Wednesday, September 22, 2010

கூட்டணிக்கு விஜயகாந்த் கடைவிரிக்கிறார்தனிவழி போகத் தயாராகின்றார் ராமதாஸ்



தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னமும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரம் போன்றே பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. சிறிய கட்சிகள் தமது இடத்தை உறுதி செய்து கொள்வதற்காக பெரிய கட்சிகளுடன் இணையத் தொடங்கி விட்டன.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள உறவை முறிக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கங்கணம் கட்டியுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் வெளிப்படையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வெளிப்படையாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் கீழ் உள்ள காங்கிரஸ் கட்சி விரைவில் வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் என்றதொரு நம்பிக்கையை ஊட்டி வருகிறார் ஜெயலலிதா.
எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது என்ற கருத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடையே இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. முதல்வர் கருணாநிதிக்குச் சார்பாகவும் ஜெயலலிதாவுக்குச் சாதகமாகவும் கருத்து முன்வைக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி விடுமோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் பேச்சு தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. இந்தச் சந்தேகங்கள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆஷாத்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணிக்குப் பங்கம் ஏற்படும் விதத்தில் யாரும் கருத்துக் கூறக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார் குலாம் நபி ஆஷாத். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எவ்வளவு தான் கூப்பாடு போட்டாலும் கூட்டணி பற்றிய முடிவை எடுக்கும் அதிகாரம் சோனியா காந்தியிடம் உள்ளது என்பதை தமிழக முதல்வர் நன்கு அறிவார். காங்கிரஸ் தலைமை முதல்வர் கருணாநிதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஆகையினால் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இப்போதைக்கு ஏற்படாது.
ஜெயலலிதா நடத்தும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் வெள்ளம் திராவிட முன்னேற்றக் கழக அரசை தடுமாற வைத்துள்ளது. இது தானாகச் சேர்ந்த கூட்டமல்ல. அழைத்து வரப்பட்ட கூட்டம் என்று தமிழக முதல்வர் கருத்துக் கூறும் வகையில் ஜெயலலிதாவின் உரையை கேட்பதற்கு மக்கள் கூடுகின்றனர். ஜெயலலிதாவின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் விவாதிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார் முதல்வர் கருணாநிதி.
மக்களுடன்தான் கூட்டணி என்று முழங்கி வந்த விஜயகாந்த் தனது தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத் தேர்தலில் தனி ஒரு கட்சியால் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நன்கு உணர்ந்துள்ளனர். கூட்டணி இல்லாது அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதை காலம் கடந்து விஜயகாந்த் உணர்ந்து கொண்டார். விஜயகாந்தின் கூட்டணி பற்றிய அறிவிப்பு தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் விஜயகாந்துடன் கூட்டணி சேர சிறிய கட்சிகள் எவையும் இதுவரை முன்வரவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழம் ஆகியவற்றுடன் பேரம் பேசி குழப்பம் ஏற்பட்டால் மட்டுமே விஜயகாந்துடன் சேர்வதற்கு சிறிய கட்சிகள் தயாராக இருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையில் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை சிறிய கட்சிகளிடம் உள்ளது. விஜயகாந்தின் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. ஆனால் தம்மை ஒதுக்கிய கட்சிகளைத் தோல்வியடையச் செய்யலாம் என்ற எண்ணம் சிறிய கட்சிகளிடம் உள்ளது. கூட்டணி இல்லை என்று அடித்துக் கூறிவந்த விஜயகாந்த் அரசியல் நிலைமையை உணர்ந்த கூட்டணிக் கடையை விரித்து விட்டார். அவருடன் பேரம் பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை.
கூட்டணிக்காகத் தூது போய் காத்திருந்து அவமானப்பட்ட டாக்டர் ராமதாஸ் தனி வழி போகப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிடக் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் விளங்கியது பட்டாளி மக்கள் கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியை வெளியில் விட்டால் தமக்கு தோல்வி என்பதை உணர்ந்த திராவிடக் கட்சிகள் டாக்டர் ராமதாஸின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவர் கேட்கும் தொகுதிகளைக் கொடுத்தன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி படு தோல்வியடைந்ததன் பின் அதன் நிலை அடியோடு மாறி விட்டது. தோல்வியிலும் துவண்டு போகாத பாட்டாளி மக்கள் கட்சி பெண்ணாகரம் இடைத் தேர்தலில் தனது செல்வாக்கை வெளிப்படுத்தியது. பெண்ணாகரம் இடைத் தேர்தலில் தனது கட்சி பெற்ற வாக்குகள் புதிய பாதையை வகுத்துத் தரும் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் எழுச்சியால் முதல்வர் கருணாநிதி மயங்கி விடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து ரோசத்துடன் வெளியேறி, மீண்டும் கூட்டணிக்காக காத்திருந்த டாக்டர் ராமதாஸை முதல்வர் கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே தனி வழி செல்லத் தீர்மானித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
வன்னியர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட வன்னியர் சங்கம் 1990 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்து அரசியலில் புகுந்தது. தமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்தினர் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பேராதரவு வழங்கினார்கள். இந்த ஆதரவு தமிழக சட்ட சபையில் இருந்து மத்திய அரசின் அமைச்சரவை வரை பாட்டாளி மக்கள் கட்சியை உயர்த்தியது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள 100 தொகுதிகளை இனம் கண்டு அவற்றில் 60 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அவற்றில் குறைந்தது 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று இழந்து போன கட்சியின் செல்வாக்கை மீண்டும் பெற்று விடத் துடிக்கிறார் டாக்டர் ராமதாஸ். பெண்ணாகரம் இடைத் தேர்தலில் எப்படிப் பிரசாரம் செய்தோமோ அதேபோல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
பெண்ணாகரம் இடைத் தேர்தலில் வேலை செய்தது போன்று 60 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய முடியாது என்பது டாக்டர் ராமதாஸுக்கு நன்கு தெரியும். இலவசங்களும், அன்பளிப்புகளும், பணப் பெட்டிகளும் வாக்காளர்களைத் தேடிச் செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இவற்றின் மத்தியில் வெற்றி என்பது எட்டாக் கனி என்பதை சாதாரண கட்சித் தொண்டனும் தெரிந்து வைத்துள்ளான். தமிழகத்தின் பெரிய கட்சிகள் தன்னை அழைத்துப் பேரம் பேச வேண்டும் என்பதற்காகவே டாக்டர் ராமதாஸ் இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் வன்னியர் சமூகம் என்ற போர்வையினால் தன்னை மூடிக்கொண்டுள்ளார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 19/09/10

விஜயகாந்தை எதிர்பார்த்துகாத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி



விஜயகாந்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இதுவரை இரகசியமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை தமிழக முதலமைச்சராக்கி அழகுபார்த்த காங்கிரஸ் கட்சி விஜயகாந்தை முதல்வராக்குவதற்கு முயற்சி செய்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று அறிக்கை விடுகிறார்கள். ப.சிதம்பரம், தங்கபாலு, வாசன், இளங்கோவன் ஆகிய பலமிக்க தலைவர்கள் தமக்குப் பின்னால் பலரைச் சேர்த்து வைத்துள்ளனர்.இந்தப் பின்னணி எதுவும் இல்லாத தமிழக காங்கிரஸை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. பெரும் கோஷ்டி மோதல்களுக்கு மத்தியில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் தேர்தலில் யுவராஜ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தின் இளைஞர் காங்கிரஸ் பயிற்சிப்பட்டறையின் போது ராகுல் காந்தி விஜயம் செய்து இளைஞர்களை ஊக்குவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஆதிக்கம் இல்லாத இளைஞர் காங்கிரஸ் தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்பினார். அதிலும் தமது செல்வாக்கைக் காட்ட தமிழகத் தலைவர்கள் முயற்சி செய்தனர். இறுதியில் வாசனின் விருப்புக்குரிய யுவராஜ் இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜ், விஜயகாந்தை இரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியானது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கரிஸ் தலைவர்கள் வாய் கிழியப் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கான முயற்சிகள் எதனையும் அவர்கள் செய்யவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் ஆசீர்வாதம் பெற்ற யுவராஜ், விஜயகாந்தைச் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் உத்தரவின்றி இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தை தலையெடுக்க விடக் கூடாது என்று ஜெயலலிதா அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் அதற்குரிய செயற் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தைத் தலையெடுக்க விடக் கூடாது என்ற திட்டங்களுடன் செயற்படுகிறார் ராகுல் காந்தி.
யுவராஜ், விஜயகாந்த் ஆகியோர் சந்தித்தது பற்றி பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியானபோது இருவரும் இதனை மறுத்து அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸின் ஆதரவில் உள்ள தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்கும் விஜயகாந்தை, யுவராஜ் சந்தித்ததற்கான நம்பக் கூடிய காரணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.
தமிழகத்தை ஆட்சி செய்யக் கூடிய பலம் திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் மட்டுமே உள்ளது. இந்தியத் தேசியக் கட்சியான காங்கிரஸினதும் தமிழகத்தின் சிறிய கட்சிகளின் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நன்றாக உணர்ந்துள்ளனர். ஆகையினால் காங்கிரஸ் கட்சியைக் கைவிட தமிழக முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. காங்கிரஸுடன் கூட்டுச் சேர்வதற்கு என்று ஜெயலலிதா துடிக்கிறார்.
இந்தியத் தேசியக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் வலு விழந்த நிலையில் உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்குத் தமிழகத்தின் சிறிய கட்சிகள் கூட விரும்பவில்லை. தமிழகத்தின் சிறிய கட்சிகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதற்கே தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் முண்டியடிக்கின்றன. காங்ககிரஸுடன் விஜயகாந்த் இணைந்தால் தமிழகத்தின் சில கட்சிகள் அந்தக் கூட்டணியில் சேர்வதற்கு முண்டியடிக்கும் நிலை ஏற்படலாம்.
காங்கிரஸுடனான விஜயகாந்த் நடத்திய பேச்சுவார்த்தை விஜயகாந்துக்குத் திருப்தியளிக்கவில்லைப் போல் தெரிகிறது. 30, 40 தொகுதிகளுக்கு கூட்டணி சேரத் தயாராக இல்லை என்று விஜயகாந்த் பகிரங்க அறிக்கை விட்டிருப்பது அவர் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாகத் தோன்றுகிறது. காங்கிரஸின் தயவில் ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்தும் விஜயகாந்தின் தயவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் வியூகம் அமைத்துள்ளன.
விஜயகாந்தின் பக்கம் ராகுல் காந்தி சாய்ந்திருப்பதை நன்றாக அறிந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி, காங்கிரஸுடனான கூட்டணி உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸின் கூட்டணியைத் தீர்மானிப்பது சோனியா காந்தி தான் என்பது வெளிப்படையானது. சோனியா காந்தி இன்னமும் விஜயகாந்தின் மீது முழு நம்பிக்கை வைக்கவில்லை. ஆகையினால் கூட்டணிக்குள் இப்போதைக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதை முதல்வர் கருணா
நிதி தெளிவாகத் தெரிந் துள்ளார். விஜயகாந்தின் பக்கம் காங்கிரஸைக் கொண்டு செல்வதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியை எதிர்பார்த்
துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸைப் பிரிக்க வேண்டும் என நினைக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரத் துடிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்வதை விரும்பவில்லை. கூட்டணி பற்றி விஜயகாந்த் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.
வர்மா,
வீரகேசரிவாரவெளியீடு 12/09/10

புதிய கூட்டணிக்குஅச்சாரமிடும்தலைவர்கள்



தமிழக அரசியல் தலைவர்களை ஒரே இடத்தில் காண்பது அபூர்வம். தமிழகத்தின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அரசியல் கட்சித்தலைவர்கள் ஒன்றõக அமர்ந்து உரையாடியது சகலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தேசிய முற்போக்கு திராவிடக் கட்சித் தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் தங்கபாலு, வாசன், இளங்கோவன் திருநாவுக்கரசர் ஆகியோர் ஒன்றாக இருந்தமை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக எதிர்ப்பவர் இளங்கோவன், மக்களுடன் தான் கூட்டணி என்று கூறி பின்னர் தனது தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறும் விஜயகாந்த், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் எதிராக அரசியல் நடத்துபவர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர். மூப்பனாரின் மகன் வாசன். முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையிலான கூட்டணிக் கட்சியின் பிரதான பங்காளராகிய தொல். திருமாவளவன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உரையாடியமை புதிய கூட்டணியின் ஆரம்பமோ என்று பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கபாலு, திருநாவுக்கரசர், இளங்கோவன், விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோர் மூப்பனாரின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்கள். யாருடன் யார் கூட்டணி சேர்வார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் சொல்லி வரும் வேளையில் இவர்களின் சந்திப்பு புதிய ஆரூடத்துக்கு வழி கோலியுள்ளது.
விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது வரவேற்ற திருமாவளவன், கூட்டணிக்குத் தயார் என்று விஜயகாந்த் கூறியபோது, பச்சைக் கொடி காட்டியவர். விஜயகாந்தின் பிறந்த நாளன்று அதிரடியாக விஜயகாந்தைச் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த வயிற்றெரிச்சலைக் கிளப்பியவர் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியை எதிர்ப்பவர் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கூட்டணியுடனான கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர் தங்க பாலு, எதிரும் புதிருமாக இந்த அரசியல் தலைவர்கள் ஒன்றாக அஞ்சலி செலுத்தியது. தற்செயலானதா அல்லது திட்டமிட்டு சந்தித்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மறைந்த அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் தலைவர்கள் தமது அரசியல் எதிரி அங்கு வரும் நேரத்தைத் தவிர்த்தே செல்வது வழமையானது. இரண்டு தலைவர்கள் சந்திக்கும் பேõது அவர்களது ஆதரவாளர்கள் மோதும் சந்தர்ப்பமும் எழுவதுண்டு. ஆனால் மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தும் வைபவத்தில் எல்லாம் நேர்மாறாக நடந்துள்ளது.
ரஜினிகாந்தின் வீட்டுத் திருமணத்தை தமிழக ஊடகங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா உட்பட தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று திருமணப் பத்திரிகையை வழங்கி வருகிறார் ரஜினிகாந்த். சினிமாவில் செல்வாக்கு மிக்க ரஜினிகாந்தின் குரல் அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதேபோல பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ரஜினிகாந்தை எதிர்க்கும் கட்சிகள். இக்கட்சிகளின் தொண்டர்களும் ரஜினிகாந்தின் ரசிகர்களும் பலமுறை முட்டி மோதியுள்ளனர். ரஜினிகாந்தின் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இக் கட்சிகளின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள்கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று திருமணப் பத்திரிகையை வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் வீட்டில் நடைபெறும் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கூட்டணி பற்றிய பரபரப்பு உருவாகும் வாய்ப்பு உள்ளது.
பலமுள்ள கட்சி கூட்டணி சேர்வது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பலமான கூட்டணியில் இணைந்து தமிழக அரசியலில் வளர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி தனது செல்வாக்கினால் மத்திய அரசியலில் பலமான அமைச்சுப் பதவியைக் கேட்டுப் பெறும் வகையில் வளர்ச்சியடைந்தது. தற்போது பாட்டாளி மக்கள் கட்சியை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் புறந்தள்ளியுள்ளனர். காங்கிரஸின் தயவில் மீண்டும் தமிழகத்தில் கூட்டணி சேரலாம் என்ற கனவுடன் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியை காங்கிரஸும் கைவிட்டு விட்டது.
பலமான கட்சிகளுடன் கூட்டணி சேரத் துடித்த பாட்டாளி மக்கள் கட்சி தனது நிலையை நன்கு உணர்ந்து கொண்டதனால் கூட்டணிக்குத் தலைமையேற்க முயற்சி செய்கிறது. வன்னியர் என்ற சமூகத்தினுள் அடங்கி உள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் இணைவதற்கு ஏனைய சாதிக் கட்சிகளும் அமைப்புகளும் தயாராக இல்லை என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கனவில் மிதக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. தமிழக அரசின் கடந்த செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகளை கையில் வைத்துக் கொண்டு அமைச்சர்களைப் பாடாய்ப் படுத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இப்போது விட்ட தவறுகள் தேர்தலின்போது பூதாகரமாக வெடித்து தோல்வியை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் பழையவர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. புதியவர்களும் ஆட்சி பீடம் ஏறுவதையே ஸ்டாலினும் விரும்புகிறார். ஸ்டாலினை முதல்வராக்க, கருணாநிதி விரும்புகிறார். முதலமைச்சர் வேட்பாளராக கருணாநிதி போட்டியிடுவதை சோனியா விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவைத் துண்டிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். பலரின் விருப்பு வெறுப்புக்களுடன் கூட்டணி சேர கட்சித் தலைவர்கள் ஆவலாக உள்ளனர்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 05/09/10

Tuesday, August 24, 2010

ஜெயலலிதாவின் அரவணைப்பில் சின்னக்கட்சிகள்பெரிய கட்சியைத் தக்கவைக்க கருணாநிதி முயற்சி

தமிழக சட்டசபைத் தேர்தலைக் குறிவைத்து பொதுக்கூட்டங்களையும், தமிழக அரசுக்கு எதிரான கூட்டங்களையும் நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிட் கட்சி ஆகியவற்றின் துணையுடன் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி படுதோல்வியடைந்தது.
செல்வாக்கு மிக்க தலைவர்களுடனும் வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகளுடனும் இணைந்து தேர்தலைச் சந்தித்து படுதோல்வியடைந்த ஜெயலலிதா, சிறிய கட்சிகளைத் தன்பக்கம் கொண்டு வருவதில் முழுக்கவனத்தையும் செலுத்துகிறார். தமிழக ஆட்சியைத்தக்க வைப்பதற்கு வியூகம் வகுக்கும் முதல்வர் கருணாநிதியை வீழ்த்துவதற்கு கூட்டணியைத் தயார்படுத்துவதில் ஜெயலலிதா மிகவும் ஆர்வமாக உள்ளார்.
கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் போது சுமார் 20 தொகுதிகளில் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தோல்வியடைந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவு இருந்தால் அந்த 20 தொகுதிகளிலும் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல் மேலும் சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கருதிய ஜெயலலிதா சிறிய கட்சிகளை அன்புடன் அரவணைக்கிறார்.
சாதிக் கட்சிகளும், மதக் கட்சிகளும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைப்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றியடைந்துள்ளன. அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகம், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, வன்னியர் கூட்டமைப்பு, பார்வேர்ட்பிளக் ஆகியன ஜெயலலிதாவுடன் ஐக்கியமாகி உள்ளன. ஒவ்வொரு வாக்கின் பெறுமதியையும் ஜெயலலிதா உணர்ந்துள்ளார். கூட்டணி சேரத்துடிக்கும் கட்சியின் அமைப்பின் தலைவர்களை ஜெயலலிதாவே நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குழு உரிய முறையில் செயற்படவில்லை. அதன் காரணமாகச் சில சிறிய கட்சிகள் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டதாக அக்கட்சிகளின் வாக்குகள் இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று ஜெயலலிதா நம்புகிறார்.
ஜெயலலிதாவைச் சந்திப்பது சிரமம். இடையில் உள்ள தலைவர்களை அல்லது அவர் நியமிக்கும் ஒருசிலரைத் தான் சந்திக்க முடியும். ஜெயலலிதாவுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற அவப்பெயரைத் துடைப்பதற்கு ஜெயலலிதா முயற்சி செய்கிறார். சகல நடவடிக்கைகளும் தன் மூலம் தான் நடைபெறுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்காகவே தன்னுடன் இணைய இருக்கும் தலைவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுகிறார் ஜெயலலிதா.
சிறிய கட்சிகளையும், சாதி அமைப்புகளையும் தனது வலையில் வீழ்த்திய ஜெயலலிதா, காங்கிரஸ், விஜயகாந்த் ஆகிய இரு பெரும் திமிங்கிலங்களுக்காகத் தனது கட்சியின் கதவை அகலத் திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதா பங்குபற்றும் கூட்டங்களில் முதல்வர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தவரையும் குறிவைத்து உரையாற்றுகிறார். சகல கூட்டங்களிலும் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று சூசகமாகத் தெரிவிக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியைப் பிரிக்க வேண்டும் என்பதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளில் முதன்மையானது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் காங்கிரஸ் கட்சியுடன் இணைய உள்ள நம்பிக்கையை மறைமுகமாகத் தொண்டர்களுக்குத் தெரியப்படுத்துகிறார் ஜெயலலிதா.
ஏட்டிக்குப்போட்டியாக கூட்டங்களினால் கோவை குலுங்கியது. தமிழக அரசின் செம்மொழி மாநாட்டினால் கோவை கலகலப்பாகியது. செம்மொழி மாநாட்டுக்கு சபையில் கூடிய கூட்டத்தினரைக் கண்டு பிரமித்த ஜெயலலிதா கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டை நடத்தினார். கோவையில் ஜெயலலிதாவைக் காண்பதற்குத் திரண்ட மக்கள் கூட்டத்தைப் பார்த்து திராவிட முன்னேற்றக் கழகம் தனது செல்வாக்கை வெளிப்படுத்த கோவையில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தினார் முதல்வர் கருணாநிதி. மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது கோவை.
திருச்சியில் நடைபெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டத்துக்குத் திரண்ட தொண்டர்களைப் பார்த்து உற்சாகமடைந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அணுகுமுறையில் இப்போது புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் மைதானங்களில் எம்.ஜி.ஆரின் படங்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா தனது உரையிலே சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களைப் பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்.
ஜெயலலிதாவின் அடுத்த பிரமாண்டமான கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது. மதுரை அழகிரியின் கோட்டை, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வாலாட்ட முடியாது. அழகிரியின் விருப்பம்தான் மதுரையில் அரங்கேறும். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கத் தயாராகிறார் ஜெயலலிதா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மதுரையில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிகோரிய போது இழுத்தடிக்கப்பட்டது. அழகிரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதுரையில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்தத் தயாராகிறார் ஜெயலலிதா. மதுரையில் ஜெயலலிதா கூட்டம் நடத்தத் தயாராகையால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐக்கியமாகின்றனர். இதன் காரணமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சலசலப்பு எழத்தொடங்கி உள்ளது. அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவப்போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் தனது கட்சியை பலப்படுத்த தொண்டர்ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கடமை ஜெயலலிதாவுக்கு உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேடிச் சிறிய கட்சிகள் செல்வதனால் தொண்டர்கள் மத்தியில் சிறிதளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதை வெளிப்படுத்தவே பெரும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய இரு பெரும் கட்சிகளின் துணை இன்றி தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தவர்கள் இரண்டு கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி சேரத் துடிக்கிறார்கள். கூட்டணியில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் பல அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வது குறித்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன.
தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக்கழகத்தைத் தனிமரமாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயற்பட்டு வருகிறார் ஜெயலலிதா. காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைத் தன்பக்கம் இழுப்பதற்கு முயற்சி செய்கிறார். இதேவேளை விஜயகாந்தின் வரவை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்.
துணை முதல்வர் பதவியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதால் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரும் கட்சிகள் துணை முதல்வர் பதவிக்குக் குறி வைக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத்தால் ஜெயலலிதா வெற்றி பெற முடியும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு
22/08/10

Tuesday, August 17, 2010

விஜயகாந்த் முதுகில் சவாரி செய்யதயாராகிறார் டாக்டர் ராமதாஸ்


கருணாநிதியின் முதுகிலும், ஜெயலலிதாவின் முதுகிலும் சவாரி செய்து அரசியலில் உச்சக்கட்டத்தை அடைந்த டாக்டர் ராமதாஸ் இப்போது தனது பரம எதிரியான விஜயகாந்தின் முதுகில் சவாரி செய்யத் தயாராகி விட்டார்.
வன்னியரின் எதிர்கால வளமான வாழ்வுக்காக இயக்கம் ஒன்றை ஆரம்பித்த டாக்டர் ராமதாஸ் காலத்தின் கட்டாயத்தினால் வன்னியருக்கான இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார். அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் போது பல உறுதிமொழிகளை வழங்கினார். அவற்றில் பலவற்றை அரசியல்வாதிகளின் தனித்துவத்துக்கு ஏற்ப மீறினார்.
தமிழக அரசியலில் படிப்படியாக முன்னேறிய டாக்டர் ராமதாஸின் அரசியல் கட்சி மத்திய அமைச்சரவையிலும் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது.
தமிழகத்தில் டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியே வெற்றிக் கூட்டணி என்ற மாயையில் தனக்குத் தேவையான தொகுதிகளைப் போராடிப் பெற்றார். தனது மகன் அன்புமணியை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்காகவே அடிக்கடி கூட்டணி மாறினர் என விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸ், தனது மகனின் நாடாளுமன்றப் பதவியைத் தக்க வைப்பதற்காக முதல்வர் கருணாநிதியின் உதவியைப் பெறுவதற்காகத் தூதனுப்பினார். டாக்டர் ராமதாஸின் குணத்தைப் பற்றி நன்கு தெரிந்த முதல்வர் கருணாநிதி பட்டும் படாமலும் பதிலளித்தார். தனது மகனின் நாடாளுமன்றப் பதவி பறிபோய் விடும் என்பதைப் புரிந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் வெறுப்பின் உச்சிக்கே சென்றார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் டாக்டர் ராமதாஸை தமது கூட்டணியில் சேர்ப்பதற்கு முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் முன்னுரிமை வழங்கினர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அவை எல்லாம் அடியோடு மாறி விட்டன. கருணாநிதியும் ஜெயலலிதாவும் தன்னை ஒதுக்கி வைத்திருப்பதை நன்கு உணர்ந்து கொண்ட அவர், புதிய கூட்டணிக்காக அத்திவாரமிட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸுக்குப் பிடிக்காதவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் நடிகர்கள். தமிழக அரசியல் கட்சிகள் நடிகர்களுக்கு முதலிடம் கொடுத்துள்ளன. நடிகர்களைத் தூற்றுவதில் பாட்டாளி மக்கள் கட்சி முதலிடம் வகிக்கிறது. டாக்டர் ராமதாஸின் எதிரிகள் பட்டியலில் ரஜினிகாந்தும், விஜயகாந்தும் உள்ளனர். ரஜினி, விஜயகாந்த் ஆகியோரின் ரசிகர்களும், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் பலமுறை மோதியுள்ளனர். இவை இவ்வாறு இருப்பினும் தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக தற்போது விஜயகாந்துடன் கூட்டணி சேரத் தயார் என அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
மக்களுடன்தான் கூட்டணி என்ற கோஷத்துடன் அரசியல் நடத்தி வரும் விஜயகாந்தும் கூட்டணி சேரும் எண்ணத்தில் உள்ளார். அவரது முதலாவது தெரிவு காங்கிரஸ் கட்சி. அது திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு விட்டு வந்தால் கூட்டணி சேரத் தயார் என்று காங்கிரஸ் கட்சிக்கு சூசகமாக அறிவித்துள்ளார் விஜயகாந்த். திராவிட முன்னேற்றக் கழகத்தை அடிபணிய வைக்க விரும்பும் காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிடத் தயாராக இல்லை.
காமராஜரின் ஆட்சிக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முதுகில் சவாரி செய்து தேர்தல்களில் ஜெயித்த காங்கிரஸ் கட்சி இப்போது முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த் என்ற இரட்டை வண்டியில் சவாரி செய்யத் தயாராக இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் பிரிப்பதற்கு பலர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் பிரிப்பதற்காகவே விஜயகாந்துடன் கூட்டணி சேரத் தயார் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறி விஜயகாந்துடன் கூட்டணி அமைத்தால் அந்தக் கூட்டணியில் சேர்வதற்குத் தான் தயாராக இருப்பதாக டாக்டர் ராமதாஸ் சமிஞ்ஞை காட்டியுள்ளார்.
ராகுல் காந்தி, இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் போன்றோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை விரும்பவில்லை. சோனியா, மன்மோகன், தங்கபாலு போன்றோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை விரும்புகின்றனர். கருணாநிதி, விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணியை தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் விரும்புகின்றனர். ஜெயலலிதா, விஜயகாந்த், காங்கிரஸ் கூட்டணியை தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் விரும்புகின்றனர்.
காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் மறைமுகமாக ஆலோசனை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி விஜயகாந்துடன் இணைந்தால் அக்கூட்டணியில் தான் சேர்வதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். ராமதாஸின் இந்த ஆலோசனைக்கு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ காங்கிரஸும் விஜயகாந்தும் பதிலளிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தோற்கடிக்கும் பலம் தன்னிடம் உள்ளதாக ராமதாஸ் கருதுகிறார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இருமுனையில் போட்டியிட்டாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது சிரமம். கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என மும்முனைப் போட்டி ஏற்பட்டால் தனது தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெறும் என்ற அசையாத நம்பிக்கை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது.
முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் டாக்டர் ராமதாஸுக்கு முதல் மரியாதை கொடுத்த காலம் மலையேறி விட்டது. ஏதாவது ஒரு கூட்டணியில் என்னைச் சேர்க்கிறீர்களா என்று டாக்டர் ராமதாஸ் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசின் பங்காளியாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியையே எதிர்க்கட்சியை விட மோசமாக விமர்சித்தது. தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் தவறு என்று மேடைக்கு மேடை முழங்கியது.
தமிழக அரசு செயற்படுத்த முனைந்த பல திட்டங்களை முடக்கியது. எல்லாவற்றையும் பொறுமையுடன் அவதானித்த முதல்வர் கருணாநிதி தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போது டாக்டர் ராமதாஸை ஒதுக்கி விட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இருபெரும் விருட்சங்களைப் பற்றிப் படர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று பற்றிப் பிடிக்க கொழுகொழும்பு இன்றித் தவிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற முடியாது என்ற இறுமாப்பு அடங்கிப் போயுள்ளது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 15/08/10

Thursday, August 12, 2010

உலகக் கிண்ணப் போட்டியை நடத்தமுட்டி மோதும் நாடுகள்

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி உவுசலாவின் ஓசையுடன் சிறப்பாக நடைபெற்றது. அடுத்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2014 ஆம் ஆண்டு லம்பா நடனத்துடன் பிரேஸிலில் நடைபெற உள்ளது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் போது பிரேஸில் நாட்டின் பாரம்பரிய நடனமான லம்பா ரசிகர்களின் கண்களுக்கு பெரு விருந்தாக அமையும். தென் ஆபிரிக்காவின் உவுசலா ஓசை
காதைப்பிளந்தது. பிரேசிலின் லம்பா நடனம் உதைபந்தாட்ட ரசிகர்களின் ஒட்டு மொத்த பார்வையையும் தன்பால் ஈர்க்க உள்ளது.
2018 ஆம் ஆண்டும் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. நெதர்லாந்து, பெல்ஜியம், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகியன உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த முன் வந்துள்ளன.
உதைபந்தாட்ட ரசிகர்கள் மிக அதிகமாக உள்ள கண்டம் ஐரோப்பா. ஐரோப்பாக் கண்டத்தின் எந்த நாட்டில் உலகக்கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்றாலும் ரசிகர்கள் வெற்றி பெறச் செய்து விடுவார்கள். உலகக் கிண்ண உதைபந்தாட்டச் சம்பியனான ஸ்பெயின், இரண்டாவது இடம் பிடித்த நெதர்லாந்து ஆகியன 2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த மிக ஆர்வமாக உள்ளன.
ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியன கூட்டாக 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த ஆர்வமாக உள்ளன. ஜப்பானும், தென்கொரியாவும் இணைந்து 2000 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியை வெற்றிகரமாக நடத்தின. மீண்டும் ஒரு வாய்ப்புக்காக அவைகள் காத்திருக்கின்றன. உதைபந்தாட்டப் போட்டியை ரசிப்பவர்களின் தொகை ஜப்பானில் அதிகரித்துள்ளது. ஒசாகா உதைபந்தாட்ட மைதானத்தின் 83000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை பார்க்கக் கூடிய வசதி உள்ளது.
பிஃபாவில் அங்கம் வகிக்கும் 208 நாடுகளில் இருந்து 6000 சிறுவர்களை ஜப்பானுக்கு அழைத்து உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. 34 வசதியுடனான நேரடி ஒளிபரப்புச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு அவுஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது.
ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் இருப்பதால் உதைபந்தாட்டப் போட்டியை தம்மால் நடத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது அவுஸ்திரேலியா.2018 ஆம் ஆண்டும், 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு விண்ணப்பித்த நாடுகளுக்கு பிஃபா குழு விஜயம் செய்து வருகிறது.
மைதானங்கள், தங்குமிட வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு போன்றவற்றை பீஃபா குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் டிசம்பர் 2 ஆம் திகதி சூரிச்சில் நடைபெறும் வைபவத்தில் 2018, 2022 ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டி நடைபெறும் நாடுகள் அறிவிக்கப்படும்.
2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு விண்ணப்பிக்க சீனா தயாராகி விட்டது.
2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த ஆசியநாடுகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் சீனாவின் ஆசை நிராசையாகிவிடும்.

ரமணி
மெட்ரோநியூஸ்



Sunday, August 8, 2010

அங்கீகாரம் இழந்த கட்சிகள்அந்தரத்தில் தலைவர்கள்





மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் அங்கீகாரத்தை முறையே தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தல் ஆணையம் இரத்துச் செய்துள்ளது. கடைசியாக நடந்த தேர்தலில் வெற்றி பெறத் தவறியதாலும் செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகளைப் பெறத் தவறியதாலும் மறுமலர்ச்சி திராவிடக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பம்பரச் சின்னமும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழச் சின்னமும் அடுத்த ஆறு வருடங்களுக்கு நீடிக்கும். ஆறு வருடங்களுக்கு தமிழகத்தில் மறுமலர்ச்சி திராவிடக் கழகமும், புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாகச் செயற்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் படுதோல்வி அடைந்ததனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற தகுதியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இழந்துள்ளது.
இதேபோன்றே பாட்டாளி மக்கள் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்ததனால் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது.
தமிழக அரசியலில் மிகப் பெரும் சக்தியாக விளங்குபவர் வைகோ. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு அரும்பாடுபட்டவர்களில் ஒருவர் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சவால் விடுத்தவர். தமிழகத் தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயித்த வைகோவின் கட்சி அங்கீகாரத்தை இழந்துள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பந்தா இல்லாது தொண்டர்களின் பலத்தில் கட்சியைக் கட்டி வளர்த்தவர் வைகோ. ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு வைகோவால் ஆபத்து என்பதை உணர்ந்த கருணாநிதியால் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டவர் வைகோ என்ற கருத்து தமிழக அரசியலில் பரவலாக உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தது அரசியல் சித்து விளையாட்டுக்களில் ஒன்று. கூட்டணி பேரம் எதிர்பார்த்தது போல் இல்லாமையினால் ஜெயலலிதாவுடனும் கருணாநிதியுடனும் கைகோர்த்து அரசியலை நடத்துகிறார் வைகோ.
ஜெயலலிதாவின் பாரிய வீழ்ச்சி, வைகோவுக்குப் படுபாதகமாக அமை ந்து விட்டது. இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து கருணாநிதியை கடுமையாகத் தாக்கிப் பிரசாரம் செய்த வைகோவின் கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது தவிக்கிறது.
தமிழ் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்று. தேர்தல் சின்னங்கள் ஆணையத்தின் படி மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமாகப் பம்பரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படியே அரசியல் கட்சியின் அங்கீகாரம் நீடிக்கப்படுகிறது.
கடைசியாக நடந்த சட்ட சபைத் தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஆறு சதவீதத்துக்குக் குறையாது பெற்றிருப்பதுடன் இரண்டு தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஆறு சதவீதத்துக்குப் பெற்றிருப்பதுடன் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது சட்ட சபைத் தேர்தலில் மொத்தத் தொகுதிகளில் மூன்று சதவீதத் தொகுதிகளிலோ அல்லது மூன்று தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி வீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் பிரகாரம் ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் தேர்தல் ஆணையத்தினால் ஆய்வு செய்யப்படுகின்றன.
தேர்தல் ஆணையகத்தின் ஆய்வின்படி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 3.67 சதவீத வாக்குகளைப் பெற்றது. சட்ட சபைத் தேர்தலில் 5.98 சதவீதவாக்குகளைப் பெற்றதுடன் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் ஆணையகத்தில் விதிமுறைகளின்படி அக்கட்சி தனது அங்கீகாரத்தை வைத்துக் கொள்ளும் விதிமுறையைப் பூர்த்தி செய்யவில்லை. ஆகையினால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரத்தை ஏன் இரத்துச் செய்யக் கூடாது என்பதற்கான விளக்கம் கோரப்பட்டது.
தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற வைகோ தனது தரப்பு நியாயங்களை முன் வைத்தார். 5.98 சதவீதத்தை ஆறு சதவீதமாகக் கணிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரத்தைத் தமிழகத்தில் ரத்துச் செய்தது.
இதேவேளை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகப் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது. புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 34.29 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. சட்ட சபைத் தேர்தலில் 3.80 வாக்குகளைப் பெற்று இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாததனால் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ஏன் இரத்துச் செய்யக் கூடாது என்று விளக்கம் கோரப்பட்டது.
தேர்தல் ஆணையகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. புதுச்சேரியில் ஒரே ஒரு தொகுதிதான் உள்ளது. அத்தொகுதியில் வெற்றி பெறா விட்டாலும் இரண்டாவது இடத்துக்கு வந்ததாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்பு தேர்தல் சின்ன ஆணை விதிமுறைகளின் பிரகாரம் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்ட மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றால் மட்டும் போதாது தேர்தல் ஆணைய விதிமுறைகளின் பிரகாரம் ஆறு சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற வேண்டும். இதேவேளை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் ஆறு சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளரின் செல்வாக்கு, கட்சியின் செல்வாக்கு என்பனவற்றுடன் கூட்டணிக் கட்சியின் பரிபூரண ஆதரவும் கிடைக்க வேண்டும். வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவருக்கும் ஆறு வருட அவகாசத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த ஆறு வருட காலத்தினுள் நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் அபரிமிதமான வெற்றியைப் பெற்று ஆறு சதவீத வாக்குகளுக்கு அதிகமாகப் பெற வேண்டும். வைகோவும், டாக்டர் ராமதாஸும் தமது கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கத் தவறினால் அரசியல் கட்சியின் சின்னத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
தமிழக அரசையும் கருணாநிதியையும் தாக்கிப் பேசி கை தட்டல் வாங்குவதிலேயே எதிர்க்கட்சிகள் அனைத்தும் குறியாக உள்ளன. வளர்ந்து விட்ட கட்சியில் செல்வாக்கைத் தக்க வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவறி விட்டன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் பலர் கட்சி தாவினாலும் அக்கட்சியின் செல்வாக்குச் சரியவில்லை. அதனுடைய வாக்கு வங்கியில் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மாக்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா இழந்த பெருமையை மீண்டும் பெற்றார். ஜெயலலிதாவுடன் கை கோர்த்த இக்கட்சிகள் இருந்ததையும் இழந்து விட்டன.
இந்நிலையில், தமிழக சட்ட மன்றத் தேர்தலிலும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தேர்தல் ஆணைய விதிமுறைகளின் பிரகாரம் வாக்குகளைப் பெற்று இழந்து விட்ட தமது கட்சியின் அங்கீகாரத்தை மீளப் பெற வேண்டிய நிலைக்கு வைகோவும், டாக்டர் ராமதாஸும் தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி காங்கிரஸின் கோட்டை கருணாநிதியுடனும் காங்கிரஸுடனும் கைகோர்த்து புதுச்சேரியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றது. ஜெயலலிதாவுடன் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சி தனது வெற்றியைப் பறிகொடுத்தது. புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டுமானால் காங்கிரஸுடனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் கூட்டணி சேர வேண்டும். ஆகையினால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி வாக்கு வங்கியை உயர்த்துவதற்காக காங்கிரஸினதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் தயவை டாக்டர் ராமதாஸ் எதிர்பார்க்கிறார்.
வைகோவின் நிலை மிகப் பரிதாபமாக உள்ளது. தன்னை நம்பி அரசியல் கட்சியை ஆரம்பித்த வைகோ கட்சியின் வெற்றிக்காக ஜெயலலிதாவை நம்பி கட்சியை வழி நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டால்தான் இழந்த அங்கீகாரத்தைத் திரும்பப் பெற முடியும். ஜெயலலிதாவின் தலைமையிலான இன்றைய கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியையும் விஜயகாந்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. காங்கிரஸ் என்பது விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் இணைந்து தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டால் வைகோவின் செல்வாக்குக் குறைந்து விடும்.
காங்கிரஸுக்கும் விஜயகாந்துக்கும் அதிக தொகுதிகளை ஒதுக்கி விட்டு குறைந்த தொகுதிகளே வைகோவுக்கு வழங்கப்படும். குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு இழந்த அங்கீகாரத்தை பெறுவது சற்று சிரமமான காரியம்.
பல சிரமங்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவுடன் இணைந்திருக்கும் வைகோ, தனது கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பதே நிதர்சனம்.


வர்மா


வீரகேசரிவாரவெளியீடு 08/08/10