Thursday, July 21, 2022

அரண்மனை இல்லாத சர்வாதிகார அரசன் எடப்பாடி

  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின்  பொதுச் செயலாளராக வேண்டும் என்ற நோக்கத்தில்  திரை மறைவாக காய் நகர்த்திய  எடப்பாடி பன்னீர்ச்செல்வம் தற்காலிகப் பொதுச் செயலாளராகி விட்டார்.  அந்தப் பெருமையுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த் தலைமைச் செயலகத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஓபன்னீர்ச்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும்  ஓரம் கட்டிய எடப்பாடி தனது கனவை நிறைவேற்ரிக்கொண்டிருந்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்டுக்கோப்பாக  இராணுவக் கட்டுப்பாட்டுடன்  இயங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அந்தப் பெருமையை இழந்து விட்டது.

 அரசியல் கட்சி ஒன்றை அழிப்பதற்கு அதனை எதிர்க்கும் கட்சிகள் முனைப்புடன் செயற்படுவது வழமை. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அது நேர் மாறாக  உள்ளது. எம்.ஜி.ஆர்  காலத்தில் அவருக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர்கள்  போர்க்கொடி தூக்கினார்கள். எம்.ஜி.ஆர் இறந்த பின்னர் அவரின் மனைவி ஜானகி, ஜெலலிதா ஆகிய இருவரின் அரசியல் அபிலாஷையால் கட்சி இரண்டாகியது.

ஜெயலலிதா  இற‌ந்த பின்னர்  சசிகலாவின்  அரசியல் பிரவேசத்தால் சலசலப்பு ஏற்பட்டது. அவர் சிறை சென்ற பின்னர் எடப்பாடியின் பதவி ஆசை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அல்லல் படுத்துகிறது.

திமுக-வில் இருந்து நீக்கப்பட்டு அதிமுக-வை எம்.ஜி.ஆர் உருவாக்கிய போது கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த உறுதியான தலைமை முக்கியம் என்று எண்ணிய அவர், மற்ற கட்சிகளில் இருப்பது போல செயற்குழு உறுப்பினர்கள் அல்லது பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் பொதுச் செயலாளர் அல்லது தலைவர் பதவிகளை தேர்வு செய்வது சரியாக இருக்காது என்று நினைத்தார். மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பொதுச் செயலாளரை தேர்வு செய்வர் என்ற விதிமுறையை புகுத்தினார்.

இதுதவிர, அதிமுக-வின் சட்ட விதிகளுக்கு விலக்கு வழங்கும் அதிகாரத்தையும் பொதுச் செயலாளருக்கு வழங்கினார். அதிமுகவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெற்று வந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தவரை இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஓட்டெடுப்புக்கு அவசியம் ஏற்படவில்லை. ஜெயலலிதா 1988, 1989, 1993, 1998, 2003, 2008, 2014 ஆகிய ஆண்டுகளில் ஏழு முறை பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரது மறைவுக்கு பிறகு சசிகலா இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவால் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, மீண்டும் கூட்டப்பட்ட அதேபோன்ற ஒரு பொதுக்குழுவால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்.

அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தொடங்கியிருந்தாலும், அக்கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்து கட்சியை கட்டுக்கோப்புடன் வலுவாக கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் அடையாளப்படுத்தப்படாமல் இருந்ததன் விளைவை அக்கட்சி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு பின்னடைவைச் சந்தித்துவருகிறது அ.தி.மு.க. ராணுவக் கட்டுப்பாடுள்ள கட்சி என்று வர்ணிக்கப்பட்ட ஒரு கட்சி தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாத ஒன்றாக உள்ளது.

அ.தி.மு.க நிர்வாகிகள் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.  பொதுச்செயலாளராக கட்சி அறிவிப்பினையும் வெளியிடத் தொடங்கவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அந்தப் பதவிக்கான சட்ட அங்கீகாரம் என்ன என்பது இதுவரையில் கேள்விக் குறியாகவே உள்ளது. அவருடைய பொதுக்குழு கூட்ட வெற்றி என்பது இடைக்கால வெற்றியாகவே அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. ஒருபுறம் அவர் பொதுச் செயலாளராக நியமிக்கப்படும் அதே நேரத்தில் அ.தி.மு.கவின் தலைமைக் கழகம் அரசால் சீல்வைக்கப்பட்டது. எனவே, நேற்றைய வெற்றியைக் கூட முழு வெற்றி அல்ல என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அ.தி.மு.க அலுவலகத்தின் சாவியைத் தரக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தப் பிரச்னைக்கான தீர்வு உடனே கிடைக்குமா என்பது கேள்விகுறிதான். ஜெயலலிதா, ஜானகி இடையை பிரச்னை ஏற்பட்ட போது இதேபோல அ.தி.மு.க அலுவலகம் அரசால் பூட்டப்பட்டது. பின்னர், சுமார் 8 மாதங்கள் கழித்தே அலுவலகம் திறக்கப்பட முடிந்தது. தற்போது, அதுபோன்ற சூழ்நிலையே உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் கட்சி நிர்வாகிகள் ரீதியாக எடப்பாடி பழனிசாமி வலிமையாக இருந்தாலும், சட்ட விவகாரங்களில் ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பின் கையே ஓங்கியிருக்கிறது.

கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு கிடைக்கும் சட்ட அங்கீகாரத்தைப் பொறுத்தே எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கு அங்கீகாரம் கிடைக்கும். எம்.எல்.ஏ, எம்.பிக்களைப் பொறுத்தவரையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தற்போதைக்கு அவரைச் சேர்த்து 3 எம்.எல்.ஏக்கள், ஒரு மக்களவை எம்.பி, ஒரு மாநிலங்களவை எம்.பியின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ, ஒரு சில மாநிலங்களவை எம்.பிக்களின் ஆதரவைக் கொண்டுள்ளார். இதுவரையில் நீதிமன்ற வாயில்களிலேயே நடைபெற்று வந்தப் போராட்டம் தற்போது தேர்தல் ஆணையக் கதவுகளையும் எட்டியுள்ளது.

கடந்த 11‍ம் திக‌தி நடைபெற்ற பொதுக்குழு கூட்ட விவகாரத்தில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய நேரத்தில், அதற்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் எந்த முடிவு எடுக்கும் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. தற்போதைய நிலையில் நிர்வாகிகள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எடப்பாடி பழனிசாமி அதிகமாக இருப்பதால் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான அறிவிப்பை வெளியிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

2017-ம் ஆண்டில் சசிகலா தரப்பில் 100-க்கும் மேல் எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகள் இருந்தபோது, 11 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் குரலுக்கு தேர்தல் ஆணையம் செவிசாய்த்தது.

சட்டச் சிக்கல்கள் மட்டுமல்ல அரசியல் நெருக்கடிகளையும் எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அ.தி.மு.க விவகாரத்தில் பா.ஜ.க, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகவே இருப்பதாக சூழல்கள் தெரிகின்றன. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவியேற்றதற்கு ராமதாஸ், ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதேநேரத்தில் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அல்லது அண்ணாமலையோ அதனை உறுதிப்படுத்தவில்லை. எனவே, பா.ஜ.க சார்பில் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் நியமனத்திலிருந்து விலகி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இடைக்கால பொதுச் செயலாளராகிய எடப்பாடி தனக்கு விரும்பியவர்கள்க்கு பதவிகளைக் கொடுக்கிறார்.

மறுபக்கத்தில் தன்னை எதிர்ப்பவர்களை கட்சியை விட்டு வெளியேற்றுகிறார். ஓபிஎஸ் - ரவீந்திரநாத்அதிமுகவின்  தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு  பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜெயபிரதீப் உட்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.பிராபகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஓபிஎஸ் ஆதரவு மா.செக்களாக இருக்கும் 6 பேரின் பதவிகளும் விரைவில் பறிக்கப்படும்.

ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் வகித்து வந்த துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன.

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தனக்கு நெருக்கமான பலருக்கும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ள நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ் வகித்து வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கும் வேட்டு வைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

முக்கியமாக ஓ.பன்னீர் செல்வம் சமூகம் சார்ந்த மக்கள் எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி இருந்துவருகிறது. நிர்வாகிகளை தன் பக்கம் ஈர்த்தாலும், தொண்டர்களையும் பொதுமக்களையும் ஈர்ப்பது அத்தனை எளிதானதல்ல.

எனவே, அ.தி.மு.கவின் அடுத்த செயல்பாடுகள் இன்னும் சில மாதங்களுக்கு தமிழக அரசியல் களத்தை பரபரப்பாகவே வைத்திருக்கும். பொதுச் செயலாளராக பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்னும் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன என்பதே உண்மை.

No comments: