Saturday, June 25, 2022

எடப்பாடியின் அரசியல் ஆசையால் தூக்கி எறியப்பட்ட பன்னீர்

ஜெயலலிதா சிறைக்குச்  சென்ற பின்னர் முதல்வரானவர் .பன்னீர்ச்செல்வம். சசிகலா சிறைக்குச் செல்லும்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார். ஜெயலலிதா இறந்தபோது  முதல்வராக இருந்த பன்னீரை புறம் தள்ளி விட்டு எடப்பாடியை முதல்வராக்கினார் சசிகலாஇருவருமே மக்கள் ஆதரவுடன்  முதல்வராகவில்லை. ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வந்தபோது  பதவியைக் கொடுத்தவர் பன்னீர்ச்செல்வம். சசிகலா சிறையில் இருந்தபோது அவரைத் தூக்கி எறிந்தவர் எடப்பாடிஅந்த எடப்பாடியின் கையில் கட்சியைக் கொடுப்பதற்கு நிர்வாகிகள் பலர் கங்கணம் கட்டியுள்ளனர்.

இரு துருவங்களாக  இருந்த பன்னீரும், எடப்பாடியும் கட்சியின் எதிர் காலத்துக்காக இரட்டைத் தலைமையுடன்  கழகத்தை வழி நடத்தினார்கள். சசிக்லாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்ற எடப்பாடி அவரின் காலை வாரினார். இப்போது  பன்னீரை படுகுழியில் தள்ளிவிட்டுள்ளார்உள்ளுக்குள்  புகைந்தாலும் வெளியில் சுமுகமாகச் சென்றுகொண்டிருந்த இரட்டைத் தலைமையை ஒற்றைத் தலைமையாற்ற எடப்பாடி வகுத்த வியூகத்தால்  பொதுக் குழுக் கூட்டம் களேபரமானது.

பன்னீருடன் ஒட்டுறவாடியவர்கள் மெல்ல மெல்ல எடப்பாடியின் வலைக்குள் விழுந்தனர். அதன் பின்னணியில் சலுகைகளும் கைமாறல்களும் இருந்தன. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றால் எடப்பாடி பொதுச்செயலாளராகிவிடுவார். அதன் பின்னர்  எடப்பாடி கட்சியில் செல்லாக்காசாகிவிடுவார். ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீரின் கையெழுத்துக்கு பெரிய சக்தி உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி அகற்றப்பட்டால் பன்னீரின் எதிர்காலம் சூனியமாகிவிடும். பொதுக்குழுவைத் தடை செய்வதற்கு தன்னாலான முயற்சிகளை  பன்னீர் மேற்கொண்டார். தனியார் மண்டபத்தில் நடக்கும் கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என  பொலிஸார் கையை விரித்தனர். நீதிமன்றத்தீர்ப்பும் எடப்பாடிக்குச் சாதகமாஅந்து. உச்சநீதிமன்றம் நள்ளிரவு பன்னீருக்கு ஆறுதலைக் கொடுத்தது. முன் அறிவிக்கப்பட்ட  23 தீர்மானங்களை மட்டும்  நிறவேற்றலாம் என்ற தீர்ப்பு எடப்பாடியின் பொதுச்செயலாளர் ஆசைக்குத் தடை போட்டது.

பொதுக் குழுவுக்குச் சென்ற பன்னீர் அவமானப் படுத்தப்பட்டார். துரோகி,வெளியே போ போன்ற கோஷங்கள் அவருக்கு எதிராக முழங்கப்பட்டன.பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்படும் எடப்பாடியார் , மூத்தவரான  பன்னீரைக் கண்டு கொள்ளவில்லை. பன்னீர் முதல்வராக  இருந்தபோது தலையில் தூக்கி கொண்டாடியவர்கள்  தலையை மறுபுறம் திருப்பினார்கள்.

பரபரப்பான சூழலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே கூடிய பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதே வேளையில்   ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என  பொதுக்குழு அறுதியிட்டு சொல்லியிருக்கிறது.

  ஒரே மேடையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். இதுதான் இருவரும் ஒரே மேடையில்  இருக்கும் கடைசிக் கூட்டம்.  

பின்னர் பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு .பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். .பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். அதை தொடர்ந்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்கள் அவையில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் பொன்னையன் முன்மொழிய, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிவார் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் இந்த தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிப்பதாக ஆவேசமாக பேசினார். அப்போது அரங்கில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கோஷம் எழுப்பினர்

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினரும் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாகவும், ஒற்றை தலைமை தான் அனைவரின் எதிர்பார்ப்பு. ஒற்றை தலைமை தீர்மானத்தோடு எப்போது மீண்டும் பொதுக்குழு கூடுகிறதோ அப்போது தான் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.

தொடர்ந்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், இரட்டை தலைமையால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர் எனவும், கட்சியை வலுப்படுத்தும் விதமாக ஒற்றை தலைமை வழிநடத்த வழிவகை செய்ய வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் 2 ஆயிரம் பேர் அளித்த கடிதத்தை வாசித்ததோடு, அடுத்த பொதுக்குழு கூடும் தேதியை அவைத்தலைவர் அறிவிக்க வேண்டும் என கோரினார்.ஜூலை 11-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் நடை பெறும் என  அவைத் தலைவர் அறிவித்தார்.

 அவரை தொடந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முற்பட்டப்போது பன்னீரும், வைத்திலிங்கம் மேடையில் இருந்து எழுந்து புறப்பட்டதோடு மேடையில் வைத்தே இந்த பொதுக்குழு செல்லாது என வைத்திலிங்கம் பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து .பன்னீர் செல்வம் மீது தண்ணீர்ப் போத்தல் வீசப்பட்டதா ல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரட்டை இலை வழக்கு பன்னீருக்குச் சாதகமாக உள்ளது. இரட்டை இலை முடக்கப்பட்டால் அண்னா திராவிட முன்னேற்றக்கழகம் பன்னீரின் தலைமையிலும், எடப்பாடியின் தலைமையிலும்  சின்னம் இல்லாமல் சுயேட்சையாகப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படலாம். ஜெலலிதாவும், ஜானகியும் பலப் பரீட்சை செய்தது போல பன்னீரும், எடப்பாடியும்   மோத வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகள் பிளவுபடும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகஒன்றிணைந்து  செயற்பட வேண்டியவர்கள் தமக்குள் முட்டி  மோதுகிறார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் சவாரி  செய்யும் பாரதீய ஜனதாக் கட்சி தனது அரசியலை செய்வதற்குரிய வாய்ப்பாக இந்தப் பிரச்சினைஐ அணுகப்போகிறதா அல்லது  இருஅவ்ரையும் சமாதானப்படுத்தப் போகிறதா என்பது பெரும் புதிராக உள்ளது.

எடப்பாடியை  எதிர்க்கும்  பன்னீர், சசிகலாகட்சியில் இருந்து  வெளியேற்றப் பட்ட சுமார் ஒரு இலட்சம் அங்கத்தவர்கள்  இணைந்து  செயற்பட்டால் கழகத்தைக் கைப்பற்றும் சந்தர்ப்பம்  உள்ளது.

எடப்பாடியுடன்  நிர்பவர்களில் பலருக்கு அரசியல் வாழ்வளித்தவர் சசிகலா.   அவர்கள் சசிகலாவின்  பக்கம் திரும்பினால் எடப்பாடிக்கு ஆபத்தாகிவிடும்.

பொதுக் குழு  கூட்டத்தை ஒத்தி வைத்ததால் தப்பி விட்டதாக எடப்பாடி நினைகிறார். அவருக்கெதிரானவர்கள் பலமடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

No comments: