Tuesday, February 8, 2022

ஒரே குடும்பத்தில் இருந்து இரண்டு சம்பியன்கள்

 மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்துள்ள ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் 2022 தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

 இந்த உலகக் கிண்ண  இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இளம் வீரர் ராஜ் பாவா 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இதன் வாயிலாக அண்டர் 19 உலகக் கிண்ண‌ வரலாற்றின் இறுதிப் போட்டியில்  5 விக்கெட்களை வீழ்த்திய‌ முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சரித்திரத்தையும் அவர் எழுதினார். அது மட்டுமல்லாமல் அதன் பின் இங்கிலாந்து நிர்ணயித்த 190 ஓட்டங்களை இந்தியா விரட்டிய செய்தபோது 54 பந்துகளில் முக்கியமான 35 ஓட்டங்களை எடுத்து இந்த இறுதிப் போட்டியில் ஒரு ஆல்-ரவுண்டராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றினார்.

 ராஜ் பாவா இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரீதிந்தர் சோதியின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஐசிசி அண்டர் 19 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது.

 அந்த உலகக் கிண்ண‌ இறுதிப் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 179 ஓட்டங்களைத் துரத்திய இந்தியாவிற்கு ரிதீந்தர் சோதி 43 பந்துகளில் முக்கியமான 39 ஓட்டங்களை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். எனவே இந்தியா வென்ற முதல் அண்டர் 19 உலக கிண்ண  ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்று அசத்தினார். தற்போது அவரின் வழியில் ராஜ் பாவா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது பற்றி ரிதீந்தர் சோதி தனது ட்விட்டரில் கூறியது பின்வருமாறு. “22 வருடங்களுக்கு முன்பு நீங்கள் செய்ததை தற்போது உங்கள் சாச்சாவின் மகன் செய்துள்ளது ஒரு மிகச்சிறப்பான உணர்வை அளிக்கிறது. ஒரே குடும்பத்தில் இருந்து 2 உலகக் கிண்ண‌ பைனல் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் என பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

No comments: