Saturday, March 5, 2022

கவர்னர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முதல்வர்கள்

இந்திய மத்திய அரசுக்கும், அந்த மாநில அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய கவர்னர்ர்கள் தம்து அதிகார எல்லையை மீறி செயற்படுவதால் மாநில அரசுகள்  பெரும் சிக்கல்களை எதிர் நோக்குகின்றன.

மத்தியில் ஆட்சி செய்யும் அரசாங்கத்துகு ஒத்துழைப்புக் கொடுத்தால் அந்த மாநில கவர்னர்கள்  கண்ணை மூடிக்கொண்டிருப்பார்கள். மத்திய அரசை எதிர்த்தால் , அல்லது விமர்சித்தால்  அந்த மாநில ஆளுநர் கண்ணுக்கு எண்ணெய் விட்டு  காத்திருப்பார். கவர்னருடன் முட்டி மோதுவதால் அரசாங்கத்தை செயற்படுத்த முடியாமல் தவித்த வரலாறு பல  உண்டு.

  பிரதமர் மோடியை நேரடியாக விமர்சிப்பதை விட்டு,   மாநில  அரசுகள் கவர்னர்களுடன் மல்லுக்கட்ட துவங்கியுள்ளன. மேற்கு வங்கம், கேரளாவில் துவங்கிய இந்த மோதல் பட்டியலில் தற்போது தமிழகம், தெலுங்கானா மாநிலங்களும் இணைந்துள்ளன.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் 2024ல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், பாரதீய ஜனதா  காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்க, திரிணமுல் காங்., தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதையடுத்து மத்திய   அரசை எதிர்க்க, எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புதிய பாணியை கடைப்பிடிக்க துவங்கியுள்ளன. தங்கள் மாநில கவர்னருடன் மல்லுக்கட்டி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என, இந்தக் கட்சிகள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்து உள்ளன.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும், கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே நடக்கும் மோதல் நாடறிந்த விஷயம்.இதேபோல், தமிழகத்தில், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய, இரண்டாவது முறையாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ஜனாதிபதிக்கு அனுப்பாமல், கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினுக்கும், கவர்னர் ரவிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்தபோது  அன்றைய ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலுக்கு என்ன நடந்ததென இதுவரை தெரியவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியின் பங்காளிகளான பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, அன்றைய எதிர்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன தகுந்த சான்றுகளுடன்  ஊழல்  பட்டியலை ஆளுநரிடம் கொடுத்தன.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், கவர்னர் கோஷ்யாரிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.கேரளாவிலும் முதல்வர் பினராயி விஜயன் - கவர்னர் ஆரிப் முகமது கான்  உடன் மோதுகிறார்.

தெலுங்கானாவில் கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பாரதீய ஜனதா , உருவெடுத்து வருகிறது.அஇங்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் பாரதீய ஜனதா  வெற்றி பெற்றது. ஹைதராபாத் மாநக ராட்சி தேர்தலிலும் பாரதீய ஜனதா 49 வார்டுகளை கைப்பற்றி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனால், பா..,வையும், மத்திய அரசையும், முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றம்,  சட்டசபைகளின் முதல் கூட்டத்தொடர், ஜனாதிபதி, கவர்னர்  ஆகியோரின் உரையுடன் துவங்கப்படுவது தான் வழக்கம். இந்நிலையில், தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் துவங்க வேண்டும்.ஆனால், கவர்னர் உரை இல்லாமலேயே, கூட்டத்தொடரை துவக்க மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளார். வரும் 7ம் திகதி, இரு சபைகளிலும், 2022 - 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். 

சாதாரணமாக, சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன், இரு சபைகளும் ஒத்தி வைக்கப்படுவதாக கவர்னர் அறிவிப்பார். பின், சட்டசபையை மீண்டும் கூட்ட, மாநில அமைச்சரவை, கவர்னருக்கு பரிந்துரைக்க வேண்டும். அதையேற்று, சட்டசபையை கூட்டுவது பற்றி கவர்னர் அறிவிப்பது, வழக்கத்தில் உள்ள நடைமுறை.

ஆனால், 'தெலுங்கானாவில் கடந்த அக்டோபரில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. அப்போது, கூட்டத்தொடரை சபாநாயகர் தான் ஒத்தி வைத்தார். 'அந்த கூட்டத்தொடரின் தொடர்ச்சிதான் தற்போது நடக்க உள்ளது. அதனால், கவர்னர் உரையுடன் துவங்க வேண்டிய அவசியம் இல்லை' என, அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்தியில் ஆளும் கட்சி, ஆட்சி செய்யாத மாநிலங்களில், கவர்னர்களுக்கு எதிர்ப்பு இருப்பது புதிதல்ல. ஆனால், கவர்னரை அவமதிப்பது, கவர்னர் உரையில்லாமல் சட்டசபை கூட்டத்தொடரை துவக்குவது ஆகியவை, இதுவரை இல்லாத நடைமுறை.தெலுங்கானா அரசின் இந்த நடவடிக்கையை, மேற்கு வங்கம், தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா மாநிலங்களும் பின்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாநிலங்கள் சட்டசபையை ஒத்திவைக்க கவர்னருக்கு பரிந்துரைக்காமல், கூட்டத்தொடரை காலவரையின்றி சபாநாயகரே ஒத்தி வைக்கவும் திட்டமிட்டுள்ளன. இப்படிச் செய்தால், கவர்னரின் அனுமதியின்றி சட்டசபையை எப்போது வேண்டுமானாலும் கூட்டலாம் என, இந்த மாநிலங்களை ஆளும் கட்சிகள் தங்களுக்குள் பேசி வைத்துள்ளன.

தமிழகத்திலும், 18ம் திகதி பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் எவ்வளவு செலவு காட்டப்படப் போகிறது என்பதற்கு, கவர்னரின் ஒப்புதல் அவசியம்.மாநில அரசுக்கும், கவர்னருக்கும் முட்டல் மோதல் இருப்பதால், கவர்னர் ஒப்புதல் பெற இந்த முறை, நிதியமைச்சர் தியாகராஜன் கவர்னரைச் சந்திக்கச் செல்ல மாட்டார் என்றும், நிதித் துறை செயலர் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் மாதங்களில், பா.., அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர் - முதல்வர் மோதல், பூகம்பமாக வெடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

கவர்னர் - முதல்வர் மோதல் பற்றி, அரசியல் சட்ட வல்லுனர்கள் கூறியதாவது:கவர்னர் - முதல்வர் இடையேயான மோதலை, வெறும் அரசியல் மோதலாக பார்க்க முடியாது; இதனால், அரசியல் சட்ட சிக்கல்கள் ஏற்படும். மாநில அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இடம் பெறும் பரிந்துரைகளுக்கு, கவர்னர் தான் ஒப்புதல் அளித்து கையெழுத்திட வேண்டும். இந்த மோதலில், கவர்னர் கையெழுத்திடுவதை தாமதப்படுத்தினால், அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை உருவாகும்.

கவர்னர் கையெழுத்திடா விட்டால் மாநில அரசுகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர் கட்டுப்படுத்துவதை  ஏற்க முடியாது எனவும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: