Thursday, April 24, 2008

கூட்டணியை குழப்ப இரகசியத் திட்டங்கள்




வர்மா

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவு மிக மிக இறுக்கமான நிலையை அடைந்துள்ளது. பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் தி.மு.கவும் காங்கிரஸும் என்று கூறும் வகையில் இரு கட்சிகளும் பின்னிப்பிணைந்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையேயான பிணைப்புக்குக் காரணம் இரு கட்சிகளினது கொள்கைகள் அல்ல. முதல்வர் கருணாநிதிக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் இடையேயான புரிந்துணர்வுதான் இரண்டு கட்சிகளையும் பிணைத்து வைத்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் குற்றம் சாட்டினர். தமிழக அரசில் பங்கு கேட்டு நெருக்குதல் கொடுத்தனர். இப்படிப்பட்ட சலசலப்புகள் எல்லாம் தமிழகத்துக்குள்ளேயே அடங்கிவிட்டன. டில்லியில் இருந்து வரும் சில கூட்டணிகளின் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவர்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையே பிரிவினையை உருவாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததனால் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கு மாற்றீடாக மிகப் பெரிய கூட்டணியை அமைக்க சில அரசியல் தலைமைகள் முயற்சி செய்கின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் விஜயகாந்தும் இணைந்தால் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இணையான கூட்டணியாக அது அமையும். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் இணைந்தால் ஏனைய சிறிய கட்சிகள் பலவும் அவர்களுடன் இணைவதற்கு தயாராக இருப்பார்கள். ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய இருவரும் முதல்வராகும் கனவில் இருப்பதனால் இந்த இணைப்புக்குரிய சாத்தியம் மிக மிகக் குறைவு.
கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் மக்களுடன் தான் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என்ற கோஷத்துடன் பவனி வரும் விஜயகாந்த் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதே அவரது கட்சித் தலைவர்களின் ஆசை. அவர்களின் ஆசைக்கு விஜயகாந்த் தடை போட்டு வருகிறார்.
விஜயகாந்துக்கு எதிர்மாறாக உள்ளார் நடிகர் சரத்குமார். சரத்குமாரின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது இன்னும் தெளிவாகவில்லை. சரத்குமார் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவருடைய கட்சி இன்னமும் தேர்தலைச் சந்திக்கவில்லை. ஏனைய எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்பதே சரத்குமாரின் ஆசை. தேர்தல் சமயத்தில் ஏதாவது ஒரு கட்சியுடன் சரத்குமார் கூட்டணி சேரத் தயாராக உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்பதில் சுப்பிரமணிய சுவாமி மிகவும் ஆர்வமாக உள்ளார். ஜெயலலிதாவைச் சந்தித்து இது தொடர்பாக பல ஆலோசனைகளை சுப்பிரமணிய சுவாமி நடத்தி உள்ளார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது அதன் பின்னணியில் தான் இருப்பதாக சுப்பிரமணிய சுவாமி பெருமையாகக் கூறுவார்.
முதல்வர் கருணாநிதியை வீழ்த்தும் ஆயுதமாக தயாநிதி மாறனை பிரயோகிக்க சுப்பிரமணிய சுவாமியும், சரத்குமாரும் முயற்சி செய்துள்ளனர். சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியாக சந்திரலேகாவும், சரத்குமாரின் பிரதிநிதியாக அவருடைய கட்சியின் அவைத் தலைவர் முருகேசனும் தயாநிதிமாறனைச் சந்தித்துப் பேசினார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப் பெரிய தூண்களில் ஒன்றான முரசொலிமாறனின் மகனான தயாநிதிமாறன் எனது கட்சியில் இருக்கிறார் என்று பெருமையாகக் கூறுவதற்கு இவர்கள் முயற்சி செய்கின்றனர்.
தயாநிதி மாறன் மிகச் சிறந்த அமைச்சர். ஆனால் அவரின் பின்னால் இலட்சக்கணக்கான வாக்கு வங்கி இல்லை. சன் தொலைக்காட்சியும் தினகரன், முரசொலி ஆகிய பத்திரிகைகளும் தயாநிதி மாறனின் பின்னால் உள்ளன. ஊடகங்கள் மூலம் தங்கள் கட்சியை வளர்க்கலாம் என்று இவர்கள் மனப்பால் குடிக்கின்றனர். இவர்களின் முயற்சி தோல்வியிலேயே முடிந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தயாநிதிமாறன் இப்போதைக்கு இப்படியே இருக்கவே விரும்புகிறார். இன்னொரு கட்சியில் இணைந்து தனது செல்வாக்கை வேறொரு கட்சிக்கு தாரைவார்க்க தயாநிதிமாறன் தயாராக இல்லை.
குடும்பக் கௌரவம், குடும்பப் பாசம், கட்சியின் ஒற்றுமை என்பன அவரைக் கட்டிப் போட்டுள்ளன. முதல்வரின் மகனான மு.க. அழகிரி மட்டும்தான் தயாநிதி மாறன் குடும்பத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார். தயாநிதி மாறனின் பிரச்சினையை பெரிதுபடுத்த கலைஞர் விரும்பவில்லை.
அரசியல் ரீதியாக தயாநிதி மாறன் முடங்கிப் போய் இருந்தாலும் தொழில் ரீதியாக அவரை முடக்க திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. தன்னையும் தனது நிறுவனங்களையும் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளார் தயாநிதி மாறன்.
வர்மா

வீரகேசரி வாரவெளியீடு; 30 .03 .08

குடிநீர்ப் பிரச்சினையால் கொந்தளிக்கும் மாநிலங்கள்








தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு முனைப்புக் காட்டிவரும் வேளையில் அதனை எதிர்த்து கர்நாடகத்தில் உள்ள ஒரு குழுவினர் வன்செயலைத் தூண்டி உள்ளனர்.
தமிழ் நாட்டின் பல இடங்களில் நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜப்பான் நாட்டு வங்கியின் உதவியுடன் தமிழக அரசு ஒரு திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தது. தமிழ் நாடு கர்நாடக எல்லையில் உள்ள ஒகேனக்கல் என்னும் இடத்தில் காவிரி நதி நீரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யும் இத்திட்டத்துக்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்துக்கு சொந்தமான நதியில் இருந்து குடிநீரைப் பெறுவது தவறு. அதேவேளை ஒகேனக்கல் பகுதியும் கர்நாடகத்துக்கு சொந்தமானது என்று கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்பு ஒன்று வன்செயலைத் தூண்டி உள்ளது.
கர்நாடகத்தில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து நொருக்கப்பட்டன. அங்கிருந்த தமிழ் பட விநியோகப் பலகைகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டன. தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள் எதுவும் கர்நாடகத்தில் இருந்து ஒளிபரப்பக் கூடாது என்று அமைப்பு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகைக் காரியாலயம் சேதமாக்கப்பட்டது. கர்நாடக தமிழ்ச் சங்க கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கன்னட மொழி மீது தீராத பற்றுக் கொண்ட அந்த அமைப்பின் வெறியாட்டங்களை பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர கலவரக்காரர்களை விரட்டவோ அல்லது கைது செய்யவோ முயற்சிக்கவில்லை.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளது. வன்செயலைத் தூண்டி விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் தோல்வி அடைந்து விடும் சூழ்நிலை ஏற்படுமோ என்று அரசியல் கட்சிகள் தயங்குகின்றன.
இந்தியாவின் அறிவியல் துறையின் முன்னோடி நகரமாக விளங்குவது கர்நாடகத் தலைநகர் பெங்களூர். வெளிநாட்டில் உள்ள பல நிறுவனங்கள் பெங்களூரில் முதலீடு செய்துள்ளன. தமிழ் நாட்டுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பெங்களூரின் நற்பெயரைக் களங்கப்படுத்தி உள்ளன.
தமிழர்களுக்கு எதிரான போராட்டம் கர்நாடகத்தில் முன்பும் பலமுறை நடைபெற்றுள்ளன. உலகமே வியந்து போற்றும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் சிலையை பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் திறந்து வைப்பதற்கு அங்குள்ள மொழி பெரியார்கள் தடை விதித்துள்ளனர். சுமார் 90 வருட காலமாக திருவள்ளுவர் சிலை கறுப்புத் துணியால் மூடப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் சிலையைத் திறந்து வைப்பதற்கு கர்நாடக அரசு இதுவரையில் எந்த ஒரு முயற்சியையும் செய்யவில்லை. இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்களில் கன்னட மொழி பேசும் சிலரும் அடங்குகின்றனர்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் தமிழக முதல்வரின் உருவப் பொம்மைகளுக்கு தீ வைத்தனர். ஒகேனக்கல் பெங்களூருக்கே சொந்தம் என்று கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். தமிழக மக்களுக்கு எதிராக கர்நாடகத்தில் உள்ள ஒரு சில அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து தமிழக சட்டசபையில் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு 1998 ஆம் ஆண்டு கர்நாடக அரசு ஒப்புதலளித்து கையெழுத்திட்டது. ஆகையினால் கர்நாடக அரசு இத்திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கி விட்டது. இந்தத் திட்டம் நிறைவேறுவதற்குரிய சகல ஒத்துழைப்பையும் வழங்க வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது.
கர்நாடகத்தில் நடைபெறும் வன்செயல்களுக்கு போட்டியாக தமிழகத்திலும் ஆங்காங்கே வன்செயல்கள் நடக்கின்றன. மத்திய அமைச்சர் டி. ஆர். பாலுவும், கர்நாடக முன்னாள் முதல்வர் கே. கிருஷ்ணாவும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி உள்ளனர். கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறது. மே மாதம் 16, 22 ஆகிய தினங்களில் கர்நாடக சட்ட சபைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது. கர்நாடகத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை கைதுசெய்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆகையினால் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு முடிவு எடுக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 30 இலட்சம் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதைத் தடுக்கும் ஒரு சில குழுவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறினால் மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள ஆதரவு குறைந்து விடும். இரு மாநிலங்களின் பிரச்சினையைத் தீர்க்கும் சக்தி மத்திய அரசிடமே உள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 06.04.2008

Friday, March 28, 2008

ஜோதியின் ராஜினாமாவால் திக்குமுக்காடும் அ.தி.மு.க.


மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தின் சார்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே பூகம்பம் வெடித்து கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்பு எல்லாம் பொய்யாகிவிட்டது. அதேவேளையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினுள் பூகம்பம் வெடித்துள்ளது.
அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரே ஒரு வேட்பாளர்தான் வெற்றி பெற முடியும் என்பது வெளிப்படை. உண்மை நிலை இவ்வாறிருக்க அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒரு வேட்பாளரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கலந்து பேசித்தான் ஜெயலலிதா இந்த முடிவை அறிவித்தார் என்றே பலரும் நினைத்தார்கள். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு நிராகரித்துவிட்டது.ஜெயலலிதாவின் வேண்டுகோளை மறுக்க முடியாத நிலையில் இரண்டாவது வேட்பாளரை களத்தில் நிறுத்த வைகோ ஒப்புக்கொண்டிருக்கலாம். கட்சியின் செயற்குழுவின் முடிவு என்பது வைகோவின் தனிப்பட்ட முடிவு அல்ல என்பதை ஜெயலலிதாவுக்கு உணர்த்துவதற்காக செயற்குழு கூடி இரண்டாவது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் முடிவு செய்துள்ளது.
இரண்டாவது வேட்பாளராகப் போட்டியிடுவதில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் முடிவைப் பற்றி ஜெயலலிதா எதுவும் கூறவில்லை. ஜெயலலிதாவின் முடிவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மறுப்புத் தெரிவித்த அதேவேளை ஜெயலலிதாவை பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றிய வழக்கறிஞர் ஜோதி தன்னைப் வேட்பாளராக அறிவிக்காததால் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர் கொடி தூக்கி உள்ளார்.
1996 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம் தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் மீது அடுக்கடுக்காக வழக்குகள் தொடுக்கப்பட்டன. டான்ஸி நில பேர வழக்கு, பிளஸன் ஸ்டே ஹோட்டல், வருமானத்துக்கு மீறிய சொத்து குவித்தது, லண்டன் ஹோட்டல், ஸ்பிக் நிலக்கரி இறக்குமதி என்று ஜெயலலிதாவையும் சசிகலாவையும் குற்றவாளியாக்கி பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்கள் மீதும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜெயலலிதாவுக்காக அ.தி.மு.க வழக்கறிஞர்கள் பலர் ஆஜரானார்கள். அவர்களை எல்லாம் ஒழுங்குப்படுத்தி மேற்பார்வையாளராக வாதாடி ஜெயலலிதாவை நிரபராதி என்று நிரூபித்தார் வழக்கறிஞர் ஜோதி. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை விசõரிப்பதற்காக அமைக்கப்பட்ட தனி நீதிமன்றங்களில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டாலும் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நிரபராதி என்று நிரூபித்தவர் ஜோதி.
2001 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. டான்சி நில பேர வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்ப முடியாது என்று ஒட்டு மொத்த தமிழகமும் கணித்திருந்த வேளையில் அந்த வழக்கில் ஜெயலலிதா நிரபராதி என்று தனது வாதத்திறமையால் நிரூபித்தவர் வழக்கறிஞர் ஜோதி. ஜெயலலிதாவுக்கு எதிரான 13 வழக்குகளில் இருந்து அவர் நிரபராதி என நிரூபித்தார் ஜோதி.
அந்த நன்றிக் கடனுக்காகவே ஜோதியை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் ஜெயலலிதா. இந்த முறையும் தனக்கு ஜெயலலிதா சந்தர்ப்பம் தருவார் என்று ஜோதி எதிர்பார்த்திருந்தார். ஆனால், பாலகங்காவை ஜெயலலிதா அறிவித்ததால் ஜோதி கலங்கிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். பதவியை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் ஜோதிக்கு கிடையாது. தமிழக அரசாங்கத்திலிருந்து தன்னை பாதுகாக்கும் ஒரு ஆயுதமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கருதினார் ஜோதி.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்காமல் தடுத்தாட் கொள்ளும் ஜோதியை ஜெயலலிதாவிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக்கழகத்தின் கனவை ஜெயலலிதா நிறைவேற்றி விட்டார்.
ஜோதிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி அவரைக் கைது செய்ய தமிழக அரசு முயற்சி செய்தது. அவருக்கு எதிரான குற்றங்களைக் கண்டு பிடிக்க தமிழக அரசால் முடியவில்லை.
அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்களுக்கு எதிரான 113 வழக்குகளில் இருந்து ஜோதி தன்னை விடுவித்துக்கொண்டார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுறும் நிலையை அடைந்துள்ளது. அந்த வழக்கில் தலைமை வழக்கறிஞராக வாதாடப் போவது யார் என்ற கேள்விக்கு உரிய பதிலை ஜெயலலிதாவிடமிருந்து தமிழகம் எதிர்பார்க்கிறது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு;23.03.2008

போட்டி போடும் அ.தி.மு.க.


மாநிலங்களவைத் தேர்தலுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டு உறுப்பினர்களை நிறுத்தியதனால் தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
மாநிலங்களவைக்கு தமிழ் நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் திகதியுடன் முடிவடைகிறது. புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணி ஐந்து உறுப்பினர்களையும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி ஒரு உறுப்பினரையும் தெரிவு செய்யும் பலத்தைப் பெற்றுள்ளன.
தனது தகுதிக்கு ஏற்ப ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக திராவிட முன்னேற்றக்கழகம் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து முடிவு செய்துள்ளது.
ஒரே ஒரு உறுப்பினரை மட்டும் தெரிவு செய்யும் பலத்தை உடைய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டு உறுப்பினர்களைத் தேர்தலில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மூலமே மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவர். 34 உறுப்பினர்களின் வாக்கு கள் மூலம் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு 60 உறுப்பினர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஆறு உறுப்பினர்களும் உள்ளனர். ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதில் எதுவித தடையும் இல்லை.
இரண்டாவது உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டுமானால் மேலும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணிக்கு உதவி செய்யப்போகும் இரண்டு உறுப்பினர்கள் யார் என்றே கேள்வி எழுந்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பாலகங்கா போட்டியிடுகிறார். சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் பாலகங்கா.
அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் பங்காளிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒரு உறுப்பினர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
மாநிலங்களவைத் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தாது ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்தி அதனை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு விட்டுக்கொடுத்திருந்தால் ஜெயலலிதாவின்மதிப்பு உயர்ந்திருக்கும். போட்டிபோட்டு வெற்றிபெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தை ஜெயலலிதா தள்ளி னார்.
இதற்கு எதிர் மாறாக திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் சேராத இரண்டு உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் உள்ளனர். ஒருவர் விஜயகாந்த், இன்னொருவர் சுயேச்சை உறுப்பினர். இவர்கள் இருவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் வெற்றி பெறுவர்.

வைகோவை மாநிலங்களவை உறுப்பின ராக்கி அவருக்குரிய முக்கியத்துவத்தையும் கௌரவத்தையும் ஜெயலலிதா வழங்கி இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை ஜெயலலிதா தவறவிட்டுவிட்டார்.
தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதியான வைகோவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜெயலலிதா தவறிவிட்டார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவ தில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக்கழக ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் முடிவை எதிர்த்து முதன் முறையாக தீர்மானம் ஒன்றை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துள்ளது. வெற்றிபெற முடியாது என உறுதியாகத் தெரிந்ததால் போட்டியிடுவதில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி மன்றக்குழு முடிவெடுத்துள்ளது எனக் கருதப் படுகிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானத்தை ஜெயலலிதா வரவேற் பாரா? அல்லது அண்ணாதிரவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை அறிவிக்குமா? என்பதை அறிய அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.
இதேவேளை முதல்வரின் முடிவினால் அதிருப்தியடைந்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் துடன் இணைந்தால் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரும் வெற்றி பெறலாம் என சிலர் கருதினர்.
தனது பங்காளிக் கட்சிகளுக்கு முறை வைத்து சந்தர்ப்பம் வழங்கிவருகிறார் முதல்வர் கருணாநிதி. தனக்கு ஒரே இடம் வேண்டும் இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரித்தும் அதற்கு அடிபணியாமல் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடம் ஒதுக்கி உள்ளார் முதல்வர்.
டாக்டர் ராமதாஸ் மிரட்டுவதும் முதல்வர் அமைதியாக இருப்பதும் தமிழக அரசியலில் அவ்வப்போது நடைபெறும் காட்சிகள். இந்தமுறை அந்தக் காட்சி மாறி உள்ளது.
டாக்டர் ராமதாஸின் எச்சரிக்கையை முதல்வர் உதாசீனம் செய்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்பதை மறை முகமாக வெளிப்படுத்தி உள்ளார் முதல்வர்.

போட்டி போடும் அ.தி.மு.க.
முதல்வரின் மகள் நாடாளுமன்ற உறுப்பினரானதால் தனது மகனையும் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு ராமதாஸ் முயற்சிக் கிறார் என்ற தகவலை அடியோடு மறுத்தார் டாக்டர் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பேச்சாளரும், முதல்வரை அடிக்கடி விமர்சிப்பவருமான காடுவெட்டி குரு வுக்குத் தான் டாக்டர் ராமதாஸ் போராடுகிறார் என்ற தகவல் தெரிந்துதான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு முதல்வர் இடம் ஒதுக்கவில்லை என்ற கருத்தும் உள்ளது.
இதேவேளை காடுவெட்டி குருவுக்கு எதிராக பலாத்கார புகார் ஒன்று பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தர்ப்பம் வழங்குவதற்காக மாணவி ஒருவரை பலாத்காரம் செய்யமுயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளõர். இந்த இரண்டு சம்பவங்களினாலும் பாட்டாளி மக்கள் கட்சி மீதான மதிப்பு கொஞ்சம் குறைந்துள்ளது.
ஜின்னா, வசந்தி ஸ்டாலின் ஆகிய இருவரையும் திராவிட முன்னேற்றக்கழகம் வேட்பாளராக்கியுள்ளது. வசந்தி மீது ஏகப்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. அவரை எப்படி முதல்வர் தேர்ந்தெடுத்தார் என்று பத்திரிகைள் விமர்சிக் கின்றன.
சுமார் 15 வங்கிகளில் மூன்று கோடி ரூபா மோசடி செய்தவர் நாடாளுமன்ற உறுப்பினராவதா? என்று பத்திரிகைகள் கேள்வி எழுப்பி உள்ளன. வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளேன். அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என சராசரி அரசியல்வாதிபோல் வசந்தி ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் பதிலை தமிழகம் எதிர்பார்த்துள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 16.03.2008

குடும்பத்தை இணைக்கும் ஸ்டாலின்; பகையை மேலும் வளர்க்கும் அழகிரி



ஜெயலலிதாவின் பிறந்தநாள் விளம்பரங்கள் தினகரனிலும் முரசொலியிலும் பெரிய அளவில் வெளியானதால் குழம்பிப்போயிருந்த இரண்டு குடும்பங்களும் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் கொஞ்சம் நெருங்கி வந்துள்ளன. ஆனால் இந்த நெருக்கத்தை முதல்வரின் மகனான அழகிரி கொஞ்சமும் ரசிக்கவில்லை.
நகமும் சதையும் போலிருந்த கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் இவ்வளவு தூரம் பிரிந்திருக்கும் என்று எவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
தினகரன் பத்திரிகையில் வெளியான கருத்துக் கணிப்பினால் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் கோபத்திற்கு இலக்கான மதுரையில் உள்ள தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த அந்தப் பகை ஒவ்வொரு பிரச்சினைகளிலும் விஸ்வரூபம் எடுத்து குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
கலைஞர் குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையில் உள்ள பிரிவை மிகச் சரியாகப் பயன்படுத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்கள் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரங்களினால் தினகரன் முரசொலி ஆகிய பத்திரிகைகளுக்கு லாபத்தை அள்ளி வழங்கியது.
மாறன் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய மாட்டார்கள் என்ற நம்பிக்கை கலைஞரிடம் உள்ளது. மாவட்டத்தில் செல்வாக்குள்ள பிரமுகர் ஒருவரை கட்சி தண்டித்தால் அல்லது கேள்வி கேட்டால் அவர் தனது ஆதரவாளர்களுடன் மாற்றுக் கட்சியில் இணைந்து விடுவார். அது பற்றிய விபரங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும்.
மத்திய அமைச்சராக இருந்து பல சாதனைகளைச் செய்த தயாநிதி மாறனின் மீது திராவிட முன்னேற்றக்கழகம் நடவடிக்கை எடுத்தபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒதுங்கிவிட்டார். இன்னொரு கட்சியில் அவர் சேர்ந்திருந்தால் அது அவருக்கு மிகப் பெரிய விளம்பரமாக இருந்திருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒரு சிலருக்கு தயாநிதி மாறன் தேவையற்றவராக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு தயாநிதி மாறனின் அணுகுமுறை மிகவும் பிடித்திருந்தது. ராகுல் காந்தியும் தயாநிதி மாறனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து மாறன் குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்பதில் மு.க. அழகிரி உறுதியாக உள்ளார். ஆனால் அவரது தம்பியான ஸ்டாலினின் எண்ணம் அதற்கு நேர்மாறாக உள்ளது.
குடும்பப் பிரச்சினை ஊடகங்களுக்குத் தீனியாகிறது. அதனால் எந்தப் பிரச்சினைகளையும் பெரிதாக்காது பேசித் தீர்க்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் விருப்பம். ஸ்டாலினின் பிறந்த நாளன்று கலாநிதிமாறன் முதல்வரை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அழகிரி மீண்டும் கோபாவேசமானார்.
மாறன் குடும்பத்துக்கும் அழகிரிக்கும் இடையேயான மோதல் கட்சிக்குள்ளும் ஊடுருவி குடும்பப் பிரிவை உண்டாக்கியது. குடும்பப் பகை காரணமாக கட்சியின் செல்வாக்கு சரியக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். கட்சியைப் பற்றிக் கவலையில்லை. குடும்பப் பகைதான் பிரதானம் என்று அழகிரி கூறுகிறார்.
கட்சிக்கும் குடும்ப உறவுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார் முதல்வர். கழகத்தையும் தலைவரையும் அவமானப்படுத்தியவர்களை அரவணைத்த முதல்வர், மாறனின் பிள்ளைகளை மன்னிக்கத் தயங்குகிறார்.
கலாநிதிமாறன் வீடு தேடி வந்து கதைத்ததனால் பிரச்சினை தீர்த்து விடும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பில் மண் விழுந்துவிட்டது. மாறன் குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற அழகிரியின் வாதம் கலைஞர் வீட்டில் ஓங்கி ஒலிக்கிறது. ஸ்டாலினின் வாதம் அங்கு மெல்லிய குரலில் வெளிப்படுகிறது.
டில்லி சபையின் ஆறு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்து விட்டது. சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு ஐந்து உறுப்பினர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடமும் கிடைக்கும். இந்த நிலையில் தனது கட்சிக்கும் ஒரு இடம் வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு இரு இடங்களும் மாக்ஸிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பு ராமதாஸை திருப்திப்படுத்தவில்லை.
2004 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலின்போது காங்கிரஸுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் தலா ஒரு இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கியது. டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மேலவை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு மத்திய அமைச்சரானார். ஆகையினால் இம்முறை தோழமைக் கட்சியான மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தை வழங்க திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசியலை ஆட்டிப்படைக்கும் தனக்கு வாய்ப்புத்தராது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியுடன் கூறியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அவ்வப்போது தமிழக அரசை உரசிப் பார்ப்பதும் அதற்கு அமைச்சர்களும் முதல்வரும் அறிக்கைவிடுவதும் வாடிக்கையானது. இம்முறை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனரின் விருப்பத்தை ஏற்க முடியாது நியாயமில்லாதது என்று ஆதாரங்களுடன் முதல்வர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மேலவை உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. தமிழக சட்டசபையில் 18 உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.
ஆகையினால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தோள் கொடுக்கும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டிய இக்கட்டான நிலையில் தமிழக முதல்வர் உள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 60 உறுப்பினர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறு உறுப்பினர்களும் உள்ளனர். இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு மாநில உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளலாம். மாநிலங்களவைத் தேர்தலினால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு;09.03.2008

Friday, March 21, 2008

என்னைத் தெரியுமா?

கல்பனாவைக் கண்டதும் சிரித்துத் தலையாட்டும் அனைவரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
மிகக் குறுகலான ஒழுங்கை என்றதால் ஆட்டோ மெது மெதுவாகச் சென்றது. கலவரமடைந்த கல்பனா பின்னுக்குப் பார்த்தாள். பின்னால் நின்றவர்கள் ஆட்டோவைக் காட்டி ஏதோ கதைத்தார்கள்.
வீடுகளுக்குள் இருந்தவர்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். ஒரு சிலர் ஆட்டோவைத் தொடர்ந்தார்கள். கல்பனாவின் வீட்டிற்குச் செல்லும் பாதையில் ஆட்டோ திரும்பியதும் கல்பனாவின் இரத்தம் உறைந்தது.
கல்பனாவின் வீட்டைச் சுற்றிப் பல பொலிஸ்காரர்கள் நின்றார்கள். இரண்டு பொலிஸ் ஜீப்கள் வெளியே நின்றன. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென உணர்ந்த கல்பனாவின் கை கால்கள் பதறின.
கல்பனாவின் வீட்டில் பொலிஸார் குவிந்திருந்ததைக் கண்ட ஆட்டோ டிரைவர் கண்ணாடியில் கல்பனாவைப் பார்த்தான். அவனது கண்களில் சந்தேக ஒளி படர்ந்தது.
கல்பனா கடந்த ஐந்து வருடங்களாக வத்தளையில் வாழ்ந்து வருகிறாள். அவளது கணவன் கடந்த வருடந்தான் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றான். இரண்டு குழந்தைகளும் அவளும் மட்டுமே தற்போது அந்த வீட்டில் வசிக்கிறார்கள்.
அந்த சுற்றாடலிலுள்ள அனைவருடனும் கல்பனா மிகவும் நட்பாகப் பழகினாள். மரக்கறி வியாபாரி, மீன் வியாபாரி, சந்தையிலுள்ள ஆட்டோ சாரதிகள் அனைவரும் அவள் மீது மதிப்பு வைத்திருந்தனர்.
முன்னால் பொலிஸ், பின்னால் ஊர் மக்கள் ஒரு சில விநாடிகள் பல யுகம் போல கழிந்தன. ஆட்டோ வாசலில் நின்றதும் கல்பனாவைக் காட்டி “இவதான் வீட்டிலே இருக்கிறா" என டிரைவர் பொலிஸ்காரரிடம் கூறினார்.
குனிந்து கல்பனாவைப் பார்த்த பொலிஸ்காரர் ஆட்டோவை உள்ளே போகும்படி பணித்தார். “வீட்டிலிருந்து ஏதாவது தடை செய்யப்பட்ட பொருள் எடுத்தினமோ தெரியாது. கடவுளே முந்தி இருந்தது யாரென்றும் தெரியாது" என கல்பனாவின் எண்ண அலைகள் ஓடின.
நடுங்கியபடி கல்பனா ஆட்டோவை விட்டு இறங்கியபோது “நீயா இங்கு இருப்பது’’ என பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்களத்தில் கேட்டார். கல்பனா சிங்களத்தில் பதில் சொன்னாள்.
“சிங்களம் தெரியுமா?" என அந்த அதிகாரி மீண்டும் சிங்களத்தில் கேட்டபோது “கொஞ்சம் விளங்கும். கொஞ்சம் தெரியும்" எனத் தடுமாறி தனக்குத் தெரிந்த சிங்களத்தில் கூறினாள். பொலிஸ் அதிகாரி உடனே தமிழில் கதைக்கத் தொடங்கினார்.
“உங்க பெயர் கல்பனா. மாப்பிள்ளை பிரான்ஸிலை. இரண்டு பிள்ளைகள் பம்பலப்பிட்டியில் படிக்கினம். விசா கிடைச்சா பிரான்ஸிற்குப் போவியள் சொந்தக்காரர் வெளிநாட்டிலையும் யாழ்ப்பாணத்திலையும் இருக்கினம். சரிதானே" என்றார்.
கல்பனா ஒன்றும் பேசாமல் மௌனமாக நின்றாள் “இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்" என அதிகாரி கேட்டார்.
“நீங்க பொலிஸ். உங்களுக்கு எல்லாம் தெரியும்" எனத் தயங்கித் தயங்கி கல்பனா பதிலளித்தாள்.
“உங்களுக்குப் பிடிச்ச நடிகர் விஜய். நடிகை சிம்ரன். கடைசியாகப் பார்த்த படம் ஜெமினி. பிடிச்ச பாட்டு ஓ...போடு" எனக் கூறிய அதிகாரி கல்பனாவை உற்றுப் பார்த்தார்.
இதெல்லாம் கூட பொலிஸுக்கு எப்படித் தெரியும் என கல்பனா குழம்பினாள்.
“எனக்கு மட்டுமில்லை உலகத்துக்கே தெரியும்... நீங்கதான் சொன்னீங்க" என பொலிஸ் அதிகாரி கூறினார்.
பொலிஸ் அதிகாரி கூறிய வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் கல்பனா தடுமாறினாள்.
“போன கிழமை றேடியோவில் உங்களைப் பற்றி சகல விபரங்களையும் சொன்னீங்கள்... அதைக் கேட்டிட்டு ஒருத்தன் திருட வந்திட்டான். பக்கத்து வீட்டுக்காரர் போன் பண்ணினதாலை நாங்க வந்து அவனைப் பிடிச்சம்...
“றேடியோவிலை கேட்டிட்டு பல இடங்களிலை அவன் திருடியிருக்கிறான். உங்களைப் பற்றி சகல விபரங்களையும் சந்தோஷமாகச் சொல்லுவீங்க... பிறகு களவு போனாப்போல எங்களிட்டை ஓடி வருவீங்க... அந்திக்கு பொலிஸ்ரேசனுக்கு வாங்க.." எனக் கூறிவிட்டு சக பொலிஸ்காரர்களையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
பொழுதுபோக்கு விபரீதமானதைக் கண்ட கல்பனா இனி இப்படிச் செய்வதில்லை என முடிவெடுத்தாள்.
சூரன் ஏ.ரவிவர்மா.
நன்றி;இடி வாரமலர் 2002
தாயகம் டிசம்பர் 2007

Saturday, March 15, 2008

சந்திக்கு வந்த குடும்பப் பிரச்சினையால் நொந்து போயுள்ள மாறன் குடும்பம்


கலைஞர் குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையே கனன்று கொண்டிருந்த குடும்பப் பகை கேபிள் தொலைக்காட்சியினால் மீண்டும் எரியத் தொடங்கியுள்ளது.
மாறன் குடும்ப வருமானத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது கேபிள் தொலைக்காட்சி சேவை. அதனை சிதைக்கும் நடவடிக்கையில் ஒரு சில முக்கிய புள்ளிகள் காரியங்களைக் கச்சிதமாகச் செய்வதனால் தயாநிதி மாறன் நியாயம் கேட்டு பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளார்.
"சன்' தொலைக்காட்சிக்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட "கலைஞர்' தொலைக்காட்சி புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி சன் தொலைக்காட்சிக்கு கடும் சவால் விடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாறன் குடும்பத்தின் சொத்தõன சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக வட இந்தியாவில் இருந்து ஹாத்வே எனப்படும் இன்னொரு கேபிள் தொலைக்காட்சி சேவையை அறிமுகப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் முயற்சி செய்கிறார்.
தமிழகத்தில் உள்ள கேபிள் தொலைக்காட்சி சேவையாளர்களிடையே உள்ள போட்டியினால் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு பலமுறை முயற்சி செய்தது. தமிழக அரசின் அம் முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியிலேயே முடிந்தன.
கேபிள் தொலைக்காட்சி சேவையாளர்களை வழிக்குக் கொண்டு வர வேண்டுமானால் அரசாங்கம் கேபிள் சேவையை வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது. கேபிள் தொலைக்காட்சி சேவையை அரசாங்கம் ஆரம்பிக்க தயார் நிலையில் உள்ளது.
அரசாங்கத்தின் கேபிள் சேவை ஆரம்பமாவதற்கிடையில் மாறன் குடும்பத்தின் கேபிள் சேவையை சீர்குலைக்கும் நோக்குடன் அவர்களின் முகாமையாளர் கடத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸார் இது தொடர்பாக விசாரித்தபோது கேபிள் சேவை முகவர்கள் கடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சுமங்கலி கேபிள் முகவர்களை பலவந்தமாக ஹாத்வே கேபிள் சேவைக்கு மாற்றும் முயற்சி நடந்ததாக தயாநிதிமாறன் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.
மாறன் குடும்பத்தின் மீதான இந்த நெருக்குதலின் பின்னணியில் முதல்வரின் மகன் அழகிரியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த அமைச்சரும் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இவர்கள் இருவருக்கும் ஹாத்வே கேபிள் சேவையில் பங்கு இருப்பதால்தான் ஹாத்வேயை தமிழகத்தில் நிலை நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது.
கலைஞருக்கும் முரசொலி மாறனுக்கும் இடையில் இருந்த இறுக்கமான குடும்ப உறவு முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர் சின்னõபின்னமாகி விட்டது. குடும்ப உறவு சீரழிவதற்கு முதல்வரின் மகன் அழகிரிதான் காரணம் என்றும் அழகிரியின் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவர் இருப்பதாகவும் மாறன் குடும்பம் சந்தேகப்படுகிறது.
மாறன் குடும்பத்துக்கு எதிராக ஒரு சிலர் இப்பிரச்சினைகளைத் தூண்டி விடுகிறார்கள். ஆனால், இவை எல்லாம் கலைஞருக்குத் தெரியாமல் தான் நடப்பதாக தயாநிதி மாறன் தெரிவிக்கிறார்.
தனது குடும்பத்தின் மீது தொடர்ந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் இந்த வேளையிலும் கலைஞரை முழுமையாக நம்புகிறார் தயாநிதிமாறன். குடும்ப உறவு நீடிக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் விரும்புகிறார். கலைஞர் குடும்பமும் மாறன் குடும்பமும் இணையக் கூடாது என்று விரும்புபவர்கள் கனகச்சிதமாக காய்களை நகர்த்தி இரு குடும்பங்களையும் வெகுதூரத்தில் வைத்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் முரசொலி மாறனின் பங்கு அளப்பரியது. திராவிட முன்னேற்றக் கழக ஏடான முரசொலியை பொறுப்பெடுத்து நடத்தியதால் முரசொலி என்ற பட்டப் பெயர் மாறனின் முன்னால் ஒட்டிக் கொண்டது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி ஏற்பட்ட வேளைகளில் டில்லியில் உரிய இடங்களில் வாதம் செய்து அந்த நெருக்கடிகளை களைந்தவர் முரசொலிமாறன். கலைஞரின் சிந்தனைகள் சிலவற்றுக்கு செயல்வடிவம் கொடுத்து மக்கள்மத்தியில் கலைஞரின் பெயர் விளங்கச் செய்தவர் முரசொலிமாறன்.
முரசொலி மாறன் அமைச்சராக இருந்தபோது தான் சார்ந்த அமைச்சின் மூலமாக இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தியவர் முரசொலி மாறன்.
ஜெயலலிதாவின் ஆட்சியின்போது நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது கொதித்தெழுந்து பொலிஸாருடன் மல்லுக் கட்டியவர் அவர். ஜெயலலிதாவின் உத்தரவினால் கலைஞரை நள்ளிரவில் பொலிஸார் தூக்கிச் சென்றதை உலகுக்குத் தெரியப்படுத்தியது மாறனின் சன் தொலைக்காட்சிதான்.
கலைஞருக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த முரசொலி மாறன் தொண்டர்களுடன் நெருங்கிப் பழகவில்லை தனக்கென்றொரு கூட்டத்தை ஏற்படுத்தவில்லை. அதே போன்று தான் அவரது மகன் தயாநிதி மாறனும் நடந்து கொண்டார்.
உலக அரங்கில் தயாநிதி மாறனுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால், ஆதரவாளர்கள் மத்தியில் அரசியல் நாயகனாக அவர் விளங்கவில்லை. ஆகையினால் அமைச்சர் பதவியைத் துறந்தபோது கூட எதுவித சலசலப்பும் ஏற்படவில்லை.
அரசியல் எதிரிகளை அரவணைத்துச் செல்லும் கலைஞர் தனது இரத்த உரித்தை பரம எதிரியாக நினைப்பது எதற்காக என்று புரியவில்லை.
அடுத்த தேர்லின்போது கூட்டணிக் கட்சிகளில் மாறுதல் ஏற்படலாம். கலைஞருடன் இருப்பவர்கள் சிலர் வெளியேறலாம். வெளியில் இருப்பவர்கள் சிலர் உள்ளே வரலாம். புகழ்ந்தவர்கள் வசை பாடலாம். வசை பாடியவர்கள் புகழலாம். கலைஞரின் இரத்தத்தின் இரத்தமான தயாநிதி மாறனின் நிலை என்னவாகும் என்று எவருக்கும் தெரியாது?
கலைஞர் குடும்பத்தையும் மாறன் குடும்பத்தையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடைபெற்றன. அந்த முயற்சிகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டன. இந்நிலையில் கலைஞரின் மனம் மாறும் வரை பொறுமையாக இருக்கிறது மாறன் குடும்பம்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 24.02.2008