Tuesday, December 7, 2021

அஸ்வினின் குறும்பு

இந்தியா-நியூசிலாந்து தொடரில் இந்தியா 1-0 என்று தொடரைக் கைப்பற்றியதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் பகிர்ந்துள்ள படத்தில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவெனில், இந்தியா-நியூசிலாந்து   வீரர்களின் பெயர்களைச் சேர்த்து வாசித்தால் அக்சர், படேல், ரவீந்திரா, ஜடேஜா என்று வரும்

நியூஸிலாந்து அணியின் இந்திய வம்சாவளி வீரர், மும்பையின் அஜாஸ் படேல் இந்த டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 இந்திய விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஜிம் லேக்கர், அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு சாதனையாளர் ஆனார். மேலும் ஒரே டெஸ்ட்டில் அதுவும் தோற்ற டெஸ்ட் போட்டியில் எதிரணியினரின் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உலகச் சாதனையாளரும் ஆனார் அஜாஸ் படேல். 


இவருடன் ரச்சின் ரவீந்திரா, இவர் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர் பெயரை தன்னகத்தே கொண்ட இந்திய வம்சாவளி வீரர். இவர் கடந்த டெஸ்ட் போட்டியில் 91 பந்துகள் ஆடி 18 ஓட்டங்கள் சேர்த்து கடைசி வரை நின்று டெஸ்ட்டை டிரா செய்தார், இவருடன் நின்றது அஜாஸ் படேல்.

 கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அக்சர் படேல் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மும்பை டெஸ்ட் போட்டியில் அக்சர் படேல் இரண்டாவது இன்னிங்ஸில் 26 பந்துகளில் 41 ஓட்டங்கள் விளாசி டிக்ளேர் செய்வதை உறுதி செய்தார். ஆகவே அக்சர் படேல், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர் தெரியுமாறு 4 பேரும் நிற்குமாறு ஒரு புகைப்படத்தை அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

அந்தப் படத்தைப் பகிர்ந்துள்ள வாசகத்தில், “உலக சாம்பியன்களை வென்று தொடரை கைப்பற்றியுள்ளோம். வான்கடேவில் டெஸ்ட் போட்டியை வெல்வது பற்றி உண்மையில் பேருணர்வு ஏற்படுகிறது. மயங்க் அகர்வால் விலைமதிப்பற்ற இன்னிங்சை ஆடினார். அஜாஸ் படேல் கிரேட் பவுலிங். நார்த் ஸ்டேண்ட் கேங்கிடமிருந்து பார்வையாளர்கள் பகுதியில் பெரிய ஆதரவு. அதற்கு நன்றிஎன்று அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தின் மூலம் கிரிக்கெட்டில் நட்புணர்வையும் புரிந்துணர்வையும் ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டையும் எதிரணியினரையும் பாராட்டும் பெருந்தன்மையும் ஒற்றுமையும் வலியுறுத்தினார்.

No comments: