Friday, August 20, 2021

வல்லரசுகளுக்கு அடங்காதா ஆப்கானிஸ்தான்.

யுத்தம்,போராட்டம், பயங்கரவாதம்,குண்டு வெடிப்பு, கடத்தல் எல்லாம் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நடைபெறும் சம்பவங்கள். ஆபானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணத்துடன் அமெரிக்கா அங்கு ஆயுதங்களுடன் களம் இறங்கியது. அமெரிக்காவுக்குத் துணையாக   நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஐம்பது நாடுகள்   இராணுவ  வீரர்களுடன் ஆப்கானிஸ்தனில் கால் பதித்தன.

அமெரிக்காவுக்குத் துணையாக ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற  நாடுகள் அனைத்தும் அங்கிருந்து  கட்டம் கட்டமாக  வெளியேறிவிட்டன. அமெரிக்காவின்   ஜனாதிபதியாக ட்ரம்ப்  பதவி  வகித்த போது அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து  வெளியேறுவதற்கு  நாள் குறிக்கப்பட்டது.  அமெரிக்கப் படைகள்   இருந்து வெளியேறிய பின்  மூன்று  மாதங்களில்  தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றுவார்கள் என  அமெரிக்க  புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், ஆறு நாட்களில்  தலிபான்கள்  தலைநகர் காபூலை க் கைப்பறி ஆப்கானிஸ்தானை தமது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்கள்.

தலிபான்களின் வெற்றியால் அமெரிக்காவினதும், ஏனைய  நாடுகளினதும் வெளியுறவுக்கொள்கை தோல்விடைந்துள்ளது. மட்டுமல்லாது. உலகின் பெரும் வல்லரசுகளால் அடக்க முடியாத நாடாக வீறுகொண்டெழுந்துள்ளது ஆப்கானிஸ்தான். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் ஆப்கானை அடக்க முயன்று  தோல்வியுடன்  வெளியேறின. பண்டைய  வரலாற்றில்  மங்கோலியரின்  படையெடுப்பாலும்  ஆப்கானிஸ்தானை அசைக்க முடியவில்லை.

1996 முதல் 2001ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் இருந்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியோடு தாலிபான்கள் ஒடுக்கப்பட்டு, அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. 20 ஆண்டு காலமாக காபூல் நகரம் வளர்ச்சி பாதையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளதுதலிபான்களின்  இறுக்கமான கட்டமிப்பினுள் இருந்த  ஆப்கானிஸ்தான் 20 வருடங்களில் மேற்குலக‌ கலாசாரத்துக்கு மாறிவிட்டது.

தலிபான்களின் வருகையால் ஆப்கான் மக்களில் பலர்  நாட்டை விட்டு வெளியேற  முயற்சி  செய்கின்றனர். பாகிஸ்தான் தனது எல்லையை மூடிவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்ச‌ம் வழங்க வேண்டிய நிலையில் உலக நாடுகள் உள்ளன. உலகிலே ஆப்னாகிஸ்தான் அகதிகள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. தலிபான்களுக்குப் பயந்து 1996 ஆம் ஆண்டு  ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய  இலட்சக் கணக்கன மக்கள்  மீண்டும் தாயகம் திரும்பாமல் அகதி வாழ்க்கை  வாழ்கின்றனர்.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்குள் புகுந்த  தலிபான்களுக்கு பெருமளவிலான எதிர்ப்பு இருக்கவில்லை. அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட  ஆப்கானிஸ்தான் படை வீரர்கள்  ஆயுதங்களைக் கொடுத்து  விட்டு சரணடைந்தார்கள். இரத்தக் களரி இல்லாமல் முழு நாட்டையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக நிலவிய  சுதந்திரம் பறி போய்விட்டதாக அங்குள்ள சிலர் தெரிவிக்கின்றனர்.பூங்காக்கள், பொழுதுபோக்கு  நிலையங்கள்,திருமணமண்டபங்கள் போன்ரவை எதிர்காலத்தில் இல்லாதொழிக்கப்படும்.  திருமண ம‌ண்டபம் ஒன்றில்  காட்சிப்படுத்தப்பட்ட பெண்களின் படங்களை ஒருவர்  வர்ணம் பூசி அழிப்பதை பல  ஊடகங்கள் பகிர்ந்துள்ளன. இந்தச் சந்தடியில் களவெடுத்தவர்களுகு தலிபான்கள் தமது பாணியில் தண்டனை கொடுத்துள்ளார்கள்.

தலிபான்களில் ஆட்சியின் கீழ்  வசிக்க முடியாது  என்பதால் பல ஆபானிஸ்தானியர்கள்  நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் காபூல் விமானநிலைய  ஓடுபாதையில் மக்கள் நிரம்பியுள்ளனர்.

 ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி  அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இரத்தக்களறி ஏற்பட்டு விடகூடாது என்பதற்காக‌ என்பதற்காக நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்று அஷ்ரப் கானி  வெளியிட்ட  வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் அவர் எங்கே இருந்து இந்த வீடியோவை வெளியிட்டார் என்று தகவலை பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட அஷ்ரப் கனிக்கு, தஜிகிஸ்தானில் தரையிறங்க   மறுக்கப்பட்டதாகவும், இதனால், ஓமன் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.   அமெரிக்காவில் அவர் தஞ்சமடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஆப்கானிஸ்தானில் த‌லிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், நாட்டின் பெயரை 20 ஆண்டுகளுக்கு முன்பு அழைக்கப்பட்டது போன்று ”ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என மாற்றியுள்ளனர். நாட்டின் புதிய ஜனாதிபதியாக  முல்லா அப்துல் கனி பராதர் அறிவிக்கப்பட்டுள்ளார். காபூலில் உள்ள பெரும்பாலான சோதனைச் சாவடிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் த‌லிபான் அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு கட்டிடங்களுக்கு எந்தவொரு சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும், விமான நிலையத்திலிருந்து நாட்டுக்குள் திரும்ப அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களை தாலாட்டி சீராட்டி வள‌ர்த்துவிட்ட ரஷ்யாவும், அமெரிக்காவும் ஆப்கான் மக்களை நட்டாறில் விட்டுள்ளன. அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை எனது  காலத்தில் முடிவுக்கு  கொண்டுவரப்பட வேண்டும் என அமெரிக ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க  வீரர்கள் ஆப்கானிஸ்தானில்  கொல்லப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜோர்ஜ் டபிள்யூ புஷ்,ஒபாமா, ட்ரம்ப் ஜோ பிடன்  ஆகிய  நான்கு  அமெரிக்க ஜனாதிபதிகள் ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ளனர்.


உலகளாவிய  பயங்கரவாதத்துக்கு ஆப்கானிஸ்தான் உதவி செய்யாது, நாட்டு ம‌க்களை துன்புறுத்த மாட்டோம் என தலிபான்கள் உறுதியளித்துள்ளனர். தலிபான்களின் வாக்குறுதி காப்பாற்றப்படுமா இல்லையா என்பதை அமையப்போகும் ஆப்கான் அரசாங்கத்தின் செயற்பாடுதான்  தெளிவு படுத்த வேண்டும்.

ரமணி

 2001, செப். 11: ஆப்கானிஸ்தானில் செயல்பட்ட ஒஸாமா பின் லேடனின் அல்-கொய்தா அமைப்பு அமெரிக்கா மீது பயங்கவராத தாக்குதலை நடத்தியது... நியூயார்க்கின் உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரம் தகர்ப்பு. 3,000 பேர் பலி.

 2001,ஒக். 7: ஒஸாமாவை ஒப்படைக்க, ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான் மறுப்பு. அமெரிக்க கூட்டணி படைகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்.

 2001, நவ.13: அமெரிக்க கூட்டணி படை வசம் தலைநகர் காபூல் வந்தது. தலிபான் அமைப்பினர் வெறியேறினர்.

 2004, ஜன. 26: ஆப்கன் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது. அக். 2004ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தது  

 2004, டிச. 7: ஆப்கன் முதல் ஜனாதிபதியாக  ஹமீத் கர்சாய் பதவி ஏற்பு. இரண்டு முறை(10 ஆண்டு) ஜனாதிபதியாக இருந்தார்.

 2006, மே: தலிபான் பிடியில் மீதம் இருந்த ஹெல்மாண்ட் மாகாணத்துக்கு பிரிட்டன் படை வருகை. சண்டையில் 450 பிரிட்டன் படையினர் பலி.

 2009,பெப். 17: அமெரிக்க படை எண்ணிக்கையை 1.4 லட்சமாக ஜனாதிபதி  ஒபாமா அதிகரித்தார்.

 2011, மே 2: பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அமெரிக்க படையால் ஒஸாமா கொல்லப்பட்டார். அவரது உடல் கடலில் புதைக்கப்பட்டது. அமெரிக்காவின் 10 ஆண்டு ஒஸாமா தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது.

 2013, ஏப். 23: தலிபான் நிறுவனர் முல்லா முகமது ஓமர் மரணம். இவரது மரண செய்தி இரண்டு ஆண்டு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. உடல்நலக்குறைவால் பாகிஸ்தானின் கராச்சி மருத்துவமனை ஒன்றில் மரணம் அடைந்ததாக ஆப்கன் உளவு பிரிவினர் கூறினர்.

 2014, டிச. 28: நேட்டோ கூட்டணி படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்தன. பெரும்பாலான அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றன.

 2015: தலிபான் மீண்டும் எழுச்சி கண்டது. ஆப்கனில் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது

 2019, ஜன. 25: 2014ல் இருந்து உள்நாட்டு போரில் 45,000 வீரர்கள் மரணம் அடைந்ததாக புதிய ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்தார்.

 2020, பெப். 29: டோஹா தலைநகர் கட்டாரில் அமெரிக்கா-தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து. அல்-கொய்தா அல்லது எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் ஆப்கானிஸ்தானில் அனுமதி அளிக்க கூடாது என்ற நிபந்தனையை தலிபான் ஏற்றுக் கொண்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் 2021, செப். 11க்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேற சம்மதம்.


 2021, ஆக. 15: காபூல் நகரில் இருந்து ஜனாதிபதி  அஷ்ரப் கனி வெளியேறினார். தலிபான் வசம் மீண்டும் ஆப்கன் வந்தது.

 

 

 

No comments: