Friday, May 17, 2024

ஐபிஎல் இல் சாதித்த கப்டன்கள்

ராஜஸ்தான் ,பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.  போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி,  20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 18.5 ஓவர்களில்  5விக்கெற்களை இழந்த பஞ்சாப் 145 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து நான்காவது போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 

 ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தவற விட்ட பஞ்சாப் ஆறுதல் வெற்றி பெற்றது. மறுபுறம் பிளே ஆஃப் தகுதி பெற்றும் ராஜஸ்தானால்   தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

 ராஜஸ்தான் அணியின் இந்த தோல்வியால் ஏற்கனவே 13 போட்டியில் 19 புள்ளிகளை பெற்றிருக்கும் கொல்கத்தா அதனுடைய கடைசி போட்டியில் தோற்றாலும் முதலிடத்தை பிடிப்பது 100% உறுதியாகியுள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து கொல்கத்தா அணி அசத்தியுள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த முதல் கொல்கத்தா கப்டன் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். இதற்கு முன் கௌதம் கம்பீர், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் கூட இந்த சாதனையை படைத்ததில்லை.

மறுபுறம் பஞ்சாப் அணிக்கு இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி  63 ஓட்டங்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய கப்டன்  சாம் கரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 ஷிகர் தவான் காயமடந்த‌தால் இந்த சீசனில் பெரும்பாலும் கப்டனாக விளையாடிய அவர் முந்தைய போட்டிகளில் சுமாராக செயல்பட்டார். இருப்பினும் இப்போட்டியில் ஆல்ரவுண்டராக அசத்திய அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் 50+ ஓட்டங்கள் மற்றும் 2+ விக்கெட்டுகள் எடுத்த 5வது கப்டன் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

 அந்த பட்டியல்: 1. சௌரவ் கங்குலி (கொல்கத்தா) : 91 மற்றும் 2/25, டெக்கான் சார்ஜஸ்க்கு எதிராக, 2008

2.யுவராஜ் சிங் (பஞ்சாப்) : 50 மற்றும் 3/22, பெங்களூருக்கு எதிராக, 2009

3. யுவராஜ் சிங் (புனே) : 66* மற்றும் 4/29, டெல்லிக்கு எதிராக, 2011 4. ஜேபி டுமினி (டெல்லி) : 54 மற்றும் 4/17, ஹைதராபாத்துக்கு எதிராக, 2015

 5. சாம் கரண் (பஞ்சாப்) : 63* மற்றும் 2/24, ராஜஸ்தானுக்கு எதிராக, 2024* 

வைஷ்ணு

No comments: