Tuesday, February 5, 2019

தலைவரை மாற்றி தடையைத் தகர்த்த காங்கிரஸ்


தமிழக காங்கிரஸுக்கு ஒரு தலைவர் இருப்பார். ஆனால், அடுத்த நிலையில் இருக்கும் தலைவர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலை எதிர் நோக்கி இருக்கும் இந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலவரான திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு கே.எஸ்.அழகிரி தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கோஷ்டிப் பூசல்கள் டில்லித் தலைமையின் மனமாற்றம் என்பவற்றின் காரணமாக தலைமைப் பதவியை ஒருவர் அதிக காலம் வகிப்பதில்லை. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் ஒரு சில மாதங்கள் இருக்கையில் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் திருநாவுக்கரசர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை தமிழகத்தில் சந்திப்பதற்கு காங்கிரஸ் தயாராக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி வலுப்பெற வேண்டும் என்பதனாலேயே காங்கிரஸ் தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்த திருநாவுக்கரசர்  எம்.ஜி.ஆரின் துணையுடன் அரசியலில் பிரவேசித்தவர். எம்.ஜி.ஆருடனும் ஜெயலலிதாவுடனும் மிக நெருக்கமாகப் பழகிய திருநாவுக்கரசரால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பாசத்தை விட முடியவில்லை.  அதுவே அவரின் பதவிக்கு ஆபத்தாக மாறிவிட்டது.

தமிழக அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் ஸ்டாலினுடைய தலைமையில் நடைபெற்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும் அதில் கலந்துகொண்டன. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதில் கலந்துகொள்ளாமல் தனியாக போராட்டம் நடத்தியதால் தமிழக காங்கிரஸார் அதனை ரசிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதை திருநாவுக்கரசர் விரும்பவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதையே திருநாவுக்கரசர் விரும்பினார். இதனை டில்லித் தலைமை விரும்பாததனால் திருநாவுக்கரசர் தூக்கி எறியப்பட்டார்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றிக் கூட்டணியில் இருப்பதால் தலைமைப் பதவிக்கு ஆபத்து இல்லை என்பதே திருநாவுக்கரசரின் எண்ணம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகையில் தலைமைப் பதவியில் கைவைப்பதற்கு தலைமைப் பீடம் விரும்பாது என்பதைத் தெரிந்துகொண்ட திருநாவுக்கரசர் நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை நான்தான் தலைவர் எனப்  பேட்டியளித்தார். தலைக்கனம் மிக்க அந்தப்பேட்டியும் அவருக்குப் பாதகமாக அமைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகக் கட்சியை உருவாக்கி அரசியல் செய்யும் தினகரனுடன் இணைவதற்கு திருநாவுக்கரசர் முயற்சி செய்தார். அந்த முயற்சியும் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் துணை சபாநாயகராகப் பதவி வகித்த திருநாவுக்கரசர் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார். எம்ஜிஆர் மறைந்ததும் ஜெயலலைதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஜெயலலிதாவின் தலைமையிலும் எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் தலைமையிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதாவுக்குப் பக்க பலமாக இருந்தவர் திருநாவுக்கரசர். சாத்தூர் ராமச்சந்திரனுடன் சேர்ந்து தமிழக சட்டசபை உறுப்பினர்களை கைதி போல் வைத்திருந்தார். கூவத்தூர்  கூத்துக்கு அச்சாரம் போட்ட பெருமை திருநாவுக்கரசரைச் சாரும்.

திருநாவுக்கரசர் மீது ஜெயலலிதா நம்பிக்கை இழந்தபின்னர் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. தனக்கு மதிப்பிலாத இடத்தில் இருப்பதை விரும்பாத திருநாவுக்கரசர், அங்கிருந்து பாரதீய ஜனதாக் கட்சிக்குத் தாவினார். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராக வலம் வந்தார். பாரதீய ஜனதாவில் செல்வாக்குக் குறையத்தொடங்கியதும் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததால் அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இராஜினாமாச் செய்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதியரைத் தேடியபோது ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவரான திருநாவுக்கரசரின் பெயரும் முன்னிலைப்படுத்தப்பட்டது.  பாரதீய ஜனதாக் கட்சியில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகக்கூடாது என கருத்டு முன்வைக்கப்பட்டது. திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் தலைவராக்கக்கூடாது என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டில்லித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். தமிழகத் தலிவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் திருநாவுக்கரசருக்கு தமிழக காங்கிரஸ் தலைமைப் பதவி வழங்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற திருநாவுக்கரசர் ஏனைய தலைவர்களுடன் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாகப் பலமுடிவுகளை அமுல்படுத்தினார். 45 மாவட்டத் தலைவர்கள் இருந்த நிலையில் அதனை 72 ஆக உயர்த்தி தனக்கு விசுவாசமானவர்களை மாவட்டத் தலைவரக்கினார். 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 13 ஆம் திகதி ஆட்டத்தை ஆரம்பித்த திருநாவுக்கர்  அடக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நெருக்கமாக இருக்கும் இவர், தேர்தலுக்கான பேச்சு வார்த்தையில் முக்கிய இடத்தை வகிப்பார். தமிழக காங்கிரஸ் தலைவர் பட்டியலில் பீட்டர் அல்போன்ஸின் பெயரும் இருந்தது. பீட்ட்டர் அல்போன்ஸ்தான் தலைவராவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மென்மையான போக்கைக் கொண்ட பீட்டர் அல்போன்ஸால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் போது இறுக்கமாகப் பேசமாட்டார். அதன் காரணமாக அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நம்பிக்கைக்குரியவர். 67 வயதான அழகிரி 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்கடலூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலும், 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலும் சிதம்பரம் தொகுதியில் தமிழக சட்ட சபைத் தேர்தலில்  போட்டியிட்டு  வெற்றி பெற்றவர்.  2003 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஏழு தலைவர்களை தமிழக காங்கிரஸ் கட்சி கண்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக இருக்கும் அழகிரிக்கு ஜோதிமணி,குஷ்பு போன்ற பெண் தலைவர்களின் ஆதரவு இருக்கின்றது. அழகிரியுடன் சேர்த்து நான்கு செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்து தமிழக காங்கிரஸை வலுப்படுத்த வேண்டிய கடமை அழகிரியின் முன்னால் உள்ளது.

சூரன்.ஏ.ரவிவர்மா.

Saturday, January 19, 2019

ஆதரவை எதிர்பார்த்து கூட்டணிக் கதவைத் திறந்த மோடி


வாஜ்பாஜிடம் இருந்து பாரதீஜ ஜனதாக் கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பெற்ற மோடி கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி ஏற்றார். வாஜ்பாய்க்கு அடுத்த தலைவராக மிளிர்ந்த அத்வானியைப் புறந்தள்ளிய மோடி, தன்னுடன் அமித்ஷாவை இணைத்துக்கொண்டார். மோடி அமித்ஷா கூட்டணி எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தது. அரசியல் தில்லு முல்லுகள்மூலம் உச்சத்துக்குச் சென்ற இவர்கள் மாநிலக் கட்சிகளைத் துச்சமாக மதித்தனர். இந்தியாவின் தேர்தல் ஆண்டான 2019, மோடியை கிலிகொள்ள வைத்துள்ளது. அதனால் 20 வருடங்களுக்கு முந்தைய கூட்டணிக்குத் தயார் என அறிவித்துள்ளார்.

இந்துயாவில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 282 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சி செய்யும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற 19 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை ஆட்டம்காணச் செய்தது. கூட்டணிக் கட்சிகளையும் மாநிலக் கட்சிகளையும் துச்சமாகக் கருதிய பாரதீய ஜனதாக் கட்சி அச்சமடைந்துள்ளது. கடந்த வருடக் கடைசியில் நடைபெற்ற ஐந்து மநிலத் தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி படுதோல்வியடைந்தது. மூன்று மாநிலங்களை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி  பெற முடியுமா எனும் சந்தேகம் மோடிக்கு எழுந்துள்ளது.

மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் தொடர் வெற்றிகளால் மக்ழ்ந்திருந்த அமித்ஷா, அடுத்த பொதுத் தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனச் சூழுரைத்தார். பாரதீய ஜனதாவுக்கு எதிரான மக்களின் மனநிலை, கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை என்பன ஆட்சியை ஆட்டம்காணச் செய்துள்ளன. அதனால், 20 வருடங்களுக்கு முந்தைய வாஜ்பாய் காலத்துக் கட்சிகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  

கருணாநிதியும் ஜெயலலிதாவும் 20 வருடங்களுக்கு முன்னர் வாஜ்பாயுடன் கைகோர்த்தனர். காங்கிரஸ் கட்சியையும் ராகுலையும் கடுமையாக விமர்சிக்கும் மோடி, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஸ்டாலினையும் எதிர்கிறார். ஆகையால் மோடியுடன் ஸ்டாலின் இணையமாட்டார். திருமாவளவன்,வைகோ, ராமதாஸ் ஆகிய தமிழகத் தலைவர்கள் வாஜ்பாயுடன் இணைந்து செயற்பட்டார்கள். வைகோவும் திருமாவளவனும்  மோடியை மூர்க்கமாக எதிர்க்கின்றனர். அவர்களும் இந்தப்பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்.  திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனச் சபதம் செய்த ராமதாஸ்,  பாரதீய ஜனதாவின் பக்கம் சாயலாம் என்ற கருத்து நிலவுகிறது.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்துபவர்கள் மோடியிடம் சரணடைந்துள்ளனர். மோடிக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு இருப்பதால் அவருடன் இணைவதில் தயக்கம் காட்டப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழக சட்டசபை உறுப்பினர்கள் பாரதீய ஜனதாவை எதிர்த்து கருத்துச் சொல்வதில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரதீஜ ஜனதா அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துகின்றனர்.  ஆனால் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரான தீர்மானங்களின் போது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்கின்றனர்.


அண்ணா  திரவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரான தம்பித்துரையின்  பேட்டி பாரதீய ஜனதாக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியை முதுகிலே சுமக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ன பாவம் செய்துள்ளது? என்ற அவரின் கேள்வியை பரதீய ஜனதாவுக்கு எதிரானவர்கள் 
      விரும்புகிறார்கள்.  நாடாளுமன்றப் ஒதுத் தேர்தல் அரிவிக்கப்பட்டபின்னர் கூட்டணிபற்றி யோசிக்கலாம் என மற்றைய தலைவர்கள் சொல்கிறார்கள்.
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி


வைக்கலாம் என பாரதீய ஜனதாத் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் கட்சி ஆரம்பிக்கப்படும் என்ற அறிவுப்புடன் முடிவுக்கு வந்துள்ளது. கமலை வளைக்க முடியாது. ராமதாஸையும் விஜயகாந்தையும் தம் பக்கம் இழுக்க பாரதீய ஜனதா முயல்கிறது. பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலை தமிழகத்தில் கடுமையாக இருப்பதால் வெளிப்படையாக எதுவும் பேச முடியாத நிலையில் ராமதாஸும் விஜயகாந்தும் இருக்கிறார்கள்.

பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேராமல் தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் கூட்டணி சேரலாம் என்ற மன ஓட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. கூட்டணி சேர்ந்தாலும் சேராவிட்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது என்பது நிச்சயம்.

சூரன்.ஏ.ரவிவர்மா.

Sunday, January 13, 2019

கொடநாட்டைச் சுற்றிய மர்ம முடிச்சு எடப்பாடி மீது குற்றச்சாட்டு


ஜெயலலிதா ஓய்வெடுக்கும் வாசஸ்தலமான கொடநாட்டைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவருவதில்லை. ஜெயலலிதா கொடநாட்டுக்குச் சென்றார். ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து திரும்பிவிட்டார்  போன்றவையே அப்போதைய பரபரப்பான செய்தியாக இருந்தன.ஜெயலலிதா அங்கே என்ன செய்தார் என்ற விபரம் எதுவும் வெளிவருவதிலை. கொடநாட்டு காவலாளி கொலை செய்யப்பட்டு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள்  திருடப்பட்ட செய்தி பெரிய பரபரப்பின்றி அடங்கியது. பின்னர் நடைபெற்ற விபத்து மரணங்களும் தற்கொலையும் சந்தேகத்தை ஏற்படுத்தியனவே தவிர சர்ச்சையாகவில்லை. கொள்ளை கொலைகள் ஆகியவற்றின் பின்னால் இருப்பவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ற குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொடநாட்டுக் கொள்ளை, அதன் பின்னர் நடைபெற்ற மரணங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவால் நடைபெற்றதாக   டெஹெல்காவின் முன்னாள் ஆசிரியர் மத்தியூஸ் சாமுவேல், டெல்லியில்   பத்திரிகையாளர் முன் குற்றம் சாட்டியுள்ளார். கொடநாட்டு கொள்ளை குற்றவாளிகளான சயானும் வாளையா மனோஜும், மத்தியூஸ் சாமுவேலுடன் சேர்ந்து எடப்பாடி மீதான குற்றச்சாட்டை பத்திரிகையாளர் முன்னால் உறுதிப்படுத்தினர்.

முதலமைச்சராக இருக்கும்போது குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை பெற்ற அவப்பெயர் தமிழகத்தின் மீது படிந்துள்ளது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சர் எனும் கரும் புள்ளியும் தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும் என்ற  எதிர்க்கட்சிகளின் குரல்  ஓங்கி ஒலிக்கத்தொடங்கிவிட்டது. தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களும் எடப்பாடிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது எதிர்க்கட்சிகளின் சதி பின்னணியில் இருப்பவரை விரைவில் வெளிப்படுத்துவேன் என  எடப்பாடி சூழுரைத்துள்ளார்.

கொள்ளையடிப்பதற்காக கொடநாட்டுக்குச் சென்றவர்கள் கவலாளிகளைக் கட்டிவைத்துவிட்டு உள்ளே சென்றார்கள். மூச்சுத்திணறி ஓம் பிரகாஷ் என்ற காவலாளி மரனமானார். இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களின் பின்னர் கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் சயான் என்பவர் படுகாயமடைந்தார். அவரது மனைவி விஷ்ணுபிரியாவும் மகள் நீத்துவும் கொல்லப்பட்டனர். அந்த விபத்தில் காயங்களுடன் தப்பிய சயான் என்பவர் தான் இன்று எடப்பாடிமீது குற்றம் சுமத்தியுள்ளார். கொடநாட்டில் சீசீரிவி  இயக்குநராகக் கடமையாற்றிய தினேஸ்குமார் தற்கொலை செய்தார். ஜெயலலிதாவின் கார்ச் சாரதியான கனகராஜ் என்பவர் எடப்பாடியில் சாலை விபத்தில் பலியானார்.

காவலாளி கொலை, தற்கொலை விபத்து மரணங்கள் பற்றி அப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. கனகராஜின் அண்ணன், எடப்பாடிமிது குற்றம் சுமத்தி சிபிஐ விசாரனை வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தகுந்த சாட்சிகள், ஆதாரங்கள் என்பன இல்லமையால் அவை அப்போதே மறக்கடிக்கப்பட்டன. மத்தியூஸ் சாமுவேலின் கொடநாடு ஆவணப்படத்தின் மூலம் அந்தச் சம்பவங்கள் அனைத்தும் உயிர் பெற்றுள்ளன.

”குற்றம் செய்த தனது கட்சியின் உறுப்பினரிடம் வீடியோ மூலம் வாக்கு மூலம் பெற்ற ஜெயலலிதா, அதனைப் பாதுகாப்பாக வைத்திருந்தார். அதனால்தான் யாரும் அவரை எதிர்த்து எதுவும் பேசுவதில்லை. அந்த வீடியோ வாக்கு மூலம் அனைத்தும் இப்போது எடப்பாடியிடம் உள்ளன” என்கிறார் மத்தியூஸ் சாமுவேல்.

பத்திரிகையாளர் மத்தியில் சயான் தெரிவிக்கையில், ”கொடநாட்டில் 20 கோடிரூபா பணம் இருக்கிறது அதனையும் சில ஆவனங்களையும் எடுக்க வேண்டும்.   தமிழகத்தில் இருந்து யாரும் வேண்டாம் கேரளாவில் இருந்து ஆட்களைக்கொண்டுவா என ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கேட்டார். நாங்கள் கனகராஜ் நான் உட்பட 10 பேர் கொடநாட்டுக்கு கொள்ளையடிக்கச் சென்றோம். கனகராஜும் நானும் இன்னும் இரண்டுபேர் உள்ளே போனோம். கனகராஜ் சில ஆவணங்களையும், பென்ரைவ்களையும் சிடிக்களையும் தனது பையில் போட்டார். முதலமைச்சர் எடப்பாடிதான் செய்யச்சொன்னார் ஒரு பிரச்சினையும் வராது என்று கனகராஜ் கூறினார்” என்றார்.

டெல்லிப் பத்திரிகையாளர் முன்னால் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மருத்த எடப்பாடி. சென்னையில் சைபர் கிரைமில் புகார் செய்தார். உடனடியாக டெல்லிக்கு விரைந்த தனிப்படை சயானையும் அவரது கூட்டாளையையும் கைதுசெய்து சென்னைக்குக் கொண்டுவந்துள்ளது. அவர்களின் உயுருக்கு உத்தரவாதமில்லை என மத்தியூஸ் சாமுவேலும்  தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களும்  தெரிவித்துள்ளனர்.

கொடநாட்டுக் கொள்ளை தொடர்பாக சயான் உட்பட10  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  பிணையில் விடுதலை செய்யப்பட்ட சயானையும் அவரது நண்பரையும் தமிழகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை நடைபெற்ற அன்று கொடநாட்டில் மின்சாரம் இருக்கவில்லை. சீசீரிவி வேலை செய்யவில்லை என பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாசஸ்தலத்தில் அபப்டி இரு சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லை என்பதே பொதுவான கணிப்பு.

கொடநாடு யாருடையது. அங்கே எப்படியான பாதுகாப்பு இருக்கும். வெளியார் யாரும் கொள்ளையடிக்கும் நோக்குடன் உள்ளே நுழைய முடியாது. என்ன பொருள்  எங்கே இருக்கிறதென்பது எவருக்கும் தெரியாது. உள்ளே இருந்தவரின் உதவி இன்றி கொள்ளை நடைபெற்றிருக்க் முடியாது.

எடப்பாடி முதல்வராக இருக்கையில் தமிழக  பொலிஸ் விராசணையில் நம்பிக்கை இல்லை. எடப்பாடி பதவி விலகி விசாரனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதே பொதுவான அபிப்பிராயமாகும். தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு எடப்பாடிக்கு உள்ளது.

சூரன்.ஏ.ரவிவர்மா.

Thursday, January 3, 2019

திருவாரூரில் மையம் கொள்ளும் தமிழக அரசியல்


தமிழ்க சட்டப்பேரவையில் 20 தொகுதிகள் காலியாக உள்ளன அந்தத்தொகுதிகளுக்கான மினித் தேர்தலை எதிர்பார்த்திருந்த வேளையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரம்குன்ற தொகுதியில் வெற்றி பெற்ற போஸ் மரணமானதால் அந்தத்தொகுதி காலியாக உள்ளது. வேட்பாளர் பீ படிவத்தில்  ய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  அன்றைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து கையொப்பமிடாமல் கைரேகை பதிவு செய்தார். அந்தக் கைரேகை பற்றிய வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் நடத்த முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18  தொகுதிகள் காலியாக உள்ளன மேன் முறையீடு  செய்யாமல் தேர்தலைச் சந்திக்கப்போவதாக தினகரனின் ஆதரவு பெறவர்கள் கூறியுள்ளனர். மேன் முறையீட்டுக் கால அவகாசம்  இன்னமும் நிறைவு பெறாததால் 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த முடியாது.

கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் ஜனவரி 28 ஆம் திகதி  இடைத்தேர்தல்   நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 3 வேட்புமனுத்தாக்கல், ஜனவரி 11 வேட்புமனு மறுபரிசீலனை, ஜனவரி 14 வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள், ஜனவரி 28 தேர்தல்,  ஜனவரி 31 வாக்கு எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன.

திருவாரூர் கருணாநிதி பிறந்த இடம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. திராவிட முன்னேற்றக் கழகம் 7 முறை வெற்றி பெற்றது. சிபிஎம் ஐந்து முறையும் காங்கிரஸ் ஒரு முறையும் திரூவாரூரில் வெற்றி பெற்றன. 2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் கருணாநிதி வெற்றி பெற்றார்.  எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைமை ஏற்று நடத்திய காலத்திலும் திருவாரூரில் வெற்றி பெறவில்லை. ஆகையால் தேர்தலுக்கு முன்பே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதியாகியுள்ளது.

திருவாரூரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மழை புயல் காரணமாக ரெட் அலேட் விடுக்கப்பட்டதால் தேர்தலை நடத்த வேண்டாம் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. நீதி  மன்றம் கட்டளையிட்டதால் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல்  நடத்துவதற்குரிய ஏதிநிலை இப்போது இல்லை என்ற கருத்து மேலோங்கியுள்ளது. கஜா புயல் பாதிப்பில் இருந்து திருவாரூர் மக்கள் இன்னமும் விடுபடவில்லை. அவர்களுடைய ஆதார் அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டன. பொங்கல் பண்டிகைக்காக் தமிழக மக்கள் தயாராக இருக்கும் வேளையில் தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள்  இருக்கும் வேளையில் கஜாபுயலுக்கான நிவாரணத்தொகையை அறிவித்த கையோடு திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பும் வந்துள்ளது. மதிரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கை நாட்டுவதற்கு பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம் செய்கிறார். ஜனவரி 27 ஆம் திகதி அடிக்கல் நாட்டும் வைபவம். மறுநாள்  28 ஆம் திகதி  தேர்தல் இது திட்டமிட்ட தேர்தல் பிரசாரமாகும்.

தேர்தலுக்கு முதல் நாள் பிரசாரம் செய்யக்கூடாது. மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தை பாரதிய ஜனதாக் கட்சி தேர்தல் பிரசாரமாக்குகிறது. கஜா புயல் நிவாரணத் தொகையை விடுவித்தது, எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றால் திருவாரூர் மக்கள் வாக்களிப்பார்கள் என பரதீய ஜனதாக் கட்சியினர் கருதுகிறார்கள்.

திருவாரூரில்ர் தினகரனைத் தோற்கடிக்க வேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  வீழ்த்த வேண்டும் என தினகரனும் வரிந்துகட்டி களமிறங்குவார்கள். இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்பதில் அதிக போட்டி இருக்கும். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதி கூடிய வாக்குகளால் கருணாநிதி வெற்றி பெற்றார்.  அதை விடக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் மீதான விமர்சனம் அதிகரிக்கும்.

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்ருக்கிடையேயான மும்முனைப்போட்டியாக திருவாரூர் இடைத் தேர்தல் இருக்கப்போகிறது. கடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்த  வைகோ,, திருமாவளவன், இடதுசாரிகள் ஆகியோர்  இப்போது ஆதரவு தெரிவித்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் எதிர்த்து செய்யப்போகும் பிரசாரம் திருவாரூரில்  களைகட்டாது என்பது பகிரங்கமான உண்மை.

திருவாரூரில் கருணாநிதிக்கு இருக்கும் செல்வாக்கு மற்றவர்களுக்கு இல்லை. ” இதுவே எனது  கடைசித் தேர்தல். இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என கருணாநிதி பிரசாரம் செய்தார்.   இதன் காரணமாக அதிகளவான வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். திரூவாரூர் தொகுதிக்கு கருணாநிது செய்த சாதனைகளை முன்னிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் பிரசாரம் செய்யும். கருணாநிதி இல்லை என்ற அனுதாப அலையும் அதிக வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பெற்றுக் கொடுக்கும்.

சூரன்.ஏ.ரவிவர்மா.

Wednesday, December 26, 2018

ஸ்டாலினை எதிர்க்க எம்ஜிஆரைக் கூப்பிடும் மோடி


கருணாநிதி ஜெயலலிதா ஆகியோரைச் சுற்றிவந்த தமிழக அரசியல் அவர்கள் இருவரும் மறைந்தபின்னர் சசிகலா,ஓ.பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி,டி.டி.தினகரன் எனச்சுற்றிச் சுழன்றது. இவர்களின் மத்தியில் ஸ்டாலினின் பெயர் மழுங்கடிக்கப்பட்டது. இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என ஸ்டானின் பிரகடனப்படுத்தியதால் எம்ஜிஆரின் துணையுடன் அவரை எதிர்க்க களம் இறங்கியுள்ளார் மோடி.

தமிழக , மத்திய அரசுகள் மீது ஸ்டாலின் மென்மையான போக்கைக் கடைப்பிடித்துவந்தார். கருணாநிதியைப் போல ஸ்டாலின் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. எடப்பாடியின் அரசை மோடி காப்பாற்றுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த  உண்மை. அதனைத் திராவிட முன்னேற்றக் கழகம் உரத்துச் சொல்லும்போது பாரதீய ஜனதாவுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்திசை திருப்புவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் “காவியை இல்லாமல் செய்ய வேண்டும்என காட்டமாக உரையாற்றினார். அன்று தொடங்கிய பாரதீய ஜனதாவுக்கான எதிர்ப்பை ஸ்டாலின் இன்னமும் கைவிடவில்லை. இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி எனப் பிரகடனம் செய்த ஸ்டாலின், மோடியை :சாடிஸ்ட்என அறிவித்தார். ஸ்டாலினின் பேச்சால் எரிச்சலடைந்த மோடி, தனது அரசியல் எதிரியான  ராகுல் காந்தியை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஸ்டாலினுக்கு எதிராகத் தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

தமிழகத்தில் எம்ஜிஆருக்கு தனி மதிப்பு உள்ளது. எம்ஜிஆரின் ரசிகர்கள்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களாகி அவரை முதலமைச்சராக்கினார்கள். எம்ஜிஆருக்குப்பின் ஜெயலலிதவை அரியணையில் ஏற்றியதும் அவர்கள்தான்.  எம்ஜிஆரின் வாக்கு வங்கியைக் குறிவைத்து ஸ்டாலினுக்கும் ராகுல் காந்திக்கும்  எதிரான பிரசாரத்தை மோடி ஆரம்பித்துள்ளார்.

 “எம்ஜிஆரின் ஆட்சியை கலைத்த காங்கிரஸுக்கா உங்கள் ஆதரவு?என தமிழக மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார் மோடி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலமையிலான கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்ட்ணியில் காங்கிரஸும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டாலினின்  முழக்கம் மோடியை மிகவும் பாதித்துள்ளது. அதனால்தான் ஸ்டாலினின் தகப்பன் காலத்து அரசியல் நட்சத்திரமான எம்ஜிஆரை,  மோடி ஞாபகப்படுத்துகிறார். அடுத்து நடைபெற்ற தேர்தலில் தனது ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் எம்ஜிஆர் கூட்டணி சேர்ந்ததை மோடி மறந்திருக்கலாம், தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஈழத்தமிழர் விவகாரமும் பின்னிப் பிணைந்துள்ளது. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கூட்டணி இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கொன்றது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்  தலைவர்களும்  தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்களும்  மேடைதோறும் முழங்குகின்றனர். புலிகளைத் தோற்கடிப்பதற்கு  இந்தியாவின் முன்னாள்  பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் மிக்ப்பெரிய பங்காற்றியது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்ததை  தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்கள் மறந்துவிட்டனர்.

காங்கிரஸையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் குற்றம் சாட்டும் மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம்தான் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்றது. இதனைத் தமிழக மக்கள் மறந்துவிடுவார்கள் என மோடி  நினைக்கிறார்.

மாற்றான் மனப்பான்மைஅயுடன் பிரதமர் மோடி தமிழகத்தை நோக்குவதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். மேகதாது அணை விவகாரம், தூத்துக்குடி சம்பவம், கஜாபுயல் பாதிப்பை பார்க்க வராமை, தமிழக அரசு கேட்ட கஜா புயல் பதிப்பு நிவாரணத்தை  வழங்காமை போன்றவை மோடிக்கு எதிராக இருக்கின்றன. தேர்தல் காலத்தில் இவை எல்லாம் விஸ்வரூபம் எடுக்கும். ஈழத் தமிழர் விவகாரமும் எம்ஜிஆரின் செல்வாக்கும் தமிழக அரசியலில் செல்வாக்குச்  செலுத்தப்போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. மோடியா லேடியா என்ற கோஷம் மறைந்து ஸ்டாலினா மோடியா எனும் கோஷம் முன்னிறுத்தப்படவுள்ளது.

சூரன் ஏ.ரவிவர்மா.

Monday, December 24, 2018

சென்னையில் ஸ்டாலின் கொழுத்திப்போட்டதிரி டில்லியில் வெடிக்கிறது.


தமிழக அரசியலில் மட்டுமன்றி இந்திய அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர் கருணாநிதி.  கருணாநிதி இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டி எழுப்பும் திறமை ஸ்டாலினிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் அவரை எதிர்க்கும் அரசியல் தலைவர்களிடன் இருக்கிறது. அந்தச் சந்தேகத்துக்கு கருணாநிதியின் சிலை திறப்புவிழாவில் விடையளித்துள்ளார் ஸ்டாலின். காங்கிரஸின் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுலை வழிமொழிகிறேன். ஏனைய தலவர்களும் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் உரையால் டில்லி அரசியல் அதிர்கிறது.  பாரதீய ஜனதாக் கட்சியின்  பிரதமராக  மோடி முன்நிறுத்தப்படுகிறார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமராக ராகுலை முன்னிறுத்துவீர்களா என்ற கேள்விக்கு ஸ்டாலின் விடையளித்துள்ளார்.

பாரதீய ஜனதாவை எதிர்க்கும் மமதா  பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார் போன்ற தலைவர்களின் மனதில் பிரதமராகும் ஆசை இருக்கிறது. தேர்தலின் பின்னர்  பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம் என்பது அவர்களின் விருப்பம். ஆகையினால்  பிரதமர்  வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலைச் சந்திக்க அவர்கள் விடும்புகின்றனர். காங்கிரஸை விட கூடுதலான தொகுதிகளில் வெற்ரி பெற்றால் தான் பிரதமராகலாம் என்ற எண்ணத்தில் அவர்கள்  இருக்கிறார்கள். தங்கள் கூட்டணியின் பிரதமராக ராகுல்காந்தியை ஸ்டாலின் வழிமொழிந்ததை அவர்கள் ரசிக்கவில்லை.

ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வாரிசுகளாக அரசியலில் கால் பதித்தவர்கள். அரசியலில் அவர்களால் பிரகாசிக்க முடியாது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அண்மையில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சியிடம் இருந்த மூன்று மாநிலங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதால் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. கருணாநிதியின் நிழலில் வளர்ந்தவர் ஸ்டாலின். கருணாநிதி நோய் வாய்ப்பட்டிருந்தபோது செயல் தலைவராக ஸ்டாலின்,சிறப்பாகப் பணியாற்றினார்.தமிழக அரசியலில் மட்டும் பேசப்பட்ட ஸ்டாலின் இப்போது டில்லி அரசியலாலும் நோக்கப்படும் தலைவராக உயர்ந்துள்ளார்.

இந்திய அரசியலில் இந்திரா காந்தி ஓரம் கட்டப்பட்டபோது 1980 ஆம் ஆண்டு “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருகஎன  இந்திரா காந்தியை தமிழகத்துக்கு அழைத்துஅவரின் ஆழுமையை வெளிப்படுத்ஹ்டியவர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சிக்கு சோனியா  காந்தி தலைமை ஏற்ற போது வெளிநாட்டைச் சேர்ந்தவர் என அரசியல் எதிரிகள் அவரை ஒதுக்கினார்கள். 2009  ஆம் ஆண்டு சோனியாவைத் தமிழகத்துக்கு அழைத்து அவரின் அரசியல் பயணத்துக்கு உற்சாகமூட்டியவர் கருணாநிதி. ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்பதா இல்லையா என காங்கிரஸுடன் கூட்டணி சேர் இருக்கும் கட்சிகள் தயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கருணாநிதியைப் போன்று ராகுலை அடையாள காட்டியுள்ளார் ஸ்டாலின்.

ராகுல் காந்திக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பிடிக்காது. தமிழ்கத்துக்கு அவர் விஜயம் செய்யும் போது மரியாதை நிமித்தமாக  கருணாநிதியைச் சந்திப்பதில்லை. ஸ்டாலினுக்கும் ராகுல் காந்திக்கும் ஒத்துவராது. ராகுல் மீது ஸ்டாலின் கோபமாக இருக்கிறார் போன்ற செய்திகள் கடந்த காலங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டன். அவை எல்லாவற்றுக்கும் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சியைத் தோற்கடிக்கச்செய்வதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர ஆர்வமாக இருக்கும் கட்சித் தலைவர்கள் ஸ்டாலினின் பேச்சை ரசிக்கவில்லை. தேர்தலுக்குப் பின்னர்தான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என அவர்கள் கண்டிப்பான தொனியில் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பம்  என ஸ்டாலின் மீண்டும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் பேச்சு அரசியல் அரங்கை அதிரச்செய்துள்ளது.  தனது கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தான் ஸ்டாலின் அதனை வெளிப்படையாக அறிவித்திருப்பார்.  

ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழியபோகும் தகவலை காங்கிரஸ் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் முன்பே தெரியப்படுத்தி இருக்கும். கூட்டணிக் கட்சித் தலைவர்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் சந்தர்ப்பமாக காங்கிரஸ் கட்சி இதனை எதிர் நோக்குகின்றது. கூட்டணித் தலைவர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக   திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பம் அது என்று சொல்லி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது  காங்கிரஸ் கட்சி.  மாம்தா பான்ர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத் பவார் போன்றவர்களுக்கு ஒருசில மாநிலங்களில் தான் செல்வாக்குள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நாடு பூராகவும் தொண்டர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி அடுத்த தேர்தலில் அதிகளவான தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டது விஷேடமாக நோக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியையும், பாரதீஜ ஜனதாக் கட்சி ஆட்சியையும் கங்கிரஸ், பாரதீய ஜனதாக்  கட்சிகள் இல்லாத ஆட்சியையும் மத்தியில் அமைத்த பெருமைக்குரியவர் கருணாநிதி. கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின்  பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வதில் ஸ்டாலினின் பங்கு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
சூரன்.ஏ.ரவிவர்மா. 

Monday, December 17, 2018

தினகரனை குப்புற விழுத்திய செந்தில் பாலாஜி


ஜெயலலிதா மறைந்தபின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற  சசிகலா முயற்சி செய்தார். சசிகலா சிறைக்குச் சென்றதால் தினகரன் அதிரடியாக அரசியல் களத்தில் குதித்தார். ஜெயலலிதாவுக்காக சசிகலாவை மன்னித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்றுவேன் என சபதம் செய்த தினகரன் அம்மா முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கி அரசியல் நீரோட்டத்தில் குதித்தார்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைந்ததால் தமிழகத்தின் தலைவராவதற்கு தினகரன் முயற்சி செய்தார். எத்தகைய கடுமையாக கேள்வியானாலும் கோபப்படாமல்  சிரித்துக்க்கொண்டே பதிலளிக்கும் தினகரனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  நெருக்கடியை எதிர்கொண்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றதால் தமிழகத்தின் பெரிய தலைவர் என்ற பிம்பம் உருவாகியது.  தினகரனின் நம்பிக்கைக்குரிய செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் தினகரன் தரப்பு மட்டுமல்லாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய தினகரனின் ஆதரவாளர்களான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 18 சட்ட மன்ற  உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதனை எதிர்த்து 18 உறுப்பினர்களும்  நீதினம்றத்தில் முறையிட்டார்கள். தகுதி நீக்கம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தினகரனை நம்பிய 18 உறுப்பினர்கள் பதவியை இழந்தார்கள். 18 உறுப்பினர்களை பலிக்கடாவாக்கிய தினகரன் சட்டசபை உறுப்பினராகிவிட்டார். மேல் முறையீடு செய்யாமல் இடைத் தேர்தலைச் சந்திக்க தினகரன் தரப்பு முடிவு செய்தது. கருணாநிதி,ஏகே,போஸ் ஆகியோர் மரணமானதால் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றையும் சேர்த்து 20 தொகுதிகளில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதிதான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியது. ஏனைய 19 தொகுதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியவை. அவற்றில் ஒரு தொகுதி மட்டும் ஆட்சி செய்யும் அண்ணா திராவிட முன்னெற்றக் கழகத்துக்குரியது. ஏனைய 17  அனைத்தும்  தினகரனின் விசுவாசிகள் வெற்றி பெற்ற தொகுதிகள்.  எட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைத் தக்க வைக்கும். மாறாக 20 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் அது ஆட்சியைக் கைப்பற்றும். இந்த இரண்டு நூறு சதவீதம் நடக்கும் என எதிர்வு கூற முடியாது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடைபெற்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்ரி பெற்றவர்களையே தினகரன்  வேட்பாளர்களாக அறிவிப்பார்.தொகுதிக்குள் உள்ள தனிப்பட்ட செல்வாக்கினால் சிலர் வெற்ரி பெறுவார்கள். ஏனையவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிப்பர்கள்.  வெற்றி பெறும் வேட்பாளர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி கட்சி மாறியதால் தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளார். தேர்தல் பற்ரிய அரிவிப்பு வரும் முன்னரே தினகரனின் கையை விட்டு ஒரு தொகுதி பறிபோயுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பலமுறை பச்சைக்கொடி காட்டியும் தினகரனின் பின்னால் நின்ற 18 பேரும் அசையவில்லை.  நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னர் தினகரனைத் தவிர மற்றைய அனைவரும் வருங்கள் உங்களை மன்னிக்கிறோம் என முதலமைச்சர், துணை முதலமைச்ச்ர், அமைச்சர்கள் அனைவரும் வருந்தி அழைத்தார்கள். யாருமே இம்மியும் அசையவில்லை.

தினகரனின் விசுவாசத்துக்குரிய செந்தில் பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் செல்லப்போகிறார் என்ற செய்தி பரவியது. தினகரனின் ஆட்கள்  அதனை மறுதலித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதவர்கள் உருவாக்கிய கட்டுக்கதை என அவர்கள் தெரிவித்தார்கள். செந்தில் பாலாஜி அமைதியாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் மெளன காத்தது. ஜெயலலிதாவின் நினைவு நாளன்று நடைபெற்ற பேரணியில் செந்தில் பாலாஜி கலந்துகொள்ளவில்லை.நமது எம்ஜிஆரில் வழ்மையாகக்கொடுக்கும் விளம்பரங்களை செந்தில் பாலாஜி கொடுக்கவில்லை. வருடாந்தக் கலண்டர் அடிப்பதர்கு ஒப்பந்தம் செய்யவில்லை. இவை எல்லாம் செந்தில் பாலாஜியின் நடவடிக்கை மீது சந்தேகத்தை எழுப்பின.

செந்தில் பாலாஜி எங்களுடன் தான் இருக்கிறார்.  சொந்தப் பிரச்சினை காரணமாக அவர் கட்சிப்பணியில் இருந்து ஒதுங்கியுள்ளார் எனத் தினகரன் தரப்புத் தெரிவித்தது. ஆனால், ஒருமாத இடைவெளியில் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான பேச்சு வார்த்தையை வெற்றி கரமாக முடித்தார் செந்தில் பாலாஜி.  தமிழகத் தலைவர்களில் தனி ஆளாகத் தன்னை முன்னிறுத்திய தினகரனுக்கு அதிர்ச்சையளித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார் செந்தில் பாலாஜி. இது தினகரனுக்கு மிகப்பெரிய பின்னடைவு. செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து வேறு சிலரும் தினகரனைக் கைவிட்டுச்  செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செந்தில் பாலாஜியை இழந்த தினகரன் தரப்பும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் அதனி வெளிக்காட்டாது அரிக்கை விடுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் செல்லாமல் எமது பக்கம் வந்திருக்கலாம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆதங்கப்படுகின்றனர். செந்தில் பாலாஜியின் செல்வாக்கும் அவரிடம் இருக்கும் செல்வமும்  தேர்தலின் போது அவருக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றதைப் பொறுக்க முடியாத அவரது ஆதரவாளர்கள் சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்துக்கு திரும்பிச் சென்றனர். அவருக்கு நம்பிக்கையான சிலர் தினகரனுடன் இருக்கிறார்கள் காலப் போக்கில் அவர்கள் தன்னைத் தேடிவருவார்கள் என்ற நம்பிக்கை செந்தில் பாலாஜிக்கு இருக்கிறது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாஜாஜி 1996 ஆம் ஆண்டு 20 ஆவது வயதில் திராவிட முன்னேற்றக் கட்சியில் கவுன்சிலராக அரசியலில் அறிமுகமானார். அந்தக் காலத்தில் அவரிடம் பண வசதி இருக்கவில்லை. அங்குள்ள கே.சி.பழனிச்சாமி, நாகேந்திரன்  போன்றவர்களை எதிர்த்து அவரால் அரசியல் செய்ய முடியவில்லை.2000 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இணைந்தார். மணல்  கொள்ளைக்கு எதிராக ஜேபிசி இயந்திரத்தின் முன்னால் படுத்துப் போராட்டம் செய்தார். அவரின் போராட்டத்தால் உள்ளூர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் பதறினார்கள்.   ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையைப் பெற்ற செந்தில் பாலாஜி படிப்படியாக பதவிகளைப் பெற்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அசைக்க முடியாத அரசியல்வாதியானார்  போக்கு வரத்து அமைச்சரான  செந்தில் பாலாஜி ஜெயலலிதாவினதும் சசிகலாவினதும் விசுவாசத்தை ஒருங்கே  பெற்றார்.

தேர்தலின் போது வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்குச் சேகரித்ததால் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார் செந்தில் பாலாஜி. அம்மா போத்தல் தண்ணீர், அம்மா சொகுசு பஸ் போன்றவற்றினால் ஜெயலலிதாவின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றார். ஜெயலலிதாவின் கீழ் அமைச்சராக இருந்தவர்கள் எப்போ பதவி பறிபோகுமோ என கலக்கத்தில் இருந்தார்கள். செந்தில் பாலாஜியின் பதவியில் ஜெயலலிதா கைவைத்ததில்லை. கடைசியில் செந்தில் பாலாஜியை ஜெயலலிதா தூக்கி எறியும் நிலை ஏற்பட்டது. போக்கு வரத்துத் துறையில் ஏற்பட்ட நஷ்டம், ஊழல் காரணமாக செந்தில் பாலாஜி பதவி இழந்தார்.

ஜெயலலிதா இறந்தபின்னர் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது செந்தில் பாலாஜியின் பெயரும் அடிபட்டது. சசிகலாவின் விசுவாசத்துக்குரிய செந்தில் பாலாஜி முதல்வராகலாம் என செய்தி பரவியது. அப்படிப்பட்ட ஒருவர் இன்று அணி மாறியது சசிகலாவுக்கும் தினகரனுக்கும் பெரிய இழப்பு. ஒன்றரை வருடங்களாக பதவி இல்லை. வழக்குக்காக 56 கோடி ரூபாவை செந்தில் பாலாஜி செலவளித்ததாக செய்தி வெளியாகியது.  20 தொகுதிகளுக்கு இடைத்தேதல் நடக்கும் போது 10 தொகுதிகளின்  செலவை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் என தினகரன் வேண்டுகோள் விடுத்தகாகவும் அதனால் தான் செந்தில் பாலாஜி  கட்சி மாறியதாகவும் தெரிகிறது.

கொங்குமண்டலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவரான தம்பித்துரை போன்றவர்களை ஓரம் கட்டினார் செந்தில் பாலாஜி. வி. செந்தில் குமார் என்னும் இயற் பெயரை வி.செந்தில் பாலாஜி என மாற்றியபின் யாராலும் எட்ட முடியாத இடத்துக்குச் சென்றார். 2010 ஆம் ஆண்டு நமது எம்ஜிஆரில் பிரசுரமான விளம்பரத்துக்கு பணம் செலுத்த முடியாமல் தவித்த செந்தில் பாலாஜியை நம்பித்தான் இன்று   நமது எம்ஜிஆர் வெளியாகிறது.

கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பலவீனமாக உள்ளது. செந்தில் பாலாஜியின் வருகை கழகத்துக்கு உதவியாக இருக்கும். அங்கு செல்வாக்குச் செலுத்திய பழனிச்சாமி இப்போது நொடிந்துபோயுள்ளார். வயது முதிர்வு காரணமாக அவரல் முன்புபோல்  சுறு சுறுப்பாக இயங்க முடியாது அந்த இடத்தை செந்தில் பாலாஜி நிரப்புவார் என திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்க்கிறது.

தினகரனின் கூடாரத்தில் இருந்து இன்னும் பலர் வெளியேறப்போவதாக தகவல் பரவியுள்ளது. அவர்களை இழுக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்கிறது. செந்தில் பாலாஜியைப் போன்ற இன்னொரு இழப்பை தினகரனால் தாங்க முடியாது. இருப்பவர்களைத் தக்கவைக்க வெண்டிய கட்டாயம் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது.தினகரன் அடுத்து யாரை  யாரிடம் இழக்கப்போகிறார் என்பதை அறிய தமிழக அரசியல் ஆர்வமாக இருக்கிறது.