Sunday, October 29, 2023

அரசியலாக்கப்பட்ட பெற்ரோல் குண்டு வீச்சு

தமிழக ஆளுநரின்  மாளிகை முன்பு   வீசப்பட பெட்ரோல் குண்டு  அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதமிழக ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான முறுகல் நிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மளிகை முன்பு வியாழகிழமை  பிற்பகல்  2:40 மணியளவில், இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது, பெட்ரோல் குண்டு வீசிய நபரை அந்த இடத்திலேயே பொலி ஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் விசாரணையில், அந்த நபர் கருக்கா வினோத் என்றும், அவர் மீது E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்கமான குற்றவாளி என்றும் தெரியவந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து, கருக்கா வினோத் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிகையில்,

`ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவுசெய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து தன்னிலையாகப் பதிவுசெய்யப்பட்ட புகார், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த தாக்குதலை சாதாரணமான நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. இந்த வழக்கில், அவசரகதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நள்ளிரவில் மாஜிஸ்திரேட்டை எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த விசாரணை கொல்லப்படுகிறது" என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.

அண்ணாமலை, வானதி போன்றதமிழக பாரதீய ஜனதாத் தலைவர்கள் வழமைபோல் தமிழகத்தில்  சட்டம்  ஒழுங்கு இல்லை என ஆளுநருக்கு சார்பாக பக்கப்பாட்டு பாடத்தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில், இதில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை. கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மேற்படி அந்த நபர் தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, 25.10.2023 அன்று J-3 கிண்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோத் ஏற்கனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வினோத் மற்றும் அவரின் கூட்டாளிகள் சௌத் போக் சாலையில் உள்ள மதுபானக்  கடையில் 12.08.2015 அன்று பெட்ரோல் நிரம்பிய போத்தல்களை வீசியுள்ளனர். அதேபோல் 13.07.2017 அன்று வினோத் மற்றும் அவரின் கூட்டாளிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரம்பிய போத்தல்களை வீச முற்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு செய்யப்பட்டுள்ளது. வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆளுநருக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அச்சம்பவங்கள் தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு, 25.10.2023 அன்று T.செங்கோட்டையன் (ஆளுநரின் துணைச் செயலாளர்) புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. அதேபோல் ஏப்ரல் ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்குப் புறம்பானது என காவல்துறை அறிவித்துள்ளது.

ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியைக் கடந்து சென்றபின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கறுப்புக் கொடிகளைச் சாலையில் வீசினர். கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாகச் சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. சம்பவங்கள் அனைத்துக்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன.

மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பிற்காக சர்தார் படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாகக் குற்றவாளி கைதுசெய்யப்பட்டார்.

மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, கண்காணிப்பு கமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. அதோடு, ஆளுநருக்கும், அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை காலமும் தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுத்த ஆளுநர் ரவி இப்போது தமிழக காவல் துறைக்கு எதிராக  கடுமையான  குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின்  தலைமையகத்தின் மீது பெற்றொல் குண்டு வீசிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சுருக்கா விநோத்தை பாரதீய ஜனதாக் கட்சியில்  வழக்கறிஞர் பிணையில் எடுத்ததாக  திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான்  மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த தேர்தலில் ஆளுநரின் செயற்பாடுகள்  பேசு பொருளாக  இருக்கு  என்பதில் மாற்றுக் கருத்து  இல்லை.

No comments: