Thursday, June 11, 2020

சரக்கு விமான சேவைக்கு கிராக்கி


 கொரோனா தாக்கத்தால், உலகளவில் பயணியர் விமான சேவை முடங்கியுள்ள நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த, வோல்கா-டெப்னர் குழுமம், சரக்கு விமான சேவையில் பரபரப்பாக இயங்கி வருகிறது. இக்குழுமம், இந்தாண்டு, பிரான்சில் இருந்து, விமானம் மூலம், சீனாவுக்கு, 3,000 வெள்ளைப் பன்றிகளை அனுப்பியுள்ளது. சீனாவில், பன்றிக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, அங்கு பன்றி வளர்ப்பு குறைந்துள்ளது. இதனால், சீனா அதிக அளவில் பன்றி யையும்,பன்றி இறைச்சியை யும் இறக்குமதி செய்கிறது. இந்தாண்டு, ஜன., - ஏப்ரல் வரை, அமெரிக்காவில் இருந்து, 2.54 லட்சம் தொன் பன்றி இறைச்சியை, சீனா இறக்குமதி செய்துள்ளது.
இது, கடந்த ஆண்டின், 2.45 லட்சம் டன்னை விட அதிகம். வோல்கா - டெப்னர் குழுமம், பன்றி மட்டுமின்றி செயற்கை கோள் முதல், அவசர காலத்தில் நிறுவப்படும் பாலங்களுக்கான பொருட்கள் வரை, பலதரப்பட்ட சரக்குகளை கையாள்கிறது. பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு கொரோனா பரவலை தடுப்பதற்கான முக கவசம், சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பு உடை, மருத்துவ சாதனங்கள் போன்றவற்றையும் எடுத்து செல்கிறது.
இது குறித்து, வோல்கா - டெப்னர் குழும தலைவர்,  சய்கின் கூறுகையில்
கொரோனாவுக்கு முன், பயணியர் விமானங்களில், சரக்கு எடுத்துச் செல்லப்படும். தற்போது, இச்சேவை முடங்கியுள்ளதால், சரக்கு விமானத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, குழும வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 15ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளதும், வருவாய் உயர காரணம் எனலாம். லத்தீன் அமெரிக்கா , ஆப்ரிக்க நாடுகளுக்கும், மருந்துகளை எடுத்து செல்கிறோம்.விரைவில், இந்தியாவிலும் எங்கள் சேவை துவங்கும். கொரோனா, எங்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது. உதாரணமாக, சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. அவற்றின் இயந்திர தளவாடங்களை, வேறு நாட்டில் கொண்டு சேர்க்கும் பணிவாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது.சமீபத்தில், சீனாவில், முக கவசம் தயாரிக்கும் நிறுவனத்தின் அனைத்து இயந்திரங்களையும், ரஷ்யாவின் டாடர்ஸ்டன் பிராந்தியத்திற்கு கொண்டு சென்றோம்” என்றார்.

No comments: