Monday, November 1, 2021

ஐபிஎல் புதிய அணியால் சர்ச்சையில் சிக்கிய கங்குலி

  ஐபிஎல் தொடருக்கான புதிய அணியை ஏலம் எடுத்த உரிமையாளரின் உதைபந்தாட்ட‌ கிளப்பில் கங்குலி இயக்குனர் பதவி வகிப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புதிய  அணிகளுக்கான ஏலம் துபாயில் நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலம் அஹ‌மதாபாத்தை மையமாகக் கொண்ட ஒரு அணியும், உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவை மையமாகக் கொண்ட ஒரு அணியையும் பி.சி.சி.ஐ உருவாக்கியது.

இதில், லக்னோ அணியை ரூபாய் 7090 கோடிக்கு ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா வாங்கினார். அகமதாபாத் அணியை ரூபாய் 5,600 கோடிக்கு சி.வி.சி கேபிடல்ஸ் குழுமம் வாங்கியது. இதன்மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை பிசிசிஐ வருமானம் ஈட்டியுள்ளது.

இந்நிலையில், லக்னோ அணியை வாங்கிய ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்காவின் உதைபந்தாட்ட  அணியில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இது தற்போது கிரிக்கெட் வட்டராத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் (ISL) தொடருக்கான உதைபந்தாட்ட  கிளப்பான ATK மோகன் பாகனின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, கங்குலி அதன் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும், சஞ்சீவ் கோயங்கா தலைவராகவும் உள்ளார் என்று குறிப்பிடுகிறது. மேலும், இந்த அணி கொல்கத்தா கேம்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் க‌ப்டன் சவுரவ் கங்குலி, தொழிலதிபர்களான ஹர்ஷவர்தன் நியோடியா, சஞ்சீவ் கோயங்கா, உத்சவ் பரேக் ஆகியோர் முக்கிய பொறுப்பில் உள்ளார்கள் என்றும் அந்த இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த செவ்வாயன்று CNBC TV18 செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கங்குலியுடனான அவரது தொடர்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சாத்தியமான மோதலை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சீவ் கோயங்கா, “அவர் (கங்குலி) மோகன் பாகனில் இருந்து முற்றிலும் விலகப் போகிறார் என்றார். அது எப்போது நடக்கும் என்று கேட்டதற்கு, “நான் இன்று என நினைக்கிறேன்.” என்று கூறினார்: “அந்த அறிவிப்பை அவர் தான் வெளியிட வேண்டும். அதை நான் முன்கூட்டியே தெரிவித்ததற்கு என்னை மன்னிக்கவும் என்றும் தெரிவித்தார்.

கங்குலி இது போன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, ஜேஎஸ்டபிள்யூ (JSW) சிமென்ட் (ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ்) டி-சர்ட் அணிந்து, நிறுவனத்தின் பிராண்ட் தூதராக “வேலையில் இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டார். ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ், வணிக நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் பிரிவானது, ஐபிஎல்லின் டெல்லி க‌பிடல்ஸின் கூட்டு உரிமையாளராக உள்ளது.

அந்த நேரத்தில் டெல்லி க‌ப்பிட்டல் அணியின் வழிகாட்டியாகவும் இருந்த கங்குலி, JSW சிமென்ட் நிறுவனத்தில் தான் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்கும் பிசிசிஐ தலைவர் பதவி வகிப்பதற்கும் எந்த முரண்பாடும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

No comments: