Tuesday, September 22, 2020

மும்பையை முடக்கிய குட்டிப்பையன்


   ஐந்தே முக்கால் அடி இருப்பார் அவ்வளவுதான்.. 22 வயதுதான் ஆகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த இளம் வீரர்தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதம பங்காளி.

சென்னை வீரர்களின் பந்துகளை அடித்து துவம்சம் செய்தது டீ காக், ரோகித் சர்மா ஜோடி. ஆனால் மூன்றாவதுபந்து வீச்சாளராக‌ சாம் கர்ரனை கொண்டு வந்தார் தோனி.

 இடக்கை பந்துவீச்சாளர் கர்ரன், வந்ததும் டி காக் அதிரடி காட்ட முடியாமல் திணறினார். பந்தை அவுட் ஸ்விங் செய்தார் கர்ரன். இதில்தான் டி காக் திணறினார். தொடர்ந்து ஆட்டம் காட்டிய கர்ரன் அவரது விக்கெட்டையும் வீழ்த்தினர். 20 பந்துகளில் 33 ஓட்டங்களை எடுத்து அச்சுறுத்திய டி காக்கை முக்கியமான நேரத்தில் குட்டிப்பையன் விழுத்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

 இதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாகஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை. பந்துவீச்சு மட்டும் கிடையாது. துடுப்பாட்டத்தின் போது, இறுதி நேரத்தில் களமிறங்கிய கர்ரன் 8 பந்துகளில் 18 ஓட்டங்கள் குவித்தார். ஆனானப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் கூட அவர் சிக்சர் விளாசினார். 

  அம்பத்தி ராயுடு, டுப்ளசிஸ் ஜோடி மெதுவாகஓட்டங்களைக் குவித்த நிலையில், திடீரென உள்ளே புகுந்து சூறாவளி போல் விளாசினார் கர்ரன். மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களின் கை ஓங்கி இருந்த போது அதிர்ச்சியளித்தார் கர்ரன். அவரின் ஆட்டத்தைப் பார்த்த‌ டுப்ளஸ்ஸியும்   கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார்.

 அருமையாக பந்தை ஸ்விங் செய்து எதிரணிக்கு ஆட்டம் காட்டியதோடு, துடுப்பாட்டத்திலும் அதிரடி காட்டிய இந்த ஆல்ரவுண்டர் கர்ரனை ஐந்தரை கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே வாங்கியது. கொடுத்த காசுக்கு மேல குமுறி, குமுறி எடுத்துவிட்டார் சாம் கர்ரன் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வகையில் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கிடைத்த வைரம் இந்த குட்டிப் பையன்.

 எப்போதுமே சென்னை அணிக்கு ஒரு ராசி உண்டு. யார் எப்போது சூப்பராக ஆடுவார்கள் என்று சொல்லமுடியாது. ஆடுவார்கள் என்று நினைப்பவர்கள் சொதப்பி விடுவார்கள், யாரென்றே தெரியாதவர்கள் விஸ்வரூபம் எடுப்பார்கள். இந்த ஐபிஎல் முதல் போட்டியிலேயே அதற்கான ஒளி மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது.. சாம் கர்ரன் வடிவத்தில்.

No comments: