Saturday, September 3, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 33

நடிகர் திலகம் சிவாஜியும், இயக்குநர் . பீம்சிங்கும்  இணைந்து உருவாக்கிய "" வரிசைப்  படங்களில் "படிக்காத மேதை" க்கு தனி இடம் உள்ளது.சிவாஜி,ரங்கராவ்,செளகர் ஜானகி ஆகிய மூவரின் உணர்ச்சிகரமான நடிப்பு படத்தின்  வெற்றிக்கு உதவியது. ஆனால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர்  மிகுந்த சிரமப்பட்டுத்தான் அதனை உருவாக்கினார்.

வங்காளமொழியில் பெரு வெற்றி பெற்ற "ஜோக் பி ஜோக்" எனும் படத்தைத்  தமிழில் தயாரிக்கின்ற உரிமையை   பாலா மூவீஸ் கிருஷ்ணசாமி வாங்கினார். ஸ்ரீதரின் வசனங்கள் அந்தக் காலப் படங்களி ல் வரவேற்றைப் பெற்றதால் அவருக்கு அந்தப் படத்தைத்  திரையிட்டுக் காட்டினார்.  படம் முழுவதையும்  பார்த்த  ஸ்ரீதருக்கு  கொஞ்சமும் திருப்தியில்லை. வலுவற்றை இந்தப் படம் தமிழ் ரசிகர்களைத் திருப்திப் படுத்தாது எனக் கருதினார். தமிழ் நாட்டு பாணிக்கு ஏற்ப அந்தக் கதைக்குத்  திரைக்கதை அமைத்து அதை வெற்றிப் படமாக ஆக்குவது மிகவும் கடினம்  என்று அவர் எண்ணினார்.அதனை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினார்.

படம் நன்றாக  இருக்கிறது. எனக்கு நேரமில்லை.  பலபடங்கள் கைவசம் உள்ளதால் உங்களுடன் பணியாற்ற முடியாதுள்ளது எனத் தட்டிக்கழித்தார். அப்படியானால்  வசனம் எழுதுவதற்கு  ஒருவரை சிபார்சு செய்யுமாறு கிருஷ்ணசாமி கேட்டார்.  ஸ்ரீதர் கொஞ்சமும் யோசிக்காமல் எனக்கு உதவியாளராக இருந்த கே.ர்ஸ். கோபாலகிருஷ்ணனைக் கேளுங்கள் என்றார். அந்தப் படத்தில்  சிவாஜி கதாநாயகனாக நடிக்க வேண்டும் என விரும்பிய கிருஷ்ணசாமி அவருக்கு  படத்திப் போட்டுக் கான்[பித்தார். சிவாஜிக்கு அந்தப் படம் பிடித்து விட்டது. இந்தப் படத்தின் வெற்றிக்கு அனுபவம் உள்ள இயக்குநர் தேவை என்று சிலரைக் குறிப்பிட்டார்.

 சிவாஜி சொன்ன இயக்குநர்களிடம் சென்ற தயாரிப்பாளர் ஏமாந்து போனார். அனைவரும் ஒருமித்த குரலில்  படம் சரியில்லை. வெற்றியடையாது எனச் சொல்லி வைத்தது போல் கூறினார்கள். முகுந்த கவலையுடன் சிவாஜியைச் சந்தித்த கிருஷ்ணசாமி அனைவரும் கைவிட்டதாகத் தெரிவித்தார்.

அவர் அப்படி சொன்னதும் லேசான குழப்பத்தில் ஆழ்ந்த சிவாஜி சிறிது நேரத்திற்குப் பிறகுநீங்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு  அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுங்கள். அவருக்கு இந்தக் கதை பிடித்து அவர் திரைக்கதை வசனம் எழுத ஒப்புக் கொண்டு விட்டால் அதற்குப் பிறகு இயக்குனர் பெயரை நான் சொல்கிறேன்..” என்றார்.  ஸ்ரீதர், சிவாஜி ஆகிய இருவருமே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பெயரைச் சொன்னதால் அடுத்தபடியாக  அவருக்கு அந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார் கிருஷ்ணசாமி.

படத்தைப் பார்த்த   கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்  எல்லா இயக்குநர்களும் அந்த படத்தைப் பற்றி சொன்ன கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைச் சொன்னார். “அற்புதமான கதை. இப்படிப்பட்ட உயிரோட்டமான கதைக்கு திரைக்கதை, வசனம் எழுத நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்என்றார்.

அவர் அப்படி சொன்னவுடன் அத்தனை இயக்குநர்கள் நிராகரித்த அந்தக் கதை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை மட்டும் எதனால் கவர்ந்தது என்று தெரிந்து கொள்ள விரும்பிய கிருஷ்ணசாமி, “என்ன காரணத்தினால் இந்தப் படம் உங்களுக்கு பிடித்திருக்கிறது ?” என்று  கேட்டார்.

 இதில் வரும் ராவ்பகதூர் பாத்திரமும், ரங்கன் பாத்திரமும் மிகவும் புதுமையானவை மட்டுமல்ல; கதைக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கக் கூடியதாக  உள்ளன.  இந்த இரண்டு பாத்திரங்களையும் வைத்துக் கொண்டு எத்தனை படங்கள் வேண்டுமானால் எடுக்கலாம்என்றார்.

வெற்றிப்பட  இயக்குநர்கள்  நிராகரித்த கதையைப் பாராட்டிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை   வசனம்  எழுத  உடனடியாக  ஒப்பந்தம் செய்தார் கிருஷ்ணசாமி. கோபாலகிருஷ்ணன் ஒபுக்கொண்டதை மகிழ்ச்சியுடன் சிவாஜியிடம் கிருஷ்ணசாமி தெரிவித்தார். படத்தை இயக்குவதற்கு பீம்சிங்கின் பெயரை சிவாஜி தெரிவித்தார்.   "படிக்காத மேதை" என அப்படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. ராவ்பகதூர் பாத்திரத்துக்கு எஸ்.வி.ரங்கராவ், ரங்கன் பாத்திரத்துக்கு சிவாஜி  நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சிவஜிக்கு  ஜோடியாக நடிப்பதர்கு சில ந்டிகைகளின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. தாய்மை உணர்வுள்ள பாத்திரத்துக்கு கவர்ச்சி நடிகைகளின் பெயர் அடிபட்டதை அறிந்த வசனகர்க்தா கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்து விட்டார்.

இந்தப் படத்தின் நாயகனான அப்பாவி ரங்கனுக்கு ஜோடியாக கவர்ச்சியாக நடிக்கக் கூடிய எந்த நடிகை நடித்தாலும்  நிச்சயமாக படம் பெரிய தோல்வியை சந்திக்கும். அன்பு, கருணை, பாசம், இரக்கம் ஆகிய அத்தனை உணர்ச்சிகளையும் அமைதியாக வெளிப்படுத்தும் தாய்மையின் சின்னமாக நான் உருவாக்கியுள்ள ரங்கனின் மனைவியின் பாத்திரத்திற்கு செளகார் ஜானகியைத் தவிர வேறு எந்த நடிகையையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆகவே அவரைத் தவிர வேறு எவரையும் கதாநாயகியாக  ஒப்பந்தம் செய்துவிடாதீர்கள்" என்று தயாரிப்பாளர் கிருஷ்ணசாமியிடம் தெளிவாக எடுத்துச் சொன்னார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

யோசிப்பதாக கிருஷ்ணசாமி சொன்ன போதிலும் தனது கருத்தில் அவருக்கு மிகப் பெரிய உடன்பாடு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட கோபாலகிருஷ்ணன் சவுகார் ஜானகியைத் தவிர வேறு யாரையாவது ஒப்பந்தம் செய்ய அவர் முடிவெடுத்தால் அந்தப் படத்திலிருந்து விலகி விடுவது என்று முடிவெடுத்தார். அந்தப் படத்திற்கு வசனம் எழுத  தன்னைப் பரிந்துரைத்த சிவாஜி கணேசனிடம் தன்னுடைய முடிவைத் தெரிவிப்பதற்காக அவரை சந்திக்க நெப்ட்யூன் ஸ்டுடியோவிற்குச் சென்றார். பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் படப்படிப்பு அங்கே நடந்து கொண்டிருந்தது.கோபாலகிருஷ்ணன் ஸ்டுடியோவிற்குள்ளே நுழைந்தபோது சிவாஜி ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்க அவரைச் சுற்றிலும் பீம்சிங், படிக்காத மேதை படத்தின் தயாரிப்பாளரான என்.கிருஷ்ணசாமி, உதவி இயக்குநர்கள் ஆகியோர் அமர்ந்து கொண்டிருந்தனர்.


இந்த நேரத்தில்  தனது கருத்தைச் சொல்லகூடாது என்பதால் கோபாலகிருஷ்ணன் தயங்கினார். சிவாஜியிடம் தனியாகப் பேச வாய்ப்பு கிடைக்கும்போது  தன்னுடைய முடிவை அவரிடம் சொல்லலாம்  என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது  வாப்பாஎன்று அவரை வரவேற்ற சிவாஜிபடிக்காத மேதை  படத்தில் செளகார் ஜானகியைத்தான் கதாநாயகியாக போடணும்னு மொத்த யூனிட்டும் சொல்லும்போது நீ மட்டும் அவர் வேண்டாம் என்று சொல்கிறாயாமே..? என்ன விஷயம்?” என்று கேட்டார். சிவாஜி  அப்படிக் கேட்டவுடன் கோபாலகிருஷ்ணனுக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் முதலில் சிறிது நேரம் தவித்த கோபாலகிருஷ்ணன் உங்களிடம் யார் அப்படி தவறாக சொன்னது என்று அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதைவிட படத்தின் கதாநாயகியாக யார் நடிக்க  வேண்டும் என்று  சிவாஜி எண்ணுகிறார் என்பதைத் தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம் என்று நினைத்தார். என்ன சொல்வதெனத்தடுமாறிய கோபாலகிருஷ்ணன் ,“நானே மற்றவர்களோ சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். அப்பாவி ரங்கனின் மனைவியாக நடிப்பதற்கு ஏற்ற கதாநாயகி யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்என்று கதிஅய் மாற்ரினார்.

 சந்தேகமென்ன செளகார் ஜானகிதான் அந்த வேடத்துக்குத் தகுதியானவர்என்று சிவாஜி சொன்னவுடன் கோபாலகிருஷ்ணன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அந்தப் படத்தில்  தான் கதநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு    நன்றி தெரிவித்தார் செளகார் ஜானகி.கே.எஸ்.கோபால கிருஷ்ணனின்   திரையுலக அனுபவத்தில் அவரால் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக அது அமைந்தது.

  குருவான  ஸ்ரீதர் தட்டிக்கழித்த படத்தை அவரின் சீடரான கே.எஸ். கோபாலகிருஷ்ணன்  தேர்ந்தெடுத்து  குருவை மிஞ்சிய சீடரானார்.

கே.வி.மகாதேவனின் இசையில் மருகதாசியும், கண்ணதாசனும் எழுதிய பாடல்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. சிவாஜி மற்றும் குடும்பத்தலைவராக நடித்த  எஸ்.வி.ரங்கராவ், அவரது மனைவியாக வரும் கண்ணம்பா, சிவாஜியின் மனைவியாக நடித்த சௌகார் ஜானகி என அனைவரும் நடிப்பில் தங்களின் பங்களிப்பை சிறப்பாக அளித்திருந்தனர். படம் 100 தினங்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது.

 அத்துடன் விசுவாசமான வேலைக்காரன் கதாபாத்திரத்தை பின்னணியாகக் கொண்ட முத்து எங்கள் சொத்து, வாழ்க்கை, பேர் சொல்லும் பிள்ளை உள்பட ஏராளமான படங்களுக்கு முன்னோடியாகவும் இந்தப் படம் அமைந்தது.ஸ்ரீதரைப் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களாலும் சிலநேரம் எந்தக் கதை வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாமல் போயிருக்கிறது.மக்களின் ரசினையை 100 சதவீதம் துல்லியமாக யாரும் கணித்ததில்லை என்பதற்கு இன்னொரு உதாரணம் படிக்காத மேதை.

No comments: