Tuesday, May 31, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 20

 தமிழ்த் திரை உலகில  சிவாஜியும்,எம்.ஜி.ஆரும்  கொடிகட்டிப்பறந்த பொற்காலத்தில் தனக்கென  ஒரு  பாணியை வகுத்து  உச்சம் தொட்டவர் ஜெய்சங்கர்.

நடிகர் திலகம், சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், காதல் மன்னன் ஜெமினி, நவரச நாயகன் முத்துராமன் , இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் வரிசையில்  மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் என ரசிகர்களால் கொண்டாடப்பப்பட்டவர். வெள்ளிக்கிழமை நாயகன் என்ற பெயரும் அவருக்கு உள்ளது. வெள்ளிக்கிழமையில் அவரது ஏதாவது ஒரு படம் வெளியாகும். சில வேளை இரண்டு, மூன்று படங்கள் வெளியான சந்தற்பங்களும்  உள்ளன.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், ஏவிஎம்.ராஜன் என பலரும் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. எம்.ஜி.ஆர் போல் ரவிச்சந்திரனும்,   சிவாஜியைப்போல்  ஏவிஎம்.ராஜனும் நடிக்க முயற்சி செய்த காலகட்டம். எவர் மாதிரியாகவும் நடிக்காமல், புதுமாதிரியாக நடித்தார் ஜெய்சங்கர்.

வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நிறைந்த பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்சங்கர், சோ நடத்திய 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' நாடக குழுவில் நடித்துக் கொண்டு  சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புத் தேடி அலைந்தார்.டிருந்தவர் 'இரவும் பகலும்' படத்தில் அறிமுகமானார்.   இயக்குநர் ஜோஸப் தளியத்தின் பார்வை  ஜெய்சங்கர் மீது பட்டபோது அவரது இருண்ட வாழ்க்கை பகலாக  மாறியது. முதல் பட்மே 100 நாள், இரட்டை வேடம்.

மற்ற நடிகர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட ஹாலிவுட் ஹீரோக்களின் சாயலில் நடிக்க ஆரம்பித்தார். சிஐடி சங்கர், வல்லவன் ஒருவன், கருந்தேள் கண்ணாயிரம், கங்கா, ஜக்கம்மா, ஜம்பு, எங்க பாட்டன் சொத்து போன்ற படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் நடித்தார். துணிவே துணை, கங்கா போன்ற படங்களில கவுபாய் கேரக்டர்களில் நடித்தார்.  ஜெய்சங்கரின் படத்தில் ஒரு கவர்ச்சி நடனம் கண்டிப்பாக இருக்கும்.   இவர் காலத்தில்தான் ராஜ்கோகிலா, ஜெயமாலா, ராஜ்மல்லிகா, போன்ற கவர்ச்சி நடிகைகளும் சினிமாவுக்கு வந்தார்கள்.

ஒருபக்கம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், இன்னொரு பக்கம் கெளபோய்  படங்கள், ’இவற்றுக்கிடையே  கே.சங்கரின் ‘பஞ்சவர்ணக்கிளி,   ஏவிஎம்மின் ‘குழந்தையும் தெய்வமும்  ப்பொன்ற படங்கள்  பெண்கள் பக்கம் இவரைக் கொண்டு சேர்த்தது. இளைஞர்களின் விருப்பமான  கீரோவான  ஜ்யெசங்கரை குடும்பப் பெண்களும் ரசிக்கத் தொடங்கினர்.  இவரின் சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் மாதச் சம்பளத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்து  தொடர்ச்சியாக படங்கள் பண்ணியது. ‘வல்லவன் ஒருவன், ‘சிஐடி.சங்கர் அவரை வசூல் சக்கரவர்த்தியாக்கிற்று. கத்திச்சண்டை போட்டு வந்த காலத்தில், டுமீல் டுமீல் சத்தங்கள், கோட்சூட், துப்பாக்கி சகிதமாக ஆங்கிலப் பட பாணியில், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் பின்னிப்பெடலெடுத்தார் ஜெய்சங்கர்.  ஜெய்சங்கரின் வளர்ச்சியால்  எம்ஜிஆர் ’ரகசிய போலீஸ் 115’, சிவாஜி ’தங்கச்சுரங்கம் மாதிரியான படங்களில் நடிப்பதற்கு  இவரின் படங்களே காரணம் என்பார்கள்.

  குடும்பக் கதைப் படங்களுக்கு நடுவே  நடுவே ’பொம்மலாட்டம், ’வரவேற்பு, ’பூவா தலையா என நகைச்சுவைப் படங்களை கலக்கினார். சிவாஜியுடன் இணைந்து நடித்த குலமா? குணமா? படமும் ஜெய்சங்கருக்கு பெண் ரசிகைகளை  அதிகரித்தது.

பாலசந்தரின் ‘நூற்றுக்கு நூறு மிகச்சிறந்த நடிகர் எனும் பெயரைப் பெற்றுத் கொடுத்தது.. எம்ஜிஆர், சிவாஜிக்கு சம்பளம் கொடுக்க முடியாத சிறிய தயாரிப்பாளர்களெல்லாம் ஜெய்சங்கரைத் தேடிச் சென்றார்கள்.  குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்தார் ஜெய்சங்கர். டார்ச்சர் கொடுக்காமல் நடித்துக் கொடுத்தார். ஈகோ எதுவும் பார்க்காமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார். மிகுந்த லாபத்துடன், தயாரிப்பாளர்கள் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.

ஜெய்சங்கரை வைத்து படம் எடுத்து ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார், நடுவீதிக்கு வந்தார் என்று எவராலும் விரல் நீட்டி கூற முடியாது. அவர் யாரிடமும் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று கேட்டதில்லை. முடிந்ததை கொடுங்கள் என்பார். அவர் வீட்டு பீரோ நிறைய திரும்பி வந்த காசோலைகள் பண்டல் பண்டலாக இருந்தது என்பார்கள்.

அதேபோல தோல்வி அடைந்த படங்களின் சம்பளத்தை திருப்பிக் கொடுப்பதை தொடங்கி வைத்தவரே ஜெய்சங்கர் தான். லைட் பாயிலிருந்து ரசிகன் வரை யார் அவரை உதவி என்று தேடிப்போனாலும் இருப்பதை கொடுக்கும் கொடை வள்ளலாக வாழ்ந்தார். எம்.ஜி.ஆரை சந்திப்பது கடினம். அப்படி சந்தித்து விட்டால் பெரியதாக அள்ளிக் கொடுப்பார். ஜெய்சங்கரை சந்திப்பது எளிது. அவர் சக்திக்கேற்ப கிடைக்கும். அதனால்தான் ஜெய்சங்கரை சின்ன எம்.ஜி.ஆர் என்பார்கள். அவர் கடைசி வரை சிறு தயாரிப்பாளர்களின் ஹீரோவாகவே இருந்தர். இளைஞர்களுடன் இணைந்து 'ஊமை விழிகள்' போன்ற படங்களிலும் நடித்தார். 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தார்.

 ஒருபக்கம், ஜேம்ஸ்பாண்ட் படங்களின் மூலமாக ஸ்டைலீஷ் மேனரிஸம் காட்டினார். இது எம்ஜிஆர் ரசிகர்களையும் கவர்ந்தது. இன்னொரு பக்கம், ‘பொம்மலாட்டம், ‘யார் நீ, ‘பூவா தலையா, ‘வைரம், ‘செல்வமகள், ‘டீச்சரம்மா, ‘குழந்தையும் தெய்வமும், ‘கண்ணன் வருவான், ‘மன்னிப்பு’, ‘அவசர கல்யாணம், ‘பட்டணத்தில் பூதம் , ‘உள்ளத்தில் குழந்தையடி மாதிரியான படங்களில் நடித்து, சிவாஜி ரசிகர்களையும் கவர்ந்தார். ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என பல ரூட்டுகளிலும் ஜெயித்தார் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கரின் படங்கள் முக்கால்வாசி பட்ஜெட் படங்கள். ஆனால் போட்ட பணத்தைவிட மூன்று நான்கு மடங்கு லாபம் தந்தன. யூனிட்டில் உள்ள எல்லோரிடமும் கனிவாகப் பேசும் பண்பு கொண்டவர் என்கிறார்கள். யாரைப் பார்த்தாலும் ‘ஹாய் என்று சொல்லி, நட்புடன் பேசுவதுதான் ஜெய்சங்கர் குணம். பின்னாளில், இந்த ‘ஹாய் என்ற வார்த்தையே ஜெய்சங்கரை அடையாளமாகிற்று.

கமல்,ரஜினி காலத்தில் ஜெய்சங்கருக்கு வாய்ப்பு குறைந்தது. எல்லோருக்கும் பிடித்த நடிகர், வில்லனாக நடித்தால் புதுமையாக இருக்கும் என ‘முரட்டுகாளையில் வில்லனாக நடிக்கக் கேட்டார்கள். சம்மதித்தார். இவரின் கதாபாத்திரம் மெருகேற்றப்பட்டது. அடுத்தடுத்து வில்லனாக வலம் வந்தார். ‘அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ‘ஊமைவிழிகள் குணச்சித்திரக் கேரக்டர், அடுத்தடுத்து நல்ல கேரக்டர்களை வழங்கக் காரணமாக அமைந்தது.

எல்லோருக்கும் பிடித்த நடிகர்களின் பட்டியலில் ஜெய்சங்கர் இருப்பதற்கு, அவரின் நடிப்பும் வேகமும் சிரித்த முகமும் மட்டுமே காரணமில்லை. அவரின் பண்பும் அன்பும் கனிவும் கருணையும் நிஜ ஹீரோவாக்கிற்று!

தமிழ் சினிமாவில் தன்னுடைய பெயரே கரக்டர் பெயராக, படத்தின் பெயராகக் கொண்டு அதிகம் நடித்தது ஜெய்சங்கராகத்தான் இருக்கும். ஜெய், சங்கர் என்றெல்லாம் இவருக்கு கேரக்டர் பெயர் அமைந்தன.

  ’ஜெய்சங்கரின் ரசிகை என்ற கதையை வைத்துக்கொண்டே ‘சினிமா பைத்தியம் என்ற படத்தை இயக்கினார் முக்தா சீனிவாசன். ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்த ஜெயசித்ரா, இதில் நடிகர் ஜெய்சங்கரின் ரசிகையாக நடித்திருப்பார். இதுவும் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத சாதனைதான்.

ஜெய்சங்கர் ஆகச்சிறந்த நடிகரோ இல்லையோ... ஆனால், தனித்துவம் மிக்க கலைஞர். அதனால்தான் இன்றைக்கும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறார். மக்கள் கலைஞர் என்று போற்றப்படுகிறார்.

No comments: