Monday, February 20, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -57


 மெளனமாக வெளியான திரைப்படங்கள் ஆரம்பத்தில் படல்களுக்காக ஓடின. 50 சங்கீதங்கள் [பாடல்கள்]   உள்ள படம் என்றே விளம்பரப் படுத்தினார்கள். பாடல்கள்  கோலோச்சிய காலத்தில், வெளியான பராசக்தி  படம் வசனங்களை முதன்மைப்படுத்தியது. கலைஞர் கருணாநிதி, இளங்கோவன்  போன்றவர்களின் வசனங்களை மக்கள் ரசிக்கத் தொடங்கினார்கள்.

ரசிகர்களின் பார்வை மாறத் தொடங்கியதால் நடிகர் முன்னிலை பெற்றார். பாடலாசிரியர்,பாடகர்,இயக்குநர், இசையமைப்பாளர்  என மக்களின் ரசனை மாறத்தொடங்கியது.

 ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகள் வரையிலும் குடும்பக் கதைகளின் பொற்காலமாக விளங்கியது தமிழ் சினிமா. அதில், அண்ணன் - தங்கையின் பாசத்துக்கும், எதன்பொருட்டும் அறுபடாத அதன் தொடர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டில் தரப்பட்டிருக்கும் இடம் எவ்வளவு உன்னதமானது என்பதை உணர்ச்சிக் குவியலாக முன்வைத்த படம் ‘பாசமலர்’.

தமிழர் மனதில் ஒரு கருப்பு வெள்ளை கல்வெட்டுச் சினிமாவாக மாறிப்போய்விட்ட அதன் வெற்றியில் ஆரூர்தாஸின் வசனத்துக்கு மிகப்பெரிய இடமுண்டு. இளமையும் எளிமையும் இலக்கிய நயமும், அக்காலகட்டத்தின் வாழ்க்கையும் மிகுந்திருந்த ‘பாசமல’ரின் வசனத்துக்குக் கிடைத்த வரவேற்பால், தனிப்பெரும் கதை, வசனகர்த்தாவாக உருவெடுத்தார் 26 வயதே நிரம்பியிருந்த ஆரூர்தாஸ். அதன்பிறகு வந்த 60 ஆண்டுகளில் 1,000 படங்களுக்கு எழுதி, திரையுலகில் அவர் உருவாக்கியது தனிப்பெரும் ராஜபாட்டை

பள்ளி ஆசிரியராக இருந்து பாடலாசிரியராக உருவெடுத்தவர் அமரகவி தஞ்சை ராமைய்யா தாஸ். சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்பு 1952இல் அவரிடம் 50 ரூபாய் மாதச் சம்பளத்தில் உதவியாளராகச் சேர்ந்தபோது ஆரூர்தாஸுக்கு 21 வயது. அவரிடமிருந்து பிறமொழிப் படங்களைத் தமிழாக்கம் செய்யும் கலையைக் கற்றுக் கொண்டார். என்.டி.ராமராவ் - அஞ்சலி தேவி நடித்திருந்த தெலுங்குப் படம், ‘நாட்டியதாரா’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

அப்போது, அப்படத்தின் பெரும் பாலான காட்சிகளுக்கு ஆரூர்தாஸையே வசனம் எழுத வைத்தார் ராமய்யா தாஸ். உதட்டசைவுக்கு கச்சிதமாகப் பொருந்தும் வண்ணம், மூல மொழி வசனத்தின் அர்த்தம் மாறாமல் கூர்ந்து கவனம் செலுத்தி வசனங்களை எழுதும் அக்கலையில் ஆரூர்தாஸ் நிபுணத்துவம் பெற்றுவிட்டபின், 1957இல் வெளியான ‘கேதி’ (Qஐடி) என்கிற இந்திப் படத்தை தனியொருவராக தமிழாக்கம் செய்தார். அதே ஆண்டில் ‘மகுடம் காத்த மங்கை’யாக வெளியான அந்தப் படத்தில்தான் ‘வசனம்: ஆரூர்தாஸ்’ என முதல் முதலாக அவருக்குத் தனி டைட்டில் கார்டு கொடுக்கப்பட்டது.

 தமிழாக்கப் படங்களுக்கு எழுதிக்கொண்டி ருந்தவரை நேரடித் தமிழ்ப் படங்களுக்கு எழுதும் விதமாகப் பயிற்று வைத்தவர் ஏ.எல்.நாராயணன். ஆரூர்தாஸை தனக்கு உதவியாளராக விரும்பியழைத்துச் சேர்த்துக்கொண்ட ஏ.எல்.நாராயணன், ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்து 1957இல் வெளியான நேரடித் தமிழ்ப் படமான ‘சௌபாக்கியவதி’யில் பல காட்சிகளுக்கு ஆரூர்தாஸை வசனம் எழுத வைத்தார்.

இளங்கோவனின் வசனத்தில் மனதைப் பறிகொடுத்தவர்  ஆரூர்தாஸ்.  தனது வசனத்தை  நடிகர் திலகம்  பேசி நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். தனது விருப்பத்தை ஜெமினியிடமும் சாவித்திரியிடமும் தெரிவித்தார்.ஜெமினி, சிவாஜியிடமும், சாவித்திரி பீம்சிங்கிடமும் ஆரூர்தாஸைப் பற்றிச் சொன்னார்கள். "பாசமலர்" பட வேலைகள் நடந்துகொண்டிருந்த போது சிவாஜியிடம் ஆரூர்தாஸை அழைத்துச் சென்றார்  ஜெமினி. சிகரெட் புகைத்தபடி "யாரிந்தப் பையன்"  என ஆரூர்தாஸைப் பார்த்து சிவாஜி  கேட்டார்.

"நல்லா வசனம் எழுதற ஆரூர்தாஸ்  இவன் தான்" என ஜெமினி சொன்னார்.

"சின்னப்பையனா  இருக்கானே. பீம்சிங், கண்ணதாசன். மெல்லிசை மன்னர்கள் என ந்ல்லாம் பெரியகைகள்  தாங்குவானா? " என சந்தேகத்துடன் சிவாஜி கேட்டார். உணர்ச்சிவசப்பட்ட ஆரூர்தாஸ் " சந்தர்ப்பம் தந்தால் தூக்கிடுவன்" என்றார். அப்போது அங்கே அமைதி நிலவியது. சந்தர்ப்பத்தை ஆரூர்தாஸ் கெடுத்துவிட்டான் என ஜெமினி நினைத்தார்.

சிவாஜி சில  கேள்விகள்  கேட்டார்.  அக்கேள்விகளுக்கான பதிலை,  தமிழ்  வெண்பா, திருக்குறள் ஆகியவற்ரில் இருந்து சொன்னார் ஆரூர்தாஸ். சிகரெட்டை ஆஷ் ரேயில்  அணைத்த படி "இவனை  ஆபீசுக்கு கூட்டிப்போய் அட்வான்ஸ் வாங்கிகொடு" என்றார் சிவாஜி. ஜெமினியால் நம்பமுடியவில்லை.

‘பாசமலர்’ படத்தில் சிவாஜியின் நடிப்புக்காகவும் சாவித்திரியின் நடிப்புக்காகவும் பாடல்களுக்காகவும் மட்டுமின்றி, ஆருர்தாஸின் வசனங்களுக்காகவும் கரவொலியால் தியேட்டர் அதிர்ந்தது. அதன் பின்னர் சிவாஜியின் மனதில் ஆரூர்தாஸ் தனியிடம் பிடித்தார். தொடர்ந்து தன் படங்களுக்கு ஆரூர்தாஸை வசனங்கள் எழுதவைத்தார் சிவாஜி. தன் மனதுக்குப் பிடித்துவிட்டால், ஒவ்வொருவரையும் ஒரு தனி ஸ்டைலுடன் அழைப்பது சிவாஜியின் இயல்பு. ஆரூர்தாஸ்... சிவாஜிக்கு ‘ஆரூரான்’ ஆனார். ‘’என்ன ஆரூரான். படத்துல உன் வசனம்தான் பேசப்படணும். அதைப் பேசுனதுனால எனக்குக் கைத்தட்டல் கிடைக்கணும். அப்படி எழுது’’ என்று உற்சாகமூட்டுவார். ‘பாவமன்னிப்பு’, ‘பார் மகளே பார்’ என பல சிவாஜி படங்களுக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார்.

தேவர் பிலிம்ஸ் படங்களுக்குத் தொடர்ந்து எழுதுகிற வாய்ப்பைப் பெற்றார். எம்ஜிஆருக்கும் ஆரூர்தாஸைப் பிடித்துப் போனது. 

ஒரே நேரத்தில் எம்ஜிஆர் படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதினார். 1962-ம் ஆண்டு ஒரே நாளில் ஆரூர்தாஸ்  வசனம் எழுதிய எம்ஜிஆரின் தாயைக் காத்த தனயன் படமும் சிவாஜியின் படித்தால் மட்டும் போதுமா படமும்வெளியாகின. ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம்ஜியார் பிக்சர்ஸும், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸும் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள். இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக் காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்தில் தத்தளித்தன.

  எம்ஜிஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது,    ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக் காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ணே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றார் ஆரூர்தாஸ்.

அன்று பிற்பகல் சிவாஜி பட ஷூட்டிங் போனபோது ஆரூர்தாஸை தனியே அழைத்த சிவாஜி தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போ நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்” என்று கேட்டதும் ஆரூர்தஸ்  திகைத்தாஅ. அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு என்ற  ஆச்சரியத்துடன் . எம்ஜிஆருக்கு சொன்ன அதே பதிலையே சிவாஜிக்கும் சொன்னார் ஆரூர்தாஸ்.   ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார் ஆரூர்தாஸ்.

இரண்டு நாள் கழித்து எம்ஜிஆர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச் சொன்னார்கள். ஆரூர்தாஸ் போனபோதுன். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர் தாஸ் அவர்களுக்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

மறு நாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி அவர்கள், மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையைவிட அகலமான தங்கப்பதக்கம் ஒன்றை ஆரூர்தாஸுக்கு அணிவித்தார். அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100வது நாள் வெற்றிவிழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய  இருவரும்  ஒரேமதிரி நினைத்தத ஆரூச்தாஸால் நம்பமுடியவில்லை.

 

No comments: