Friday, February 25, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 6

சினிமா பின்புலம் இல்லாதவர்களுக்கு  சினிமா வாய்ப்பு இலகுவாகக் கிடைப்பதில்லை. திறமை இருந்து  வாய்ப்புக் கிடைத்தாலும் நந்தி மாதிரி சிலர் குறுக்கே நிற்பார்கள். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இசைஞானி இளையராஜா ஆகிய  இருவருக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டாம் என சிலர் தடுத்தார்கள்  ஒரு சிலரால் தடுக்கப்பட்டபோதும்.  அவர் தான் வேண்டும் என உறுதியாக இன்னொருவர் நின்றதால் திரை உலக உச்சத்தைத் தொட்டவர்களின் பட்டியல் மிகப்பெரிது. புதிய இசை அமைப்பாளர் வேண்டாம் என அன்றைய கதாநாயகனால்  நிராகரிக்கப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆயிரக் கணக்காம பாடல்கள்  இன்றும் மனதில் ரீங்காரமிடுகின்றன.

எம்.எஸ்.விஸ்வநாதன் தனது சிறுவயதில்   ஹார்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டார். தன்னுடைய 13 ஆம் வயதில் மேடையில் தான்  திறனைக் காட்ட ஆரம்பித்த விஸ்வநாதன். சினிமவில் நடிக்கும் அர்வத்தினால் சென்னைக்குச் சென்று  ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில்  எடுபிடி வேலைகள்  செய்து வந்தார்.அப்பொழுது அவருடைய மாத சம்பளம் வெறும் மூன்று ரூபாய் மட்டுமே. அப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்போது  சிறுசிறு நாடகங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றினார். யதன் பிறகு சிறந்த இசையமைப்பாளராக  அவதாரம் எடுத்தார்.அந்தக் கால்த்து  பிரபல இசை அமைப்பாளர்களான சி. ஆர். சுப்புராமன், எம்.எஸ் சுப்பையா நாயுடு  ஆகியோரிடம்  உதவியாளரகப் பணியாறினார்.;

அப்போது சில   பாடல்களுக்கு விஸ்வநாதன் இசையமைத்தார். தயாரிப்பாளர் ஈச்சப்பன் தாந்தயாரிக்கும் படத்தில் புதிய இசை அமைப்பாளர் ஒருவரை அறிமுகம் செய்ய விரும்பினார்.   மத்தியூ என்பவருடன் இனைந்து ஈச்சப்பன் தயாரிக்கும் படத்தை நாகூர் இயக்கினார். அன்றைய முன்னணி நட்சத்திரமான எம்.ஜி. ஆர் நடிப்பில் "ஜெனோவா" எனும் படம்  தயாராகிக் கொண்டிருந்தது. ஈச்சப்பனின் நண்பனான  ராஜா என்பவர் எம்.எஸ்.விஸ்வநாதனை அவருக்கு அறிமுகப்படுத்தினார். எம்.எஸ்.வியைப் பார்த்ததுமே ஈச்சப்பனுக்குப் பிடித்துவிட்டது.அவர்தான் இசை அமைப்பாளர் என முடிவெடுத்துவிட்டார்.

கிடத்த சந்தர்பத்தை நழுவவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தனது  முழுத் திறமையையும் வெளிக்காட்ட வேண்டும் என முடிவெடுத்தார். பகலில் சுப்புராமனுக்கு உதவி செய்துவிட்டு இரவில் ஜெனோவா படத்துக்கு இசை அமைக்கும் வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட்டார்.

ஒரு கிழமையில் நான்கு பாடல்களுக்கு இசை அமைத்துவிட்டு போட்டுக் காட்டினார். தயாரிப்பாளார்கள், இயக்குநர் மற்றும் அங்கிருந்த அனைவரும் நான்கு பாடல்களையும் விரும்பி ரசித்தார்கள். அவற்றை ஒலிப்பதிவு செய்வதற்கு ஈச்சப்பன் ஏற்பாடு செய்தார். தனது குருவான சுப்புராமனிடம்  ஆசி பெற்றுவிட்டு ஒலிப்பதிவு கூடத்துகுச் சென்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். நான்கு பாடல்களும் மிகப் பிரமாதமாக ஒலிப்பதிவாகின அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். நான்கு பாடல்களும் அனைவரையும் கவர்ந்தன. பாடல்களைக் கேட்கும்படி எம். ஜி.ஆருக்கு  ஈச்சப்பன்  அழைப்பு விடுத்தார். எலோருக்கும் பிடித்த நான்கு பாடல்களும் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பாடல்களைக் கேட்காமலெ  பிடிக்கவில்லை என்றார் எம்.ஜி.ஆர்.

ஆரம்பத்தில் இருந்தே எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பதை எம்.ஜி.ஆர் விரும்பவ்வில்லை. 

"இசையைப் பற்றி விஸ்வநாதனுக்கு என்ன தெரியும்?  ஜூபிடர் பிக்ஸர்ஸில் ஆபீஸ் போயாக இருந்தவரை இசையமைப்பளராக்கி உள்ளீர்கள். உடனடியாக அவரை மாற்றுங்கள்.  என எம்.ஜி.ஆர் கண்டிப்புடன் கூறினார்.

மருதநாட்டு இளவரசி, மர்மயோகி, சர்வதிகாரி போன்ற வெற்றிப்படங்களுக்குப் பின்னர் ஜெனோவாவில் நடிக்க எம்.ஜி.ஆர் ஒப்பந்தம் செய்யப்படார். அந்தப் படங்களின் பாடல்கள் மக்களைக் கவர்ந்ததுபோல ஜெனோவா பட பாடலும் கவர வேண்டும் என்பதால் இசையைப் பற்றி ஒன்றும் தெரியாத விஸ்வநாதன் இசை அமைப்பதை எம்.ஜி.ஆர் விரும்பவில்லை.  விஸ்வநாதனை மாற்றினால்தான் தொடர்ந்து நடிப்பேன் எனச் சொல்லிவிட்டார். விஸ்வநாதனின் இசைப்பயணம்  ஆரம்பமாக முதலே முடிவுக்கு வந்தது என அனைவரும் கருதினர். எம்.ஜி.ஆரின் நட்சத்திர அந்தஸ்து விஸ்வநாதனின் முன்னேற்றத்துகுத் தடையாக இருக்கப்போவதாக பலரும்  கருதினர்.

ஆனால், தயாரிப்பாளர் ஈச்சப்பனை பாடல்கள் கவர்ந்ததால்  விஸ்வநாதனைக் கைவிட அவர் தயாராக இல்லை. பாடல்களைக் கேட்டால் எம்.ஜி.ஆர் மனம் மாறிவிடுவார் என்று நினைத்து பாடல்களைக் கேட்க வரும்படி எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தார். எம்.ஜி.ஆர் பாடல்களைக் கேட்க மறுத்துவிட்டார். உடனடியாக இசை அமைப்பாளரை  மாற்றும்படி கூறினார்.

எம்.ஜி.ஆரா- விஸ்வநாதனா என  முடிவு செய்ய வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. விஸ்வநாதன் வெளியேற்றப் படுவார் என அனைவரும்  நினைத்தனர்.  விஸ்வநாதன் மீது இருந்த நம்பிக்கையால்  எம்.ஜி.ஆரைக் கைவிட ஈச்சப்பன் தயாரானார்.  அவர் அன்று அப்படி ஒரு முடிவு எடுத்ததனால்தான் விஸ்வநாதனுக்கு அங்கீகாரம் கிடைத்தது. எம்.ஜி.ஆருடன் தொடர்புகொண்ட ஈச்சபன்,  "ஜெனோவா படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதந்தான் இசை அமைப்பளர் அதில் எந்த வித மாற்றமும் இல்லை  விஸ்வநதனின் இசையில் நடிக்க விரும்பினால் நடிக்கலாம். இல்லை என்றால் வேறு ஒரு நடிகரை கிரோவாக்குவேன்"    எனச் சொன்னார். பிரபல நடிகரான தன்னையே ஒரு இசை அமைப்பாளருக்காக   வெளியேற்ற ஈச்சப்பன் முடிவு செய்ததால் எம்.ஜி.ஆர் யோசித்தார்.

ஈச்சப்பனின் முடிவு எம்.ஜி.ஆரை யோசிக்க வைத்தது.  அவரது நண்பர்களும் பாடல்களை ஒரு முறை கேட்டுவிட்டு முடிவு செய்யும்படி கூறினார்கள். விஸ்வநாதன்  இசை அமைத்த படல்களைக் கேட்காமல் முடிவு செய்வது தவறு என்பதை எம்.ஜி.ஆர் உணர்ந்தார்.விஸ்வநாதன் இசை அமைத்த பாடல்களைக் கேட்பதற்கு ஏற்பாடு செய்யும்படி ஈச்சப்பனுக்கு அறிவித்தார்.

விஸ்வநாதன் இசை அமைத்த பாடல்களை எம்.ஜி.ஆர் கேட்கப்போகிறார் என்ற தகவல்  வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. விஸ்வநாதனின்  இசையில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவரை எம்.ஜி.ஆர் வெளியேற்றப் போகிறாரா? பாடல்களைக் கேட்டுவிட்டு  பிடிக்கவில்லை எனச்சொல்லி விட்டு வெளியேறப் போகிறாரா அல்லது  பாடல்கள் நன்றாக இருக்கிறது  எனச்சொல்லி  இருவரும் இணைந்து ஜேனோவாவில்  பணியாற்றுவார்களா? என்ற பல கேள்விகள் விடையைத் தேடி உலா வந்தன.

விஸ்வநாதன் இசை அமைத்த பாடல்களைக் கேட்கக் கேட்க  எம்.ஜி.ஆரின் மனம் மாறத்தொடங்கியது. இவ்வளவு திறமை உள்ளவரா விஸ்வநாதன் என வியந்தார். தன்னால் எள்ளிநகையாடப்பட்ட விஸ்வநாதனின் மீது  எம்.ஜி.ஆருக்கு மதிப்பு அதிகரித்தது.  பாடல்கள் முடிந்ததும் எம்.ஜி.ஆர் என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருந்தனர். விஸ்வநாதன் எங்கே? என்ற  ஒற்றைக் கேள்வியை எம்.ஜி.அர் கேட்டார். விஸ்வநாதன் வீட்டுக்குப் போய்விட்டதாகக் கூறினார்கள்.எம்.ஜி.ஆரின் கார் மந்தை வெளியில் விஸ்வநாதனின் வீட்டின் முன்னால் நின்றது. எம்.ஜி.ஆரைக் கண்டதும்  விஸ்வநாதன் அதிர்ச்சியடைந்தார்.

"உங்களுடைய திறமையை  அறியாது நிராகரித்துவிட்டேன்" எனக்கூறி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஜெனோவா படம்  வெற்றிபெற்றது. படல்கள் அனைவரையும் கவர்ந்தன. எம்.ஜி.ஆர் நடித்த ஒரே ஒரு வேற்று மொழிப்படம் ஜெனோவா. மலையாளத்தில் வெளிவந்து இரண்டு மாதங்களின் பின்னர் தமிழில் வெளியானது. அதன் பின்னர் எம்.ஜி.ஆருக்காக விஸ்வநாதன் இசை அமைத்த பாடல்கள்  இன்றுவரை நிலைத்து நிற்கின்றன.  தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கைத் தேர்தல் காலத்திலும் எம்.ஜி.ஆரின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. எம்.ஜி.ஆரை முதலமைச்சராக்கியதிலிம், அவரின் புகழை அடித்தட்டு மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததிலும் விஸ்வநாதனின் பங்கு அளப்பரியது.

விஸ்வநாதன், ராமமூர்த்தி  இரட்டையர் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தனர். எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ஒரே நேரத்தில் சிறந்த பாடல்களை விஸ்வநாதனும்  ராம மூர்த்தியும் கொடுத்தார்கள். ராமமூர்த்தியைப் பிரிந்த பின்னரும் விஸ்வநாதனின்  தனது திறமையால் அற்புதமான பாடல்களைத் தந்தார்.

No comments: