத்தப் பந்தில் சைஃபர்ட்டை ரன் அவுட் செய்தார் ராகுல்.
இதற்குப் பிறகுதான் திருப்புமுனை ஏற்பட்டது. சான்ட்னர் 1 ஓட்டம் எடுத்தார். 2 பந்துகளில் 2 ஓட்டங்கள்.

ஐந்தாவது பந்தில் மிட்செல்லின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷர்துல். இதனால் கடைசிப் பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற   நிலைமை ஏற்பட்டது நியூஸிலாந்து அணிக்கு. அந்தக் கடைசிப் பந்தில் சான்ட்னரால் ஒரு ஓட்டம்  மட்டுமே எடுக்க முடிந்தது. 2-வது ஓட்டம் எடுக்க முயன்று அவர் ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் மீண்டும் சமன் ஆனது.

வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இரு அணிக்கும் தலா ஒரு ஓவர் தரப்படும். இந்தியா சார்பில் பும்ரா பந்து வீசினார். முதல் 3 பந்துகளில் பவுண்டரி உட்பட 8  ஓட்டங்கள் எடுத்த செய்பெர்ட்,4வது பந்தில் அவுட்டானார். அடுத்த இரு பந்தில் மன்ரோ 5  ஓட்டங்கள் எடுக்க  நியூசிலாந்து  அணி   ஒரு விக்கெற்றை இழ்ந்து.13 ஓட்டங்கள் எடுத்தது.
14 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இந்தியாவுக்கு ராகுலும், கோஹ்லியும் களமிறங்கினர். சவுத்தீ பந்து வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த ராகுல், அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார்.. 4வது பந்தில் கோஹ்லி 2 இரண்டு ஓட்டங்கள்  எடுத்தார். அடுத்த பந்தில் கோஹ்லி பவுண்டரி அடிக்க இந்திய அணி ( ஒரு விக்கெற்றை இழந்து 16 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.   

ரி20 கிரிக்கெற் தொடரில், தொடர்ந்து இரண்டு போட்டிகள் சமனான சம்பவம் இதுவரை நடந்தது இல்லை, மேலும், அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வென்றதும் புதிய வரலாறாக மாறி உள்ளது. நியூசிலாந்து அணி சோகமான சூப்பர் ஓவர் வரலாறை மீண்டும் தொடர்ந்து வருகிறது. நியூசிலாந்து அணி அனைத்து விளையாடிய அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் இதுவரை 15 போட்டிகள் சமநிலையில்  முடிந்துள்ளன. அதிக போட்டிகளை சமநிலை செய்த   அணிகளில் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் மெற்கு இந்தியத் தீவுகள்  14 போட்டிகளுடன் உள்ளது.  நியூசிலாந்து அணி 8 சூப்பர் ஓவரில் விளையாடி அதில் ஏழு முறை தோல்வி அடைந்துள்ளது.  . அதே சமயம், இந்திய அணி தான் ஆடிய இரண்டு சூப்பர் ஓவர் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
 சர்வதேச கிரிக்கெட்டில் (ஒரு நாள், ரி20 உள்பட) சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 7-ஆவது முறையாகவும், தொடர்ந்து 6-ஆவது முறையாகவும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
 முதல்முறையாக 2008-ஆம் ஆண்டில் ஆக்லாந்தில் மே.,.தீவுகள் அணியுடன் ரி20  யில் சூப்பர் ஓவர் முறையை எதிர்கொண்டது நியூஸிலாந்து. அதில்   தோல்வியைத் தழுவியது.
 அதையடுத்து, 2010-ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி20 போட்டியில் சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து வென்றது.
 இலங்கைக்கு எதிரான ரி20  (2012),மே.,தீவுகளுக்கு எதிரான ரி20. (2012), இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் , ரி20   (2019), இந்தியாவுக்கு எதிரான இரண்டு ரி20   (2020) ஆகியவற்றில் தோல்வியைத் தழுவியது நியூஸிலாந்து.


No comments: