Thursday, January 26, 2023

ஒன் லைன் மோசடியில் 20 கோடியை இழந்த ஐ.சி.சி


  டிஜிட்டல் உலகில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெருமளவு தனி நபர்கள் ஆன்லைன் மோசடிகளுக்கு இலக்காகி பணத்தை இழக்கும் செய்திகளை அடிக்கடி படிக்கிறோம் மற்றும் பார்கிறோம். சமீபத்திய அதிர்ச்சிகரமான ஒன்லைன் மோசடி சம்பவம் ஒன்றில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒன்லைன் மோசடி வலையில் சிக்கி பாதிப்பை சந்தித்து உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டை கவனிக்கும் மற்றும் நிர்வகிக்கும் உச்சபச்ச சர்வதேச கிரிக்கெட் அமைப்பான  ICC ஒரு பெரும் தொகையை இழந்துள்ளது. அறிக்கை ஒன்றின்படி ஃபிஷிங் மோசடியில் சிக்கி இன்டர்நேஷ்னல் கிரிக்கெட் கவுன்சில் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடியை இழந்துள்ளது.

இது தொடர்பாக ESPNcricinfo தெரிவித்துள்ள தகவலில் கடந்த 2022-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்த மோசடி நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த மோசடியில் சிக்கி ICC இழந்த சரியான தொகை இன்னும் தெளிவாக தெரியவில்லை, ஆனால், சுமார்   2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி நபர்கள் பிசினஸ் இமெயில் காம்ப்ரமைஸ் (BEC - Business Email Compromise) டெக்னிக்கை பயன்படுத்தி ICC-யில் இருந்து பணத்தை எடுத்து இருக்கிறார்கள்.

இது ஈமெயில் எக்கவுண்ட் காம்ப்ரமைஸ் ஸ்கேம் என்றும் அழைக்கப்படுகிறது. முதற்கட்ட தகவலின்படி, இந்த ஆன்லைன் மோசடி அமெரிக்காவில் இருந்து இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது, ஏனெனில் பணம் அனைத்தும் அங்கு மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றி ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) கூறுகையில் அனைத்து ஒன்லைன் குற்றங்களிலும் நிதி ரீதியாக மிகவும் சேதப்படுத்தும் குற்றங்களில் முக்கியமான ஒன்று என குறிப்பிடுகிறது. இந்த மோசடி குறித்து ஐசிசி இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

எனினும் இந்த விஷயத்தில் பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன. இந்த ஆன்லைன் மோசடி எப்படி நடந்தது, மோசடி நபர்கள் துபாயில் உள்ள ஐசிசி தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டார்களா அல்லது வென்டார்/கன்சல்டன்ட் மூலமாக நடந்ததா, பரிவர்த்தனை ஒரு முறை அல்லது பல முறை செய்யப்பட்டதா என்பது பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

 

BEC மோசடி என்றால் என்ன?

பொதுவாக ஃபிஷிங் (phishing) மோசடி என்பது ஒரு வகையான சைபர் கிரைம். இதில் மோசடி செய்பவர்கள் இமெயில், தொலைபேசி அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ்-கள் மூலம் குறிவைத்து நம்பகமான நிறுவனங்கள் அல்லது நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். BEC மோசடி என்பது ஒரு வகையான ஃபிஷிங் ஆகும். இது வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகிய இரு தரப்பினரையும் குறிவைத்து முறையான பண பரிமாற்ற கோரிக்கைகளை அனுப்பி செய்யப்படும் மோசடியாகும்.

BEC மூலம் மோசடி செய்பவர்கள் ஒருவரை அல்லது நிறுவனங்களை ஏமாற்றி பணம் அனுப்ப கேட்கும் போலி பில் அல்லது கோரிக்கையுடன் நம்பத்தகுந்த நபர் இமெயில் செய்வதை போலவே மெயில் செய்து பணம் அனுப்ப சொல்லி கேட்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் குற்றவாளிகள் இமெயிலை பயன்படுத்தி வணிக பிரதிநிதிகளாக நடிக்கின்றனர். இதை நம்பி பணம் அனுப்புவதால் போலி இமெயில் பெற்றவர்கள் கடும் நிதி இழப்புக்கு ஆளாகிறார்கள். BEC மோசடிகளைப் பற்றி விளக்கிய FBI இங்கே, மோசடி செய்பவர் நம்பகமான நபராகக் காட்டி கொண்டு, போலி பில் செலுத்துமாறு கேட்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த ICC விவகாரத்தை பொறுத்தவரை, ஐசிசி-யின் துபாய் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளை மோசடி நபர்கள் தொடர்பு கொண்டார்களா அல்லது ஐசிசி சேல்ஸ்பர்சன் அல்லது அட்வைசரை இலக்காக கொண்டிருந்தார்களா என தெரியவில்லை. அமெரிக்க சட்ட அமலாக்க துறைக்கு சந்தேகத்திற்குரிய மோசடி குறித்து ICC புகாரளித்துள்ளது மற்றும் விசாரணை நடந்து வருகிறது என ESPNcricinfo கூறி இருக்கிறது.

No comments: