Friday, August 19, 2022

எடப்பாடியின் கனவை தகர்த்தெறிந்த நீதிமன்ற‌ம்

இரட்டைத்தலைமையின் இயங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமையாகக் கைப்பற்றி தன்னிகரில்லாத் தலைவராக மிளிர்வதற்கு முயற்சி செய்த எடப்பாடிக்கு நீதிமன்றம் தடை போட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவு, சசிகலாவின்  பதவி ஆசை ஆகியவற்றால்  தடுமாறிய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை  .பன்னீர்ச்செல்வமும், எடப்பாடி பன்னீர்ச்செல்வமும் வழிநடத்தினர். இவர்கள்  இருவரையும் பாரதீய ஜனதா கட்டாயமாக இணைத்து வைத்தது. சகிகலா  சிறைக்குச் செல்லும்போது பன்னீரிடம்  இருந்த முதல்வர் பதவியைப் பறித்து எடப்பாடியின் கையில் கொடுத்தார். தர்மயுத்தத்துடன் பிரிந்து சென்றார் பன்னீர். இவர்கள்  இருவரும் பிரிந்து நின்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் சவாரி செய்ய முடியாது என்பதால் மோடி இருவரையும் இணைத்தார் மோடி.

பன்னீர் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும்  தெரிவாகினர்.  இந்தத் தெரிவு ஐந்து வருடங்கள்  இருக்க வேண்டும் என  முடிவு  செய்யப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது இரட்டைத் தலைமைக்குள் பூசல் இருந்தது.  பிரிவினை ஏற்படவில்லை. ஆட்சி பறிபோனதும் ஒற்றைத் தலைமை  என்ற  துருப்பை எடப்பாடி  கையில் எடுத்தார்.  பன்னீர்  அதனை விரும்பவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக  பன்னீரை ஓரம் கட்டிய எடப்பாடி ஒற்றைத் தலைமை என்ற அஸ்திரத்தின் மூலம் விழுத்த வியூகம் வகுத்தார்.

ஒற்றை தலைமை பிரச்னை வெடித்ததில் இருந்தே .பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே பனிப்போர் அதிகமானது. ஜூன் 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை காலி செய்து, ஒற்றை தலைமைக்கு ஏற்றாற்போல் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர பழனிசாமி முயற்சித்தார்.  அந்தக் கூட்டத்தில் பன்னீர் அவமானப்படுத்தப்பட்டார்.அதனை  எதிர்த்து  அவர்  நீதிமன்றம் சென்றார்..

 ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஜூன் 23 பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், ஒற்றை தலைமை குறித்து ஜூலை 11ல் நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவைத் தலைவர் அறிவித்தார்.

ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் பன்னீர்  பங்கேற்காமல் புறக்கணித்த நிலையில், பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலராக தேர்ந்தெடுத்து அறிவித்தனர். மேலும்  மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி  நீக்கினார். பொதுக்குழுவுக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை பன்னீர்    நாடினார். இதில் ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என நீதிபதி தீர்ப்பளித்ததால், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லாமல், மீண்டும் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்   , இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி தொடர்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி  மேல்முறையீடு செய்துள்ளார்.  

  நிரந்தர பொதுச் செயலாளராக  ஜெ ய லலிதா  இருக்க  வேண்டும் என முழங்கிய எடப்பாடி பதவி ஆசையால் அதற்கு முடிவு ட்ட முயற்சித்தார். அதிமுகவில் ஜூலை 11‍ஆம் திகதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது; ஜூன் 23 ஆம் திகதிக்கு முன்பு என்ன நிலைப்பாடு இருந்ததோ அதே நிலை நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.  கடந்த ஜூலை 11 ஆம் திகதி அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரியும் ஓபிஎஸ் அணி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சியின் சட்ட திட்டங்களுக்குள்பட்டு பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தார்.

  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பை வாசித்தார். அதில் அதிமுகவில் ஜூன் 23 ஆம் திகதிக்கு முன்னர் என்ன நிலை இருந்ததோ அதே நிலை நீடிக்கும். அதிமுகவில் பொதுக் குழு, செயற்குழுவை தனித்தனியே கூட்டக் கூடாது. பொதுக் குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பொதுக் குழுவை கூட்ட வேண்டும். இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்பதே இந்த தீர்ப்பாகும்

அதிமுகவில் பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்துதான் கூட்ட முடியும். இந்த யாப்பு தற்போது பன்னீர்செல்வத்திற்கு சாதகமாகவும்,  எடப்பாடிக்கு எதிராகவும் திரும்பி உள்ளது.  எடப்பாடி இனியும் பொதுக்குழுவை தனியாக கூட்ட முடியாது. அந்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றாலும் கூட அதற்கு இருவரும் கையெழுத்து போட வேண்டும். இதனால் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள், பதவிகள் எதுவும் செல்லாது.

 ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என எடப்பாடி தரப்புக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, அவரைக் குறிப்பிடும்போது ஓரிருமுறை 'அன்பு சகோதரர்' எனக் குறிப்பிட்டு பேசினார். அதேபோல், மீண்டும் இணையப் போவது இல்லை எனக் கூறி விளக்கமளித்த எடப்பாடி  தான் பேசுகையில் 'அண்ணன் ஓபிஎஸ்' எனக் குறிப்பிட்டார். இருவரும் மாறிமாறி சகோதரத்துவத்துடன் குறிப்பிட்டு பேச்சில் மட்டுமே சகோதர பாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

தலைவர்களின் பதவி ஆசையால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் பிரிந்துள்ளனர். பன்னீருக்கு ஆதரவான தொண்டர்கள்  உற்சாகமாக வெற்றிக் கொண்டாட்டத்தை  வெளிப்படுத்தினர். எடப்பாடியின் ஆதரவாளர்கள் சோகத்துட  முடங்கினர்.  இருவருமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்பதை பதவி ஆசை  மறக்கடித்துவிட்டது.

No comments: