Friday, July 22, 2022

ஜனாதிபதி ரணிலின் அதிரடி ஆட்சி ஆரம்பம்

கிணறு வெட்ட பூதம்  புறப்பட்ட கதையாக கோட்டாவையும்அரசாங்கத்தியும் ,ராஜபக்ஷ  குடும்பத்தையும் அரசியலில் இருந்து  அப்புறப்படுத்த  போரட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்ட  இடைவெளியில்  யாரும் எதிர் பார்க்காத  வகையில் இடையில் புகுந்த ரணில்  பிரதமராகி, ஜனாதிபதியாகிவிட்டார்.

ரணில்  பிரதமரானதும் போராட்டக்காரர்கள்  ரணிலுக்கு எதிராகவும் குரல் எழுப்பினார்கள்.  ரணிலின் அரசியல் வாழ்க்கை ஏற்ற தாழ்வு  மிக்கது. தோல்விகளைக் கண்டு அவர் ஒரு போதும் துவண்டதில்லை. பதுங்க வேண்டிய நேரத்தில் பதுங்கி பாய வேண்டிய காலத்தில் பாய்ந்து தனது அரசியலை ஸ்திரமாக்கும்  நுணுக்கம் தெரிந்தவர் ரணில். அரசியலில் ராஜபக்க்ஷ குடும்பத்துக்கு நேர் எதிரி அவர். ஆனால், அந்தக் குடும்பத்துக்கு எதிராக சட்ட நட்டவடிக்கை எதனையும் அவர் முடுக்கி விடவில்லை  என்ற கோபம் சிங்கள மக்களிடம்   இருக்கிறது.

பாராளுமன்றத்தில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. கூட இல்லை. ரணில் மட்டுமே நியமன எம்.பி. ஆனாலும் ராஜபக்ஷக்களின் பேராதரவுடன் இப்போது ஜனாதிபதியாக அரியணை ஏறி இருக்கிறார் ரணில் என்பதே மக்களின் எண்ணம்.   அவரது நீண்டகால கனவு ஒன்றை ராஜபக்ஷக்கள் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டனர். நேற்று பிரதமர்- இன்று ஜனாதிபதி. ராஜபக்சேக்களின் மென்மை முகம் ஆனாலும் ரணிலை ரட்சகராக நம்புவதற்கு இலங்கை மக்கள் தயாராக இல்லை.   அதனால் ராஜபக்சேக்களின் மீதான மக்களின் கோபம் கொஞ்சமும் குறையாமல் ரணில் பக்கம் திரும்பி நிற்கிறது.

ரணில் விக்கிரமசிங்கதற்போது செய்ய வேண்டிய முதன்மையான பணி- சர்வதேச அமைப்புகளிடம் இருந்து கணிசமான நிதியைப் பெற்று இலங்கையில் இயல்பு நிலையை உருவாக்குவது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியமான .எம்.எப்-இடம் போதுமான நிதியைப் பெற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்; அதனைத் தொடர்ந்து இயல்பு வாழ்க்கையை உருவாக்க எரிபொருட்கள் விநியோகத்தை சீரமைக்க வேண்டும்.

  ஏற்கனவே எரிபொருள் விநியோகம் தொடர்பில் இந்தியாவும், சீனாவும் உதவுகின்றன. ரஷ்யாவிடமும் இலங்கை கையேந்தி நிற்கிறது. சர்வதேச உறவுகள் இன்னொரு பக்கம் இந்தியா, சீனாவுடனான உறவுகள்.  இதில் சீனா கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு நெருக்கடி தருவதால் விழிபிதுங்கி நிற்கிறது இலங்கை. அப்படி கடனை திருப்பித் தராவிட்டால் இலங்கை நிலப்பகுதிகளை தாரைவார்க்கும் நிலைமையில் உள்ளது இலங்கை. ஆனால் இந்தியாவோ, இலங்கை தம் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் என்கிற நிலைமையில் கடனுதவி வழங்குகிறது. இந்தியாவையே முழுமையாக இலங்கை சார்ந்தும் இருக்க முடியாது. ஆகையால் சீனாவின் அதிருப்தியை ரணில் எப்படி அறுவடை செய்வார்? என்பது சர்வதேசம் உற்று நோக்குகிற மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று.

அரசுக்கு எதிரான  போராட்டத்தை பாதுகாப்புப்  படையினர் ஏவி  முடக்குவதற்கு ஜனாதிபதி அஸ்திபாரம் போட்டுள்ளார்.   பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத்  தீர்வு காண்பதற்காக புதிய ஜனாதிபதிக்கு கால அவகாசம் கொடுப்பப்தர்கு போராட்டக் காரர்கள் முடிவெடுத்தனர்.  ஆனால், அதற்கிடையில்  அதிகாலை வேளை  பாது காபுப் படையினர் புகுந்து விரட்டியடித்தனர்.

புதிய ஜனாதிபதி மக்களுக்கான நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்திருந்த வேளையில்  வன் முறையினால் போராட்டக் களம் ரணகளமாகியது.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றுவதற்காக இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர்(STF) வ்ர்ள்ளை அதிகாலையில்  காலி முகத்திடலில் போராட்டத்தை முன்னறிவிப்பின்றி முற்றுகையிட்டதால் இலங்கை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் காலி முகத்திடலுக்கான அணுகு வீதிகளை மறித்து பொதுமக்களை அப்பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர் என BASLதலைவர் சாலிய பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவியேற்ற முதல் நாளிலேயே பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்க ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவது வெறுக்கத்தக்கது மற்றும் நமது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். என்பதை ஜனாதிபதி உணராதவரில்லை. உலக நாடுகள் அனைத்தும்  காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின்  மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளன.

இச்சம்பவங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே தொடர்பான உத்தரவுகளை வழங்கியவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஆயுதப்படை மூலம் போராட்டத்தை அடக்க முற்பட்டால் அது இன்னொரு ரூபத்தில் வெளியாகும் என்பது இலங்கை வரலாற்றில் ஏற்கெனவே பதியப்பட்டுள்ளது.

No comments: