Wednesday, January 4, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 50


 சினிமாவில்  பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான  இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.ஏவி.எம்.மின் ‘களத்தூர் கண்ணம்மா’, கமலுக்கு முதல் படம் களத்தூர் கண்ணம்மா தான் எஸ்.பி.முத்துராமனுக்கும் முதல் படம். அதுவரை எடிட்டிங்கில் பணிபுரிந்து வந்தவர், களத்தூர் கண்ணமாவில் தான் முதல்   உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர், உதவி இயக்குநர், எடிட்டிங் பணி, புரொடக்‌ஷன் பணி என ஒரு திரைப்படத்தின் சகல பணிகளுக்குள்ளேயும் புகுந்து கற்றுக் கொண்டார் எஸ்.பி.முத்துராமன்.ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி முதலானோர் நடித்த ‘கனிமுத்து பாப்பா’ என்ற படத்தை 72ம் ஆண்டு முதன்முதலாக இயக்கினார் எஸ்.பி.எம். இதையடுத்து வரிசையாக ஜெய்சங்கர், முத்துராமன், கமலஹாசன் முதலானோரைக் கொண்டு படங்களை இயக்கினார்.

 80களில், ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குநர் என்கிற அந்தஸ்துக்கு வந்தார் எஸ்.பி.முத்துராமன். ரஜினியை வைத்து ‘முரட்டுகாளை’, கமலை வைத்து ‘சகலகலா வல்லவன்’ என்று மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தார். பின்னர் ரஜினியை வைத்து ஏராளமான படங்களை இயக்கினார். ஒருபக்கம், ஏவி.எம் படங்கள், இன்னொரு பக்கம் பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் படங்கள், மற்றொரு பக்கம் பாலசந்தரின் கவிதாலயாவுக்கு படங்கள் என பிஸி இயக்குநராகவும் தயாரிப்பாளர்களின் இயக்குநராகவும் ரசிகர்களின் இயக்குநராகவும் என திரையுலகில் பேரெடுத்தார். நம்பிக்கைக்கு உரிய இயக்குநராகத் திகழ்ந்தார்.

முதன் முதலாக இயக்குநரானது 72ம் ஆண்டு. 85ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் திரையுலகில் மறக்கமுடியாத ஆண்டு. ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், கமல், அம்பிகா, ராதாரவி நடித்த ‘உயர்ந்த உள்ளம்’ படத்தை இயக்கினார். இது, அவரின் 50வது படம்.

85ம் ஆண்டில், ‘அந்த ஒரு நிமிடம்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘காக்கிசட்டை’, ‘மங்கம்மா சபதம்’ முதலான படங்களில் நடித்தார் கமல். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ‘உயர்ந்த உள்ளம்’ திரைப்படமும் இந்த வருடத்தில்தான் வெளியானது. ‘அந்த ஒரு நிமிடம்’ படத்தில் ஊர்வசி நாயகி. ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் ராதாவும் ரேவதியும் நாயகிகள். ‘மங்கம்மா சபதம்’ படத்தில் மாதவி. ‘காக்கி சட்டை’யிலும் ‘உயர்ந்த உள்ளம்’ படத்திலும் அம்பிகா நாயகி.

 இந்தப் படத்துக்குக் கால்ஷீட் கொடுத்திருந்த நிலையில், ஏதோவொரு படப்பிடிப்பில், கமலுக்கு கையில் அடிபட்டிருக்கும் போல. படத்தை இப்போது பார்த்தாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அதை உணரமுடியும். பல காட்சிகளில் கமல் வலதுகையை கொஞ்சம் தூக்கியபடியே வைத்திருப்பார். அந்தக் கையைக் கொண்டே ஆட்டம் பாட்டு,சண்டை அனைத்திலும் அசத்தினார்.

1985ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி வெளியானது ‘உயர்ந்த உள்ளம்’. ஏவிஎம், பஞ்சு அருணாசலம், கமல், இளையராஜா கூட்டணியுடன் களமிறங்கிய எஸ்.பி.முத்துராமனுக்கு இது 50வது படம்.

இன்னொரு கொசுறுத் தகவல்... இதே வருடத்தில்தான், 50வது படத்தை இயக்கிய வருடத்தில்தான் ரஜினியின் 100வது படமான ‘ஸ்ரீராகவேந்திரர்’ படத்தையும் இயக்கிக்கொடுத்தார் எஸ்.பி.முத்துராமன். ஆக்‌ஷன் படமோ மசாலா படமோ... குடும்பப் படமோ எது எடுத்தாலும் கண்ணியம் குறையாமல் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன்.

கமல், ரஜினி இருவரையும் தனது இரு கண்கள் என்று எஸ்.பி.முத்துராமன் ஒருமுறை கூறினார். கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா தான் எஸ்.பி.முத்துராமனுக்கும் முதல் படம். அதுவரை எடிட்டிங்கில் பணிபுரிந்து வந்தவர், களத்தூர் கண்ணமாவில் தான் முதல் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றினார். கமலை தூக்கி கொஞ்சும் வாய்ப்பு அவருக்கு அந்தப் படத்தில் கிடைத்தது.ரஜினியை வைத்து மட்டும் 25 படங்கள் இயக்கினார் முத்துராமன். பாலசந்தர்கூட ஒருமுறை, 'சிவாஜிராவ் என்ற வைரத்தை கண்டு பிடித்தேன். ரஜினிகாந்த் என்று பெயர் வைத்து சினிமாவில் அறிமுகப்படுத்தினேன். என்னைவிட முத்துராமன் சார் தான் ரஜினிக்கு பலவிதமான கதாபாத்திரங்கள் தந்து அந்த வைரத்தை பட்டைத்தீட்டினார்' என்று குறிப்பிட்டார்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கிய முதல் படம் கனிமுத்து பாப்பா 1972 வெளிவந்தது. அடுத்த வருடம் பெத்த மனம் பித்து படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 70-க்கும் மேற்பட்ட படங்களில் 90 சதவீதம் முக்கியமான வணிக வெற்றியை பெற்றவை. 1976 இல் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையின் ஓரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது நாவலை அதே பெயரில் இயக்கினார். கமல் நடித்த அந்தப் படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது.

1979-ல் பஞ்சு அருணாச்சலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினி என்ற வெற்றிக் கூட்டணியின் ஆறிலிருந்து அறுபதுவரை படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டாலும், ஒரு மூத்த சகோதரன் தனது இளையவர்களுக்கு இத்தனை நன்மைகள் செய்த பிறகும் அவன் மீது அன்பில்லாமல் இருப்பார்களா? இது சரியாக வருமா என்று ரஜினி முத்துராமனிடம் தொடர்ந்து வாதிட்டு வந்திருக்கிறார். முத்துராமன் எவ்வளவோ விளக்கியும் ரஜினி சமாதானமாகவில்லை. நீங்க சண்டையை முடிச்சிட்டு வாங்க என்று அப்படத்தின் நாயகி படாபட் ஜெயலட்சுமி பலமுறை படப்பிடிப்புதளத்திலிருந்து வெளியே சென்றிருக்கிறார். கடைசியில் பஞ்சு அருணாச்சலம் தலையிட்டு, எங்க மேல நம்பிக்கை இருக்கில்ல... அஞ்சாயிரம் அடி எடுத்துப் பார்ப்போம். உனக்குப் பிடிக்கலைன்னா இந்த கதையையே விட்டுட்டு வேற படம் பண்ணுவோம் என்று ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். அதன்படி ஐந்தாயிரம் அடி எடுத்து போட்டு பார்த்திருக்கிறார்கள். ரஜினிக்கு திருப்தி. படம் நல்லா வரும் என்று முத்துராமனையும், பஞ்சு அருணாச்சலத்தையும் கட்டிப்பிடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருது ரஜினிக்கும், சிறந்த இயக்குனர் விருது முத்துராமனுக்கும் கிடைத்தது.

எஸ்.பி.முத்துராமன் மற்றும் 14 தொழில்நுட்பக் கலைஞர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்தப் படம் பாண்டியன். முத்துராமனே இதனை இயக்கினார். படம் முடிய 10 தினங்கள் இருக்கையில் முத்துராமனின் மனைவி எதிர்பாராதவிதமாக இறந்தார். படப்பிடிப்பை தள்ளி வைக்கலாம் என்று சொன்னதை கேட்காமல், தீபாவளிக்கு படம் வெளியாவதாக அறிவித்துவிட்டோம், என்னால் படம் தள்ளிப் போகக் கூடாது என சடங்குகளை முடித்துவிட்டு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார் முத்துராமன். அந்தப் படம் 200 நாள்கள் ஓடியது. படத்தின் லாபத்தில் கணிசமான பகுதியை முத்துராமனுக்கு தந்துவிட்டு, மீதியை மற்ற 14 டெக்னீஷியன்களும் பிரித்துக் கொள்ளட்டும் என்று சொன்னதை முத்துராமன் ஏற்கவில்லை. நானும் அவர்களில் ஒருவன்தான், எல்லோரையும் போல் எனக்கு தந்தால் போதும் என்று பிடிவாதமாக  மறுத்துவிட்டார்.

No comments: