Wednesday, November 1, 2023

எல்லை மீறும் இஸ்ரேல் எதிர்த்து நிற்கும் ஹமாஸ்

அமைதிப் பூங்காவாக இருந்த  அரபு நாடுகளுக்கிடையே இஸ்ரேல்,  பாலஸ்தீனப்  பிரச்சனை உருவானபோது அமைதியின்மையும் சேர்ந்து விட்டது. உலக நாடுகள் தலையிட்டு பஞ்சாயத்துச் செய்தபோதும், துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு,  கல்லெறி என்பன ஆங்காங்கே அடிக்கடி நடை பெற்றன. 

அரை நூற்றாண்டு காலமாக‌  இஸ்ரேல்  பாலஸ்தீனப்  பிரச்சனை என வரையறுக்கப்பட்ட  மோதல் கடந்த ஒக்டோபர்  7 ஆம் திகதிக்குப் பின்னர் இஸ்ரேல்  ஹமாஸ் யுத்தமாக  உருமாறியது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக  அரபு  நாடுகள்  இஸ்ரேல் மீது படையெடுத்த  போதும் அசராத  இஸ்ரேல்  ஹமாசின்  தாக்குதலால்  நிலை குலைந்தது.   இஸ்ரேல் இதுவரை  சந்திக்காத மிக  மோசமான அழிவை ஹமாஸ்  ஏற்படுத்தியது. ஒக்டோபர் 7  இஸ்ரேலின் கரிநாளாகப் பதிவாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எல்லை தாண்டி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பழிக்குப்பழியாக  காஸா மீது  இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. ஹமாஸ் நடத்திய  இரண்டு மணிநேர தாக்குதலுக்குப் பதிலடியாக  காஸா மீது மிக  மோசமான தாக்குதலை  இஸ்ரேல் நடத்துகிறது.

இஸ்ரேலின் வான்  நெளித்தாக்குதலால் வடக்கு காஸாவில் பெரும்பகுதி சேதமாகியுள்ளது. ஹமாஸைப் பழிவாங்குவாதற்காக காஸா மீது முதல் 12 நாள்களில் இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதல்களில்   4,000 பேர் பலியானார்கள்.  இவர்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் அடக்கம். 11 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதவிர, ஹமாஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் நூற்றுக்கணக்கானவர்களைக்   இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.

 ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் ஓராண்டு காலத்தில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களைவிட காஸாவில் ஒரே வாரத்தில் இஸ்ரேல் நிகழ்த்திய குண்டுவீச்சுகளின் எண்ணிக்கை அதிகம். காஸாவின் பரப்பளவு 365 சதுர கி.மீ. ஆப்கானிஸ்தானின் பரப்பளவு 652,864 சதுர கி.மீ. ஒப்பிடும்போது காஸாவை விட ஆப்கானிஸ்தான் 178,770% பெரிய நிலப்பரப்பு. இவ்வளவு சிறிய நிலத்துண்டில் இஸ்ரேல் நிகழ்த்தும் குண்டுவீச்சுக்கு மருத்துவமனைகள், ஐ.நா கட்டுப்பாட்டில் இருக்கும் அகதிகள் முகாம்கள், மசூதிகள், தேவாலயங்கள் என்று எதுவுமே தப்பவில்லை. ஹமாஸை வீழ்த்துவதற்கு இஸ்‌ரேலுக்கு தார்மீக நியாயங்கள் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

ஹமாஸ் இப்போது நிகழ்த்தியது மிகப்பெரிய தாக்குதல் என்பதால் உலகத்துக்கே தெரிந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இஸ்‌ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன மக்கள் மற்றும் குழுக்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் பாலஸ்தீனத் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 6,407. இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்புகள் 308. இஸ்ரேலின் தாக்குதல் இப்போதைக்கு  முடிவுக்கு வராது என்பதால்  உயிரிழப்புகளும், சேதங்களும்  மேலும் அதிகாரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஹமாஸ் என்ற அமைப்பையும் அதன் உறுப்பினர்களையும்  ஒட்டு மொத்தமாக அழிப்பதே  இஸ்ரேலின் நோக்கமாகும். காஸாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்த  இஸ்ரேல்  தயாராக  உள்ளது. ஆனால், அது இலேசுப்பட்ட காரியமல்ல எனப்தையும் இஸ்ரேல் அறியும்  காஸாவின் நிலப்பரப்பும், அங்குள்ள  உயரமான, நெருக்கமான கட்டடங்களும்  தரைவழித் தாக்குதலை ஹமாஸ்  முறியடிப்பதற்கு ஏதுவாக  உள்ளன.

இஸ்ரேலின் பதிலடி  28 நாட்களாகத் தொடருகிறது.  இஸ்ரேலிய துருப்புக்களும்,  டாங்கிகளும் புதன்கிழமை இரவு வடக்கு காஸாவுக்குள்   அதிரடித் தாக்குதல் நடத்தியதாக  இஸ்ரேல்  அறிவித்துள்ளது. ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸாவுக்குள்   இஸ்ரேலின்  பீரங்கிகள் அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளன. மேலும், அவர்களுடன் இஸ்ரேல் வீரர்களின் ஒரு படையும் காஸாவுக்குள் நுழைந்துள்ளது.  பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து  தாக்குதல் நடத்திய பின்னர்  சில மணி நேரம் கழித்து  அவை  மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டுள்ளது.

 இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுப்பிற்கு ரெடியாகி வருவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிய நிலையில், காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் இந்தத் தாக்குதலைத் துல்லியமாகத் தாக்குதல் என விவரித்துள்ளது. காஸாவுக்குள் இறங்கியே இஸ்ரேல் பீரங்கிகள் பல பயங்கரவாத செல்கள், உள்கட்டமைப்பு எனப் பல இலக்குகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த கட்ட போருக்கான ஆயத்த நடவடிக்கையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சில மணி நேரத்தில் தாக்குதலை முடித்துவிட்டு அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறி இஸ்ரேல் பகுதிக்குத் திரும்பிவிட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில் பீரங்கி உள்ளிட்ட அதிநவீன ராணுவ வாகனங்கள் காசா பகுதிக்குள் நுழைவது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ தெற்கு இஸ்ரேலின் அஷ்கெலோன் நகரில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், மற்றொரு வீடியோவையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில் வான்வழித் தாக்குதல், கட்டிடங்கள் ஏவுகணைகளால் தாக்கப்படுவது, புகை மண்டலம் சூழ்ந்த பகுதிகள் ஆகியவை வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

காஸா மீது முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிப்போம் என்று இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்த போதிலும், இன்னும் தாக்குதலைத் தொடங்காமல் தயக்கம் காட்டுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

 "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே சிறு சலசலப்புகள் இருக்கிறது. முக்கிய பிரச்சனைகளில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் முடிவுகளை எடுப்பதில் இஸ்ரேலுக்கு இப்போது சிரமம் இருக்கிறது" என்கிறார்கள். இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இஸ்ரேல் அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகளில் இந்த தகவல்களை மறுத்தே வருகிறது. பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவப்படை ஜெனரல்களுக்கு இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை என்றே இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், உண்மையில் நிலைமை வேறாக இருப்பதாகச் சர்வதேச பயங்கரவாதம் குறித்த ஆய்வுகளைச் செய்யும் ஐசிடி உளவுத்துறை வல்லுநரான பேட்ரிக் பெட்டேன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "காஸா மீது முழு வீச்சிலான படையெடுப்பு என்பதில்  தலைவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருக்கிறது.  இத்துடன் காஸா பகுதியில் இன்னும் பிணையக் கைதிகளும் இருக்கும் நிலையில், அது நிலைமையைச் சிக்கலானதாக மாற்றுகிறது. படையெடுப்பு ஆரம்பிக்கும் முன்பு அனைத்து பிணையக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்ரேல் கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.

 ஹமாஸ் படையிடம் அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலர் பிணையக் கைதிகளாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்து, அதில் பிணையக் கைதிகளுக்கு எதாவது ஆனால் அது சர்ச்சையாகவிடும். படையெடுப்பைத் தொடங்க இஸ்ரேல் தயக்கம் காட்ட இதுவும் ஒரு காரணமாகும். இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு தரும் வகையில் பல உலக தலைவர்கள் இஸ்ரேலுக்கு நேரடியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பைடன் தொடங்கி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வரை பல சர்வதேச தலைவர்கள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தாலும் கூட காஸா மீது முழு வீச்சில் தாக்குதலை நடத்த வேண்டாம் என்றே சொல்கிறார்கள். காஸா மீதான படையெடுப்பைத் தாமதப்படுத்த அமெரிக்கா வலியுறுத்துகிறது.

காஸா மீதான படையெடுப்பு நடந்தால் அது மிகப் பெரிய ஒரு சங்கிலி எதிர்வினையை உருவாக்கும். இதனால் சண்டை அந்த பிராந்தியம் முழுக்க பரவும் என்று சர்வதேச நாடுகள் நம்புகிறது. இதனால் இஸ்ரேலுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் காஸா மீதான படையெடுப்பை நடத்தக் கூடாது என்று கடுமையாக அழுத்தம் தருகிறார்கள்

காஸா  மீது தாக்குதலை ஆரம்பித்தால் அங்கே இருக்கும் பல நூறு கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையை சமாளிக்க வேண்டியிருக்கும். இது பொதுவாகக் காஸா மெட்ரோ என்று அழைக்கப்படுகிறது. இந்த நெட்வொர்க் 400 கிமீ நீளம் கொண்டது என்று ஹமாஸே உறுதி செய்துள்ளது. இதைச் சமாளிப்பதும் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும். மேலும், ஹமாஸ் மட்டுமின்றி ஹிஸ்புல்லா மற்றும் வேறு சில அமைப்புகள் எனப் பல முனை தாக்குதல்களை இஸ்ரேல் எதிர்கொள்வதும் ஒரு சிக்கலாகும்.  

சுரங்கப்பாதைகள், ரொக்கெட் லாஞ்சர்கள் மற்றும் பிற தீவிரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் காஸா முழுவதும் சுமார் 250 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியது.  இஸ்ரேலின் தாகுதலால் 7,000 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு  நடைபெற்ற  ஆறு வார யுத்தத்தில் கொல்லப்பபட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கையை விட  இது அதிகமாகும். மூன்று மடங்கு அதிகமாகும். இஸ்ரேலின் தாக்குதலால் 7,000 பேர்  உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள‌து.  2,900 க்கும் மேற்பட்ட சிறார்களும் 1,500 க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. .

 காஸாவின் உயிரிழப்பு புள்ளிவிவரங்களில் தனக்கு "நம்பிக்கை இல்லை" என்று  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறியதை அடுத்து, சுகாதார அமைச்சகம் வியாழனன்று 200 பக்கங்களுக்கு மேல் இறந்த 6,747 பேரின் பெயர்கள், வயது மற்றும் பாலினம் உட்பட பட்டியலிடப்பட்ட ஆவணத்தை வெளியிட்டது. மேலும் 281 இறந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஈரானுடன் இணைந்த குழுக்களால் கடந்த வாரத்தில் ஈராக்கில் குறைந்தது 12 முறையும், சிரியாவில் நான்கு முறையும் அமெரிக்க துருப்புக்கள் தாக்கப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஈராக்கில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதல்  முறியடிக்கப்பட்டது.சுமார் 900 துருப்புக்கள் அமெரிக்காவிலிருந்து மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் காசா மீது தரைப்படை ஆக்கிரமிப்புக்கு தயாராகி வரும் நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள தளங்களில் நூற்றுக்கணக்கான அமெரிக்க துருப்புகளுக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் பிரதமர் மகன் குறித்த தகவல் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவரின் மூன்றாவது மனைவி சாராவுக்கும் பிறந்த மகன் யாயிர் (32). இஸ்ரேலில் கடும் போர் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் இஸ்ரேலில் இல்லாமல் அமெரிக்காவில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் அவர் இருக்கும் புகைப்படத்தைத் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததின் மூலம் இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவை இருக்கிறது. இதில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலரும் தற்போது நடைபெற்றுவரும் போருக்காக நாடு திரும்பி, ராணுவத்தில் இணைந்துவரும் நிலையில், இவர் மட்டும் போரின்போது நாட்டில் இல்லாமல் உல்லாசமாக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

பொதுவாகவே அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் யாயிர் நெதன்யாகு 2018-ல் 'அனைத்து இஸ்லாமியர்களும் வெளியேறும் வரை இஸ்ரேலில் அமைதி இருக்காது' என்று கருத்து பதிவிட்டு கடும் கண்டனத்துக்கு உள்ளானார்.

"இஸ்ரேலின் பிரதமரும், என் தந்தையுமான பெஞ்சமின் நெதன்யாகு, ஒரு தொழிலதிபருக்கு உதவுவதற்காக 20 பில்லியன் டாலர் எரிவாயு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தார்" என வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, நெதன்யாகு தன்னுடைய மகனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதாகத் தகவலை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பினார்.

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வகையில் ஹமாஸ் குழுவினரின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்ததாக அரபு-இஸ்ரேலிய நடிகை மைசா அப்தெல் ஹாடி (Maisa Abdel Haடி) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, 1989 வரை ஜேர்மனியைப் பிரித்த பெர்லின் சுவரின் வீழ்ச்சியைக் குறிப்பிடும் வகையில், பெர்லின் பாணியில் செல்வோம் (Let's go Berlin-style) என, காஸா பகுதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள வேலியை புல்டோசர் உடைக்கும் படத்தை நடிகை மைசா அப்தெல் ஹாடி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். மேலும், டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின்படி, சிரிக்கும் எமோஜிகளுடன் ஹமாஸால் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்ட 85 வயதான பெண் யாஃபா அதாரின் படங்களையும் நடிகை மைசா அப்தெல் ஹாடி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் அதனைப் பாராட்டி, வெறுப்பு பேச்சுகளைப் பேசியதிற்காக நடிகை மைசா அப்தெல் ஹாடி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், `தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் அதற்கு ஆதரவு ஆகியவற்றுக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கை எப்போதும் தொடரும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. காஸாவில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு  திணறுகின்றனர் என்று ActionAid தெரிவித்துள்ளது.

  காஸாசா பகுதியில் உணவுப் பற்றாக்குறையை "கடுமையானது" என்று தொண்டு நிறுவனம்விவரிக்கிறது மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கவலை கொண்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ்   சண்டை நிறுத்தப்பட்டால் அனைத்து பொதுமக்களையும் பணயக்கைதிகள் சில நாட்களில் காஸாவிலிருந்து விடுவிக்க முடியும் என்று கட்டார் பேச்சுவார்த்தையாளர்கள் கூறுகின்றனர்.

ஹமாஸால் சிறைப் பிடிக்கபட்டவர்களை  விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கடினமானவை, ஆனால் மத்தியஸ்தர்கள் முன்னேறி வருகின்றனர் என்று மூத்த பேச்சுவார்த்தையாளரும், கட்டாரின் வெளியுறவுத்துறை அமைச்சருமான டாக்டர் முகமது அல் குலைஃபி,   பிரத்தியேக பேட்டியில் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களம்  இறங்கியுள்ள  உலக நாடுகள்  காஸாவில் இருந்து வெளியேறிய மக்களுக்கு  உதவி செய்கின்றன. ஹமாஸ் மீதான தாக்குதல் எனச் சொல்லும்  இஸ்ரேல் , காஸாவைக் கைப்பற்றத் துடிக்கிறது.  காஸாவில் இருந்து ஹமாஸ் அப்புறப்படுத்தும் வரை இஸ்ரேல் ஓயப்போவதில்லை.

 

வர்மா

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: