Monday, December 20, 2021

காங்கிரஸை பலவீனப்படுத்தும் மம்தாவின் அரசியல்

இந்தியாவின் அடையாளமாக  இருந்த காங்கிரஸின் செல்வாக்கு சரிவை நோக்கிச் செல்கிறதுஇந்திய அரசியலில் இருந்து காங்கிரஸை அசைக்க முடியாது என்ற நிலைமாறிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளும் பலம் மிக்க தலைமையும் இல்லாததால் செல்வாக்கு உள்ள தலைவர்கள்  வேறு கட்சிகளில் ஐக்கியமாகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை  அழிக்க  வேண்டும் என்பதே  பாரதீய ஜனதாவின் திட்டம். அந்தத் திட்டத்தை மம்தா கனகச்சிதமாக அரங்கேற்றுகிறார்.பிரதமர் ஆசையில் சரத்பவார் முன்னர் காய் நகர்த்தினார்., மகாராஷ்டிரா தாண்டி அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. மகாராஷ்டிராவிலேயே கூட்டணி இல்லாமல் தனியாக நிற்க முடியாது. தன் உயரம் புரிந்து அவர் அடங்கிவிட்டார். அடுத்த பிரதமராவதற்கு  மம்தா முயற்சி செய்கிறார். அவருடன் பிரசாந்த் கிஷோர் கைகோர்த்துள்ளார்.

மோடியை கடுமையாக எதிர்ப்பதில் மம்தா முன்னிலையில் இருகிறார். மோடியை எதிர்க்கும் வலிமை உள்ளவர்' என்பது மட்டுமே தேசிய அரசியலில் ஜெயிப்பதற்குப் போதுமான தகுதி இல்லை. வங்காளத்தைத் தாண்டி மம்தாவின் கட்சியோ, அந்தக் கட்சியின் கொள்கைகளோ, சின்னமோ யாருக்கும் தெரியாது.

கடந்த மே மாதம் மு..ஸ்டாலின், மம்தா பானர்ஜியின் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் புகழ் உச்சாணிக் கொம்பில் இருந்தது. குறிப்பாக மேற்கு வங்காளத்தில்  எதிர்க்கட்சியான பா..-வை 100 தொகுதிகளுக்குள் சுருக்கிக்காட்டினார். `  `இனி தேர்தல் பணிகளைச் செய்ய மாட்டேன்'   என்று அறிவித்து ஆச்சரியப்பட வைத்தார்.

 ஓகஸ்ட்டில் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு ஆர்வம் காட்டினார் பிரசாந்த் கிஷோர். ஆனால், `கட்சியில் எனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு வேண்டும்' என்று அவர் கேட்டார். காங்கிரஸில் அவரை இணைக்க ராகுல் காந்தியும் விரும்பினார். 2014-ம் ஆண்டு பா..-வின் பிரதமர் வேட்பாளராக மோடி உருவெடுப்பதற்கு இருந்த முட்டுக்கட்டைகளைத் தன் யுக்திகள் மூலம் தகர்த்தவர் பிரசாந்த். 2024 தேர்தலில் தனக்கு அதை பிரசாந்த் செய்வார் என நினைத்தார் ராகுல். பிரசாந்த் கிஷோரின் நிபந்தனைகளை  காங்கிரச் கட்சி ஏற்கவில்லை. இப்போது மம்தாவுடன் இணைந்து காங்கிரஸை வீழ்த்த வியூகம் வகுக்கிறார்.

மோடி சந்தித்த மிக மோசமான தோல்வியாக, மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் தோல்வி கருதப்படுகிறது. எனவே, `மோடியை வீழ்த்தும் வலிமை மம்தாவுக்கே இருக்கிறது' என்ற அறைகூவலுடன் தேசிய அரசியலில் மம்தாவைக் களமிறக்க ஆசைப்படுகிறார் பிரசாந்த். மம்தாவுக்கும் அந்த ஆசை இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது

. அசாம் காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்தவர் சுஷ்மிதா தேவ். திரிணாமுல் காங்கிரஸுக்குத் தாவிய முதல் தலைவர் அவர்தான். அசாமிலிருந்து அவரைக் கூட்டி வந்து, மேற்கு வங்காளத்தில் ராஜ்ய சபா எம்.பி ஆக்கி, திரிபுரா மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் மம்தா.

அடுத்ததாகத் தாவியவர், கோவா முன்னாள் காங்கிரஸ் முதல்வர் லூசின்ஹோ ஃபெலிரோ. ஏழு முறை எம்.எல்.-வாக இருந்த அவரைக் கூப்பிட்டு, வழக்கம் போல மேற்கு வங்காளத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு அனுப்பியிருக்கிறார் மம்தா. விரைவில் வரவிருக்கும் கோவா சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தீவிரமாகத் தயாராகிவருகிறது. ராகுல் அங்கு ஒரு சுற்று பிரசாரத்துக்கும் போய் வந்துவிட்டார். அங்கு மம்தா தனியாக ஒரு கூட்டணி உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியும் ஆர்வமாகக் களத்தில் இருக்கிறது.

 மேகாலயா முதல்வராக ஒன்பது ஆண்டுகள் பதவியில் இருந்தவர் முகுல் சங்மா. காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த இவர் தலைமையில் அங்கு 12 காங்கிரஸ் எம்.எல்.-க்களைக் கட்சி மாறச் செய்திருக்கிறார் மம்தா. இதன்மூலம் மேகாலயா மாநில சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி ஆகியிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.

எதிர்க்கட்சியின் தலைவர்களை வளைத்துப் போடுவதில் பாரதீய ஜனதா கில்லாடி. அந்த வேலையை மம்தா கையில் எடுத்துள்ளார்.

  நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுக்க   52 தொகுதிகளில்  மட்டும் வெற்ரி பெற்று எதிர்க்கட்சி ஆனது காங்கிரஸ்.  அந்த இடத்தைப்  பிடிக்க மம்தா முயற்சி செய்கிறார்.  சமீபத்தில் நடந்த திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்து போட்டியிட்டது. ஆனால், எங்கும் அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. கோவா தேர்தல் பற்றி வரும் கணிப்புகள்கூட, அங்கு திரிணாமுல் காங்கிரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே சொல்கின்றன. அந்த நேரப் பரபரப்பு தாண்டி அரசியல் விளைவுகள் எதையும் மம்தா எங்கும் ஏற்படுத்தவில்லை.

தேசிய அரசியல் மீதான அபிலாஷை இதற்கு முன்பு இங்கு பல தலைவர்களுக்கு வந்திருக்கிறது. அவர்களில் ஓரளவு ஜெயித்தவர் என்று மாயாவதியைச் சொல்லலாம். உத்தரப் பிரதேசத்தைத் தாண்டிப் பல மாநிலங்களில் அவருக்கு எம்.எல். மற்றும் எம்.பி-க்கள் கிடைத்தார்கள்.   கர்நாடகா வரை அவரால் தாக்கம் செலுத்த முடிந்தது. அதற்கு, பகுஜன் சமாஜ் கட்சிக்குக் கிடைத்த தலித் சமூக ஆதரவு முக்கியமான காரணம்.

`காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பே இப்போது இல்லை' என்று  சொல்கிறார் மம்தா. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்காமல் தனி ஆவர்த்தனம் செய்கிறது அவர் கட்சி.

`வலிமையான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்குவதில் காங்கிரஸின் இடம் முக்கியமானதுதான். ஆனால், அதற்குத் தலைமை தாங்கும் உரிமை காங்கிரஸுக்கு மட்டுமே சொந்தம் இல்லை. ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பைத் தேர்வு செய்ய வேண்டும்' என்று இப்போது சொல்கிறார் பிரசாந்த் கிஷோர். காங்கிரஸுக்கும் மம்தா கட்சியினருக்குமான மோதல் இப்போது உக்கிரமாகியிருக்கிறது.

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் பா.. தலைவர்கள் இந்த மோதலை ஒரு புன்சிரிப்புடன் வேடிக்கை பார்க்கிறார்கள்.

No comments: