Saturday, January 20, 2024

பாரதீய ஜனதாவின் ஆசைக்கு தடை போடும் எதிர்க் கட்சிகள்

இந்திய நாடாளுமன்றத்துக்கும்மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று மத்தியில் ஆளும்பாரதீய ஜனதாக் கட்சி விரும்புகிறதுஇதன் காரணமாக  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்முறை குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாரதீய ஜனதா  தீவிரமாகப்  பிரசாரம் செய்கிறது. பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சிகள் அதற்கு  ஆதரவு தெரிவிக்கின்றன. எதிர்க் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 1967ம் ஆண்டு வரை இந்த இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில்  நட்டத்தப்பட்டன.  ஆட்சி கலைப்பு காரணமாக தேர்தல்கள் நடத்தப்படும் காலங்கள் மாற்றப்பட்டன. இந்த நிலையை மாற்றி சட்டமன்றம் , நாடாளுமன்ற  ஆகியவற்றுக்கான தேர்தலை ஒரே நேரத்தில்  நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.

  முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதற்கான வேலைகளை  பாரதீய ஜனதா தீவிரப்படுத்தியுள்ளது.

 'ஒரு நாடு-ஒரு தேர்தல்' அமுல்படுத்தப்பட்டால்  பணம் சேமிக்கப்படும்,   ஆனால் இது அரசியலமைப்பு ஒருங்கிணைப்பில் சிக்கல்களை உருவாக்கும் என்பதிரும்      கவனத்தில் எடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஓர் ஆட்சியைக் கலைக்க முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடமுறைபடுத்துவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது, மக்கள் எண்ணத்துக்கு எதிரானது என ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தினால், பல கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஒரே சமயத்தில் அமல்படுத்தப்படும் என்பதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படாது. இத்தனைக்கும் நடுவில், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், 2018 ஆகஸ்டில், சட்ட கமிஷனின் அறிக்கை வந்தது.

மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலை ஒன்றாக நடத்தினால், கூடுதல் செலவும் குறையும் என, இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில், ஊடக ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி ஒரு ஊடக அறிக்கையில், 2019 தேர்தலில் 55000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2016 இல் அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலை விட அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், ஒவ்வொரு வாக்காளருக்கும் எட்டு டொலர் செலவிடப்பட்டது.  அதே நேரத்தில் அந்த நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு மூன்று டொலருக்கும் குறைவாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இது தவிர, 1998 முதல் 2019 வரை தேர்தல் செலவு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், பஞ்சாப், மணிப்பூர், உத்தரபிரதேசம், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான செலவுப் புள்ளிவிவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது, இதில் பாஜக ரூ.340 கோடியும், காங்கிரஸ் ரூ.190 கோடியும் செலவு செய்தது. அதாவது, இந்தத் தேர்தல்களை ஒன்றாக நடத்தும்போது, ​​அதாவது மாநிலங்கள் அவையுடன் சேர்ந்து, நிறைய செலவுகள் மிச்சமாகும். மேலும் தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் அளித்த புள்ளி விவரங்கள் இவை. உண்மையான செலவுகள் இதை விட அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதன் மூலம், தேர்தல் செலவுகளைக் குறைத்து பணத்தை மிச்சப்படுத்த முடியும். மேலும், இந்தத் தேர்தல் முறையால் நிர்வாக அமைப்பு மற்றும் பாதுகாப்புப் படைகளின் சுமையைக் குறைக்க முடியும். ஒரே நேரத்தில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் மூலம், அரசின் கொள்கைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துதல், நாட்டின் நிர்வாகம், தேர்தல் பிரசாரத்தைவிட வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல் போன்றவை மேம்படுத்த உதவும்.

மத்தியில்பாரதீய ஜனதா ஆட்சி செய்கிறது. மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது. அவற்றில் பல ஆளுங்கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கடுமையாக எதிர்க்கின்றன. இதனால், இந்த புதிய முறையைக் கொண்டுவருவதில் சிக்கல் இருக்கிறது.

சில மாநில மக்கள் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், பல மாநில மக்கள் மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவாகவும்  வாக்களிப்பார்கள். தமிழக மக்களில் பலர்   திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மட்டுமே வாக்களிப்பார்கள். அவற்றுடன் கூட்டணி சேரும் தேசியக் கட்சிகள் வெற்றி பெறுவது             இலகுவானது. ஆனால், பாரதீய ஜனதாவின் கொள்கைகளை தமிழக மக்கள் விரும்புவதில்லை. கட்சியைப் பார்க்காது ஆளைப் பார்த்து வாக்களித்ததால் பாரதீய ஜனதா நான்கு சட்ட மன்ற  உறுப்பினர்களைப் பெற்றது.

ஒரே நாடு ஒரே தேர்தல்முறை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் சட்ட ஆணையம் கடந்த ஆண்டு கருத்து கேட்டது. அது தொடர்பாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அதற்கு பதிலளித்து சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அண்ணா திராவிட முனேற்றக் கழகம் ஆதரவு அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. பாரதீய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தபோது எடப்பாடி கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமலுக்கு வந்துவிட்டால், 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும். தி.மு.கதிராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது  மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கும் சூழலில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்குப் போட்டார். ஆனால், கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து அவர் வாயைத் திறக்கவில்லை. ஏனையவர்களும் மெளனமாகி விட்டனர்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலைச் சிறுத்தைகள் , பாட்டாளி மக்கள் கட்சி,   நாம் தமிழர் கட்சி  எனபன ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கடுமையாக எதிர்க்கின்றனர். டாக்டர்  கிருஷ்ணசாமி மட்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவாக தமிழகத்தில் இருந்து குரல் கொடுத்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்என்பதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல  அரசியலமைப்பில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மாநிலங்களவை ஒப்புதல் பெறப்பட்டு, மாநில சட்டபேரவைகளை கலைக்க வேண்டும்.

அரசியலமைப்பை திருத்துவதற்கு, இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். மக்களவையில் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது, மேலும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற அரசாங்கம் முயற்சி செய்யலாம்.

ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த 14 மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும், பாஜகவுக்கு இது கடினமானது அல்ல. 12 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இரண்டு மூன்று மாநிலங்கள் ஆதரிக்க தயாராக இருக்கின்றன.

 இந்தியவின்   பல பகுதிகள் மிகவும் பதற்றமானவை, அங்கு தேர்தலை நடத்தும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னெடுத்து செல்வதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கெல்லாம் அரசு விடை தேட வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளும் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு, 1957, 1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

1983 ஆம் ஆண்டு, இந்திய தேர்தல் ஆணையம், அப்போதைய இந்திரா காந்தி அரசிடம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை முன்வைத்தது. அவர் நிராகரித்துவிட்டார்.ஐரோப்பாவில் பெல்ஜியம், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்காவிலும் இது நடைமுறையில் உள்ளது. ஆனால் மக்கள்தொகை அடிப்படையில் இவை இந்தியாவை விட மிகச் சிறிய நாடுகள்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் இந்தியா முன்னேறினால், இந்த குழுவில் இணையும் உலகின் நான்காவது நாடாக   இந்தியா  இருக்கும்.

இவை தவிர இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திய அனுபவத்தை கொண்டுள்ளது. அங்கு, 2015 இல் புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, ஆகஸ்ட் 2017 இல் ஒரே நேரத்தில் பொது தேர்தல்   சட்டப்பேரவை தேர்தல்  என்பன நடத்தப்பட்டன.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடை பெற  உள்ளது. பரதீய ஜனதா வெற்றி பெற்றால் ஒரேநாடு ஒரே தேர்தலை நடத்த  தீவிர முயற்சி செய்யும்.

ரமணி.

No comments: