Monday, August 15, 2022

ரஜினியைச் சுற்றி பின்னப்படும் அரசியல் வலை

தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின் குரலுக்கு என ஒரு தனி மதிப்பு உள்ளது.சினிமாவால் புகழின் உச்சியில் இருக்கும் ரஜினிக்கு அரசியலில் கோலோச்ச வேண்டும் என்ற ஆசை இருந்தது. கருணாநிதி, மூப்பனார் கூட்டணிக்காக ரஜினி  குரல் கொடுத்தபோது அரசியலில் மாற்றம்  ஏற்பட்டது. பின்னர் ஜெயலலிதாவுக்காகவும், பாரதீய ஜனதாவுக்காகவும் கொடுத்த குரலுக்கு  மதிப்பு கிடைக்கவில்லை. அரசியல்  வேண்டாம் என  ஒதுங்கி இருந்த் ரஜினியின் பெயர் மீண்டும் அரசியல் அரங்கில் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.

சிஸ்டம் சரியில்லை, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன் என்ற கோஷத்துடன் அரசியலில் கால் பதிக்க ரஜினி முயற்சி செய்தார். அவருடன் இணைவதற்கு காணாமல் போன பல அரசியல்வாதிகள் தயாராக இருந்தனர். அரசியல் தீர்க்கதரிசியாக தம்மை நினைப்பவர்கள்  ரஜினியை உசுப்பேற்றினார்கள். ஆன்மீக அரசியல் என்ற ரஜினியின் முன்மொழிவால்  பாரதீய ஜனதாவின் சார்பு அரசியல் என விமர்சனம் செய்யப்பட்டது. தலையைச் சுற்றுகிறது என்று கூறிவிட்டு அரசியலுக்கு முழுக்குப் போட்ட ரஜினியை  இப்போது பாரதீய ஜனதா  உசுப்பேற்றியுள்ளது.

இந்தியாவின் , "75-வது சுதந்திர தின விழாவை விமரிசையாகக் கொண்டாடும் பொருட்டு, 'சுதந்திர அமிர்த பெருவிழா' கொண்டாட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கான குழுவில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், நடிகர்கள், பத்திரிகைப் பிரபலங்கள் எனப் பலரும் இடம்பெற்றுள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், அனுபம்கெர் ஆகியோரும் அதில் முக்கிய உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம், ஓகஸ்ட் 6‍ம் திக‌தி ஜனாதிபதி மாளிகையிலுள்ள கலாசார மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.

 டெல்லியில் கூட்டம் முடிந்த பின்னர் பிரதமர் மோடியுடன் ரஜினி சில நிமிடங்கள் பேசினார். அந்த சில நிமிடங்களின் பின்னர்  சென்னைக்குத் திரும்பிய ரஜினி தமிழக ஆளுநரைச் சந்தித்தது அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

ஓகஸ்ட் 8‍ம் திக‌தி காலை 11:40 மணிக்கு ஆளுநர் ரவியைச் சந்தித்தார் ரஜினி. போட்டோ வைபவங்கள் முடிந்த பிறகு, இருவரும் தனியே 20 நிமிடங்கள் பேசினார்கள். இந்தச் சந்திப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய ரஜினி, காத்திருந்த செய்தியாளர்களிடம், 'ஆளுநருடன் அரசியல் நிலவரம் குறித்துப் பேசினேன். என்ன பேசினோம் என்பதைச் சொல்ல முடியாது. அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை' என்றிருக்கிறார். அதாவது, 'அரசியலுக்கு நான் வரவில்லை, ஆனால் அரசியல் பேசுவேன். யாருக்கு வேண்டுமானாலும் வாய்ஸ் கொடுப்பேன்' என்று மறைமுகமாகக் கூறியிருக்கிறார் ரஜினி

ஸ்டலினின் தலைமையிலான ஸ்டாலின் அரசை முடக்குவதற்காக வலிந்து களமிறக்கப்பட்டவர்  ஆளுநர் ரவி. ஆரம்பத்தில் சுமுகமாகப் போஅன்  இரு தரப்பு உரவுகளும்  பின்னர் முட்டல்,மோதல் எனத் தொடர்கிறது.என்.ஆர்.ரவி தமிழக ஆளுநராகப் பதவி ஏற்று ஒரு வருடமாகப் போகிறது.இப்போது திடீரென ரஜினி அவரைச் சந்தித்ததில் அரசியல் காய் நகர்த்தல் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

  ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்த ரஜினி, 'தமிழ்நாட்டின் ஆன்மிக உணர்வு ஆளுநரை ஈர்த்திருக்கிறது. 'தமிழ்நாட்டின் நலனுக்காக என்ன செய்யவும் ரெடியாக இருக்கேன், எதை இழக்கவும் ரெடியாக இருக்கேன்' என்று என்னிடம் கூறினார் ஆளுநர்' என்றிருக்கிறார். ஆளுருக்கு ரஜினி பாராட்டுப் பத்திரம் வாசிக்கவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி ரஜினியை நோக்கி வீசப்படுகிறது.

தமிழக மாணவர்களின் நீட் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆளுநர் முக்கையத்துவம் கொடுக்கவில்லை. தமிழக அரசின் மசோதக்களை ஆளிநர் ஏறெடுதும் பார்க்கவில்லை. நீட் விலக்கு மசோதாவைக் ஜனாதிபதிக்கு அனுப்புவதில் காலம் தாழ்த்தினார் ஆளுநர் ரவி. நீட் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது என்பது ரவிக்கும் ரஜினிக்கும்  தெரியாததல்ல. இதுவரை 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், பல்வேறு குழப்பங்கள் நீண்டிருக்கின்றன. இதையெல்லாம் ரஜினி உணர்ந்திருந்தும், 'ஆளுநர் சூப்பர்' என்பதுபோலப் பேசியிருப்பது தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக் ரஜினி செயற்படுகிறார் என்று கருத வேண்டியுள்ளது.

அரசியல் பற்றிய திட்டம் என்னிடம் எதுவும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறினாலும்  மறைமுகமாக அவர் அரசியலில் இருக்கப்போவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். ரஜினி  அரசியலுக்கு வர மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரசியல் பேசினோம் என்றும் சொல்கிறார்.

 அரசியலுக்கு வராதவர் ஏன் அரசியல் பேச வேண்டும்? பெரும்பாலும் இதன் அர்த்தம் ரஜினியின் ஆதரவை பாஜக பெறும் என்பதாக இருக்கலாம். அதாவது ரஜினி நேரடியாக அரசியலுக்கு வராமல் பாஜகவிற்கு பின்னால் இருந்து குரல் கொடுக்கலாம். பாஜக பல மாநிலங்களில் இந்த அரசியலை செய்கிறது. நேரடியாக சிலரை இறக்காமல், பின்னால் இருந்து கட்சிக்காக அவர்களை பயன்படுத்தும். அதன்படியே ரஜினியை பாஜக பயன்படுத்த போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதோடு தமிழ்நாடு தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று ரஜினிகாந்திடம் ஆளுநர் தெரிவித்து இருக்கிறார். நன்மை செய்ய ரெடி என்று ஆளுநர் கூறியது ஏன்? இதன் உண்மையான அர்த்தம் என்ன? அரசியல் ரீதியான மாற்றங்களை மாற்றங்களை இது ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 சமீபத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முற்றும் துறந்தவர் போல ரஜினிகாந்த் பேசினார். மக்கள் பட கூடிய கஷ்டம் தொடங்கி ஞானம் வரை பல விஷயங்களை பேசினார். ஆனால் அதே ரஜினி இப்போது அரசியல் பேசினேன் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். பாஜகவிற்காக இவர் பிரச்சாரம் செய்ய போகிறாரா அல்லது வேறு ஏதாவது அரசியல் அல்லது பதவிகள் இவருக்கு வரப்போகிறதா என்று கேள்விகள்  சுற்றிச் சுற்றி வருகின்றன.

தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்  குதிரையில் பாரதீய ஜனதாக் கட்சி சவாரி செய்கிறது.அக் கட்சியின் தலைவர்கள் ஆளுக்கொடு திசையில் செல்கிரார்கள்.  பாரதீய ஜனதாவுக்கு எதிராக எடப்பாடி செயற்படுகிறார். பன்னீர் ஆதரவாக  இருக்கிறார். அண்னா திராவிட முன்னேற்றக் கழக்த்தின் செல்வாக்கு சரியத் தொடங்கிஉள்ளது.  புதியதொரு குதிரை  தேவைப்படுவதால் ரஜினியை வளைத்துப் போட்டுள்ளது பாரதீய ஜனதாக் கட்சி.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று இன்றும் ரஜினி கூறியுள்ளதன் அடிப்படையில், இனிவரும் தேர்தல்களிலும் அவர் கட்சி ஆரம்பிக்காமல், பாஜகவுக்கு நேரடியாககுரல் கொடுக்க வாய்ப்புள்ளது. அதற்கான அச்சாரம்தான் ஆளுநருடனான இன்றைய சந்திப்பு என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் 2014 பாராளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது, 'நதிகளை இணைப்போம்' என்று யார் வாக்குறுதி அளித்துள்ளார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று பாஜகவுக்கு மறைமுகமாக குரல்கொடுத்தவர்தான் ரஜினி. அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் பாஜகவுக்கு அவர் நேரடியாககுரல் கொடுக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இந்த யூகங்களுக்கு எல்லாம் ரஜினி பதில் சொல்லாவிட்டாலும் இவற்றில் ஏதோ ஒன்றை நோக்கி அவரை பாஜக நகர்த்தி வருகிறது என்பது மட்டும் உண்மை என்கின்றனர் பாஜகவின் நுணுக்கமான அரசியலை அறிந்தவர்கள்.

No comments: