Tuesday, January 11, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 1

 ஒரு முழு நீள சினிமாப்படம் ஒரு வரிக் கதையில் இருந்து தான் உருவாகிறது. அந்த ஒருவரிக் கதைக்குள் பல பாத்திரங்கள், அந்தப் பாத்திரங்களைச் சுற்றி பல  கிளைக் கதைகள். கதைக்கு மெருகேற்ற பாட்டுகள், சண்டைகள், நடனங்கள் என நீட்சி பெறும் கற்பனைகள். இவை அனைத்தும் கனகச்சிதமாக  இணைவதுதான் சினிமா.

தாய்,சகோதரி, தாலி இவற்றைச் சுற்றிப் பின்னப்படும் கதைகள் சென்ரிமென்ராக  இருப்பதால் எந்தக் காலத்திலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. காதல், ஒருதலைக் காதல், முக்கோணக் காதல் கதைகள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. நட்புக்கு இலக்கணமான  படங்கள் ரசிக்க்கக் கூடியவையாக இருக்கின்றன. சகோதர பாசக் கதை உள்ள சினிமாக்கள் கண்ணீரைக் காணிக்கையாக்குகின்றன.

அதிகமான சினிமாக்கள் கற்பனைக் கதைகள். விதிவிலக்காக சரித்திர,புராண, மாயாஜால,துப்பறியும் படங்கள் சக்கைபோடு போட்டன. வீரபான்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழ, கர்ணன் போன்ற சரித்திர நாயகர்களின் படங்கள் வரலாற்றைத்  திரும்பிப் பார்க்க வைத்தன.

ஒரு சினிமாப்படம் உருவாகுவதற்காக நூற்றுக் கனக்கானவர்கள் உழைக்கிறார்கள். சினிமாப் படம் தயாராகும் போது பல சம்பவங்கள் நடைபெறுகின்றன.அவை எல்லாமே வெளிச்சத்துக்கு வருவதில்லை. சினிமாத் தயாரிப்புக்குப் பின்னால் மறைந்திருக்கும் சம்பவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதே  இந்தத் தொடரின் நோக்கம்.

கண்ணதாசனின் பாடல்களுக்குப் பின்னால் பல உண்மைக் கதைகள்  உள்ளன. தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கண்ணதாசன் சுவாரஸ்யமாக பாடல்கலில் தந்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு   வாலியின் பாடல்கள் வலுச்சேர்ததாக  விமர்சனங்கள் உள்ளன. அன்றைய அரசியல் பின் புலத்தில் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. ஆனால், வாலியின் பாடல்கள்  உண்மையாகின.  சினிமாப் படக் கதைக்கு ஏற்ப வாலி பாடல்களை எழுதினார். பிற்காலத்தில் அவை நிஜமாகின.

ஆக்கவும் அழிக்கவும்  ஒரு சொல் போதும் என்பார்கள். பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன்  முதலில் பேசிய சொல் "வெற்றி". அடுத்து வந்த பல படங்களில் " வெற்றி " என  சிவாஜி சொல்வதே முதலில் படமாக்கப் பட்டன.

தாயின் மீது பாசம் கொண்ட எம்.ஜி.ஆரின் படங்களில்  பூஜைக்குப் பின்னர் " அம்மா" என்று முதல் படப்பிடிப்பு நடக்கும் என்பார்கள். "நான் ஒரு ராசியில்லா ராஜா" என பாடிய பின்னரே ரி.எம்.செளந்தரராஜன் சினிமாப்பயணம் வீழ்ச்சியடைந்தது என்பார்கள். இளையராஜாவின்  முதல் பட ஒலிப்பதிவின் போது "டேக்" என்றதும் மின்சாரம் தடைப்பட்டது. அந்தச் சம்பவத்தை அபசகுனம் என இளையராஜாவின் காதுபடச் சொன்னார்கள். விதி விலக்காக இளையராஜாவின்  இசைப்பயணம் நா ளுக்கு நாள் வீரியம் கொண்டு உயர்கிறது.

திருவிளையாடல் படத்தில் ஒரு பாட்டுக்காக பலநாட்கள்  முயற்சி செய்தும் கண்ணதாசனால் பாட்டின் முதல் வரியைக் கூட எழுத முடியவில்லை.  அபோது அங்கு வந்த இசையமைப்பாளர் "என்ன கவிஞரே இன்று ஒரு நாள்  போதுமா? இன்னொருநாள் வேண்டுமா" எனக் கேட்டார். அந்த நொடியில் பிறந்த  காலத்தால் அழியாத பாடல் " ஒருநாள்  போதுமா இன்றொருநாள் போதுமா"

"நான் அளவோடு ரசிப்பவன் எதையும் அளவின்றி கொடுப்பவன்" என வாலி எழுதிய பாடலைப் பார்ததும், தொலை பேசியில் வாலிய அழைத எம்.ஜி.ஆர்  உங்கள் கைக்கு முத்தம் தர வேண்டும் என்றார். எதையும் அளவின்றி கொடுப்பவர் என்ற வசனம்  கொடைவள்ளல்  எம்.ஜி.ஆரை ஞாபகப்படுத்தியது.

 மறு முனையில் இருந்த வாலி "கலைஞரின் கைக்கு முத்தம் கொடுங்கள்" என்றார்.

எம்.ஜி.ஆரின் படத்துக்கு பாடல் எழுதி  பின்னர் மாலையில்  வாலியும், கருணாநிதியும் ஒன்றாக வெளியே செல்வதற்கு திட்டமிட்டனர்.  வாலியை அழைத்துச் செல்ல கருணாநிதி வந்து பாடல் முடிந்து விட்டதா என வினவினார். "நான் அளவோடு ரசிப்பவன்" என எழுதியுள்ளேன் அதற்கப்பால் நகரவில்லை என வாலி சொன்னார். "எதையும் அளவின்றி கொடுப்பவர்" என அடுத்த அடியை கருணாநிதி சொன்னார். அதன் பிற்பாடு முழுப்பாடலையும் எழுதி முடித்தார் வாலி.

ஜானகியின் குரல் எது,  நாதஸ்வர ஓசை எது என பிரித்தறிய முடியாத அருமையான பாடல்  "சிங்கார வேலனே தேவா". ஜானகியின் சுர வரிசையும் நாதஸ்வரமும் சங்கமித்த காலத்தால் அழியாத பாடல் அது. ஜானகியின் குரலில் அப் பாடலை ஒலிப்பதிவு செய்து விட்டு பல பாடகிகளிடம் கொடுத்தார்கள்.  அதனைக் கேட்ட பாடகிகள் யாரும் அதனை பாடத்துணியவில்லை. ஹிந்திப் பாடகிகளிடமும் அப் பாடலைக் கொடுத்தார்கள்.  அவர்களும் பாடுவதற்குப் பின்னடித்தார்கள்.

  "சிங்கார வேலனே தேவா"  பாடலைக் கேட்ட பாடகி சுசீலா, "ரொம்ப நல்லா இருக்கு ஜானகியே பாடட்டும்" என்றார். அதன் பின்னரே   "சிங்கார வேலனே தேவா" பாடல் ஜானகியின் குரலில் வெளியாகியது.

இவை எல்லாம்  அதிகமாகப் பகிரப்படாத சின்னச்சின்னச் சங்கதிகள். இப்படியான சுவாரஸ்யமான சங்கதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதே இத் தொடரின் நோக்கம்.

ரமணி

 

No comments: