Monday, June 26, 2023

மூடப்படும் பாடசாலைகளின் பின்னால் உள்ள கதை

 கல்வியில் முதலிடம்  பிடித்து சாதனை படைத்த வடமாகாணம்  இன்று சற்று பின்னடைந்துள்ளது. பிரபலமான பாடசாலைகளில் மாணவர்கள் படிக்கிறார்கள். தனியார் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். இழந்த  முதலிடத்தை இன்னமும்  பிடிக்கவில்லைஇந்த நிலையில் வடமாகானத்தில் மாணவர்கள்  இல்லாமையால் சுமார் 194 பாடசாலைகள்  மூடப்பட்டுள்ள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  அதிர்ச்சிகரமான  உண்மை இன்றைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோரிடம்  உள்ளது. பேரப்பிள்ளை கல்வியில்  சாதிக்க வேண்டும் என்ற ஆசை பெரியவர்களிடம்  உள்ளது. அதீத ஆசைகள், ஆர்வங்கள்  காரணமாக  கிராமப்புறப் பாடசாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா பாடசாலை வளாகத்தில் அதிபர் குலேந்திரகுமார் தலைமையில்   நடைபெற்றபோது இதில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194  பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். மாணவர்கள் இல்லாமையால் அந்தப் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது முதலாவது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகர்ப்புறங்களை நோக்கிச் செல்கின்றார்கள், இரண்டாவது பிறப்பு விகிதம் குறைவு. எனவே, இந்த விடயங்கள் புலம்பெயர் சமூகத்தினராலும், இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினராலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.

நாங்கள் வாழவைக்க வேண்டுகின்ற இந்தச் சமூகம் , நாங்கள் வளமாக வாழவேண்டும் என்று நினைக்கின்ற மக்கள், இந்தப் பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நான் நினைக்கின்றேன். எனவேதான் நான் உங்களிடம் அன்பாகக் கேட்டுக்கொள்ளும் விடயம் வாழுகின்ற இந்தப்  பிரதேசம், வாழ வேண்டும் என்று விரும்புகின்ற மக்களை வாழவைக்க வேண்டிய வழிவகைகளை நீங்கள் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

இந்தச் சமூகத்திலேயே சில விடயங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக புள்ளி விபரங்கள் எங்களுக்குக் கூறுகின்றன. ஒன்று விவாகரத்து பெறுபவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகின்றது. இரண்டாவது  குழந்தை பேறு குறைந்து காணப்படுகின்றது.மூன்றாவது வயது சென்ற திருமணங்கள் அதிகரித்திருக்கின்றது. அதேபோன்று இன்னும் சில சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன.

குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே, இவற்றையெல்லாம் கடந்து எமது சமூகம் வாழவேண்டும் என்றால் புலம்பெயர் சமூகம் ஆற்ற வேண்டிய பணி அதிகம் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

எனவே, இந்தச் சமூகத்தை வாழ வைக்க நீங்கள் செய்யும் சிறிய பணியுடன் நின்றுவிடாது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற உள நல பிரச்சினைகளுக்கு  தீர்வு காணவேண்டிய ஒரு காலம் இப்போது உங்கள் முன்னால் இருக்கின்றது.

வெறும் அரசியல்உரிமைசார் பிரச்சினைகள் மட்டும் எமக்கு இல்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். இளைய சமூகத்தினர் மத்தியில்மாணவர்கள் மத்தியில்குடும்பங்கள் மத்தியில்சிறுவர்கள் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் சமூக உள நல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் எங்களிடம் இருக்கின்றது. எனவே, அதை இன்று கூடியிருக்கும் புலம்பெயர் சமூகமும், இணைந்திருக்கும்  உள்ளூர் சமூகமும் உணர்ந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.

நகர்ப்ப்புற பாடசாலையில் படித்தால்தான் தனது  பிள்ளை கல்வியில் உயர் நிலைக்குச் செல்லும்  என்ற  போலியான நம்பிக்கை  சில பெற்றோர் மத்தியில் உள்ளது.   கண்ணுக் கெட்டிய தூரத்தில் பாடசாலை இருக்கும் போது மிகத் தூரத்தில் உள்ள பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். இதனால் அந்தக் குட்டும்பத்தின் செலவு அதிகரிக்கின்றது. நடந்து செல்லும் தூரத்தில்   பாடசாலை  இருக்கும்போது தூரத்துப் பாடசாலைக்குச் செல்லும்  பிள்ளையின் சிரமத்தைப் பெற்றோர் புரிந்துகொள்வதில்லை.

அந்தக் காலத்தில் ஒரு பாடசாலையை உருவாக்க   எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பார்கள் என்பதை இன்றைய தலை  முறை சிந்திப்பதில்லை. ஒரு கல்விக்கூடம்  மூடப்படுவதன்  பின்னணியில் உள்ள துன்பத்தை  யாரும் கவனத்தில்  எடுப்பதில்லை. தனது சொந்த  ஊருக்கு வர வேண்டிய  பெருமைகள் எங்கோ  இருக்கும் நகரத்துக்குச் செல்வதை  எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை.

  ஒரு பாடசாலை  மூடப்படும்  பின்னணியில் இடப்பெயர்வுபுலம்  பெயர்வுபிறப்பு விகிதம்  குறைவு எனப் பல காரணங்கள்  இருக்கின்றனஇதன்  பின்னணியில் கல்வித்துறை  அதிகாரிகளும் என்ற   கசப்பான  உண்மையையும்  மறுக்க முடியாது. அருகில் உள்ள பாடசாலைகளில்  பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டு  தூரத்தில் உள்ள பாடசாலைகளில்  பிள்ளைகள் சேர்க்கப்படுவதை எப்படி அனுமதிக்கிறார்கள்.

சைவம்   கற்பிக்க மறுத்த சில கிறிஸ்தவப் பாடசாலைகள்  இன்று சைவப்பாடசாலைபோல் இயங்குகின்றன. சாதி  வேற்றுமை பார்த்த சில பாடசாலைகள்  இன்று  சகலரையும்  உள்ளீர்க்கின்றன.

இது எமது கிராமம் இங்கிருக்கும் பாடசாலை மூடப்படக்கூடாது என்ற மனநிலை தோன்றினால்  எஞ்சி இருக்கும் பாடசாலைகளுக்கு ஆபத்து ஏற்படமாட்டாது.

No comments: