Sunday, May 1, 2022

காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோர் மறுப்பு

இந்திய அரசியலில் திருப்பு முனையை ந்நெபடுத்தும் பிரசாந்த்கிஷோர் காங்கிரச் கட்சியில் சேரப்போகிறார்   அவருக்கு பெரிய பதவி காத்திருக்கிறது என கடந்த இரண்டு மாதங்களாக வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளை வைக்கப்பட்டுள்ளது.

``பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுப்பு தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையாவிட்டாலும் அவர் அளித்த ஆலோசனைகளுக்கு நன்றி" என  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா தன் ட்விட்டர் பக்கத்தில்,  பதிவிட்டு தெளிவு படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பான அந்தக் கட்சி மேலிடத்தின் ஆஃபரை நான் நிராகரித்து விட்டேன். நான் அந்தக் கட்சியில் இணைவதை விடவும், அந்த கட்சி தன்னுடைய ஆழமான கட்டமைப்பு பிரச்னைகளில் கவனம் செலுத்தி சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதை நான் என்னுடைய கோரிக்கையாக முன்வைக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் , குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வியூகம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

அதில் காங்கிரஸில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியானது. மேலும், காங்கிரஸ் தலைமை பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை ஏற்று அது தொடர்பாக மே 13 முதல் மே 15 வரை ராஜஸ்தானின் உதய்பூரில் `நவ் சங்கல்ப சிந்தன் ஷிவிர்' என்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பதற்கு மூத்த அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

 

  2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடளுமன்றத்  தேர்தலில் இருந்து, காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கட்சித் தலைவராக இருந்த சோனியாவின் மகன் ராகுல், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார்.இதையடுத்து, தற்காலிக தலைவராக சோனியா மீண்டும் பொறுப்பேற்றார்.

ஆனாலும் பல தலைவர்கள், ராகுலுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். கட்சியின் முக்கிய முடிவுகளையும் ராகுலே எடுத்து வந்தார். இதனால், அதிருப்தி அடைந்த பல மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறத் துவங்கினர். இதனால் கட்சி கலகலத்தது.

இந்நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவர் நியமனம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் போர்க்கொடி துாக்கினர். 'ஜி - 23' என்றழைக்கப்படும், இந்த 23 அதிருப்தி தலைவர்கள், கட்சியில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும்படி சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனாலும் பெரிய அளவில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கும் வரை, சோனியாவே தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் நிலவிய கோஷ்டிப்பூசல் தேர்தலில்  தோல்வியைக் கொடுத்தது.   பாரதீய ஜனதாவுக்கு எதிரான  வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில், திரிணமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி போன்ற கட்சிகள் ஈடுபட்டுள்ளன.இந்தக் கூட்டணியில், காங்கிரஸுக்கு இடமில்லை என அக்கட்சிகள் கூறின.தேசிய அளவில் கட்சியின் செல்வாக்கு அதல பாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில், 2024 தேர்தலை சந்திப்பது தொடர்பாக காங்கிரசுக்கு ஆலோசனை வழங்க, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முன்வந்தார்.

 அவர் சோனியாவுடன் பல முறை பேச்சு நடத்தினார். இதனால், கட்சியின் மீது புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார் சோனியா. கட்சிக்கு இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது. தேசிய அளவில், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாது என்று பேசும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹரியானாவின் புதிய மாநிலத் தலைவராக, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆதரவாளரான உதய் பான் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஹரியானா மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவராக ஹூடா இருந்தாலும், ஜி - 23 குழுவில் அவர் உள்ளார். ஹூடா ஆதரவாளருக்கு பதவி வழங்கியதன் மூலம், அவரும், ஹூடாவும் அதிருப்தியாளர்கள் குழுவில் தொடர மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூடாவின் நண்பரான குலாம் நபி ஆசாதுக்கு, இது பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அவரைச் செயலிழக்கச் செய்தால், ஜி - 23யை வலுவிழக்கச் செய்யலாம் என்பது, சோனியாவின் கணக்கு.எனவே அவர், மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு, அதிருப்தியாளர்கள் குழுவில் பிளவை ஏற்படுத்தி உள்ளதுடன், ஹரியானாவில் இருந்த கோஷ்டி பூசலுக்கும் முடிவு கண்டுள்ளார். இதன் வாயிலாக, கட்சியில் சோனியாவின் கையே ஓங்கியுள்ளது, கட்சியினருக்கு உணர்த்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கமல்நாத், கட்சியின் சட்டசபை தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மற்றொரு மூத்த தலைவரான கோவிந்த் சிங், காங்., சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

'கட்சியில் ஒருவருக்கு ஒருவர் பதவி என்ற கொள்கையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. கமல்நாத் ஏற்கனவே .பி., மாநில காங்., தலைவராக பதவி வகிக்கிறார். இதனால், காங்., சட்டசபை தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்' என, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகமும், சோனியா காந்தியின் திட்டமும் கங்கிரஸுக்கு  கைகொடுக்கும் என தொண்டர்கள் நம்புகிறார்கள்.

No comments: