Saturday, November 7, 2020

கோஹ்லியை வெளியேற்றிய வானர்


 

ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று வருடங்களாக மோசமாகத்தோல்வியடைந்த கோஹ்லியில் தலைமையிலான ரோயல் சலஞ் பெங்களூர்  இம்முறை பிளே ஒஃஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. சம்பியன் கனவில் இருந்த கோஹ்லியின் ரசிகர்களின் தலையில் இடியை இறக்கியது வானர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில்  வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சகா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக கோஸ்வாமி சேர்க்கப்பட்டார்.


தேவ்தத் படிக்கலுன் விராட் கோஹ்லி தொடக்க வீரராக களம் இறங்கினார். விராட் கோஹ்லி 6 ஓட்டங்களிலும், தேவ்தத் படிக்கல் 1 ஓட்டத்துடனும் ஜேசன் ஹோல்டர் பந்தில் வெளியேறினர். 3.3 ஓவரில் 15  ஓட்டங்கள் எடுத்த நிலையில்  தொடக்க வீரர்களை இழந்ததும் ஆர்சிபி திணறியது. பவர் பிளேயில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ஓட்டங்களே எடுத்தது.

3-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 7 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் 41 ஓட்டங்ளே அடித்தது. ஆரோன் பிஞ்ச் 32 ஓட்டங்ள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த மொயீன் அலி ஓட்டம் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் அரைசதம்  அடித்தாலும் முக்கியமான கட்டத்தில் 18-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் டி நடராஜனிடம் ஸ்டம்பை பறிகொடுத்தார். டி வில்லியர்ஸ் 43 பந்தில் சிக்ஸ் ஏதும் அடிக்காமல் 5 பவுண்டரியுடன் 56 ஓட்டங்கள் அடித்தார். ஷிவம் டுபே 8, வாஷிங்டன் சுந்தர் 5,  நவ்தீப் சைனி 9, முகமது சிராஜ் 10  என் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் அடித்துள்ளது. ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் களை வீழ்த்தினார்.


  132 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டேவிட் வார்னர், கோஸ்வாமி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கோஸ்வாமி ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்மிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டே களம் இறங்கினார்.

வார்னர் - மணிஷ் பாண்டே ஜோடி அதிரடியாக விளையாடி தீர்மானித்தது. ஆனால் 5.4 ஓவரில் 43 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டேவிட் வார்னர் 17 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் ஆடம் ஜம்பா, சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுக்க மணிஷ் பாண்டே 24  ஓட்டங்களிலும், பிரியம் கார்க் 7 ஓட்டங்களுடனும்  வெளியேறினர். இதனால் போட்டி பரபரப்பாக சென்றது.


ஆனால் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி சென்றது. கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஐதராபாத் 1 ஓட்டம் எடுத்தது, 2-வது பந்தில் ஓட்டம் இல்லை.  3-வது பந்தில் ஹோல்டர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் ஹோல்டர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.

கேன் வில்லியம்சன் 44 பந்தில் 50 ஓட்டங்களுடனும், ஜேசன் ஹோல்டர் 20 பந்தில் 24 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

No comments: