Friday, January 20, 2023

சூடு பிடித்துள்ள தமிழக அரசியல்களம்

 ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலால் தமிழக அரசியல்களம்  பரபரப்பாகி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்ட சபை உறுப்பினர். திருமகன் மாரடைப்பால் காலமானதால் பெப்ரவரி 7 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற  உள்ளதுஇந்திய நாடாளுமன்றத்  தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்பதால் வாய் ஜாலம்  பேசிய அரசியல் தலைவர்கள் செயற்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டனிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். கூட்டனித் தர்மப்படி  காங்கிரஸ் கட்சிக்கு  ஈரோடு கிழக்குத் தொகுதியை  ஸ்டாலின் கொடுத்துள்ளார்.தமிழக காங்கிரச் தலைவர் கே.எஸ். அழகிரிஅறிவாலயத்துக்குச் சென்று   நேரடியாகச்   விடுத்த  கோரிக்கைக்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரான யுவராஜ்  இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு  ஒன்பதாயிரம் வாக்குகளால் தோல்வியடைந்தார்.

திராவிட முன்னேற்றக் கூட்டணி  மிகவும் பலமாக  உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வாசனின் வீட்டுக்குச் சென்று  வாழ்த்தியதை அரசியல் அவதானிகள் ஆச்சரியத்துடன்  பார்க்கிறார்கள். பெரிய கட்சியின் தலமை அலுவலகத்துக்கு சிறிய கட்சித் தலைவர்கள் செல்வதுதான் அரசியல் மரபு. அந்த மரபை உடைத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அரசியல் அநாதையான வாசனின் வீட்டுக்குச் சென்று  அவரை சமாளித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  போட்டியிட வேண்டுகோள் விடுத்தனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுபட்டுள்ளது. அதிகமான எம்.பிக்கள், சட்ட சபை உறுப்பினர்கள்,ஒன்றைரைக் கோடித் தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக மார்தட்டும் எடப்பாடிக்கு இடைத் தேர்தல் நெருப்பாறாக  உள்ளது.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  ஒருங்கிணைபாளர் என்பதை உறுதிப்படுத்துவதற்காக  .பன்னீர்ச்செல்வம் நீதிமன்றத்தில் தவம் கிடக்கிறார்.அண்ணா திராவிட முன்னேற்ரக் கழகம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக சசிகலா கனவு காண்கிறார். தினகரன் தனி வழி செல்கிறார்.

ஓபன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய  இருவரும் கையெழுத்திட்டால்தான்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இரட்டை இலை இல்லை என்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி சாத்தியமில்லை. பன்னீர்   இறங்கிவரத் தயாராக இருக்கிறார். எடப்பாடி விட்டுக் கொடுக்க முடியாது என அடம் பிடிக்கிறார்ஈரோடு  கிழகுத் தொகுதிப்பக்கம் வாக்கு வங்கி உள்ளபாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது.

தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டதாக சமூக  ஊடகங்களில் பதிவிடும் பாரதீய ஜனதாவும் தனித்துக் களம்  இறங்க  முயற்சிக்கிறது.

கொங்கு மண்டலத்தில் பலமாக இருப்பதாகக் கருதும்  பாரதீய ஜனதா தனித்துப் போட்டியிட்டு வாக்கு சத வீதத்தை உயர்த்தினால்நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதியைக் கோர வாய்ப்பு உள்ளதுபாரதீய ஜனதா துணிந்து அப்படி ஒரு முடிவு எடுக்குமா எனத் தெரியவில்லைஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பிரசாரம் செய்யுமா என்பது மில்லியன் டொலர் கேள்வி.

சீமானின் நாம் தமிழர், கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளும் வாக்குகளைப் பிரித்ததால்  யுவராஜ் தோவியடைந்தார். சீமானின் வேட்பாளர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதிஉதயநிதியும்  கமலும் சினிமாவில்  கூட்டணி சேர்ந்துள்ளனர். கமல் ராகுலுடன் நெருங்குவதால் என்ன செய்யப்போகிறார் எனத் தெரியவில்லை.

 நாம் தமிழர் பெற்றவாக்குகள் 11,629 , மக்கள் நீதி மையம் பெற்ற வாக்குகள் 10005. இந்த 21 ஆயிரம் வாக்குகள்தான் தேர்தல் முடிவுகளை மாற்றியது. கிட்டத்தட்ட 14 சதவிகித வாக்குகள். இந்த இடைத்தேர்தலில் இவர்கள் எடுக்க போகும் முடிவுகள்தான் தேர்தல் முடிவை மாற்றும்.

ராகுலின்  பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.   கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதால் இரண்டு விதமான நிலைப்பாடுகளை அவர் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு நேரடியாக ஆதரவு கொடுப்பது. அப்படி செய்யும் பட்சத்தில் அது காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரிய அளவில் உதவும். அதிமுக - பாஜக கட்சிகளுக்கு இது பெரிய பின்னடைவை கொடுக்கும்., ஏனென்றால் கமல்ஹாசனுக்கு இங்கு 6 சதவிகிதம் வாக்கு வங்கியும் உள்ளது. இது காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரிதாக உதவும். முக்கியமாக கொங்கு வேளாள கவுண்டர்களின் கணிசமான வாக்குகள் கமல்ஹாசன் பக்கம் செல்லவும் வாய்ப்புகள் உள்ளனஇன்னொரு பக்கம் அதிமுக, பாஜகவிற்கு இது பெரிய பின்னடைவை கொடுக்கும். கடந்த தேர்தலில் கூட்டணி இன்றியே அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக வேட்பாளர் வானதிக்கு கோவை தெற்கில் கமல்ஹாசன் கடும் போட்டியாக இருந்தார்காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்தால் காங்கிரஸ் - திமுக இங்கு வெற்றிபெறுவது மிக எளிதாகிவிடும். இன்னொரு பக்கம் கமல்ஹாசன் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு வாய்ப்பு  குறைவு.

  2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் ஈரோடு கிழக்கு தொகுதி  உருவாக்கப்பட்டது.   2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அவர் இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய  பொறுப்பில் உள்ளார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பாளர் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார்.

கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள .பன்னீர்ச்செல்வம் தனது ஆதரவாளரைக் களம்  இறக்க விரும்புகிறார்.இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த இடைத்தேர்தலானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த இடைத் தேர்தல் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான  போட்டி அல்லாமல் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் இடையிலான  போட்டியாகவே இருக்கப்போகிறது. அண்ணா  திராவிட  முன்னேற்ரக் கழகத்தின் தலைமையைத் தீர்மானிக்கும்  போட்டியாக  இந்த  இடைத் தேர்தல் இருக்கப்போகிறது.

 திமுக - காங்கிரஸ் கூட்டணி எப்படி இருக்கும்? அதிமுக உட்கட்சி மோதல் என்ன ஆகும் என்று தெரிந்துவிடும். அதிமுகவில் வரும் தேர்தல்களில் என்ன நடக்கும் என்பதை இடைத்தேர்தல்  முடிவு  காட்டிவிடும்பாஜகவின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெரிந்துவிடும். இந்த ஒற்றை இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியலில் நிலவும் ஏகப்பட்ட புதிர்களுக்கு விடை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: