Saturday, January 8, 2022

கடனில் மூழ்கிறது இலங்கை மீட்க யார் வருவார்?


 

இந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைக்கு உலகளாவிய ரீதியில் நற் பெயர் உள்ளது. உல்லாசப் பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த  இலங்கை உள்நாட்டு யுத்தத்தால் மரணங்கள் மலிந்த பூமியானதுயுத்த காலத்தில் இலங்கையை உற்றுப்  பார்த்த உலகம்  இன்றைய பொருளாதார நெருக்கடியை உன்னிப்பாக அவதானிக்கிறது.

பொருளாதார அபிவிருத்தி, நவீன உள் கட்டமைப்பு வசதி ,அபிவிருத்தி என்பனவற்றில் அதிக அக்கறை காட்டிய இலங்கை எங்கெங்கு கடன் வாங்க முடியுமோ அங்கெல்லாம் அளவு கணக்கின்றி கடன் வாங்கியது. வாங்கிய கடனைத்திருப்பிச் செலுத்த முடியாத நிலை இபோது ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு உலக நாடுகளும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றன. மருத்துவத்துக்கும், தடுப்பூசிகளுக்கும் பெருந்தொகையை ஒதுக்கியுள்ளன. கொரோனவால் ஏற்பட்ட வேலை வாய்ப்பின்மை, வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றால் பொருளாதாரச் சிக்கல்கள் உலகம் முழுவதுமே ஏற்பட்டுள்ளன.  இலங்கையின் நிலை ஏனைய நாடுகளை  விட சற்று வித்தியாசகமாக உள்ளது. வட்டி கட்டுவதற்கு கடன்  வாங்க வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது. 

வேலை இழப்பு, வருவாய் இழப்பு,   பணவீக்கம், உணவுப் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. இதை உறுதிசெய்யும் வகையில் உலக வங்கி சில தரவுகளை வெளியிட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, 12.1 சதவிகிதமாக இலங்கையின் பணவீக்கம் உயர்ந்திருக்கிறது. அதே டிசம்பர் நிலவரப்படி, இலங்கையின் உணவுப் பணவீக்கம் 22.1 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இலங்கை முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் தள்ளப்பட்டிருப்பதாகச்  உலக வங்கியின் தரவுகள் சொல்கின்றன. 

இலங்கையின் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டிருப்பதால்,  கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு துறைகளும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. அதிலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகித பங்களிப்பைக் கொண்டிருக்கும் சுற்றுலாத்துறை கொரோனாவால் முழுவதுமாக முடங்கியிருக்கிறது.

2022-ம் ஆண்டுக்குள்ளாக சுமார் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன்களை இலங்கை அரசு திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஜனவரி மாதத்துக்குள்ளாக 500 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை இருப்பதாகத் தெரிகிறது.    

ஜனவரியில் ஒரு வாரம் முடிந்து விட்டது. 500 மில்லியன் டொலரை இலங்கை எப்படி செலுத்தப் போகிறது.எங்கிருந்து இலங்கை கடன் வாங்கப் போகிறது போன்ற மில்லியன் டொலர் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.

 சீனாவிடம் அதிக அளவில் கடன்பெற்ற காரணத்தாலும் தவித்துவருகிறது இலங்கை. பல்லாயிரக்கணக்கில் இலங்கை அரசுக்கு கடனளித்திருக்கிறது சீனா. அது போக சில சர்வதேச வங்கிகளிடமும் கடன்பெற்றிருக்கிறது இலங்கை. நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவரும் நிலையில், கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறது இலங்கை.

இயற்கை வளங்கள் அதிகம்கொண்ட இலங்கையில், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு அதீத கடன் பிரச்னை தவிர  போதிய திட்டமிடல் இல்லாமல் இயற்கை விவசாய முறையைக் கொண்டுவந்ததும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ``இயற்கை விவசாய முறையைக் கையிலெடுத்த இலங்கை அரசு, இரசாயன உரங்கள் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது. இதன் காரணமாக   உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விளைச்சல்கள் குறைந்தன. எனவே, உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு, இலங்கை அரசு முறையாக திட்டமிடாமல், இயற்கை விவசாயத் திட்டத்தை அமல்படுத்தியதும் ஒரு காரணம்'' என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.     

சீனாவுடன் மிக நெருக்காமாகக் கைகோர்த்ததுதான் இந்த நெருக்கடிக்குக் காரணம்  எனவும் அரசியல் நோக்கர்கள் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  சீனாவுடன் கைகோர்த்து நெருக்கமாக இருந்ததனால் அமெரிக்கா,இந்தியா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து தேவையான பெருமளவான நிதியைப் பெற முடியவில்லை. சீனாவின் கடன் வலை, பணவீக்கம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க ஏனைய  நாடுகளின் உதவி இலங்கைக்கு அவசியமாகிறது. அதை நோக்கி   பயணித்தால் பொருளாதார நெருக்கடியிலிருந்து சற்று வெளிவரலாம்'' என்கிறார்கள்     

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஆலோசனைகளை மூத்த அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர். அவர்களின் ஆலோசனைகள் எவற்றையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் அரசாங்கம் இல்லை. அமைச்சர்கள் வெளியேறப் போவதாகக் கூறுகின்றனர்.  அமைச்சுப் பதவி பறிக்கப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மிரட்டுகிறது. அரசாங்கத்துகுள் இருந்து விமர்சிக்க  வேண்டாம் போக விரும்புபவர்கள் போகலாம் என சவால் விடப்படுகிறது.சலூன் கதவு ஞாபகம் சில அரசியல்வாதிகள்  சிலருக்கு  வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.                

வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாது இலங்கை திக்கு முக்காடுகிறது. போன்று  பொன்ரு கடந்த பத்து வருடங்களில் பல நாடுகள் தவித்தன. இன்று அவை ஒரளவு தன்னிறைவு பெற்றுள்ளன.  கிரீஸ் , ஜமைக்கா , ஈகுவடார், பாகிஸ்தான் , ஆர்ஜென்ரீனா, சைப்ரஸ் ஆகிய நாடுகள் அதிகளவு கடன் வாங்கி அதனைத் திரும்பச் செலுத்த முடியாததால் வங்குரோத்து நிலைக்குச் சென்றன. இப்போ அந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுள்ளன.

நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் சுபீட்சத்தையும் கருத்தில்கொண்டு வீண்  பிடிவாதத்தை கை விட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

வர்மா

No comments: