Sunday, August 15, 2021

ஸ்டாலினின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்


 தமிழக அரசியலில் அரங்கேறிய இரண்டு சம்பவங்களால் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்  தலைவர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசின் நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குப் பதிவு என்பனவற்றால் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழத் தலைவர்கள் தம்மைப் பாதுகாக்க  வேண்டிய  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக  நிதி அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன்  வெளியிட்ட  வெள்ளை அறிக்கையால் தமிழகத்தின் நிதி நிலமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதிய  அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர், கஜானா காலியாகிவிட்டது எனச் சொல்வது வழமை முதலமைச்சர் ஸ்டாலின் அப்படிச்  சொல்ல விரும்பவில்லை. வெள்ளை அறிக்கையின் மூலம் கஜானா காலியாகிவிட்டதென்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார்.

வெள்ளை அறிக்கை என்பது அரசின் வரவு செலவுகள் குறித்து வெளியிடப்படும் வெளிப்படையான அறிக்கை. உள்ளாட்சி, பொதுப்பணி, மின்சாரம் போக்குவரத்து என ஒவ்வொரு துறை சார்ந்து தனித்தனியாகவோ, அனைத்துத்துறை சார்ந்து ஒட்டுமொத்தமாகவோ இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதேபோல இந்த வெள்ளை அறிக்கை ஆண்டுக்கு ஒன்றோ ஒவ்வொரு ஆட்சிக் காலம் முடிந்த பின்போ வெளியிடப்படும். ஆனால், கடந்த 21 ஆண்டுகளாகப் பல காரணங்களுக்காக இந்த வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிடாமல் இருந்தது. திராவிட  முன்னேற்றக் கழகஆட்சிக்காலத்தின் நிதி நிலை குறித்து அப்போதைய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகஅரசின் நிதி அமைச்சர் பொன்னையன் வெளியிட்டதுதான் கடைசி வெள்ளை அறிக்கை


போக்கு வரத்து, மின்சாரம் ஆகிஇ  துறைகளில் ஊழல்,மோசடி நடைபெற்றுள்ளது. அரசுக்குச் சேர வேண்டிய  பணம் எங்கே போனது. அதைத் தேடிக்  கண்டு பிடித்து  மீட்க வேண்டும் என தமிழக  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். நிதி அமைச்சரின் வெள்ளை அறிக்கைபற்றிய விவாதம் ,விமர்சனம் என்பன விவாதப் பொருளாக மாறி சூடு பிடிப்பதற்கிடையில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்  வீடு. அலுவலகம் ஆகியவற்றில்  இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது

வேலுமணியின் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்புடையஒப்பந்தக்காரர்கள் ஆகியோரின் வீடுகள் அலுவலகங்கள் என்பனவும் சோதனைக்குத் தப்பவில்லை.  சென்னை, கோவை உள்ளிட்ட  சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சோதனை செய்தனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில்  இலஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை செய்தபோது, முதலில் என்னைத் தேடி வருவார்கள் என நினைத்ததாகத் தெரிவித்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா தொற்றினால் தமிழகம் அல்லல் பட்ட வேளையில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் சேவையே முக்கியம் எனக் கருதினார். அதனால், அதிரடி நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை

தேர்தல் பிரசாரத்தின் போது ஊழல் செய்த  அன்றைய  அமைச்சர்கள் மீது ஸ்டாலின் சரமாரியாக குற்றம் சாட்டினார். அவர்களின்  ஊழல் பட்டியலுக்கு முக் கியத்துவம் கொடுத்தே ஸ்டாலின் பிரசாரம் செய்தார். வேலுமணியை ஊழல்மணி என அழைத்தார். இது ஸ்டாலினின் அரசியல் பழி வாங்கல் என அண்னா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் தெரிவித்தனர். தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் ஸ்டாலினுக்கு எதிராகக் கருத்துச் சொல்லியுள்ளனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி ஊழல் ஆட்சி என  அமித் ஷா முன்னர் தெரிவித்திருந்ததை அவர்கள்  மறந்து விட்டார்கள்.ஏனையஎதிர்க் கட்சித் தலைவர்கள்   வாயைத் திறக்காது நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஸ்டாலின் முதலமைச்சராவதர்கு முன்னரே வேலுமணி மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகஅமைப்புச் செயலாளர் பாரதியும், அறப்போர் இயக்கமும் கொடுத்த புகாரின் அடிப்படையில்  இலஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.  பாட்டாளி மக்கள் கட்சியும்  வேலுமணிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்துள்ளது.  இப்போது அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது

வேலுமணிக்கு எதிரான ஊழல் புகாரை 2017 ஆம் ஆண்டு ஆளுநரிடம் .பன்னீர்ச்செல்வம் கையளித்தார். இன்று  வேலுமணிக்கு ஆதரவாக .பன்னீர்ச்செல்வம் குரல் கொடுக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் போது வேலுமணியின் ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்ட ஸ்டாலின் அதை தமிழக ஆளுநரிடம் கையளித்தார். அப்போது  வேலுமணியை விசாரணை செய்வதற்கு போதிய  ஆதாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.


முன்னாள் அமைச்சர் வியஜபாஸ்கரின்  வீட்டில்  இதே போல் சோதனை நடைபெற்ற போது எதுவித சலசலப்பும்  ஏற்படவில்லை. வேலுமணியின் வீட்டின் முன்னால் குவிந்த  தொண்டர்கள் பொலிஸாருடன் மல்லுக் கட்டினர். அவர்களுக்கு வேண்டிய  உணவு, குளிர்பானம் என்பன வழங்கப்பட்டன.

வேலுமணிக்கு எதிரான வழக்கை எதிர்கொள்வதற்காக வழக்கறிஞர் குழுவை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   அமைத்துள்ளது. வியஜபாஸ்கரை விட  வேலுமணி முக்கியமானவர் எனப்தை இது எடுத்த்க் காட்டுகிறது. இதேபோன்ற  சோதனைகள் தொடரும் என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   உணர்ந்துள்ளது.

எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது தனது பதவியைப் பயன்படுத்தி உறவினர்கள் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தங்களை அளித்தது தொடர்பான புகார் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து எஸ்.பி வேலுமணியிடம் விசாரணையும் நடத்தினர். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பொறுப்பேற்றார். இவரது நிர்வாகத்தின் கீழ் தான் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சி ஆகியவை இருந்தன. எஸ்பி வேலுமணி 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக தர அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். கோவை மாநகராட்சிக்கான அரசு ஒப்பந்தங்களையும் நெருக்கமானவர்களுக்கு தருவதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 464.02 கோடி ரூபாய் அளவிற்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களும், 346.81 கோடி ரூபாய் மதிப்பிலான கோவை மாநகராட்சி ஒப்பந்தங்களும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளார் என்பதே வேலுமணி மீதான குற்றச் சாட்டாகும்எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் என்பனவற்ரி நடைபெற்ற  அதிரடிச் சோதனை  ஆரம்பம் தான்  அடுத்து கே.டி.ராஜேந்திர பாலாஜி,சி.விஜயபாஸ்கர் - பி.தங்கமணி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக த்கவல் கசிந்தது ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் வேலுமணி குறிவைக்கப்பட்டார்.

No comments: