Sunday, August 7, 2022

110 கி. நிறை, 7 செ.மீ. சுற்றளவு…. ஒலிம்பியாட் பதக்கம்


 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த ஜூலை 28 ஆம் திகதி தொடங்கியது. அடுத்த புதன் கிழமை (ஓகஸ்ட் 10 ம் திகதி) வரை நடைபெற உள்ள இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முடிவில் வழங்கப்படும் பதக்கத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த தகவலை சுற்றுலா துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

 “44-வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் வழங்கப்படும். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பதக்கங்களை சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆலோசனையுடன் தமிழக சுற்றுலாத்துறை வடிவமைத்துள்ளது.

சர்வதேச தரத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பதக்கம் 110 கிராம் நிறையும், 7 சென்டிமீற்றர் சுற்றளவும் கொண்டது. பதக்கத்தின் ஒரு பக்கம் மாமல்லபுரத்தின் கடற்கரை கோவிலின் சின்னமும், இன்னொரு பக்கம் செஸ் ஒலிம்பியாட்டுக்கான லோகோவும் இடம் பெற்றுள்ளது. பதக்கத்தை இணைக்கும் ரிப்பன் தேசிய கொடியின் வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: