Monday, March 26, 2012

தலை நிமிர்ந்தார் ஜெயலலிதா தனித்துவம் இழந்தார் கப்டன்




சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதிர்பார்த்தது போன்றே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றது. ஆனால், இப்படி ஒரு பிரமாண்டமான வெற்றி கிடைக்கும் என்று ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்கமாட்டார். எரிபொருள் விலை உயர்வு, மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பனவற்றினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. விஜயகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவை விட்டுப் பிரிந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே இருக்கும் என்ற கணிப்பு தவறிவிட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு அமைச்சரான கருப்பசாமி 72,297 வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் உமா மகேஸ்வரி 61.902 வாக்குகளைப் பெற்றார். கருப்பசாமி 22.680 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார். இப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் முத்துச்செல்வி 94,977 வாக்குகளைப் பெற்றார். மறைந்த அமைச்சர் கருப்பசாமி பெற்றதைவிட 22,680 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் ஜவஹர்சூரிய குமார் 26, 220 வாக்குகளைப் பெற்றார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் உமா மகேஸ்வரியை விட 44,682 வாக்குகள் குறைவாகப் பெற்றார். 68,757 அதிகப்படியான வாக்குகளால் முத்துச்செல்வி வெற்றி பெற்றதனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பணத்தை இழந்தனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறும் சந்தர்ப்பம் மிகவும் குறைவானது. அதிகாரபலம் அனைத்தும் கைவசம் உள்ள ஆளுங் கட்சிக்கு எதிராக நிராயுதபாணியான எதிர்க்கட்சிகள் வெற்றி பெறமுடியாது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டே போட்டியிடுகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் நினைத்ததைச் சாதித்து விட்டார். எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தின் விலாசத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற சபதத்தை நிறைவேற்றியுள்ளார். விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் முத்துக்குமார் 12,144 வாக்குகளை மட்டும் பெற்று நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இரண்டாவது இடம் எனக்குத்தான் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி ஒரு மோசமான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து இரண்டாவது இடத்தைப் பிடிக்கலாம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணத்தில் பலத்த அடிவிழுந்துள்ளது. தமிழக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை எதுவும் இல்லாமையினால் அதன் வெற்றிப் பயணத்தைத் தடுக்கும் வல்லமையை எதிர்க்கட்சிகள் இழந்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் படுதோல்விக்கு வேட்பாளர் ஜவஹர்சூரிய குமார் காரணம் என்று கருதப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான ஜவஹர் சூரியகுமார் மீது நில மோசடிப் புகார் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சங்கரன்கோவில் தொகுதியில் அவருக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. ஸ்டாலினின் அணியைச் சேர்ந்தவர் என்ற ஒரு தகுதியினாலேயேதான் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து பிரசாரம் செய்தார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முழு வீச்சுடன் பிரசாரப் பணிகளை மேற்கொண்டார்கள். அப்படி இருந்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளருக்கு எதுவித நெருக்கடியும் ஏற்படவில்லை.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தான். ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக்கழகம் தான் என்பதை சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது. வைகோவை முந்தவேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியதும் உள்ளூர திருப்திப்பட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
இரண்டாவது இடத்துக்காக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தினார் வைகோ. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வைகோ நிறுத்திய வேட்பாளர் கௌரவமான தோல்வியைப் பெற்றார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக போட்டியாளர் சதன் திருமலைகுமார் 20,678 வாக்குகள் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை விட 5,642 வாக்குகளை அதிகமாக பெற்றார். ஆளுங்கட்சியின் அரச அலையின் முன்னால் பிரதான எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மூழ்கியுள்ள நிலையில் வைகோவின் வேட்பாளர் ஓரளவு தலை நிமிர்ந்துள்ளõர்.
1999ஆம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சுமார் 30,000 வாக்குகளை பெற்றது. இன்று அதனை விட குறைவான வாக்குகளைப் பெற்றாலும் விஜயகாந்த் நிறுத்திய வேட்பாளரை விட 8534 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நம்பிக்கையுடன் உள்ளார் சதன் திருமலை குமார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் விஜயகாந்திற்கு மரண அடியாகஉள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தேசிய திராவிட முன்னேற்றக்கட்சியின் வேட்பாளர் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஜெயலலிதாவை அச்சுறுத்தியவர் விஜயகாந்த். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் சரணடைந்த பின்னர் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளார். ஜெயலலிதாவின் இன்றைய எதிரி கருணாநிதியோ, வைகோவோ அல்ல விஜயகாந்த் என்றே அவர் தேர்தல் பிரசாரத்தின் போது பலமுறை சுட்டிக்காட்டினார்.
வர்மா



சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு25/03/12

Saturday, March 24, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 25

ஆங்கிலத்தில் வெளியான டார்ஸான் திரைப்படங்களை பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்களுக்கு வனராஜ கார்ஸன் என்ற தமிழ்ப் படம் பெருவிருந்தாக அமைந்தது. 1938ஆம் ஆண்டு வெளியான வனராஜகார்ஸன் எனும் இப்படத்தில் இடம்பெற்ற ஆபாச‌ காட்சிகளுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ் நடிகை இப்படி ஆபாசமாக நடிக்கலாமா என்றும் பத்திரிகைகள் போர்க்கொடி தூக்கின.
சிறுவயதில் இருந்து காட்டில் வாழும் ஒருவன் மிருகங்களுடன் நேசமாகப் பழகுவதும் மனிதர்களைக் கண்டதும் அஞ்சுவதும் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையாக இருந்தது. பேசத் தெரியாத கதாநாயகன் சந்தோசம் துக்கம் ஏமாற்றம் என்பனவற்றை "ஆ', "ஓ' என்ற சொற்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்.
சிறுவயதில் இருந்தே காட்டில் வாழும் ஜோன் சுவாஸ் குரங்குபோல் மரத்திற்கு மரம் தாவி பல சாகசங்களைச் செய்கிறார். மனிதக்குரங்கு, நாய் என்பன ஜோன் சுவாஸின் உற்ற தோழனாக விளங்கின. தனக்குத் தேவையானவற்றை சைகை மூலம் வெளிப்படுத்துவார் ஜோன் சுவாஸ் குரங்கும் நாயும் அவற்றை நிறைவேற்றின.
ஒருநாள் நீச்சல் உடையில் அருவியில் குளிக்கும் கே.ஆர்.செல்வத்தைக் கண்டு அதிசயித்த ஜோன் சுவாஸ் அவரை அலாக்காக தூக்கிச் செல்கிறார். காட்டு மனிதனிடம் அகப்பட்ட கே. ஆர்.செல்வம் செய்வதறியாது தடுமாறுகிறார். நீச்சல் உடையில் சேகதா நாயகியை கண்ட ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கதாநாயகி கே. ஆர்.செல்வம், கதாநாயகன் ஜோன் சுவாஸுக்கு நாகரிகத்தைப் புரிய வைக்கிறார். காட்டு மனிதனிடம் மனதைப் பற்றி கொடுத்த கே.ஆர்.செல்வம் ஜோன் சுவாஸை மணம் முடிக்கிறார்.
சிறுவயதில் காணாமல் போன கே.ஆர்.செல்வத்தின் முறைப் பையன் தான் ஜோன் சுவாஸ் என்ற உண்மை தெரிய வருகிறது. இறுதிக்காட்சியில் மணமகனாக வேட்டி சால்வையுடனும் நாயகி சேலையுடனும் காட்சியளிக்கின்றனர்..
பல ஸ்டன் படங்களில் நடித்த ஜோன் சுவாஸ் ஆங்கில நடிகர்களுக்கு ஈடாக நடித்தார். மனிதக்குரங்கும், நாயும் சிறுவர்களையும் பெரியவர்களையும் கவர்ந்தன. கே.ஆர்.செல்வத்தின் கவர்ச்சிக் காட்சிகளின் போது ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தாலும் பத்திரிகைகள் காரசாரமாக விமர்சனம் செய்தன. காட்டு வாழ்க்கையை வெளிப்படுத்தும் முதலாவது தமிழ்ப் படமான வனராஜ கார்ஸனை வாடியா மூவிடோன் நிறுவனம் தயாரித்து. கே.சுப்பிரமணியம் இப்படத்தை இயக்கினார்.
ரமணி
மித்திரன் 25/03/12

Friday, March 23, 2012

சச்சின் 100/100

கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனை முறியடித்து புதிய சாதனைகளைச் செய்த சச்சின் டெண்டுல்கர் 100ஆவது சதத்தை அடித்து யாரும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார். 99ஆவது சதத்தை டெண்டுல்கர் அடித்ததும் பரபரப்புத் தொடங்கியது. 100ஆவது சதத்தினை எப்போது அடிப்பார்? இன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 100ஆவது சதத்தை அடிப்பாரா? போன்ற தலைப்புச் செய்திகள் ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டன. 100ஆவது சதம் இலக்கமே தவிர சாதனை அல்ல என்று டெண்டுல்கர் பலமுறை கூறியிருந்தார். 100ஆவது சதம் சாதனை அல்ல இலக்கம் தான் என்று அவர் வெளிப்படையாக கூறினாலும், மனதளவில் அவர் வெகுவாகப் பாதிக்கப்பட்டதை 100ஆவது சதத்தின் பின்னரான தொலைக்காட்சிப் பேட்டி உணர்த்தியது.
1988ஆம் ஆண்டு ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் குஜராத்துக்கு எதிராக மும்பை அணி சார்பில் முதன் முதலில் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காது 100 ஓட்டங்களைக் குவித்தார். அறிமுகப் போட்டியில் சதமடித்த 15 வயதுச் சிறுவனை பார்த்து இந்தியக் கிரிக்கெட் வியந்தது. சச்சின் டெண்டுல்கர், வினோத் கம்ப்ளி ஆகிய இரண்டு மாணவர்கள் பாடசாலைகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் 600 ஓட்டங்களை இணைப்பாட்டமாகக் குவித்து புதிய சாதனை படைத்தார்கள். மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களான சச்சினும், கம்ப்ளியும் இந்திய அணியில் இடம்பிடித்தனர். காலப்போக்கில் கம்ப்ளியின் இடம் பறிபோனது. போராடும் குணம் உடைய டெண்டுல்கர் இன்று வரை நிலைத்து நின்று புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் இடம்பிடித்தபோது இந்திய அணியின் நட்Œத்திரம் ஒன்று தோன்றியுள்ளது. இந்தியாவின் வெற்றி சச்சினிலேயே தங்கியுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் சாதனை நாயகனாகத் திகழ்வார். பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார் என்று யாருமே எதிர்வு கூறவில்லை. கிரிக்கெட் உலகில் முதல் சதமடித்த டெண்டுல்கர் இரண்டாவது சதம் அடிக்க 17 மாதங்கள் காத்திருந்தார். கிரிக்கெட் பிதாமகன் என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலிய ஜாம்பவான் டொன் பிரட்மன் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் என்பதே விமர்சகர்களின் முடிவு.
மத்திய வரிசை வீரராக களம் இறங்கிய டெண்டுல்கர் அவுஸ்திரேலியாவில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின்போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கினார். அதன் பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கிய சச்சின் பந்து வீச்சாளர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கினார். வேகப் பந்துக்கும் சுழல் பந்துக்கும் தனது துடுப்பினால் பதிலளித்தார்.

சாதனைகள் முறியடிக்கப்படலாம். ஆனால், சச்சினின் பல சாதனைகள் முறியடிக்க முடியாதவை. சச்சின் அடிக்கும் ஒவ்வொரு ஓட்டமும் சாதனைதான். சத்தமில்லாமல் நடத்திய பல சாதனைகளை எவராலும் முறியடிக்க முடியாது. 16 வயதுப் பாலகனாக சர்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்த சச்சின் 23 வருடங்களாகத் தொடர்ந்து விளையாடி வருகிறார். 99ஆவது சதத்துக்கும் 100ஆவது சதத்துக்கும் இடையில் அதிக காலம் எடுத்ததால் ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்தன. கிரிக்கெட் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும், நடுநிலையான விமர்சனங்களும் சச்சின் 100ஆவது சதத்தை அடிப்பார் என்று நம்பிக்கை வெளியிட்டனர். அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார் சச்சின்.
சச்சின், பொன்டிங், லாரா, கலிஸ் ஆகியோருக்கிடையே கடும் போட்டி இருந்தது. ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் அதிக ஓட்டங்களை எடுப்பது யார் என்று. ஆரோக்கியமான போட்டியில் கிடைத்த சந்தர்ப்பங்களிலும் இவர்கள் தமது முத்திரையைப் பதித்தனர். அதிக சதம் அடிப்பது யார் என்ற போட்டியில் பொன்டிங் சச்சினை நெருங்கினார். பின்னர் சச்சினின் வேகமான ரன் மழையால் சதத்தில் பின்தங்கிவிட்டார் பொன்டிங். சச்சினுக்கு அடுத்த இடத்தில் பொன்டிங் 71 சதங்களும், கலிஸ் 59 சதங்களும் அடித்துள்ளனர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற லாரா 48 சதங்களும், ட்ராவிட் 45 சதங்களும் அடித்துள்ளனர்.
2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டி வரை சச்சினின் விளையாட்டு உச்சம் பெற்றிருந்தது. டெஸ்ட் போட்டியில் 65.21 என்ற சராசரியிலும், ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் உட்பட 52.41 என்ற சராசரியிலும் ஓட்டங்களைக் குவித்தார். 104 இன்னிங்ஸ்களில் 21 சதம் அடித்து தனது முத்திரையைப் பதித்தார். பொண்டிங் 147 இன்னிங்ஸ்களில் 11 சதங்களும், கலிஸ் 113 இன்னிங்ஸ்களில் 13 சதங்களும் அடித்தனர். 31ஆவது சதத்தில் இருந்து 40 ஆவது சதத்தை மிக வேகமாக அடித்தார். 36 இன்னிங்ஸ்களில் 10 சதங்களை அடித்தார். 41ஆவது சதத்தில் இருந்து 50 ஆவது சதத்தை அடிக்க 67 இன்னிங்ஸ்கள் எடுத்தன. 91ஆவது சதத்தில் இருந்து 100 ஆவது சதத்தை அடிக்க 65 இன்னிங்ஸ்கள் விளையாடினார்.
கிரிக்கெட் வீரர்களில் சீரான முறையில் சதம் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான். ஏழு இன்னிங்ஸ்களுக்கு ஒரு முறை சதம் அடித்தார். லாரா, பொன்டிங், கலிஸ் ஆகியோர் சச்சினுக்கு கீழேதான் உள்ளனர். ஒரு நாள் போட்டிகளில் 2016 பவுண்டரிகள் அடித்து புதிய சாதனை செய்துள்ளார். 1500 பவுண்டரிகளுடன் ஜயசூர்யா இரண்டாவது இடத்தில் உள்ளார்




டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் முதல்வனாகத் திகழ்ந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 20 சதங்களை அடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக 17 சதங்கள், தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 12 சதங்கள், இங்கிலாந்துக்கு, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு எதிராக தலா எண்பது சதங்களும், பாகிஸ்தானுக்கு எதிராக ஏழு சதங்களும் அடித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் 23 வருடங்களாக டெண்டுல்கர் சந்தித்த பந்து வீச்சாளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. மக்ராத், ஷேன்வோன், மக்காயூன், வசீம் அக்ரம், அப்ரிடி, முரளி, ஜயசூர்யா, வாஸ் போன்ற அச்சுறுத்தும் வேகங்களுக்கும் சுழல்களுக்கும் தனது துடுப்பினால் பதிலளித்தார்.
சச்சின் சதம் அடித்தால் இந்தியா தோல்வியடையும் என்ற கருத்து ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டது. சச்சின் அடித்த 100 சதங்களில் 53 சதங்கள் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தன. டெஸ்ட் போட்டியில் 20 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 33 சதங்களும் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன. சச்சினின் 24 சதங்கள் அடித்த போட்டிகளிலேயே இந்தியா தோல்வியடைந்தது. பொன்டிங் அடித்த 71 சதங்களில் 55 போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
சாதனை நாயகனின் வாழ்விலும் ஒரு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரானபோது அணித் தலைவர் சச்சினின் தலைமையில் பெரிய சாதனை எதுவும் பதியப்படவில்லை. 2011ஆம் ஆண்டு தென் ஆபிரிக்கா போர்ட் எலிஸபெத் மைதானத்தில் பந்தை நகத்தால் சுரண்டியபோது பந்தைச் சேதப்படுத்தியதாக சச்சின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. நடுவர்களின் சில தவறான தீர்ப்புகளால் ரசிகர்கள் கொந்தளித்தபோது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.
புதிய பந்து வீச்சாளர்களின் ஒரே ஒரு குறிக்கோள் சச்சினின் விக்கெட்டைக் கைப்பற்றுவதே. பல பந்து வீச்சாளர்கள் அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த சச்சின் ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் அடித்துள்ளார். அடுத்த சாதனை ஒரு நாள் போட்டியில் 50ஆவது சதம், ஒரு நாள் போட்டிகளில் 96 அரைச் சதம் அடித்துள்ளார். நான்கு அரைச் சதம் அடித்தால் ஒரு நாள் அரங்கில் 100 அரைச்சதம் அடித்த பெருமையைப் பெறுவார்.

ரமணி
மெட்ரோநியூஸ் 23/03/2012

Tuesday, March 20, 2012

மிரட்டுகிறது தி.மு.க. மிரளுகிறது காங்கிரஸ்

இரு துருவங்களான ஸ்டாலினும் அழகிரியும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கைகோர்த்து பிரசாரம் செய்வதால் எதிர்க்கட்சிகள் அமைதி காக்கின்றன.
ஜெயலலிதாவின் செல்வாக்கை அம்பலப்படுத்தப் போவதாக சூளுரைத்திருக்கும் விஜயகாந்த் இடது சாரிகளை நம்பிக் களமிறங்கியுள்ளார்

சங்கரன் கோவில் இடைத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் அதை விடச் சூடான விவாதம் இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாக பதிலளிக்காமையினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இடது சாரிக் கட்சிகள் ஆகியவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தன. திருமாவளவனும் இவர்களுடன் இணைந்து வெளிநடப்புச் செய்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திராவிட முன்னேற்றக் கட்சித் தலைவர் கருணாநிதியும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனீவாவில் ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மன்மோகன் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் பதில் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள பதிலும் தெளிவான முடிவு பற்றிக் குறிப்பிடவில்லை. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எழுதிய கடிதங்களும் ஏனைய தமிழகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோள்களும் தமிழக மக்கள் அனுப்பிய தந்திகளும் மிக.
ஏனைய பிரச்சினைகளை விட இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாகவே மிக அதிகமான கடிதங்களும் அறிக்கைகளும் இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலை என்ன என்று தெரிந்துள்ளது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்யப் போகிறது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகிலும் மாறி மாறி சவாரி செய்த காங்கிரஸ் கட்சி இப்போது நிரந்தரமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் சவாரி செய்கிறது. காங்கிரஸைத் தொடர்ந்தும் முதுகில் சுமந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும் சரிந்து விடும்.

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகளில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையின் முடிவை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொண்டர்களின் விருப்பத்தை தலைமை நிறைவேற்ற வேண்டும் என்பதை கருணாநிதி உணர்ந்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளன. இந்திய மத்திய அரசியல் பங்காளியான திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்புள்ளது.
ஏனைய கட்சிகள் செய்வதைப் போன்று ஆர்ப்பாட்டம், வெளிநடப்பு என்பனவற்றுடன் திராவிட முன்னேற்றக் கழகம் நின்று விடுமா அல்லது அதையும் தாண்டி ஆக்கபூர்வமான நடவடிக்கையை அது எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஐந்து அமைச்சர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளனர். ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தினால் ராஜாவும் தயாநிதிமாறனும் அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்தார்கள். இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுவதனால் மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய அரசில் இருந்து வெளியேறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இப்போது இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தமிழக அரசியலில் அவ்வப்போது இலங்கைப் பிரச்சினை தலைதூக்குவது வழமை. இப்போதும் அதேபோன்ற சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தல் பிரசாரத்தில் இலங்கை விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா. சட்ட சபைத் தேர்தலின் போது சங்கரன் கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 10,365 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மறைந்த அமைச்சர் கருப்புசாமி 72297 வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் உமாமகேஸ்வரி 61902 வாக்குகளைப் பெற்றுக் கடந்த தேர்தலை விட அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேறக் கழகம் பிரசாரம் செய்கிறது. இதேபோன்று ஒரு நோக்கத்துடனேயே திராவிட முன்னேற்றக் கழகமும் களம் இறங்கியுள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தெரியும். அதேவேளை கடந்த தேர்தலை விட கூடுதலான வாக்குகள் பெறுவதற்காகவே திராவிட முன்னேற்றக் கழகம் களம் இறங்கியுள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் எதிரும் புதிருமாக பிரசாரம் செய்த ஸ்டாலினும் அழகிரியும் ஒன்றாகப் பிரசாரம் செய்கிறார்கள். கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியினால் இருவருக்குமிடையேயான பிரச்சினைகளையே ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்கள் அழகிரியும் ஸ்டாலினும் கை கோர்த்து பிரசாரம் செய்வதைப் பொறாமையுடன் பார்க்கின்றன.
ஜெயலலிதாவை முதல்வராக்குவதில் பெரும் பங்கு வகிப்பதில் விஜயகாந்துக்கும் இடதுசõரிகளுக்கும் அதிக பங்கு உள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தனது செல்வாக்கை வெளிப்படுத்த களம் இறங்கியுள்ளார் விஜயகாந்த். விஜயகாந்த்துக்கு பக்க துணையாக இடதுசாரிகள் களம் இறங்கியுள்ளனர். சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவினால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது.
கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினை, மின் வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பனவற்றினால் ஜெயலலிதாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதா சரிந்துள்ளதா என்பதை தீர்மானிக்கும் களமாக சங்கரன்கோவில் இடைத் தேர்தல் உள்ளது.
வர்மா

சூரன்,ஏ,ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு18/03/12

Monday, March 19, 2012

கிரிக்கெட்டில் இருந்து விலகியது பெருஞ்சுவர்

இந்தியப் பெருஞ்சுவர் என கிரிக்கெட் இரசிகர்களினால் செல்லமாக அழைக்கபட்ட ராகுல் ட்ராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடிய பின்னர் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இப்போது டெஸ்ட் போட்டியிலிருந்தும் முதல் தரப்போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்று விட்டார். ராஜஸ்தான் ரோயல் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராகுல் ட்ராவிட் ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்தும் விளையõடுபவர் என்பது இரசிகர்களுக்கு சற்று மனத்திருப்தியளிக்கும் செய்தியாக உள்ளது.
ஜென்டில்மன் விளையாட்டு என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டில் உள்ள ஒருசில ஜென்டில்மன்களில் ராகுல் ட்ராவிட்டும் ஒருவர். தன் மீது விமர்சனக்கணைகள் பாய்ந்த போது விமர்சகர்களின் வாயை அடைத்துவிட்டார். இங்கிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் ட்ராவிட் சரியாக ஆடவில்லை என்பதனால் கண்டன கணைகள் பாய்ந்தன. இன்று அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததும் பாராட்டு மழையில் சிக்கித் திணறுகிறார். சச்சின், ட்ராவிட், லஷ்மன் என்ற மும்மூர்த்திகளின் கையில் தான் இந்தியாவின் வெற்றி தோல்வி இருந்தது. ஒருவர் சறுக்கினாலும் இன்னொருவர் தூக்கிப்பிடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்வார். அந்த மூவரில் ஒருவர் இன்று ஓய்வுபெற்றுவிட்டார்.
அதிக வருமானம் தரும் விளையாட்டாக கிரிக்கெட் மாறிவரும் வேளையில், கிரிக்கெட்டை அர்ப்பணிப்புடன் விளையாடியவர் ட்ராவிட். துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு, விக்கெட் கீப்பர் ஆகிய சகலதுறைகளிலும் முத்திரைப்பதித்தவர். கிரிக்கெட்டை மிக நுணுக்கமாகப் பார்த்து ரசிப்பவர்களுக்கு ட்ராவிட்டின் விளையாட்டின் நுட்பம் புரியும். சில வீரர்கள் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு ஷொட்களைத்தான் விளையாடுவார்கள். கிரிக்கெட்டின் சகல சொட்களையும் கள நிலைக்கு ஏற்ப விளையாடியவர் ட்ராவிட்
மத்திய பிரதேச இத்தூரில் 1973ஆம் ஆண்டு பிறந்த ராகுல் ட்ராவிட் கர்நாடக மாநில பெங்களூரில் வளர்ந்தார். 12 வயதில் கிரிக்கெட்டில் புகுந்தார் கர்நாடக
மாநிலத்திற்காக15,17,19 வயதுக்குட்பட்ட அணியில் பங்குபற்றினார். 1991ஆம் ஆண்டு கல்லூரி மாணவனாக இருந்தபோதே ரஞ்சி கிண்ணப்போட்டியில் கர்நாடக அணிக்காக விளையாடினார்.

1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடினார். அன்று மூன்று ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதே ஆண்டு இங்கிலாந்தில் முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி 95 ஓட்டங்கள் எடுத்து கிரிக்கெட் உலகின் பார்வையைத் தன் பக்கம் இழுத்தார்.
1999ஆம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியில் விளையாடினார். தனது முதலாவது உலகக் கிண்ணப்போட்டியில் இரண்டு சதங்களுடன் 461 ஓட்டங்கள் அடித்தார். 1999ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் வீரர் ஒருவரின் அதிகூடிய ஓட்டம் இதுவாகும்.
2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் துணைக் கப்டனாக செயற்பட்டார். அப்போது இந்தியா இறுதிச் சுற்று வரை முன்னேறியது. 2005ஆம் ஆண்டு இந்திய அணித் தலைவர் பதவி அவரைத் தேடிவந்தது. இவரது தலைமையிலான இந்திய அணி மேற்கத்தையத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் டெஸ்ட்தொடரை வென்றது. 2007 ஆம் ஆண்டு ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி உலக்கிண்ணப் கிரிக்கெட் போட்டியில் விளையாடி முதல் சுற்றிலேயே வெளியேறியது.அப்@பா@த தலைமைப் பதவியைத் துறந்தார்.
2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட்போட்டியில் இந்தியா ஐந்து பொ@லா ஒன் எனத் தடுமாறியது. அப்போது ட்ராவிட் , லக்ஷ்மன் ஜோடி 281 ஓட்டங்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற உதவியது. ட்ராவிட் 180 ஓட்டங்கள் எடுத்தார்.
2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மூன்று சதம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக ஒரு சதம் அடித்தார்.
200304ஆம் ஆண்டு நியூஸிலாந்து அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு எதிராக இரட்டைச்சதம் அடித்தார். அடிலயிட்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 556 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கட்டுக்களை இழந்து 85 ஒட்டங்கள் எடுத்த போது தனி ஒருவராகப் போராடி 223 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணைபுரிந்தார். அப்போது வெளிநாட்டில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.
2004ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடிய போது காயம் காரணமாக கங்குலி விளையாடவில்லை. அன்றைய போட்டிக்கு ராகுல் ட்ராவிட் தலைவராக செயற்பட்டார். சச்சின் டெண்டுல்கார் முதல் இன்னிங்ஸில் 194 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தõர். சச்சினின் இரட்டை சதத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் குமுறினார்கள். ட்ராவிட்டின் முடிவு பலத்த சர்ச்சையை உண்டாக்கியது. இதுபற்றிய
வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. அந்த டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றதனால் சர்ச்சை அடங்கியது.
ட்ராவிட்டின் ஆட்டத்திறன் இன்னமும் வற்றிவிடவில்லை. இங்கிலாந்தில் இந்திய வீரர்கள் அனைவரும் தடுமாறிய போது நான்கு டெஸ்களில் மூன்று சதங்கள் அடித்து நம்பிக்கையூட்டியவர். அவுஸ்திரேலியாவில் ட்ராவிட் உட்பட சகலரும் மட்டையத் தூக்கவில்லை. அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களின் முன் இந்திய வீரர்களால் நிலைத்து நிற்கமுடியவில்லை.








மூத்த வீரர்கள் ஓய்வு பெறவேண்டும் என்ற விமர்சனத்துக்கு மதிப்பளித்து ட்ராவிட் ஓய்வுபெற்று விட்டார். இளம் வீரர்களுக்கு வழிவிடுவதற்காக ஓய்வுபெறுகிறேன் என்று அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ட்ராவிட் லக்ஷ்மன், சச்சின் ஆகியோரின் இடத்தை நிரப்பக்கூடிய வீரர்கள் எவரும் இந்திய அணியில் இல்லை. யுவராஜ் ரெய்னா ஆகி@யார் டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எவரும் டெஸ்ட் போட்டியில் நின்று நிலைக்கவில்லை.
மூத்த வீரர்கள் ஓய்வுபெற வேண்டும் என்று குரல் கொடுக்கும் கங்குலி, கபில்தேவ் ஆகியோர் தாம் விளையாடிய போது கௌரவமாக ஓய்வு பெறவில்லை. ஆசிய வீரர்கள் ஓய்வு பெறுவதை கௌரவக் குறைச்சலாக கருதுகிறார்கள். கும்ப்ளே, கங்குலி, ட்ராவிட் போன்ற வீரர்கள் தனித்துவமானவர்கள். அவர்களைப் போன்ற வீரர்கள் உருவாகமுடியாது. அவர் இல்லாத இந்திய கிரிக்கெட் அணியைத் தாங்கப் போவது யார் என்ற இரசிகர்களின் கேள்விக்கு விடை கூற யாராலும் முடியாது. ட்ராவிட் என்ற அற்புதமான வீரனை கிரிக்கெட் இழந்து விட்டது. ட்ராவிட்டெஸ்ட் உலகில் இரண்டாவது வீரர் : ட்ராவிட் 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். இவர் மொத்தம் 13 ஆயிரத்து 288 ஓட்டங்கள் குவித்துள்ளார். டெஸ்ட் உலகில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்பதில் ட்ராவிட் 2வது இடத்தில் உள்ளார். இவர் இந்தியாவின் தடுப்புச் சுவர் என வர்ணிக்கப்பட்டவர்.
ரமணி
மெட்ரோநியூஸ் 16/03/12








Wednesday, March 14, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்24

முதல் இரவுக் கனவுகளுடன் பள்ளி அறையில் காத்திருந்தவனுக்கு மனைவி இன்னொருவனின் காதலி என்ற உண்மை தெரிய வருகிறது. காதலனை மறக்க முடியாதுசந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணத்திற்கு சம்மதித்தவள் தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள். காதலனுடன் சேர்த்து வைப்பதாகத் தன் மனைவியிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு மனைவியின் காதலனை தேடுகிறான். இந்த படம் எப்படி முடியும் என்ற பரப்பரப்புடன் 1981 ஆம் ஆண்டு வெளியான படம் அந்த 7 நாட்கள்.
திரைப்படத்திற்கு இசை அமைக்கும் கனவுடன் ஆமோனியப் பெட்டியுடன் பாலக்காட்டிலிருந்து சென்னைக்குச் செல்லும் பாக்கியராஜ் அம்பிகாவின் வீட்டில் வாடகைக்கு குடி இருக்கிறார். பாக்கியராஜின் உதவியாளராக வருகிறார் காஜா ஷெரீப். பாக்கியராஜும் காஜா ஷெரீபும் அடிக்கும் லூட்டிகள் தியேட்டரை கலகலப்பாக்கின. சிக்கலான பல பிரச்சினைகளை நகைச்சுவையுடன் தீர்த்து வைக்கிறார் பாக்கியராஜ்.
அம்பிகாவின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த பாக்கியராஜ் அம்பிகாவின் மனதில் குடிப்புகுந்தார். இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். மலையாள மணத்துடன் பாக்கியராஜ் பேசும் தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்தியது. பாக்கியராஜ் அம்பிகா காதல் வெளிச்சத்துக்கு வந்ததால் அம்பிகாவின் வீட்டில் பூகம்பம் வெடிக்கிறது. பாக்கியராஜை மனதில் இருத்தி வேண்டா வெறுப்பாக டாக்டர் ராஜேஷுக்கு கழுத்தை நீட்டுகிறார் அம்பிகா. முதலிரவன்று அம்பிகாவின் மனதில் பாக்கியராஜ் இருப்பதை அறிந்த ராஜேஸ் பாக்கியராஜுடன் அம்பிகாவை இணைத்து வைப்பதாக உறுதிக்கூறி தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என்று அம்பிகாவிடம்சத்தியம் வாங்குகிறார்.
பாக்கியராஜைச் சந்திக்கும் ராஜேஷ் தான் அம்பிகாவின் கணவன் என்ற உண்மையை கூறாது தனது படத்துக்கு இசை அமைக்கும் படிவேவண்டுகோள் விடுகிறார். தனது இலட்சியம் நிறைவேறப் போவதால் மகிழ்ச்சியடைந்த பாக்கியராஜ் உடனே ஒப்புக்கொள்கிறார். தனது படத்தின் கதை என்று தனது கதையைசொல்கிறார் ராஜேஷ். அந்த கதையில் நாயகன் தான் என்பதையும் காதலி அம்பிகா என்பதையும் காதலியின் கணவன் ராஜேஷ் என்பதையும் அறியாத அப்பாவி பாக்கியராஜ். எப்படி பாடல் இருக்க வேண்டும் எப்படி காட்சி அமைக்க வேண்டும் என்று ராஜேஷுடன் ஆலோசனை நடத்துகின்றார்.
பாக்கியராஜ் ராஜேஷ் காஜா ஷெரீப் ஆகிய மூவரும் ஒருநாள் படக்கதையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் ராஜேஷின் தாய் இறந்துவிட்டதாகத் தொலைபேசி அழைப்பு வருகின்றது. அப்போது அடுத்த காட்சி என்ன என்று பாக்கியராஜ் கேட்கிறார். கதாநாயகியை மணமுடித்தவரின் தாய் இறந்துவிட்டதாக கூறுகிறார் ராஜேஷ். இறந்தது ராஜேஷின் தாய் என அறியாத பாக்கியராஜ் நல்ல திருப்பம் ஆடியன்ஸ் அதிர்ச்சியடைவார்கள் என்று கூறி சோக இசை ஒன்றை ஆர்மோனியத்தில் வாசிப்பார். தாய் இறந்தது தாக்காத ராஜேஷ் அழுகிறார். அதனை பார்த்த பாக்கியராஜ் ஆயான் அழுது ஆயான் அழுது. தியேட்டரே ஓவென்று அழும் என்று காஜா ஷெரிப்பிடம் கூறி உச்சஸ்தானியில் இசை அமைக்கிறார்.
கதையை இன்னும் நீடிக்காது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பிய ராஜேஷ். பாக்கியராஜை தன் வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார். ராஜேஷின் வீட்டில் அம்பிகாவை கண்ட பாக்கியராஜ் அதிர்ச்சியடைகிறார். அம்பிகாவின் மனதில் தான் இல்லை என்று கூறிய ராஜேஷ் அம்பிகாவை ஏற்றுக் கொள்ளும்படி பாக்கியராஜிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.ராஜேஷ் தனது கதையை கூறியபோது காதலனும் காதலியும் இணைய வேண்டும் என்று கூறிய பாக்கியராஜ் அம்பிகாவை ஏற்றுகொள்ள மறுக்கிறார். தாலியை கழற்றி எறிந்துவிட்டு வந்தால் தான் அம்பிகாவை ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறார் பாக்கியராஜ். தாலியை கழற்ற முடியாது என்கிறார் அம்பிகா.
பாக்கியராஜும் அம்பிகாவும் ஒன்று சேர்வார்களா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு கடைசியில் தாலிக்கு முக்கியத்துவம் கொடுத்து ராஜேஷயும் அம்பிகாவையும் சேர்த்து வைக்கிறார் பாக்கியராஜ்.
ஆர்மோனிய பெட்டியுடனும் நாலுமுழ வேட்டியுடனும் படம் முழுக்க வந்து கலகலப்பை ஏற்படுத்துகிறார் பாக்கியராஜ். பாக்கியராஜுக்கு இணையாக கலக்கினார் காஜா ஷெரிப். கல்லாப்பெட்டி சிங்காரமும் தன்பங்குக்கு சிரிக்க வைத்தார். ராஜேஷ் அம்பிகா ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்தனர். குறைந்த பாத்திரங்களுடன் நிறைந்த படத்தைத் தந்தார் பாக்கியராஜ்.
கதை வச‌னம் டைரக்ஷன் பாக்கியராஜ் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் எண்ணி இருந்தது ஈடேற, கவிதை அரங்கேறும் நேரம், தென்றலது உன்னிடத்தில் சொல்லவந்தசேதி என்னவோ போன்ற பாடல்கள் மனதை நிறைத்தன. வில்லங்கமான ஒரு திரைக்கதையை தனக்கே உரிய நகைச்சுவையுடன் தந்தார் பாக்கியராஜ்.வோசாத்தின் என்ற பெயரில் ஹிந்தியிலும் வெளியாகி வெற்றி பெற்றது. தனது மனைவி இன்னொருவனின் காதலி என அறிந்த நடிகர் ச‌ந்திரபாபு காதலர் தனைச் சேர்த்து வைத்தார்.ச‌ந்திரபாபுவின் வாழ்க்கையைத்தான் அந்த 7 நாட்கள் படமாக எடுத்ததாக‌ அண்மையில் பாக்கியராஜ் தெரிவித்தார்.
ரமணி
மித்திரன்26/02/12

Sunday, March 11, 2012

வெற்றிக்களிப்பில் ஜெயலலிதாதோல்விப் பயத்தில் எதிர்க்கட்சிகள்

தமிழக அரசின் செல்வாக்குக்குச் சவால்விடும் சங்கரன் கோவில் இடைத் தேர்தல் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. 21 ஆம் திகதி இடைத் தேர்தல் முடிவு வெளியாகும். சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது விஜயகாந்துடனும் இடதுசாரிகளுடனும் கைகோர்த்து பிரமாண்டமான வெற்றியைப் பெற்று முதல்வர் அரியாசனத்தில் வீற்றிருக்கும் ஜெயலலிதா விஜயகாந்தையும் இடதுசாரிகளையும் கைவிட்டுத் தனது செல்வாக்கை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளõர்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் ஜெயலலிதா கருணாநிதி, விஜயகாந்த், வைகோ ஆகியோருக்கு இடையேயான போட்டியாக இருக்குமே தவிர அவர்களின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களின் போட்டியாக இருக்காது. சட்ட சபைத் தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்றதை விட அதிகப்படியான வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்கு முக்கியமானவர்கள் விஜயகாந்தும் இடதுசாரிகளும் என்பது வெளிப்படை. ஆனால் இதனை ஜெயலலிதா நிராகரித்துள்ளõர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அலையே தன்னை முதல்வராக்கியதாக கருதுகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான ஊழல் அலையும் ஜெயலலிதாவின் வெற்றிக்குப் பிரதான காரணம். இடதுசாரிகளும் விஜயகாந்தும் இல்லையென்றால் இவ்வளவு பிரமாண்டமான வெற்றியை ஜெயலலிதா பெற்றிருக்க முடியாது.
ஜெயலலிதாவின் சவாலை ஏற்று சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ள விஜயகாந்த் தனது செல்வாக்கை ஜெயலலிதாவுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தல்களில் ஜெயலலிதாவுக்குச் சவாலாக இருந்தார் விஜயகாந்த். ஆயினும் சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. ஜெயலலிதாவின் சவாலுக்குப் பதிலளிப்பதற்காகவே தனது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலமான கோட்டைகளில் சங்கரன்கோவில் தொகுதியும் ஒன்று. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அன்றைய தேர்தலின் போதும் சங்கரன்கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆகையினால் சங்கரன் கோவில் தொகுதியில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் உள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் செல்வாக்கைச் செல்லாக் காசாக்கப் போவதாக கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ள விஜயகாந்தால் வெற்றி பெற முடியாத அதேவேளை ஜெயலலிதாவின் செல்வாக்கைச் சிதறடிக்கவும் முடியாது.
சங்கரன்கோவில் எனது மண். இங்கு போட்டியிட்டு மூக்குடைய வேண்டாம் என்ற கோஷத்துடன் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் வைகோ. வைகோவை முன்பொரு தடவை குப்புற விழுத்திய தொகுதி சங்கரன் கோவில் என்பதை மறந்துவிட்டு பிரதான கட்சிகளுக்கு சவால் விட்டு சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் வைகோ. இடைத் தேர்தல் அறிவிப்பு முன்பே தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த வைகோவுக்கு வெற்றி மிகத் தூரத்திலேயே உள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தனது இருப்பை வெளிப்படுத்த நினைக்கும் வைகோவின் எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடிய சூழ்நிலை இல்லை.

திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்ததனால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்க்கவே திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பியது. வைகோவும் விஜயகாந்த்தும் தமது பலத்தை வெளிக்காட்டுவதற்கு சங்கரன்கோவில் இடைத் தேர்தலை காரணமாக்கியதால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை நிரூபிப்பதற்காகவே சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார் கருணாநிதி.
தமிழக அமைச்சர் பட்டாளம் சங்கரன்கோவில் தொகுதியில் முகாமிட்டு பிரசாரத்தை நடத்துகிறது. அரச அதிகõரம் அத்து மீறல் தாராளமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தேர்தல் நடைபெற முன்பே வெற்றி நமதே என்ற எண்ணத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தொண்டர்கள் பிரசாரம் செய்கின்றனர். சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வெற்றியை ஜெயலலிதாவின் கையில் ஒப்படைப்போம் என்று கங்கணம் பூண்டுள்ளனர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்.
தமக்கிடையேயான பிரச்சினைகளையும் தலைமைத்துவப் போட்டிகளையும் புறத்தே ஓரம் கட்டி வைத்துவிட்டு சங்கரன் கோவில் இடைத் தேர்தல் வெற்றியை கருணாநிதியின் காலடியில் சமர்ப்பிப்பதற்காக ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்டாலின் அழகிரி ஆகியோருக்கிடையோன பிரச்சினை பெரிதாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறையும் அறிகுறி தெரியவில்லை. இவர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கெண்டு வருவதற்கு கருணாநிதி முயற்சி செய்யவில்லை. இவர்களின் பிரச்சினையால் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாகப் பிரிந்துள்ளது.
ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் அழகிரிக்கு ஆதரவாகவும் ஒரு சில தலைவர்கள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இன்னும் சிலர் இவர்கள் இருவர் பக்கமும் சாராது கருணாநிதியின் பின்னால் உள்ளனர். ஸ்டாலினுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் வெளிப்படையாக போர்க் கொடி தூக்கியுள்ளார். சங்கரன் கோயில் இடைத் தேர்தலின் பின்னர் ஸ்டாலின் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கிடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கலாம்.
ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், வைகோ ஆகியோர் தமது பலத்தை வெளிக்காட்டுவதற்காகச் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கிழந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஜெயலலிதா கருணாநிதி ஆகியோரின் உதவி இன்றி வைகோ விஜயகாந்த் ராமதாஸ் ஆகியோரே தமிழகத் தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் வீம்புக்காகத் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது பாரதீய ஜனதா கட்சி.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு11/03/12