Sunday, November 12, 2023

இலங்கையை வென்ற நியூஸிலாந்து பரிதாபநிலையில் பாகிஸ்தான்.

பெங்களூருவில் நடைபெற்ற 41வது லீக் போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. இலங்கையை தோற்கடித்தால் மட்டுமே அரை இறுதிக்குச் செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய நியூஸிலாந்து நணயச் சுழற்சியில் வெற்றி பெற்று வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

  முதலில்  துடுப்பெடுத்தாடிய இலங்கை 46.4 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 171  ஓட்டங்கள் எடுத்தது.  23.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172  ஓட்டங்கள் எடுத்து  5 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் 10 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து    99.9%  அரை இறுதி வாய்ப்பை  உறுதி செய்து விட்டது. ஏனெனில் நியூசிலாந்தின் வெற்றியால் 5வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் தங்களுடைய கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 287 ஓட்டங்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் பெற்றால் மட்டுமே அரை இறுதியில்  விளையாட  முடியும் என்ற அசாத்தியமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அரை இறுதி வாய்ப்பை இலங்கை ஏற்கெனவே தவற விட்டது.

9 விக்கெற்களை இழந்து 128  ஓட்டங்கள் எடுத்த  இலங்கை  150 ஓட்டங்களைத் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கடைசி விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடிய தீக்சனா ஆட்டமிழக்காமல்  38,  மதுசங்க 19 ஓட்டங்கள் எடுத்ததால் 171  ஓட்டங்கள் எடுகப்பட்டது.

நியூஸிலாந்தின் புதிய நாயகன்    ரச்சின்

இலங்கைக்கு எதிராக ரச்சின் 42  ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.       23 வயது மட்டுமே நிரம்பியுள்ளரச்சின்  தன்னுடைய   முதல் உலகக் கிண்ணப் போட்டியில்  அபாரமாக விளையாடி 565 ஓட்டங்களை அடித்துள்ளார். 

அறிமுக தொடரிலேயே அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ சாதனையை உடைத்துள்ளார்.     பேர்ஸ்டோ தன்னுடைய அறிமுகத் தொடரில் 532 ஓட்டங்ன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

23 வயதுக்குள் ஒரு தொடரில் அதிக  ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 27 வருட சாதனையையும் உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1996 உலகக் கோப்பையில் சச்சின் தன்னுடைய 23 வயதுக்குள் 523 ஓட்டங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

நியூஸிலாந்துக்கு தொல்லை கொடுத்த தீக்சனா

மஹீஸ் தீக்சனா 3 பவுண்டரியுடன் 38* (91) ஓட்டங்கள் எடுத்தார்.   15.1 ஓவர்கள் அதாவது 91 பந்துகளை எதிர்கொண்ட அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கி அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற தனித்துவமான உலக சாதனை படைத்துள்ளார்.

 20 வருடங்களுக்கு முன்பாக 2003 உலகக் கோப்பையில் அவுஸ்திரேலிய வீரர் ஆன்ட்டி பைக்கல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கி 83 பந்துகளை எதிர்கொண்டு 64 ஓட்டங்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 9வது இடத்தில் களமிறங்கி அதிக பந்துகளை எதிர்கொண்ட 2வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். இதற்கு முன் 2005ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஜெய் பிரகாஷ் யாதவ் 92 பந்துகள் எதிர்கொண்டதே இந்திய சாதனையாகும்.

No comments: